என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK MP"

    • இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
    • எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.

    எஸ்ஐஆர் படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    எஸ்ஐஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது, அவை தீர்க்கப்படவில்லை.

    இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.

    எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.

    எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக திமுக மீது அதிமுக குற்றம்சாட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.
    • 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர்

    ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமைதி நிறுவல் ஆணையத்தின் தூதர் மட்டக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.

    இந்தியா சார்பில் உரையாற்றிய பி. வில்சன் கூறியதாவது:-

    மாண்புமிகு தலைவர் அவர்களே, வணக்கம்.

    1. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325ன் 25ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி இன்றைய நிகழ்வை ஒருங்கிணைத்ததற்காக, அமைதி நிறுவல் ஆணையத்தின் தலைமை ஜெர்மனிக்கு இந்தியா தனது பாராட்டுகளை தெரிவிக்கின்றது.

    பெண்கள் சமத்துவத்திற்காக நமீபியா அமைச்சரும், ஐ.நா. மகளிர் அமைப்பின் நிறைவேற்று இயக்குநரும், மற்றும் மற்ற உரையாளர்களும் தங்களது ஆழமான கருத்துகளையும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அமைதியை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறது. அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவல் மீதான எங்கள் அர்ப்பணிப்பு, தேசிய உரிமை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு(WPS) நோக்கங்களின் கொள்கைகளுடன் இணைந்துள்ளது.

    3. இந்தியாவின் அமைதிக்காப்பு பாரம்பரியத்தை தனித்துவமாக ஆக்கும் அம்சம் எங்கள் பங்களிப்பின் அளவில் மட்டும் இல்லை, நிலைத்த அமைதிக்கான இன்றியமையாத செயற்பாட்டாளர்களாக பெண்களை முன்கூட்டியே அடையாளம் கண்டது என்பதிலும் இருக்கிறது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325 பிறக்கும்முன்பே, 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர். இது, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்ற முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகவும் பதிவாகிறது. இது ஒரு குறியீட்டு நடவடிக்கை மட்டுமல்ல; மாறாக, பெண்களின் பார்வை, திறன்கள், மற்றும் அவர்களின் பங்கு பயனுள்ள அமைதிக்காப்பு மற்றும் அமைதி நிறுவலிற்கு அத்தியாவசியமானவை என்பதைக் கண்கூடாக அங்கீகரிக்கிறது.

    4. 2007 ஆம் ஆண்டு, இந்தியா ஐ.நா.வின் முதல் முழு பெண்கள் கொண்ட காவல் படை பிரிவை (Formed Police Unit) லைபீரியாவிற்கு அனுப்பியது. இந்த முன்னோடியான முயற்சி, அந்நாட்டின் உள்ளூர் பெண்களை தங்கள் தேசிய காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் சேர ஊக்குவித்தது. இன்று, இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள் காங்கோ ஜனநாயகக் குடியரசு, அப்யேய் மற்றும் தென் சூடான் ஆகிய இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சமூகங்களுடன் நம்பிக்கையை உருவாக்குவதிலும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

    5. இவ்வாறான பணியமர்வுகளின் மூலம், அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவலில் பெண்கள் வழங்கும் நேர்மையான பங்களிப்பு மற்றும் தாக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள், சமூகங்களில் நம்பிக்கையை உருவாக்கி, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளிக்கின்றனர். மிக முக்கியமாக, அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்ளவும், அமைதிக்கான வழிமுறைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தேவைகள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கவும் உதவுகின்றனர். அத்துடன், மோதல் நிலப்பரப்புகளில் உள்ள பெண்களுக்கு, அவர்களும் தலைவர்களாகவும், அமைதி நிறுவர்களாகவும் ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர்.

    6. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது. இன்று, அடிப்படை மட்டத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். மேலும், 23க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. இது, சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த ஆட்சி ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் அம்சங்கள் என்பதை வலியுறுத்துகிறது.

    7. இந்தியா, பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளில், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலிருந்து வரும் அமைதிப்படைப் பணியாளர்களுக்காக, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. புது டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு மையம் (Centre for United Nations Peacekeeping), இன்று பாலின உணர்வுமிக்க பயிற்சிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது. அது, பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக முக்கிய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு இயக்கத்திட்டமிடல், பொதுமக்கள் பாதுகாப்பு, பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைத் தடுப்பு, பாலின உணர்வுமிக்க தலைமைத்துவம் போன்ற துறைகளில் அத்தியாவசிய பயிற்சிகளை வழங்குகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில், இந்தியா உலக தெற்கு நாடுகளிலிருந்து பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக நடத்தப்பட்ட முதல் வகையான சர்வதேச மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தது.

    8. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது. இந்தியா தனது கூட்டு நாடுகளுடன், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலுள்ளவர்களுடன், தனது அறிவு, பயிற்சி, மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு, பொதுவான சவால்களுக்கு கூட்டாக தீர்வுகளை உருவாக்குவதில் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.
    • உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?

    மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்றும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதம் அளிக்க தயாரா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க., எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும்.

    அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

    ஒன்றிய பாஜக அரசின் இந்த சதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

    அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக் கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து.

    இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.

    மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் அமித்ஷா அவர்களே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?
    • நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர்," 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது என்பது திமுக குடும்பத்தின் DNA-வில் கலந்தது. அதற்கு ஸ்டாலினின் தங்கையான கனிமொழி எப்படி விதிவிலக்காவார்?

    தன் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக இளைஞர்கள் குறித்தோ, திமுக அனுதாபி ஞானசேகரனின் தொடர்புகள் குறித்தோ, SIR குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மிதவாதியாக இருந்த கனிமொழி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பை, தங்களுக்கு கிடைத்த வெற்றி போல சித்தரித்து அறிக்கை உருட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்த வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?

    நீங்கள் இந்த வழக்கில் தலையிடவே கூடாது எனத் தானே நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது?

    அதனை நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

    நீங்கள் தலையிடவே கூடாது என்று அமைக்கப்பட்ட இந்த SIT விசாரணையில் நீங்கள் தலையிட்டு, நீர்த்துப் போகச் செய்து, வழக்கை அவசரப்படுத்தி முடித்துவிட்டு, அந்த "SIR"-ஐ காப்பற்றிவிட்டோம் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?

    பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வர 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என Timeline போடும் கனிமொழி, அதில் 4 1/2 ஆண்டுகள் அவர் அண்ணன் ஆட்சி என்று மறந்துவிட்டாரா? அல்லது, தெரிந்தே, உட்கட்சி பூசலில் Same Side Goal அடித்துவிட்டாரா?

    பொள்ளாச்சி வழக்கை முறையாக CBI விசாரித்து, சரியான தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. அதிலும் சம்மந்தம் இல்லாத நீங்கள் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றதால் தான், இந்த கேள்வியைக் கேட்கிறோம்.

    "அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை"- அப்படியா? நாங்கள் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட SIT என்று தானே நினைத்தோம்? அப்படியென்றால், நீதிமன்ற உத்தரவை மீறி நீங்கள் விசாரித்தீர்களா? நீதிமன்ற தீர்ப்பை மீறி விசாரித்து, யாரைக் காப்பாற்றினீர்கள்?

    அண்ணா பல்கலை வழக்கு மட்டுமல்ல- ஒவ்வொரு வழக்கிலும் உங்கள் அண்ணன் அரசு எந்த லட்சணத்தில் விசாரிக்கிறது என்பதற்கு நீதிமன்றங்கள் கொடுக்கும் தொடர் சம்மட்டி அடிகளே சாட்சி!

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பான பேரிடியாக தங்கள் பாதுகாப்பை இழந்து நிற்கும் தமிழக மக்கள், ஜனநாயகப் பூர்வமாக 2026-ல் கொடுக்கப் போகும் தர்ம அடி காத்திருக்கிறது!

    #யார்_அந்த_SIR

    #SIRஐ_காப்பாற்றியது_யார்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை.
    • தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கின் தீர்ப்புக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து தி.மு.க. எம்பி கனிமொழி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.

    கடந்த டிசம்பரில் நடந்த நிகழ்வில் மிகத் துரிதமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, விசாரணையை முடித்து, குற்றவாளிக்குத் தண்டனையையும் கொடுத்திருக்கிறது தமிழகக் காவல் துறை.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை அதே செய்யப்பட்டார். உடனே குற்றவாளி ஞானசேகரனை போலீஸ் கைது செய்தது.

    3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு, வழக்கை விசாரித்தது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது, ஏற்கெனவே ஞானசேகரன் மீதான திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல வழக்குகளையும் காவல் துறை விசாரித்தது. மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது.

    தினந்தோறும் என்ற அடிப்படையில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை.

    இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ விசாரணையை கேட்டபோது, 'சிபிஐ விசாரணை தேவையில்லை' என டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.

    இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, "இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்' என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது.

    அன்றைக்குத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக் கொணராமல் போயிருந்தால் அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு விவகாரத்தை மூடி மறைத்திருக்கும். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கைப் பதியாமல் இழுத்தடித்ததோடு பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனையே தாக்க முயன்றார்கள்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

    2019 பிப்ரவரி 24 கல்லூரி மாணவி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.

    2019 மார்ச் 4- முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது.

    2019 மார்ச் 12 - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்.

    2019 ஏப்ரல் 27 - வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.

    2019 மே 21- முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.

    2021 ஜனவரி 6-இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்.

    2023 பிப்ரவரி 24 சாட்சி விசாரணை தொடங்கியது.

    2024 பிப்ரவரி 23 குற்றவாளிகள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை நடைபெற்றது.

    2025 மே 13- தீர்ப்பு.

    2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சிபிஐ.

    ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

    2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
    • உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக வரவேற்பு அளித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை செயலாளரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

    அரசு ஊழியர்கள் ரூ.1 லட்சம் வரை பணம் வைத்திருந்த புகார்களை வைத்துக்கொண்டு டாஸ்மாக்கில் நுழைந்து ED அத்துமீறியுள்ளது.

    டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டன. சில வழக்குகள் விடுதலையும் ஆகி இருக்கின்றன.

    இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று அமலாக்கத்துறையின் நடவடிக்கை முறையற்றவை, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை.

    அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கின்றார்கள், கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார்கள்.

    எனவேதான் உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

    அமலாக்கத்துறையின் நடவடிக்கை மாநில சுய ஆட்சிக்கு எதிரானவை என்பதை ஏற்றுக்கொண்டு தடை வதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

    டாஸ்மாக் வழக்கில் EDக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பது இந்தியா முழுமைக்குமான உத்தரவு.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் ED நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தராகவே டாஸ்மாக் வழக்கு உத்தரவை பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
    • பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.

    அக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில், பொதுக் கூட்டத்திற்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் மேஜை அருகே ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.

    பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார்.

    மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    • வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.
    • அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வக்பு மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.

    மேலும், அரசியல் நிர்ணய சபைக்கு வல்லபாய் பட்டேல் அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி மக்களவையில் எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.

    பாராளுமன்ற கூட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்பு மசோதாவில் பிரதிபலிக்கவில்லை.

    சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பணவீக்கம் அதிகரித்த போதிலும், வருமான உச்சவரம்பு மற்றும் உதவித்தொகைகள் மாற்றம் காணாமல் உள்ளன.
    • போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் உதவித்தொகை திட்டங்களுக்கு இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை.

    தி.மு.க எம்.பி வில்சன் பாராளுமன்றத்தில் போஸ்ட் - மெட்ரிக் மற்றும் ப்ரீ - மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பினை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தக் கோரி உரையாற்றினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்கள், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பானது நீண்ட காலயமா ரூ.2.5 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.

    இந்த இரண்டு லட்சம் என்கிற வருமான வரம்பானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைந்த திருத்தங்களை செய்யலாம் என்ற வீதிமுறையின் கீழ் 2010 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த வகையில் திருத்தமானது கடைசியாக கடந்த 2013 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், கல்விச் செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்த போதிலும், வருமான உச்சவரம்பு மற்றும் உதவித்தொகைகள் மாற்றம் காணாமல் உள்ளன.

    மாறாக, இந்திய அரசாங்கமானது சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வருமான வரம்பினை ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளது.

    இதேபோன்று எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் உயர்தர கல்வித்திட்டம் போன்ற திட்டங்களுக்கான வரம்பு ரூ.8 லட்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆனால், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் உதவித்தொகை திட்டங்களுக்கு இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஏராளமான தகுதி படைத்த மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறமுடியவில்லை.

    உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதமானது, மற்றவர்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது.

    இந்த இடைவெளியைக் குறைப்பதிலும், உயர்கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதிலும் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்றால், கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும்.

    எனவே, போஸ்ட் - மெட்ரிக் மற்றும் ப்ரீ - மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பினை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்.
    • பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.

    பவன் கல்யாணின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாஜகவுடனான கூட்டணிக்கு முன்பாக Go Back Hindi என பவன் கல்யாண் பேசியதை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜக கூட்டணிக்கு முன்பு, "நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என 2017ல் பவன் கல்யாண் தெரிவித்திருத்திருந்தார்.

    மேலும் அந்த பதிவில், " மொழிபேதங்களை கடந்து திரைப்படங்களை காண தொழில்நுட்பம் வழிவகை செய்துள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

    • தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
    • தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது.

    திருநெல்வேலியில் நடைபெற்ற பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இலக்கிய விழாக்கள் அதிகமாக நடத்தப்படுகிறது. தமிழை வளர்க்கவே இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது.

    முன்பு மதுரை, சென்னையில் மட்டும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்துவதால், அனைத்து மக்களுக்கும் எளிதாக புத்தகங்கள் கிடைக்கிறது.

    புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். கேரளா மாநிலத்தில் கோவில் விழாக்களை இலக்கியம் சார்ந்து நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் கொண்டாடுவதில்லை. அதை மறந்து விட்டார்கள். மறந்து போனதை உருவாக்கி தருவது இந்த இலக்கிய திருவிழா.

    முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாகும். திராவிட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்தியது.

    சமூக மக்களின் விடுதலைக்காக திராவிட எழுத்தாளர்கள் எழுதினார்கள்.இன்றைய சினிமாக்களில் பெண்ணடிமை இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மந்திரிகுமாரி திரைப்படத்தில் பெண் விடுதலை தொடர்பாக எழுதினார்.

    தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி, கலாச்சாரம் அழிந்து போய் விடக்கூடாது. தமிழகத்துக்குள் சாதி, மதத்தின் பெயரால் யாரும் நுழைந்து விட முடியாது. அதற்கு திராவிட எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்களே காரணம் ஆகும்.

    இன்று தமிழை கொண்டாடுவதாக கூறுகிறவர்கள், தமிழுக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை. நீதிமன்ற மொழியில் தமிழை அனுமதிக்க மறுக்கிறார்கள். கீழடியை அவர்கள் ஏற்கவில்லை. நமது இலக்கியம், கருத்துகள், சுய மரியாதையை காக்க தமிழின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    • முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணி நியமனம், தாளாளர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் திருச்சபையில் பேராயர் பர்னபாஸ் தலைமையிலும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலும் நிர்வாகிகள் 2 அணியினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு தரப்பினர் பாளை ஐகிரவுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள டயோசீசன் அலுவலகத்தில் சில அறைகளை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர்.

    இதனால் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பாளை இட்டேரியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபுள் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதுதொடர்பாக அவர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இரவு திருச்சபையில் குழப்பம் விளைவிப்பதாக கூறி நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், லே செயலாளர் ஜெயசிங், பொருளாளர் மனோகர், வக்கீல் ஜான் உள்பட 13 பேர் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 20 பேர் என மொத்தம் 33 பேர் மீது பாளை போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜான் கைது செய்யப்பட்டார். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நேற்று நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, பிஷப் பர்னபாஸ் உத்தரவின்பேரில் ஜான்ஸ் பள்ளி தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி. கடந்த வாரம் நீக்கப்பட்டு, வக்கீல் அருள்மாணிக்கம் புதிய தாளாளராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்க சென்றபோது அங்குள்ள அலுவலகத்திற்குள் புகுந்து ஞானதிரவியம் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக அருள்மாணிக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த மனுவில், என்னை ஞானதிரவியம் எம்.பி., வக்கீல் ஜான், லே செயலாளர் ஜெயசிங் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 10 பேர் ஜான்ஸ் பள்ளி அலுவலகத்திற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் எனது அலுவலகத்தில் இருந்த பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பணம் வரவு-செலவு புத்தகம் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், மனு ரசீது வழங்கினர். தொடர்ந்து ஞானதிரவியம் எம்.பி., அவரது ஆதரவாளர்கள் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை டயோசீசன் அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் அறைகளை திறக்குமாறு பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க அங்கு வரலாம் என்று கூறப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×