என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pahalgam attack"

    • ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என 140 பேர் கொல்லப்பட்டனர்.
    • சமீபத்தில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்ட தொடங்கி உள்ளனர்.

    குஷிநகர்:

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கியது. இதில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என 140 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், சமீபத்தில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்ட தொடங்கி உள்ளனர்.

    அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் குஷிநகர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்பத்தினர் 'சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளனர் என ஆஸ்பத்திரி முதல்வர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்தார்.

    • பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்துவார்கள்.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா ராணுவம் தாக்கியது.

    இந்த நடவடிக்கையில் சுமார் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்த கடந்த வாரம் பாகிஸ்தான் இந்திய ராணுவங்கள் இடையே சண்டை மூண்டது. 3 நாள் பரஸ்பர தாக்குதலுக்கு பின் கடந்த சனிக்கிழமை ஒப்பந்தம் மூலம் சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று பாஜகவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் தலைவர் ஜே.பி. நட்டா பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

    அதாவது, பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 13 முதல் மே 23 வரை 10 நாள் திரங்கா யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரையில் மக்களிடம் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகளைப் பற்றி எடுத்துக்கூற பாஜக விழைகிறது. சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பார்கள்.

    பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை யாத்திரையில் முன்னிலைப் படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும்
    • ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் என கூறப்படுகிறது.

    ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். இதில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.

    ப்ளே ஆஃப் சுற்று விவரங்கள்:

    குவாலிபையர் 1 - மே 29

    எலிமினேட்டர் - மே 30

    குவாலிபையர் 2 - ஜூன் 1

    இறுதிப் போட்டி - ஜூன் 3 ஆம் தேதி முறையே நடக்க உள்ளது.

    • பல ஆண்டுகளாக ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
    • இந்த நேரத்தில் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும்.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இரு தரப்பு மோதல், அதைதொடர்ந்த்த உலக நாடுகளின் தலையீடு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றை குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தேசிய ஊடகம் ஒன்றில் நேர்காணல் அளித்தார்.

    அதில் பேசிய அவர், "பஹல்காம் தாக்குதலால், பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பல ஆண்டுகளாக ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

    நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டு வந்த மாநில சுற்றுலாத் துறை மீண்டும் சரிந்துள்ளது. பாகிஸ்தான் மீண்டும் வேண்டுமென்றே காஷ்மீரை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றியுள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.

    ஆண்டின் இந்த நேரத்தில் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும். வருமானம் ஈட்டக்கூடியதாக இருந்தது. இந்த நேரத்தில், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்பினர். முன்பு ஒரு நாளைக்கு 50 முதல் 60 விமானங்கள் வந்து கொண்டிருந்தன.

    ஆனால் இப்போது எல்லாம் வெறிச்சோடியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் வான்வெளி மூடப்பட்டுள்ளன" என்று வேதனை தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
    • பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம்.

    இந்திய பிரதமர் உத்தரவின்படி பாகிஸ்தானில் போர் தொடுத்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்திய நாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. பல ஆண்டுகாலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவுப்படி காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பேரணி உள்ளிட்டவைகளை நடத்த அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் நடத்திய பயங்கரவாத சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அந்த நாட்டை சேர்ந்த அமைச்சரே உறுதி செய்துள்ளார். திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக சொல்லி உள்ளார்.

    இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுத்தி அமைதி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. பயங்கரவாதம் எங்கும் இருக்கக் கூடாது. அதனை வேரறுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாகிஸ்தான் செயல்பாடுகள், பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    மும்பை தாக்குதல் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த தற்போது உள்ள பிரதமர் மோடி சம்பவ இடத்தை பார்வையிட்டு பிரதமர் என்பவர் 56 இன்ச் மார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என அப்போதைய பிரதமரை விமர்சனம் செய்ததை மறக்கமுடியாது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் காவல் துறை, ராணுவம் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தது. உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 3 நாட்களாக பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லை மாநில பகுதிகளில் தாக்குதல் நடந்தது.
    • மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மோடியிடம் விவரங்களை எடுத்துக்கூறினர்.

    இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடனான உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    கடந்த 3 நாட்களாக பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லை மாநில பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

    இந்தநிலையில், இரு நாடுகளிலும் அமைதி ஏற்பட அமெரிக்கா உள்ளிட்ட உலக சக்திகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இன்று மாலை போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    பாகிஸ்தான் முன்மொழிந்த போர் நிறுத்தத்தை இந்தியா ஏற்ற நிலையில் மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இதையும் மீறி பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உரி, நவ்காம் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.
    • இந்தியாவின் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.

    பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது.

    இந்தியாவின் பதிலடியால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், பகல் முழுவதும் பதுங்கியது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 300 முதல் 400 டிரோன்களை இந்திய நிலைகளை நோக்கி ஏவியது. குறிப்பாக காஷ்மீரின் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை உள்ள எல்லையோரத்தில் உள்ள 36 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது.

    இவற்றையெல்லாம் நமது இந்திய ராணுவம் நடுவழியில் மறித்து ஏவுகணைகள் மூலம் அழித்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்கி, வலுவான பதிலடி கொடுத்தது.

    இதனிடையே நேற்று காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உரி, நவ்காம் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானின் F16 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை வானிலேயே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.

    இந்தியாவின் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஸ்ரீநகரில் பாகிஸ்தானின் 2 போர் விமானங்களையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    • இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.
    • தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

    சென்னை:

    இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.

    இந்த பேரணி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

    தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

    இந்த பேரணி இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.

    • விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்துவரும் நிலையில் இரு நாட்டினரும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரக்கூடிய பயணிகள் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

    • நாளை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
    • பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.

    அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
    • நேற்றிரவு நடந்த தாக்குதல், இந்தியாவின் பதிலடி உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நேற்றிரவு நடந்த தாக்குதல், இந்தியாவின் பதிலடி உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை அதிகாரிகள் விளக்கி வருகின்றனர்.

    அடுத்தகட்ட நகர்வு குறித்து முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • நிலைமை சீரடைந்தவுடன் மாணவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

    இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    நிலைமை சீரடைந்தவுடன் மாணவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    காஷ்மீரின் பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மாணவர்கள் 9994433456, 7373026456 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    உதவி தேவைப்படும் தமிழக மாணவர்கள் nrtwb.chairman@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு தொடர்பு கொள்ளலாம்.

    ×