என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான் மோதல்"
- பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம்.
- எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.
திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் ஆபரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, " பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது.
நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது."
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், பேரணி குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்றைய மாலை திருப்பூரில், பெகல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக, நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பெருவெற்றி பெற்றதைப் பாராட்டும் விதமாகவும், நாட்டைக் காக்கும் பணியில், தங்கள் உயிரைத் தியாகம் செய்த நமது ஐந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்,
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில், திருப்பூர் குமரன் சிலை முதல் மகாத்மா காந்தி சிலை வரை, தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நமது மக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.
அதன்படியே, நமது வீரம் மிகுந்த ராணுவம், விமானப்படை மூலம், பாகிஸ்தான் நாட்டிற்குள்ளே இருந்த தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை எல்லாம் தாக்கி அழித்திருக்கிறது.
இந்த ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாட, கட்சி வேறுபாடின்றி, பெருமளவில் பொதுமக்கள் கூடி, நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் மேலும் சிலர் காஷ்மீரில் பதுங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த 25 பேர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர்.
4 முதல் 6 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பின்னணியில் இருந்து செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் மீது கடந்த 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 4 நாட்கள் அதிரடி போர் நடத்தின. இந்த 4 நாட்கள் வேட்டையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளும், ராணுவத்தினரும் சுமார் 140 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் 9 விமானப்படை தளங்கள் ஏவுகணைகளால் தாக்கி துவம்சம் செய்து அழிக்கப்பட்டன. இந்த அதிரடிக்கு பிறகுதான் பாகிஸ்தான் நடுநடுங்கி இந்தியாவிடம் மண்டியிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலை இந்தியா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
என்றாலும் பஹல்காம் தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்தியா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பஹல்காம் சுற்றுலாதலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தற்போதும் காஷ்மீரில் பதுங்கி இருப்பதால் அவர்களை வேட்டையாட ஆபரேஷன் கெல்லர் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபரேஷன் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பகல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
புதிய ஆபரேஷன் திட்டத்தின் முதல்நாளான கடந்த செவ்வாய்க்கிழமை சோபியான் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களில் 2 பேர் சாகித் மற்றும் சபி என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள். காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் இருக்கும் நதீர் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ கமாண்டோ வீரர்களும், உள்ளூர் போலீசாரும் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இன்று அதிகாலை தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது உடல்களை கைப்பற்றி பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் ஆசீப் அகமது ஷேக், அமீர் நசீர்வானி மற்றும் யாவர் அகமது பட் என்று தெரியவந்தது. இவர்களில் தீவிரவாதி ஆசீப் அகமது ஷேக் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கியமான ஒருவன் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு முதல் பழிக்கு பழியை ராணுவத்தினர் செய்து முடித்துள்ளனர். பஹல்காம் தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பது ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் மேலும் சிலர் காஷ்மீரில் பதுங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை வேட்டையாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.
- இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது.
அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.
இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன்படி, 14 பேரை இழந்த மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் உயிரிழந்தவர்களின் (தீவிரவாதிகள்) வாரிசுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிடம் தொலை தூர ஏவுகணைகள் இல்லை.
- தன்னிடம் ஏவுகணைகள் இருப்பதாக பாகிஸ்தான் பெருமையாக கூறிக் கொள்ளலாம்.
ஆஸ்திரியாவை சேர்ந்த போர் நிபுணர் டாம் கூபர், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்ற போர் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி பிரபலம் அடைந்தவர். அவர் இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலை மேற்கத்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டன. அவைகள் போர் கள நிலவரத்தை அறியாமல் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன.
கடந்த வாரம் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது முக்கியம் அல்ல. ஆனால் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களையும், அணு ஆயுத கிடங்குகளையும் குறிவைத்து தாக்கியது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி.
இதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. ஒரு தரப்பு அணு ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும்போது, மறுதரப்பால் பதில் தாக்குதல் நடத்த முடியாமல் போனது தான் என்னைப் பொறுத்தவரை தெளிவான வெற்றி.
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிடம் தொலை தூர ஏவுகணைகள் இல்லை. மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் ஸ்காலப் ஏவுகணைகளுக்கு நிகராக பாகிஸ்தானிடம் ஆயுதம் இல்லை. தன்னிடம் ஏவுகணைகள் இருப்பதாக பாகிஸ்தான் பெருமையாக கூறிக் கொள்ளலாம். அதனால் இந்தியாவின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.
இந்தியாவின் தாக்குதலில் நூர்கான் மற்றும் சர்கோதா போன்ற பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் படுமோசமாக சேதம் அடைந்தன. பாகிஸ்தானின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குனர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து பேசியதன் மூலம் பாகிஸ்தான் போருக்கு தயாரில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.
இவ்வாறு டாம் கூபர் கூறியுள்ளார்.
அதேபோல் ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ஜான் ஸ்பென்சர் கூறுகையில், "இந்தியா தயாரிப்பு ஆயுதங்கள் தனது பலத்தை நிருபித்துள்ளன. ஆனால் சீன ஆயுதங்களால் தனது பலத்தை நிருபிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.
- பொருட்களை தங்கள் தளங்களில் இருந்து அகற்றுமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
- இ-காமர்ஸ் நிறுவனங்கள் நோட்டீசுக்கு தற்போதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
காஷ்மீர் மாநிலம் சுற்றுலா தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதனை தொடர்ந்து அத்துமீறிய பாகிஸ்தான், இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து இருநாடுகளுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உலக நாடுகள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் தெரிவித்தனர். இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என இந்தியா அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Ubuy இந்தியா, Etsy, The Flag Company மற்றும் The Flag Corporation ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்ட நோட்டீசில், பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது பொறுத்துக்கொள்ளப்படாது என்று ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அத்தகைய பொருட்களை தங்கள் தளங்களில் இருந்து அகற்றுமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இருப்பினும், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் நோட்டீசுக்கு தற்போதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
- மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தாம் பயன்படுத்தலாம்.
- கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியா பயனப்டுத்துகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நிலைப்பாட்டை எடுக்கும் வரை ஒப்பந்தத்தை முடக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியாவும், மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம்.
ஆனால் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு. பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது படிப்படியாக முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், நதி நீர் ஒப்பந்தம் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானில் நெருக்கடியை உருவாக்கும் என்று பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
- இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிக்கிறது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகத் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியதால் அந்நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில் அந்நாட்டு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது பற்றிய தகவல் JNUவின் X கணக்கில் அறிவிக்கப்பட்டது.
இரு பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கல்வி ஒத்துழைப்பை குறிக்கோளாக கொண்டு பிப்ரவரி 3, 2025 அன்று கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2, 2028 அன்று காலாவதியாக இருந்தது.
ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள JNU பல்கலை., பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் எந்த சிரமங்களையும் சந்திக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிப்பதால் 'துருக்கி புறக்கணிப்பு' என்ற பதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- 1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்ததற்காக எம்.பி. சசி தரூரை காங்கிரஸ் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.
தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை என்றும், கட்சியின் கருத்துக்களைப் பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என்றும் தலைமை தரூருக்கு புத்திமதி வழங்கி உள்ளது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. தரூரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான தனிப்பட்ட முறையில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கூட்டத்தில் சசி தரூருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானுடன் இந்தியா மோதல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக சசி தரூரின் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு முரணாக அமைத்திருந்தன.
1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார். அதே வேளை தற்போதைய சூழலில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோடி இணங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
ஆனால் இந்திரா காந்தி இருந்தபோது நிலைமை வேறு, இப்போது சூழ்நிலை வேறு என்றும், அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் காங்கிரசின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சசி தரூர் ஊடகங்களிடம் கூறினார்.
மேலும் அண்மைக் காலமாகவே பிரதமர் மோடி, மற்றும் பாஜக அரசு செயல்பாடுகளை புகழும் விதமாக சசி தரூர் பேசி வருகிறார். இதன் பின்னணியிலேயே காங்கிரஸ் சசி தரூரை கண்டித்துள்ளது.
- இந்தியாயாவும் பாகிஸ்தானும் இப்போது ஒன்றாக ஒரு நல்ல இரவு உணவை அனுபவிக்கலாம்.
- மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்.
மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது" என்று அவர் கூறினார். ஏற்கனவே 2 முறை டிரம்ப் இவ்வாறு பேசியது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இதுபற்றி பேசிய டிரம்ப், "நாம் வர்த்தகம் செய்வோம் என்று நான் சொன்னேன். இரு நாடுகளிலும் வலுவான, செல்வாக்கு மிக்க புத்திசாலி தலைவர்கள் உள்ளனர்.
எல்லாம் நின்றுவிட்டது, நிலைமை அமைதியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது ஒன்றாக ஒரு நல்ல இரவு உணவை அனுபவிக்கலாம். அவர்கள் ஏவுகணைகளுக்குப் பதிலாக பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும். பதற்றம் மேலும் அதிகரித்திருந்தால், மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக வர்த்தகத்தில் கை வைப்பேன் என்று மிரட்டி டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எதுவும் பேசவில்லை என இந்தியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.
- துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும்.
- சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் 'துருக்கியைத் தடை செய்' என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.
துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக, துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும், ஆனால் இந்த புறக்கணிப்பு இந்த வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
புனேவின் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) ஆப்பிள் வர்த்தகரான சுயோக் ஜெண்டே, "துருக்கியிலிருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஆப்பிள்களை வாங்க முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.
வணிகர்களுக்கு மட்டுமல்ல, நுகர்வோரும் இந்தப் புறக்கணிப்பில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். துருக்கிய ஆப்பிள்களுக்கான தேவை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். "நுகர்வோர் துருக்கிய தயாரிப்புகளைத் தீவிரமாகத் தவிர்த்து வருகின்றனர், சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.
- ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
- போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.
ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.
ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.
- காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
- அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம்.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
முன்னதாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இந்த கருத்தை பாகிஸ்தான் மந்திரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிடவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் வழக்கமான திறன்கள் போதுமான அளவு வலுவாக இருப்பதால், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இந்தியாவைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை.
இந்தியாவின் தாக்குதல்கள் ஒரு போர் ஆகும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா அதன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இரு தரப்பினருக்கும் கண்ணியத்தை வழங்கும் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையை நிறுவ பாகிஸ்தான் ஆவலுடன் இருக்கிறது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம். வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் நீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றார்.