search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uddhav Thackeray"

    • நாட்டை கொள்ளை அடித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
    • தற்போது தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது.

    எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதா அதிகபட்சமாக சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1,400 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜனதா அதிக நன்கொடை பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மிரட்டி பணம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றன.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் கொள்ளை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

    தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளை அடித்துவிட்டது என்று தொடர்ச்சியாக கூறிவரும் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது. கொள்ளையடித்த இவர்கள் கையில் நாட்டை கொடுக்கப் போகிறீர்களா?. நாட்டு மக்கள் விக்சித் பாரத் (வளர்ந்த நாடு) குறித்து கனவு கண்டு கொண்டிருக்கும்போது, பா.ஜனதா அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து நாட்டை கொள்ளை அடிக்க விரும்புகிறது.

    எங்களது கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. கார்பரேட் நிறுவனங்கள் பா.ஜனதாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்க மிரட்டப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. அதற்குப் பதிலாக பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

    பா.ஜனதாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை கொள்ளை அடிக்க முடியாத காரணத்தில், தன்னுடைய தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • மத்திய மந்திரியாக இருக்கும் நிதின் கட்கரி பெயர் பா.ஜனதாவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
    • பா.ஜனதா அவமதித்தால் எங்களுடன் வந்து விடுங்கள் என உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கட்கரி. இவர் மத்திய மந்திரியாக உள்ளார். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

    பா.ஜனதா முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மூத்த தலைவர்கள் பலரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், நிதின் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் அவமதிக்கப்படுகிறார் என மகாராஷ்டிர மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

    இது தொடர்பாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, அவமதிக்கப்பட்டால் எங்களுடைய கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், "நீங்கள் பா.ஜனதா கட்சியால் அவமதிக்கப்பட்டால் மகா விகாஷ் அகாதி (உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) கூட்டணிக்கு வந்து விடுங்கள். இதை இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிதின் கட்காரியிடம் சொன்னேன். தற்போதும் சொல்கிறேன்.

    உங்களுடைய வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் அரசு அமைத்த பிறகு எங்களது அரசாங்கத்தில் உங்களுக்கு மந்திரி பதவி வழங்குவோம். அது அதிகாரமிக்க பதவியாக இருக்கும்" என்றார்.

    உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியிருந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் "தெருவில் நிற்கும் ஒருவர் மற்றொருவரை பார்த்து நான் உன்னை அமெரிக்க ஜனாதிபதியாக்குகிறேன் என்று சொல்வது போல் உள்ளது" என கிண்டல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை தொகுதிகளை பிரிப்பதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே கட்சி இடையே இழுபறி.
    • நான்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளது.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் துரிதப்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி, அகிலேஷ் யாதவ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

    தற்போது மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைவதற்கான வேலைகளை காங்கிரஸ் செய்து வருகிறது. 2019 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் ஆகியவை மகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இது பொருந்தாத கூட்டணி என விமர்சனம் செய்யப்பட்டது.

    பின்னர் ஏக் நாத் ஷிண்டே, தனது அணிதான் சிவசேனா கட்சி என அறிவித்து பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனால் மகா கூட்டணி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து போனது.

    தற்போது மகா கூட்டணி மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. 48 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொண்டு போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    உத்தவ் தாக்கரே 18 தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். மேலும் மும்பையில் உள்ள தெற்கு மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, தென்மேற்கு மும்பை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

    அதேவேளையில் காங்கிரஸ் மும்பையில் தென்மத்திய மும்பை, வடக்கு மத்திய மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

    மும்பையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் ராகுல் காந்தி நேற்று உத்தவ் தாக்கரேயிடம் சுமார் ஒரு மணி நேரம் போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அப்போது மும்பை தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மூன்று கட்சிகளுக்கு இடையில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

    2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே கட்சி 22 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த மூன்று தொகுதிகளும் அடங்கும்.

    40 தொகுதிகள் குறித்து முடிவு செய்து விட்டதாகவும், 8 தொகுதிகள்தான் இழுபறியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பா.ஜனதாவுக்கு கைக்கெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இந்த மகா கூட்டணி 48 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படும்.

    2019 தேர்தல் பா.ஜனதா- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாஜனதா 23 இடங்களை கைப்பற்றியிருந்தது.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடரலாம்.

    மும்பை:

    மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நேற்று முடிவை அறிவித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா அணி. ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது. சட்டமன்ற கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • சபாநாயகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்
    • சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார்

    முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. சபாநாயகர் தனது உத்தரவை அறிவிக்காததால் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் இதுதொடர்பாக அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார். நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேசுவது போல இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். சபாநாயகரின் செயல் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சார்பற்ற முறையில் தனது கடமையை ஆற்றுவாரா என்ற சந்தேகதம் எழுகிறது எனவும் கூறினார்.

    உத்தவ் தாக்கரேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சபாநாயகர் ராகுல் நர்வேகர், "ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர். சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக நாங்கள் சந்தித்துக்கொள்வது அவசியம். இதில் உள்நோக்கம் இருப்பதாக கூறுவது தவறு. இது தொடர்பாக யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை" என கூறினார். மேலும், பாஜகவைச் சேர்ந்த நான், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்பி அணில் தேசாய் மற்றும் ஷரத் பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாடில் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளேன். அதற்கும் உள்நோக்கம் கற்பிப்பார்களா? என கேள்வி எழுப்பினார். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் இந்த விவகாரத்தில் நான் நல்ல முடிவை எடுப்பேன். எனது முடிவு தகுதியின் அடிப்படையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • அயோத்தியில் அதிநவீன விமான நிலையம், ரெயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    மும்பை:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

    எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே கூறுகையில், எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அங்கு செல்ல எனக்கு அழைப்பும் தேவையில்லை. கடவுள் ராமர் ஒரு கட்சியின் சொத்து அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர். இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என விரும்புகிறேன். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, அரசாங்கம் அல்ல என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து ஜால்னா மாவட்டத்தில், மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதுதொடர்பாக 300க்கும் அதிகமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே, ஜால்னா மாவட்டத்தில் நடந்து வந்த மராத்தா சமூகத்தினரின் போராட்டம் தலைநகர் மும்பையில் உள்ள பிரபல மரைன் டிரைவ் பகுதியை அடைந்தது.இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மரைன் டிரைவ் பகுதியில் இருந்து கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் செல்லவில்லை.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, மரைன் டிரைவ் பகுதிக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், இம்மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மராத்தா சமூகத்தினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    • சிவசேனா என்ற பெயர் எனது தாத்தா கேசவ் தாக்கரே வழங்கியது.
    • ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம்.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே விதர்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் அமராவதிக்கு சென்றார். அங்கு நடத்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    உலகின் நம்பர் ஒன் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறிக்கொள்ளும் பா.ஜனதாவுக்கு மற்ற கட்சிகளில் பிளவை ஏற்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது.

    நீங்கள் சிவசேனாவை கொள்ளையடித்தீர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை கொள்ளையடித்தீர்கள். நாளை வேறு எதையாவது கொள்ளை அடிப்பீர்கள்.

    நீங்கள் நாட்டுக்கு சொந்தமானதை விற்பனை செய்கிறீர்கள். மற்றவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறீர்கள். உலகின் மிகபெரிய கட்சியான பா.ஜனதாவுக்கு ஏன் இந்த நிலை வந்தது?. ஏனென்றால் உங்களிடம் அதிகாரத்தின் பெருமை இல்லை. தன்னம்பிக்கை இல்லை.

    பா.ஜனதா இவ்வளவு பெரிய மற்றும் பலம்பெற்ற கட்சியாக மாறியபிறகும், தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைக்கிறது. எனவே எதிராளிகளை இல்லாமல் செய்ய அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்துகின்றனர்.

    மகாராஷ்டிராவில் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த பா.ஜனதாவை சிவசேனா தனது தோளில் சுமந்து மாநிலத்தில் அதன் அடித்தளத்தை விரிவுபடுத்த உதவியது.

    ஆனால் நீங்கள் எங்களை தற்போது அரசியலில் இருந்து ஒழித்துவிட பார்க்கிறீர்கள். இதுதான் உங்களின் இந்துத்வா.

    பாலாசாகேப் தாக்கரே உங்களை காப்பாற்றினார். இல்லையெனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உங்களை குப்பை தொட்டியில் வீசியிருப்பார். பாலாசாகேப் தாக்கரே தற்போதைய பிரதமருக்கு ஆதரவு அளிக்காவிட்டால் அவர் பிரதமராகி இருக்க முடியுமா?. இதை மற்றவர்களிடம் கேட்பதை விட உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

    தற்போது தேர்தலில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் நோக்கிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினை கொண்டு வரப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் இந்த பிரச்சினை கிடப்பில் போடப்படும்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை எழுப்பப்படும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்கியது. பா.ஜனதா எதையும் செய்யவில்லை.

    ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருமாறு நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அதை கொண்டுவர அவர்களுக்கு தைரியம் இல்லை.

    ராமர் கோவிலுக்கான போராட்டத்தின் போது இந்துத்வாவாதிகள் என்று கூறிக்கொண்டவர்கள் எலி பொந்தில் பதுங்கி இருந்தனர்.

    ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம். ஆனால் கட்சியின் பெயரை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. சிவசேனா என்ற பெயர் எனது தாத்தா கேசவ் தாக்கரே வழங்கியது. இதை யாரும் திருட விடமாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி வாய்திறக்க மறுக்கிறார்
    • ஆனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவ சேனா கட்சியின் (UBT) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியதாவது:-

    துரோகிகள் மற்றும் பயனற்றவர்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த வகையான அரசியல் வீழ்ச்சி அடையும். ஏனென்றால் மகாராஷ்டிரா துரோகிகளால் ஆட்சி செய்யப்படும் மாநிலமாக பார்க்கப்படுகிறது. அவர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    மத்திய பிரதேசத்தில் முன்னதாக பிரதமர் மோடி பேசும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சொன்னார். தற்போது அந்த கட்சியை தன்னுடன் நினைத்து உள்ளார். இதனால் 70 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்களுடன் பிரதமர் மோடி பிம்பம் பிரதிபலிக்கும். இந்த இந்துத்வா உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா?.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி சோதனை அமைப்புகளை மணிப்பூருக்கு அனுப்புங்கள். மணிப்பூரை எரித்துக் கொண்டிருப்பவர்கள் தானாக உங்கள் கட்சியில் இணைந்து விடுவார்கள்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    • எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை.
    • பா.ஜனதா அடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்த வேண்டும்.

    மும்பை :

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொண்டர்களை ஊக்கப்படுத்த உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விதர்பா மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். நேற்று காலை நாக்பூர் சென்ற அவர், அங்கு இருந்து கார் மூலம் விதர்பா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்றார். பல்வேறு இடங்களில் தொண்டர்கள் உத்தவ் தாக்கரேயை உற்சாகமாக வரவேற்றனர்.

    உத்தவ் தாக்கரே யவத்மால், வாசிம், அமராவதி, அகோலா, நாக்பூர் பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். வாசிமில் உள்ள போக்ராதேவி கோவிலில் சாமி தாிசனம் செய்த அவர், பஞ்சாரா சமூக பிரநிதிகளையும் சந்தித்து பேசினார்

    யவத்மாலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. நானும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் முடிவை எடுத்து இருந்தோம். பா.ஜனதா அந்த முடிவை மதித்து இருந்தால், இன்று வேறு கட்சியினருக்கு அந்த கட்சியின் தொண்டர்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. 2 கட்சிகளும் 2½ ஆண்டு முதல்-மந்திரி பதவியை நிறைவு செய்து இருக்கும்.

    நான் மந்திராலயாவுக்கு கூட சென்றதில்லை என கூற பா.ஜனதாவுக்கு தகுதி கிடையாது. பா.ஜனதா அடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்த வேண்டும். எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை. குப்பைகளை (அஜித்பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது) பா.ஜனதா எப்படி கையாளுகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து யவத்மால் மாவட்டம் திக்ராஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஒரு நாடு, ஒரே சட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் பா.ஜனதாவின் ஒரு நாடு, ஒரு கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பா.ஜனதாவுக்கு தாக்கரே இல்லாத சிவசேனா மட்டும் வேண்டும். பா.ஜனதா தற்போது குப்பை கட்சியாகிவிட்டது. பிரதமர் மோடியின் செல்வாக்கு மங்கிவிட்டது சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. அவர் 'பஜ்ரங்பலி கி ஜெய்' என சத்தமாக முழங்கினார். ஆனால் கடவுள் பதிலடி கொடுத்தார். பா.ஜனதா கர்நாடகாவில் படுதோல்வி அடைந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×