என் மலர்
இந்தியா

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
- எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் சீன எல்லை விவகாரம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளைக் காண்பித்தும் அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். அவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர் கூறும் போது, அவை சுமூகமாக நடைபெற வேண்டும். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கமிடுவதற்காக அல்ல. தற்போதைய கூட்டத் தொடரில், இடையூறுகள் காரணமாக 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் ஆளும் கட்சி இருக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர், இப்படிப்பட்ட அவையை என்னால் நடத்த முடியாது என்று கூறினார். தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால் மக்களவை கூடிய 4 நிமிடங்களுக்குள் அவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மக்களவை 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அவை மீண்டும் வருகிற 9ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.






