என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"

    • மத்திய அரசு காங்கிரசை சமாதானப்படுத்த கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை.
    • எதிர்க்கட்சிகளில் சிலர் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது

    மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியைத் தொடங்கிய எதிா்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தன.

    கடந்த 3-ந்தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடை நீக்கம் செய்யப்பட்டனா்.

    சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமா்வு மாா்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தை நடத்துவதில் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை. பிரச்சினைகளை உருவாக்குவதில் அவர் விருப்பம் காட்டுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நாட்கள் வரும் என்று ராகுல் காந்திக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. அதனால் தான் அவர் அவையை முடக்கி வருகிறார்.

    பாராளுமன்றத்தில் நிலவும் சூழ்நிலையை தணிக்க மத்திய அரசு காங்கிரசை சமாதானப்படுத்த கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை. பல முயற்சிகள் வீணாகிவிட்டன.

    தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸ் கட்சி விரக்தி அடைந்து உள்ளது. நிலைமையை மாற்ற அவர்கள் தீவிரமாக உள்ளனர். ஆனால் காங்கிரசுக்கான நாட்கள் வராது. அடுத்த தேர்தல்களிலும் அவர்களது எண்ணிக்கை (மக்களவை) மேலும் குறையும்.

    அனைத்து எதிர்க்கட்சி களும் காங்கிரசுடன் இல்லை. சிறிய கட்சிகள் அந்தந்த கட்சி நேரத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் ராகுல்காந்தி மீது சிறிய கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. அவையை முடக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மீது அழுத்தம் இருக்கிறது.

    எதிர்க்கட்சிகளில் சிலர் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை. அவை செயல்பட வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி.
    • அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் முதற்கட்ட அமர்வு நிறைவு பெற்றது.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் எம்.பி. பகவன்தாஸ் ரத்தோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷமிட்டனர். அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் கோப்புகளில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதாக கூறி அவர் ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சிகளின் அமளியால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    மதியம் 12 மணிக்கு சபை கூடியபோது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மக்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மத்திய பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடுகளை நிலைக்குழுக்கள் ஆராயும்.

    இதற்கிடையே அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் எப்ஸ்டீனின் படங்களுடன் கூடிய பெரிய பதாகையையும் வைத்திருந்தனர். மத்திய மந்திரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் முதல்கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மாநிலங்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுக்க ஒன்றிய அரசின் திட்டமென்ன?
    • எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் வருமானத்தை பெருக்கி உள்ளதா?

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இன்று திமுக திமுக எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பினர்.

    இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    1. கழிவுநீர் மேலாண்மையை முழுமையாக இயந்திரமயமாக்கும் திட்டங்கள் கிடப்பில் போட்டுள்ளதா ஒன்றிய அரசு?

    திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி

    அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன்

    மார்ச் 2025 நிலவரப்படி, இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு உபகரணங்களைக் கொண்டுள்ள நகராட்சிகளின் எண்ணிக்கை மற்றும் மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவதை முழுமையாகத் தடுத்துள்ள இடங்களின் விவரங்களை திமுக மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் கனிமொழி கருணாநிதி கோரியுள்ளனர். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் 'கையால் மலம் அள்ளுவோர் தடைச் சட்டத்தின்' கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கண்டறியப்பட்ட விதிமீறல்கள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்தும் நிலையான வழிகாட்டுதல்களை (SOP) அரசு வெளியிட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    2. கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுக்க ஒன்றிய அரசின் திட்டமென்ன?

    திமுக எம்.பி. ஆர். கிரிராஜன்

    14,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த திறன் கொண்ட 18 அணு மின் உலைகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறித்தும் ஒவ்வொரு உலையையும் முடிக்கும் செலவு மற்றும் நேரம், அணுமின் நிலையங்களை அமைக்கும் இடங்கள் குறித்தும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அணு மின் நிலையங்களிலும் அதைச் சுற்றியும் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

    3. கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின் புதிய இலக்குகள் சாத்தியமா?

    திமுக எம்.பி. பி. வில்சன்

    கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின்(CCTS) கீழ் கூடுதல் தீவிர கார்பன் துறைகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள பசுமை வாயு வெளியேற்ற (GEI) இலக்குகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பினார். பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல்கள், ஜவுளி மற்றும் இரண்டாம் நிலை அலுமினியம் உட்பட இந்த வழிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்ட துறைகள் எவை? GEI இலக்குகளை கண்காணித்தல், சரிபார்த்தல் மற்றும் செயல்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்தும் அவர் கேட்டுள்ளார்.

    4. வெளிநாட்டில் இறக்கும் இந்தியர்ளின் உடல்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான கோரிக்கைகள் தாமதமாக நிறைவேற்றுவது ஏன்?

    திமுக எம்.பி. பி. வில்சன்

    வெளிநாட்டில் இறக்கும் இந்திய குடிமக்களின் உடல்களை திருப்பி தாய்நாடு கொண்டு வருவதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்க ஏற்கனவே உள்ள அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன் என்றும் அவை சரியாக செயல்படாமல் இருப்பது குறித்தும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார். வெளிநாட்டில் இறந்த இந்தியர்களை திருப்பி அனுப்புவது குறித்து குடும்பங்களிடமிருந்து அரசாங்கம் பெறும் கோரிக்கைகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனும் புகார்கள் குறித்து அரசாங்கத்தின் பதில் என்ன என்றும் கேட்டுள்ளார்.

    5. தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்துக!

    திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா

    தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரிடம் சில முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, மாநிலம் முழுவதும் எரிசக்தி மற்றும் மூலப்பொருளாக எரிவாயுவை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய நிலை குறித்தும், அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏதேனும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாவட்ட வாரியாக கோரிக்கையின் அடிப்படையில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் பணியின் தற்போதைய விவரங்களையும் கோரியுள்ளார்.

    6. எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் வருமானத்தை பெருக்கி உள்ளதா?

    கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார்

    தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன்

    தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், ஒரு லிட்டர் எரிபொருளில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை நிர்ணயித்த காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அரசு எட்டியுள்ளதா என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 2014-ல் 1.5% ஆக இருந்த எத்தனால் கலப்பு, 2025-ல் 20% ஆக உயர்ந்ததற்கு கரும்புத் தொழில்துறைக்கு அரசு வழங்கிய வலுவான நிதிச் சலுகைகள் காரணமா என்ற விவரத்தை அவர்கள் கோரியுள்ளனர். மேலும், இந்த எத்தனால் கலப்புத் திட்டமானது பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்தல் போன்ற இலக்குகளை அடைந்துள்ளதா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். இறுதியாக, இந்த 20% எத்தனால் கலப்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களையும் அவர்கள் கோரியுள்ளனர்.

    மேலும் தங்களது மற்றொரு கேள்வியில் அவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைக்கவும், சீரமைக்கவும் நிதி ஆயோக் ஏதேனும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதா என்பது குறித்து அவர்கள் விளக்கம் கோரியுள்ளனர். குறிப்பாக, எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்காக ஏஐ வசதியுடன் கூடிய ஒன்றிய டிஜிட்டல் போர்டல் (centralised digital portal) அமைப்பது குறித்த பரிந்துரைகள் மற்றும் அதன் தற்போதைய நிலை பற்றி அவர்கள் கேட்டுள்ளனர். மேலும், இத்தகைய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளால் பொது வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படுமா மற்றும் கடன் வசதி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் மூலம் எம்எஸ்எம்ஈ வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    7. அமெரிக்காவின் புதிய வரியால் பாதிக்கும் சிறு, குறு தொழில்கள்

    தீர்வு என்ன?

    பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேரு

    அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய வரிகளால் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், தோல் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அரசு ஆய்வு செய்துள்ளதா என கேட்டுள்ளார். இந்த வரிகளால் உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி குறைவு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் குறித்த விவரங்களையும், இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு எம்எஸ்எம்ஈ நிறுவனங்களின் எண்ணிக்கையையும் கோரியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மானியங்கள், குறைந்த வட்டி கடன் அல்லது வரி விலக்கு போன்ற ஏதேனும் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா மற்றும் வருங்காலத்தில் இத்தகைய சவால்களிலிருந்து எம்எஸ்எம்ஈ -களைப் பாதுகாக்க உள்ள திட்டங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.

    8. குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை டிஜிட்டலில் கண்காணிக்கும் திட்டத்தின் சாத்தியங்கள் என்ன?

    டாக்டர் கலாநிதி வீராசாமி

    ஜல் ஜீவன் மிஷன் மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கிராமப்புறக் குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தத் திட்டத்தில் இடம்பெறவிருக்கும் நிகழ்நேர கண்காணிப்புத் திரைகள் (Real-time dashboards), ஐஓடி சென்சார்கள் (IoT Sensors), புவிசார் தகவல் அமைப்பு (GIS mapping) மற்றும் மொபைல் செயலிகள் போன்ற தொழில்நுட்பக் கூறுகள் குறித்து விளக்கம் கோரியுள்ளார்.

    மேலும், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவைப்படும் நிதி மற்றும் காலக்கெடு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கண்காணிப்பு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், இதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

    9. சென்னை மற்றும் ஓசூரில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து. அமெரிக்காவின் புதிய வரிக்கு தீர்வு காணுமா ஒன்றிய அரசு?

    தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

    உலகளாவிய வர்த்தக இடையூறுகள் மற்றும் வரி நிச்சயமற்ற தன்மையால், சென்னை மற்றும் ஓசூரில் உள்ள எம்எஸ்எம்ஈ கிளஸ்டர்களில் சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளனவா என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அண்மைக்காலப் புயல்கள் மற்றும் வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அல்லது சிறப்பு நிவாரணத் தொகுப்புகள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், 2026-ஆம் ஆண்டிற்கான 95 பில்லியன் ரூபாய் எம்எஸ்எம்ஈ நிதித் திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். 2025-26 காலக்கட்டத்தில் மாநில வாரியாக வழங்கப்பட்ட நிதி விவரங்கள் மற்றும் தமிழ்நாடு போன்ற தொழில் சார்ந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை நிலைப்படுத்த அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரங்களைக் கோரியுள்ளார்.

    10. முறையாக பயன்படுத்தபடுகிறதா நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தின் நிதி?

    கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன்

    தமிழ்நாட்டில் அடல் புஜல் யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மைக்காக கண்டறியப்பட்டுள்ள முன்னுரிமை இடங்களின் எண்ணிக்கை குறித்து விளக்கம் கோரியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் சமூகப் பங்களிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன என்பதையும் கேட்டுள்ளார்.

    மேலும், இத்திட்டத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விரிவான விவரங்களை கோரியுள்ளார். நிலத்தடி நீரை நிலையான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    11. படுகர் சமூகத்தை பட்டியல் பழங்குடி பிரிவில் சேர்க்கும் கோரிக்கையின்மீது நடவடிக்கை என்ன?

    வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்

    1931-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை ஒரு முக்கியமான பழங்குடி இனமாக அங்கீகரிக்கப்பட்ட படுகர் சமூகத்தினரை, தற்போது பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes - ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அரசு கவனித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசிடமிருந்து ஏதேனும் அதிகாரப்பூர்வ முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளனவா மற்றும் அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.

    மேலும், இக்கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுப்பதற்கான காலக்கெடு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.

    12. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் நிதியை மறுப்பது ஏன்?

    ஈரோடு எம்.பி, கே. ஈ. பிரகாஷ் கேள்வி

    புது தில்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்த கருத்துகளை அரசு கவனித்துள்ளதா என கேட்டுள்ளார். குறிப்பாக, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் - இரண்டாம் கட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தன் பங்கான ரூ. 2,283 கோடியை வழங்க மறுப்பதாலேயே, அத்திட்டத்திற்கான நிதி நடைமுறைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    இத்திட்டத்தைச் சரியான நேரத்தில் செயல்படுத்தவும், மக்களின் குடிநீர் தேவையைத் தீர்க்கவும் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.

    13. வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குகிறதா ஒன்றிய அரசு?

    தஞ்சாவூர் எம்.பி. முரசொலி

    இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் மேலாண்மை முதலியவற்றை வழங்கும் அம்ருத் திட்டம் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரிடம் சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, இத்திட்டத்தின் செயல்பாட்டு விவரங்கள் மற்றும் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு நடைமுறைகள் குறித்து விளக்கம் கோரியுள்ளார். மேலும், தற்போது நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் வரும் நகரங்களின் பட்டியல், மாநில வாரியாகவும் திட்ட வாரியாகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதியின் நிலை குறித்தும் வினவியுள்ளார். மாநில அளவில் இத்திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் ஏதேனும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விவரங்களைக் கேட்டுள்ளார்.

    14. வேளான் பதப்படுத்துதலுக்கு நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் சிக்கல்களை ஒன்றிய அரசு தீர்க்காதது ஏன்?

    காஞ்சிபுரம் எம்.பி. செல்வம்

    திருவண்னாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை

    தமிழ்நாட்டில் வேளாண் பதப்படுத்துதல் மேம்பாட்டிற்கான நவீன உள்கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் எவ்வளவு தூரம் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அவர்கள் விளக்கம் கோரியுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்ட, முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களின் விவரங்கள், உருவாக்கப்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த தரவுகளை கேட்டுள்ளனர். மேலும், சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் இத்திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்றும், முறையான விழிப்புணர்வு இல்லாமை அல்லது சிக்கலான நடைமுறைகளால் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இத்திட்டத்தை விரைவுபடுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் அரசு எடுத்து வரும் திருத்த நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    15. குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் போதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காதது ஏன்?

    தர்மபுரி எம்.பி. அ. மணி

    நாட்டின் நகர்ப்புறங்களில் குப்பை, கழிவு மற்றும் சாக்கடை மேலாண்மை ஒரு கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதா என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் மற்றும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரியுள்ளார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி உதவி குறித்த விவரங்களை ஆண்டு வாரியாகவும், நகரம் வாரியாகவும் கோரியுள்ளார். மேலும், இத்தகைய பணிகளில் மாநிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை அரசு மதிப்பீடு செய்துள்ளதா என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

    16. எத்தனால் உற்பத்தியில் இலக்கை எட்டுமா இந்தியா?

    பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி

    கரும்பு தவிர்த்த இதர மூலப்பொருட்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் எத்தனால் உற்பத்தி அளவு எவ்வளவு மற்றும் அவை எந்தெந்த ஆதாரங்களில் (source-wise) இருந்து பெறப்படவுள்ளன என்பது குறித்த விவரங்களை கோரியுள்ளார். மேலும், நாட்டின் எத்தனால் கலப்பு இலக்கை (Ethanol blending target) எட்டுவதற்கு இந்த உற்பத்தி அளவு போதுமானதாக இருக்குமா என்பது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார்.

    17. ஸ்மார்ட் சிட்டீஸ் மிஷன் திட்டத்தின் செயல்பாடுகள் என்ன?

    சேலம் திமுக எம்.பி, டி. எம். செல்வகணபதி

    ஸ்மார்ட் சிட்டீஸ் மிஷன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்குக் குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகளுக்காக ஒன்றிய அரசு நிதி வழங்கி வருகிறதா என்பது குறித்தும், கடந்த மூன்று நிதியாண்டுகளில் பல்வேறு நகரங்களுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார். மேலும், இத்திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளனவா என்பது உண்மையா என்றும், அவ்வாறு கோரிக்கைகள் இருந்தால் அது தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விவரங்களைக் கேட்டுள்ளார்.

    18. பாரத்மாலா திட்டத்தின் செயல்பாடுகளில் தாமதங்கள் ஏன்?

    ஆரணி எம்.பி. எம். எஸ். தரணிவேந்தன்

    பாரத்மாலா திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை, அவற்றின் நீளம் மற்றும் செலவிடப்பட்ட நிதி குறித்த விவரங்களை கோரியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்னும் தொடங்கப்படாமல் உள்ள திட்டங்களின் நிலை மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்ட சாலைகளின் நீளம், செலவு மற்றும் காலக்கெடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இத்திட்டத்தால் சரக்கு போக்குவரத்துத் திறன் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள தாக்கம் குறித்து அரசு ஆய்வு செய்துள்ளதா என்றும் விளக்கம் கேட்டுள்ளார். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற சிக்கல்களைத் தீர்த்து, பணிகளை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பு, சிறு ஒப்பந்ததாரர்கள் மற்றும் எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மந்திரி சபையில் மறுசீரமைப்பை மேற்கொண்டார் அதிபர் எர்டோகன்.
    • ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

    துருக்கியின் மந்திரி சபையில் மறுசீரமைப்பை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். இதில் அரசாங்க தலைமை வக்கீல் அகின் குர்லெக்கை புதிய நீதி மந்திரியாக நியமித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்தநிலையில் பாராளுமன்றத்தில் அகின் குர்லெக் மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அகின் குர்லெக்கின் பதவி பிரமாணத்தை தடுக்க முயற்சித்தனர். இதனால் ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

    ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவியது.

    மோதலில் ஈடுபட்டவர்களை பாதுகாவலர்கள் தடுத்தனர். மோதல் ஏற்பட்டபோதிலும் அகின் குர்லெக் மந்திரியாக பதவி ஏற்று கொண்டனர். அவரை சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்தனர்.

    • பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்புவோம். உரிமைக் குரல் எழுப்புவோம்.
    • தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.

    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆளும் பா.ஜ.க.விற்கு பாராளுமன்றத்தை நடத்துவதற்கே விருப்பமில்லை. தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை, நூல்களில் இருந்தும் இதழ்களில் இருந்தும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமான ஒன்றுதான்.

    ஆனால் ராகுல் காந்தி பேசும் போது வெளியிடப்படாத ஒரு நூலை காட்டி பேசக்கூடாது என்று கூறி அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தி கடந்த வாரம் கூட்டதொடரையே அவர்கள் நடத்தவில்லை.

    இந்த வாரமும் அதே நிலை நீடிக்கும் என நாங்கள் கருதுகிறோம். பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்புவோம். உரிமைக் குரல் எழுப்புவோம்.

    தமிழ்நாட்டிற்கு கல்வி உள்ளிட்ட பல துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை இன்னும் ஒதுக்காமல் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநில வாரியாக கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யும் போது தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.

    பா.ஜ.க. ஆளாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களை திட்டமிட்டு வஞ்சித்து நிதிகளை ஒதுக்காமல் மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர். தமிழ்நாடு அந்த வரிசையில் ஒன்று. அதேபோல் மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது என்றார்.

    • டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

    பாராளுமன்றவளாகம் மற்றும் டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

    இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் சீன எல்லை விவகாரம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளைக் காண்பித்தும் அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். அவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    அப்போது அவர் கூறும் போது, அவை சுமூகமாக நடைபெற வேண்டும். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கமிடுவதற்காக அல்ல. தற்போதைய கூட்டத் தொடரில், இடையூறுகள் காரணமாக 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்றார்.

    மேலும் ஆளும் கட்சி இருக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர், இப்படிப்பட்ட அவையை என்னால் நடத்த முடியாது என்று கூறினார். தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால் மக்களவை கூடிய 4 நிமிடங்களுக்குள் அவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    மக்களவை 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அவை மீண்டும் வருகிற 9ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டது.
    • முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்க்கப்படவில்லை.

    கடந்த ஜனவரி 28 தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

    இதற்கிடையே கூட்டத்தொடர் தொடக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்றைய மக்களவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

    பிரதமர் நரேந்திர மோடியின் உரை இல்லாமலேயே தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டு அவை நிறைவுற்றது.

    இன்று சபை தொடங்கிய பிறகு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

    முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்காததால் பிரதமர் மோடி பேச இருக்கும்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  

    • கேள்விக்கு பதில் அளிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் குறித்து தெளிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.
    • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எம்.பி.க்கள் அவையில் இருப்பது அவசியம்.

    சீனா ஊடுருவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்?

    கேள்விக்கு பதில் அளிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் குறித்து தெளிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.

    கேள்வி எழுப்பிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எம்.பி.க்கள் அவையில் இருப்பது அவசியம்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
    • 2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் ஆவர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, மாநிலத்தில் புதிதாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,097ஆக உயர்ந்துள்ளது. இது நிகழ்வுகளில் கூர்மையான மற்றும் தொடர்ச்சியான அதிகரிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை திறன் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே கவலைகளை எழுப்புகிறது. வலுவான பரிசோதனை திட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் தலையீடுகள் இல்லாமல், வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீராக இருந்தது. 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும்; 2022-ல் 89,265 ஆகவும்; 2023-ல் 92,816 ஆகவும்; 2024-ல் 96,486 ஆகவும் இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

     

    இந்த தொடர்ச்சியான அதிகரிப்பு, அதிகரித்து வரும் நோய் சுமையையும், மாவட்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது. 2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் ஆவர். தமிழ்நாட்டில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,097-ஐ எட்டியுள்ளது.

    அதன்படி, சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,505. காஞ்சிபுரத்தில் 7,295பேரும், வேலூரில் 6,525பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் 10,821 இறப்புகள் கருப்பை, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களால் மட்டுமே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    • மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரம் மக்களவயில் இன்று பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரம் குறித்து பேச முற்பட்டது, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    எதிர்க்கட்சியினருக்கு மக்களவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க முடியாது.

    இதையடுத்து, மக்களவையில் இருந்து 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரா்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற பாாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகர வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் அடங்குவர்.

    • பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.
    • ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.

    மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.

    ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×