search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devendra Fadnavis"

    • அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில்
    • மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர்

    காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பசவராஜ் பாட்டில் பாஜகவில் இணையவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் சேருவார் என்று கூறப்படுகிறது.

    அதற்கேற்ப இன்று காலை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார் பசவராஜ் பாட்டில்.

    அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில். மேலும் அம்மாநில அமைச்சராகவும் ஒருமுறை அவர் இருந்துள்ளார். குறிப்பாக மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

    அதே சமயம் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், பசவராஜ் பாட்டிலிடம் இருந்து எங்களுக்கு எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியை மாற்றுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை.
    • முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர அரசியலில் கடந்த 2-ந் தேதி நடந்த திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தனர்.

    அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான், வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அஜித்பவார் அந்த பதவியில் அமர்த்தப்படுவார் என தெரிவித்தார்.

    இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாயுதி கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் என்ற முறையில் அஜித்பவார் மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியாக ஆகமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    தேசியவாத காங்கிரஸ் பிரிவை சேர்ந்தவர்களுடன் மகாயுதி கூட்டங்கள் நடந்தபோதே அஜித்பவாருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காது என்று தெளிவாக எடுத்து கூறப்பட்டு உள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே எப்போதும் போல முதல்-மந்திரியாக நீடிப்பார். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது.

    அதிகார பகிர்வு குறித்து அஜித்பவாருக்கு தெளிவாக கூறப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டதுடன், மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியை மாற்றுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை.

    மகாயுதி கூட்டணி குறித்து மக்களை குழப்புவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் தலைவர்களுக்கு இடையே எந்த குழப்பம் இல்லை. ஆனால் தொண்டர்கள் குழம்பி உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏதாவது நடக்குமானால் அது மந்திரிசபை விரிவாக்கமாக இருக்கும். இதற்கு முதல்-மந்திரி அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அஜித்பவாரின கூட்டணியில் இணைந்தது தனக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஏக்நாத் ஷிண்டே முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.
    • மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

    இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் இணைந்தார். அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்று அரசியல் அரங்கை அதிர வைத்தனர். தற்போது மகாராஷ்டிராவில் ஷிண்டே- பட்னாவிஸ்- அஜித்பவார் ஆகியோரை கொண்டே 3 கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

    ஆட்சியில் அஜித்பவார் இணைந்தது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்பவார் வருகையால் தங்களுக்கு கிடைக்க இருந்த முக்கிய இலாகா, மந்திரி பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற கலக்கம் அவர்கள் இடையே நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்பவாரின் அதிரடி வருகை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பதவியை ஆட்டம் காண வைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.

    இதையடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கடந்த புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தனது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.

    இதற்கு மத்தியில் மந்திரி பதவி கிடைக்கும் என்று காத்திருந்த சிவசேனாவை சேர்ந்த 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தவறு செய்ததை உணர்ந்து உத்தவ் தாக்கரேவுடன் பேசி வருவதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் விநாயக் ராவத் அணுகுண்டை தூக்கி போட்டுள்ளார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்-மந்திரியின் 'வர்ஷா' பங்களாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு நடந்தது. இதில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக சிவசேனா தரப்பு கவலைகளை தேவேந்திர பட்னாவிசிடம் முதல்-மந்திரி ஷிண்டே விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர்களின் சந்திப்பு பின்னணியில் வேறு தடாலடி விஷயங்கள் எதுவும் இருக்குமா? என்ற பரபரப்பும் எகிறி உள்ளது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை. நான் பதற்றத்தில் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. எனது தலைமையிலான சிவசேனாவும், பா.ஜனதாவும் சித்தாந்தத்தால் ஒன்றுப்பட்டது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை முதல்-மந்திரியாக்கினர். தற்போது எங்களது அரசில் அஜித்பவார் இணைந்துள்ளார். இதனால் நாங்கள் பலமடைந்து உள்ளோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம். மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.

    சரத்பவார் 1978-ம் ஆண்டு வசந்த்ததா பாட்டீல் ஆட்சியை கவிழ்த்து முதல்-மந்திரி ஆனார். 1999-ம் ஆண்டு காங்கிரசில் பிளவை ஏற்படுத்தினார். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முயன்ற சரத்பவார், பின்னர் 'யு-டர்ன்' அடித்ததாக அஜித்பவாரே தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சரத்பவார் இரட்டை வேடம் போட்டார்.
    • உத்தவ் கூட்டணியை முறித்து எங்களது முதுகில் குத்தினார்.

    மும்பை :

    2019-ம் ஆண்டு மராட்டியத்தில் பா.ஜனதா - பிளவுபடாத சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பிறகு சிவசேனா பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் திடீரென ஒருநாள் அதிகாலை 5 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி பதவி ஏற்று அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் அந்த ஆட்சி 3 நாளில் கவிழ்ந்தது. கடந்த சில மாதங்களுக்கு அஜித்பவார், சரத்பவாருக்கு தெரிந்து தான் பதவி ஏற்றார் என கூறியிருந்தார்.

    இந்தநிலையில் அவர் 2019-ம் ஆண்டு பா.ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க சரத்பவார் ஒப்புக்கொண்டார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனியார் டி.வி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் எங்களை (பா.ஜனதா) அணுகினர். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சரத்பவாரை சந்தித்து பேசினோம். அப்போது பா.ஜனதா-தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான திட்டமும் முடிவானது. அரசை அமைக்க எல்லா அதிகாரமும் எனக்கும், அஜித்பவாருக்கும் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம்.

    பதவி ஏற்புக்கு 3-4 நாள் இருந்தநிலையில், திடீரென சரத்பவார் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். அஜித் பவாருக்கு என்னுடன் வந்து பதவி ஏற்பது தவிர வேறு வழியில்லாமல் இருந்தார். இல்லையெனில் அவர் அம்பலப்படுத்தப்பட்டு அவரின் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்து இருக்கும். சரத்பவார் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் பதவி ஏற்க வந்தார். உத்தவ் கூட்டணியை முறித்து எங்களது முதுகில் குத்தினார். ஆனால் சரத்பவார் இரட்டை வேடம் போட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றது குறித்து அவர் கூறுகையில், " என்னை துணை முதல்-மந்திரியாக்கியது முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் கட்சி பணியாற்ற தயாராக இருந்தேன். திடீரென துணை முதல்-மந்திரி பதவி ஏற்குமாறு கூறியது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அன்று எடுத்த முடிவு சரியானது என இப்போது நான் கூறுவேன். ஏனெனில் என்னால் தற்போது கட்சி, ஆட்சியை கவனிக்க முடிகிறது. எனவே நான் துணை முதல்-மந்திரியாக வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவு சரியானது என நம்புகிறேன் " என்றார்.

    • மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார்.
    • எனது வாழ்க்கை திறந்த புத்தகம்.

    மும்பை :

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 23-ந் தேதி 15 கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

    பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்றவே கூட்டத்தில் கலந்து கொண்டனர் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்தார்.

    இதையடுத்து உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ், சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்லானியின் மகள் அன்ஷிகா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் பற்றி பேசி இருந்தார்.

    இந்தநிலையில் சந்திராப்பூரில் நடந்த மோடி அரசின் 9 ஆண்டு சாதனை நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் பணி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் வாரிசுகளை பாதுகாக்க ஒரே கூரையின் கீழ் பாட்னாவில் வரவைத்து உள்ளது.

    மோடியை அகற்ற அல்ல, தங்கள் குடும்பங்களை காக்கவே அவர்கள் ஒன்று திரண்டனர். சோனியா காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் நாட்டை பற்றி கவலைப்படுவார்களா?, அல்லது தங்கள் பிள்ளைகள் பற்றி கவலைப்படுவார்களா?.

    மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார். நான் யாருடைய வேலையிலும் தலையிடுவது இல்லை. ஆனால் நான் நுழைந்தால் பாதியில் விடமாட்டேன். பாட்னாவில் நடந்த கூட்டம் குடும்ப கட்சிகளுடையது என நான் கூறினேன். ஆனால் நீங்கள் (உத்தவ் தாக்கரே) எனது மனைவியை பற்றி பேசுகிறீர்கள்.

    நான் கண்ணாடி வீட்டில் இல்லை. ஆனால் கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்களின் வீடுகளின் மேல் கல்வீசக் கூடாது. எனது வாழ்க்கை திறந்த புத்தகம். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களின் குடும்ப சொத்துகளை பொதுவெளியில் வெளியிடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அவுரங்கசீப்பை முகலாய பேரரசராக இந்திய முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை என்றார்.
    • மகாராஷ்டிர துணை முதல் மந்திரி பட்னாவிசின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா நகரில் பா.ஜ.க. சார்பில் பொது பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், நம்முடைய அரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜா மட்டுமே. நமக்கு மற்றொரு அரசர் கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழி வந்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

    இந்த நாட்டில் உள்ள, தேசிய கருத்துகளை கொண்டுள்ள ஒரு முஸ்லிம் ஒருபோதும் அவுரங்கசீப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை மட்டுமே மதிப்பார் என தெரிவித்தார். துணை முதல் மந்திரியின் இந்தக் கூற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் உயர்வு இந்தியாவின் உயர்வுதான்.
    • நோய்வாய்ப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எங்களிடம் மருந்து இல்லை.

    மும்பை :

    பிரதமர் மோடி சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அடுத்த மாதம் அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜப்பானில் ஹிரோசிமாவில் சமீபத்தில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம் இருந்து ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.

    மேலும் பிரதமர் மோடிக்காக வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்துக்கு பாஸ்களை வழங்க முடியாமல் திணறுவதாக கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய பிரதமர் நரேந்திர மோடியை பாஸ் என்று அழைக்கிறார். பப்புவா நியூ கினியா மற்றும் பிஜி போன்ற நாடுகள் அவருக்கு மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளை வழங்குகின்றன.

    எங்கள் தலைவர் தற்போது உலக தலைவராகி விட்டார். இதற்காக சிலர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி இருந்தாலும், அவர்கள் வேதனையில் மனம் குமுறுவதாக தெரிகிறது.

    எப்படி பார்த்தாலும் பிரதமர் மோடி உலக தலைவராகிவிட்டார். ஆனால் நோய்வாய்ப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எங்களிடம் மருந்து இல்லை.

    சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் உயர்வு இந்தியாவின் உயர்வுதான். ஆனால் நாட்டில் சிலர் இதை பார்க்க தவறி விடுகிறார்கள்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒருமுறை சரத்பவாருக்கு எதிராக உச்சரித்த வார்த்தைகளை என்னால் இங்கு கூற முடியாது. அதேபோல உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இப்போது அவர் பேசிய வீடியோக்கள் தற்போது மீண்டும் பரப்பப்படுகின்றன.

    பிரதமர் மோடியை எதிர்க்க மட்டுமே அவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். ஆனால் மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
    • இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை என பட்னாவிஸ் கூறி உள்ளார்.

    மும்பை:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை. புதிய பாராளுமன்ற கட்டிடம் நாட்டின் பெருமை. திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கூறுபவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை. மோடி மீதான வெறுப்பு காய்ச்சலால் எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டமைக்கப்பட்டு நாட்டின் பலத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது.
    • இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாவிகாஸ் அகாடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டு மறுத்து உள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசு சட்டப்படி தான் அமைக்கப்பட்டது என்பதில் இனிமேல் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

    தார்மீக உரிமை பற்றி பேச உத்தவ் தாக்கரேக்கு எந்த தகுதியும் இல்லை. 2019-ம் ஆண்டு மக்கள் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அவர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். எனவே தார்மீகம் பற்றி பேசுவது உத்தவ் தாக்கரேக்கு பொருந்தாது. உத்தவ் தாக்கரே தார்மீக அடிப்படையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. வேறு வழியில்லாமல் பயத்தின் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை வரவேற்றார்.

    அவர் " சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வாய்மையின் வெற்றி. சபாநாயகர் தகுதியின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் முடிவு எடுப்பார். உத்தவ் தாக்கரே தரப்பினர் அவர்களின் திருப்திக்காக எங்களது அரசு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என கூறி வந்தனர். அது பொய் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் தான் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார் " என்றார்.

    • மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே.
    • இவர் பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. இவர் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை மந்திரியாக இருந்தபோது நில பேரம் தொடர்பான மோசடி வழக்கில் சிக்கினார். இதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    இந்தநிலையில் மேல்-சபையில் பேசிய ஏக்நாத் கட்சே, பா.ஜனதா கட்சி மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவை மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா பணம் படைத்த பெரிய மனிதர்களுக்கான கட்சி என்ற எண்ணத்தை மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைத்தவர் கோபிநாத் முண்டே. ஆனால் அவரது மறைவுக்கு பின்னர் பா.ஜனதா அவரை மறந்துவிட்டதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்படுவதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோபிநாத் முண்டே எனது ஆட்சேபனையை நிராகரித்தார்.

    பா.ஜனதாவின் வளர்ச்சியில் கோபிநாத் முண்டேவின் பெரும் பங்களிப்பு இருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தையும் இப்போது மறந்துவிட்டார்கள். முண்டேவின் குடும்பமும், நானும் சில காலம் கட்சியில் அறிவிக்கப்படாத புறக்கணிப்பை எதிர்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோது ஏக்நாத் கட்சே முதல்-மந்திரி போட்டியில் இருந்தார். ஆனால் கட்சி அவருக்கு பதிலாக தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
    • 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    மும்பை :

    மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது.

    அந்த நேரத்தில் திடீரென தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் அதிகாலை 5 மணிக்கு ராஜ்பவனில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி பதவி ஏற்ற 3 நாளில் கவிழ்ந்தது.

    இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து சரத்பார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டி.வி. நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    நிலையான அரசு தேவைப்பட்டதால் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்சி அமைக்க நாங்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின் போது சரத்பவாரும் இருந்தார். ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. நிலைமை எப்படி மாறியது என நீங்களே பார்த்தீர்கள். நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட தகவலை சரத்பவார் மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேவேந்திர பட்னாவிஸ் ஜென்டில் மேன், பண்பட்டவர் என்று நினைத்தேன். அவர் பொய்யை நம்பி இதுபோன்ற ஒரு அறிக்கையை விடுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை." என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    • உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
    • உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மும்பை :

    மத்திய அரசின் பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து கூறியதாவது:-

    விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்.

    ரூ.7 லட்சம் வரையிலான வருமானவரி விலக்கு கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்திற்கு உதவும். நடுத்தர மற்றும் கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் உதவும்.

    முன்பு எப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறுகையில், "பா.ஜனதா தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்போதும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டும் அதையே செய்கிறது" என்றார்.

    ×