என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்கு திருட்டுகள் பற்றி விளக்க செப்.7ல் காங்கிரஸ் மாநில மாநாடு - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
- வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள்.
- மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.
பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது பற்றி நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
இது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடித்து வருவதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதால் மோடி அரசு ஆடிப் போய் இருக்கிறது. பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது.
வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள்.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்குத் திருட்டுக்காக வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்டுள்ள சதித்திட்டங்கள் அம்பலமாகி உள்ளது.
எப்படியெல்லாம் பானக மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக வாக்குத் திருட்டுகள் விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கன்னியாகுமரியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.
அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 130-வது சட்டத் திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்க காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 10-க்கும் குறைவான மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளன.
அந்த மாநிலங்களில் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு 30 நாட்கள் ஜெயிலில் அடைத்து எதிர்கட்சி தலைவர்களை ஒழிக்க பாஜக அரசு முயல்கிறது. எனவே எதிர்க்கிறோம்.
அரசியல் அமைப்பு சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறைகள் முடிவுக்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம்.
எனவே அதை முறியடித்து தண்டனை கிடைத்ததும் பதவி நீக்கம் செய்வதை அமல்படுத்தியது காங்கிரஸ். இந்த சட்டம் அமலில் இருக்கும்போது அதில் புதிய திருத்தம் ஏன் செய்ய வேண்டும். இதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் புரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






