என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா சபை"

    • ரஷியா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன.
    • உக்ரைனின் தீர்மானத்தை ஆதரித்த 107 நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது.

    இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே நேற்று ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 5-வது ஆண்டில் நுழைந்தது.

    இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்புவிடுத்து ஐ.நா.சபையில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு' என்ற தலைப்பில் உக்ரைன் அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்துக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உள்பட 107 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்கு அளித்தன.

    ரஷியா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன.

    இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா, அமெரிக்கா, பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 51 நாடு கள் புறக்கணித்து நடுநிலை வகித்தன.

    உக்ரைனின் தீர்மானத்தை ஆதரித்த 107 நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். அவர் கூறும் போது, உக்ரைனுடன் உயிர்களைப் பாதுகாப்பதில் நின்ற 107 நாடுகள் ஒவ்வொன்றிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் மக்கள் நாடு திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன், நீடித்த அமைதிக்கு ஆதரவு அளிக்கும் எங்கள் தீர்மானத்தை ஐ.நா. சபை நிறைவேற்றியது என்றார்.

    • டெல்லியில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு தொடங்குகிறது.
    • இதுதொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

    நியூயார்க்:

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு(AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.

    இந்த மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட 20 நாடுகளின் தலைவர்கள், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் உள்ளிட்ட ஏஐ துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்துவதற்காக இந்தியாவை மனதார வாழ்த்துகிறேன். மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு தன்னை வளர்த்து கொள்வதும், உலகளாவிய கருவியாக மாறுவதும் மிகவும் அவசியம்.

    உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம்.

    ஏ.ஐ.யின் ஆற்றல் மற்றும் அதன் அனைத்துவித ஆபத்துகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஏஐ முழு உலகிற்கும் என்பதை உறுதி செய்யவும் இந்தியா பொருத்தமான இடம்.

    இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மையமாக நான் பார்க்கிறேன். இந்தப் பன்முக உலகத்தை வடிவமைப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்களிப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    • எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு
    • 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது.

    1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு நாடுகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அப்போது ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம், சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ் மற்றும் எகிப்திடமிருந்து காசா பகுதி மற்றும் சினாய் தீபகற்பம் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் , "சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும்" என்று எகிப்து கோரியிருந்தது.

    எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது. இதன் முடிவில் இந்த தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது.

    இதனையடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு சிரியா நன்றி தெரிவித்தது.

    • திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.
    • 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர்

    ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமைதி நிறுவல் ஆணையத்தின் தூதர் மட்டக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.

    இந்தியா சார்பில் உரையாற்றிய பி. வில்சன் கூறியதாவது:-

    மாண்புமிகு தலைவர் அவர்களே, வணக்கம்.

    1. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325ன் 25ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி இன்றைய நிகழ்வை ஒருங்கிணைத்ததற்காக, அமைதி நிறுவல் ஆணையத்தின் தலைமை ஜெர்மனிக்கு இந்தியா தனது பாராட்டுகளை தெரிவிக்கின்றது.

    பெண்கள் சமத்துவத்திற்காக நமீபியா அமைச்சரும், ஐ.நா. மகளிர் அமைப்பின் நிறைவேற்று இயக்குநரும், மற்றும் மற்ற உரையாளர்களும் தங்களது ஆழமான கருத்துகளையும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அமைதியை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறது. அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவல் மீதான எங்கள் அர்ப்பணிப்பு, தேசிய உரிமை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு(WPS) நோக்கங்களின் கொள்கைகளுடன் இணைந்துள்ளது.

    3. இந்தியாவின் அமைதிக்காப்பு பாரம்பரியத்தை தனித்துவமாக ஆக்கும் அம்சம் எங்கள் பங்களிப்பின் அளவில் மட்டும் இல்லை, நிலைத்த அமைதிக்கான இன்றியமையாத செயற்பாட்டாளர்களாக பெண்களை முன்கூட்டியே அடையாளம் கண்டது என்பதிலும் இருக்கிறது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325 பிறக்கும்முன்பே, 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர். இது, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்ற முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகவும் பதிவாகிறது. இது ஒரு குறியீட்டு நடவடிக்கை மட்டுமல்ல; மாறாக, பெண்களின் பார்வை, திறன்கள், மற்றும் அவர்களின் பங்கு பயனுள்ள அமைதிக்காப்பு மற்றும் அமைதி நிறுவலிற்கு அத்தியாவசியமானவை என்பதைக் கண்கூடாக அங்கீகரிக்கிறது.

    4. 2007 ஆம் ஆண்டு, இந்தியா ஐ.நா.வின் முதல் முழு பெண்கள் கொண்ட காவல் படை பிரிவை (Formed Police Unit) லைபீரியாவிற்கு அனுப்பியது. இந்த முன்னோடியான முயற்சி, அந்நாட்டின் உள்ளூர் பெண்களை தங்கள் தேசிய காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் சேர ஊக்குவித்தது. இன்று, இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள் காங்கோ ஜனநாயகக் குடியரசு, அப்யேய் மற்றும் தென் சூடான் ஆகிய இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சமூகங்களுடன் நம்பிக்கையை உருவாக்குவதிலும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

    5. இவ்வாறான பணியமர்வுகளின் மூலம், அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவலில் பெண்கள் வழங்கும் நேர்மையான பங்களிப்பு மற்றும் தாக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள், சமூகங்களில் நம்பிக்கையை உருவாக்கி, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளிக்கின்றனர். மிக முக்கியமாக, அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்ளவும், அமைதிக்கான வழிமுறைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தேவைகள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கவும் உதவுகின்றனர். அத்துடன், மோதல் நிலப்பரப்புகளில் உள்ள பெண்களுக்கு, அவர்களும் தலைவர்களாகவும், அமைதி நிறுவர்களாகவும் ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர்.

    6. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது. இன்று, அடிப்படை மட்டத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். மேலும், 23க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. இது, சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த ஆட்சி ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் அம்சங்கள் என்பதை வலியுறுத்துகிறது.

    7. இந்தியா, பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளில், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலிருந்து வரும் அமைதிப்படைப் பணியாளர்களுக்காக, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. புது டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு மையம் (Centre for United Nations Peacekeeping), இன்று பாலின உணர்வுமிக்க பயிற்சிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது. அது, பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக முக்கிய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு இயக்கத்திட்டமிடல், பொதுமக்கள் பாதுகாப்பு, பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைத் தடுப்பு, பாலின உணர்வுமிக்க தலைமைத்துவம் போன்ற துறைகளில் அத்தியாவசிய பயிற்சிகளை வழங்குகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில், இந்தியா உலக தெற்கு நாடுகளிலிருந்து பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக நடத்தப்பட்ட முதல் வகையான சர்வதேச மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தது.

    8. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது. இந்தியா தனது கூட்டு நாடுகளுடன், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலுள்ளவர்களுடன், தனது அறிவு, பயிற்சி, மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு, பொதுவான சவால்களுக்கு கூட்டாக தீர்வுகளை உருவாக்குவதில் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

    • சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது.
    • ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும் இவ்விவகாரத்தை அடிக்கடி ஐ.நா.சபையில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.

    இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து விவகாரத்தை ஜெனீவாவில் உள்ள ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.

    இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது:-

    மனித உரிமைகள் கவுன்சிலின் நடவடிக்கைகளை அரசியலாக்க ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்ச்சியாகவும் வேண்டுமென்றே முயற்சிப்பதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த கவுன்சிலின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகவும் உள்ளது.

    சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் முக்கிய கொள்கைகளை வேண்டுமென்றே மீறுகிறது. பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    நீடித்த ஒத்துழைப்பு என்பதுபயங்கரவாதத்தில் இல்லை. அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. எனவே இந்த கவுன்சில் தன்னை திசைதிருப்பல் மற்றும் திரிபுபடுத்தலுக்கான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்த பிரச்சினையை எழுப்புவதன் மூலம் இந்த மன்றத்தை பாகிஸ்தான் அரசியலாக்க முயற்சிக்கிறது. ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹைதியில் 4 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது.
    • இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    நியூயார்க்:

    கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, அங்குள்ள லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்து சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் உள்நாட்டு மோதலை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

    • டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார்.
    • அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்கிறார்

    ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

    இந்தக் கூட்டத்தில் பிரேசில் நாட்டின் பிரதிநிதி முதலில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுவார்.

    இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, ரஷியா, சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் ஆகியவை சர்வதேச அரசியலில் விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில் ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது கவனம் பெற்றுள்ளது.

    • நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
    • ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இது ஒரு ஆபத்தான திருப்புமுனை என்றும், மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடுகள் நீண்டகால மோதல்களுக்கும் பிராந்திய ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கும் என்றும் சீனா அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

    பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் இராஜதந்திர அணுகுமுறையே ஸ்திரத்தன்மைக்கு சிறந்த வழி என்று கூறியுள்ளது.

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் தாக்குதல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

    பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை. ஒரே வழி இராஜதந்திரமே என்று கூறி, பதற்றத்தைத் தணிக்க அனைத்து உறுப்பு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.

    அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் அதிபர் டிரம்பின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

    அங்கீகரிக்கப்படாத மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை என்று கூறியதுடன், மத்திய கிழக்கில் ஒரு பேரழிவு தரும் போரில் அமெரிக்கா சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர். எந்தவொரு எதிர்மறையான விளைவுகளுக்கும் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று தெரிவித்தனர்.

    சவுதி அரேபியா, அமெரிக்கா ஈரானிய அணுசக்தி வசதிகளைத் தாக்குவதைக் பெரும் கவலையுடன் கவனிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

    இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும், அமெரிக்கா அந்த அச்சுறுத்தலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். பதற்றத்தைத் தணித்து இராஜதந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆஸ்திரேலியா,ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    • அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஈரான், இஸ்ரேலிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.
    • போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    நியூயார்க்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது இரு நாடுகளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேல்–ஈரான் இடையிலான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கு இடையிலான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்றவைக்கும். அதை நாம் பரவ விடக்கூடாது.

    அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள். போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.

    போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளின் தலைவிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்தின் தலைவிதியை மாற்ற உதவும்.

    போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மோதல் கணிக்க முடியாததாக உள்ளது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் ஒற்றுமை மற்றும் ஐ.நா.சாசனத்தைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    • காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60,000 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர்.
    • காசாவில் உள்ள மக்கள் பட்டினியால் இறக்கின்றனர்.

    பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், "காசாவில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஐ.நா. சபை தீர்மானத்தில் நமது அரசாங்கம் கலந்து கொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடானது மற்றும் ஏமாற்றமளிக்கிறது.

    காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60,000 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினியால் இறக்கின்றனர். ஆனால் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறோம்.

    நெதன்யாகு ஒரு முழு நாட்டையும் அழித்தொழிக்கும் போது நாம் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல், அவரது அரசாங்கம் ஈரானை தாக்கி அதன் தலைமையை படுகொலை செய்வதையும், அதன் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதையும், அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் முற்றிலுமாக மீறுவதையும் நாம் உற்சாகப்படுத்துகிறோம்.

    ஒரு தேசமாக, நமது அரசியலமைப்பின் கொள்கைகளையும், நமது சுதந்திரப் போராட்டத்தின் மதிப்புகளையும் நாம் எவ்வாறு கைவிட முடியும்?

    இதற்கு எந்த நியாயமும் இல்லை. உலகளவில் தலைமை தாங்குபவர்களிடம் நீதியைப் பாதுகாக்க தைரியத்தை கோருகிறது. இந்தியா கடந்த காலங்களில் இந்தத் துணிச்சலைத் தவறாமல் காட்டியுள்ளது.

    மக்களை பிளவுபடுத்தும் செயல் அதிகரித்து வரும் உலகில், மனிதகுலத்திற்காக நாம் நமது குரலை மீட்டெடுக்க வேண்டும். உண்மை மற்றும் அகிம்சைக்காக அச்சமின்றி நிற்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பயங்கரவாத அமைப்புகள் மீது தடைகளை விதிக்கும் UNSCR 1267 என்ற குழுவிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • UNSCR 1267 என்ற குழு அடுத்த வாரம் கூட உள்ளதால், இந்தியா தனது குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவிடம் பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து இந்தியா முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆதாரத்தை அளித்து முறையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்புகள் மீது தடைகளை விதிக்கும் UNSCR 1267 என்ற குழுவிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    UNSCR 1267 என்ற குழு அடுத்த வாரம் கூட உள்ளதால், இந்தியா தனது குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் UNSCR 1267 குழு தீர்மானம், 1999ல் ஏற்கப்பட்டது.

    • பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்தார்

    இது தொடர்பாக பேசிய ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர், "எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச இராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது" என்று தெரிவித்ததாக கூறினார்.

    ×