என் மலர்
நீங்கள் தேடியது "டிரோன் தாக்குதல்"
- இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
- இது ஒரு அப்பட்டமான பொய் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது. இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புதின் இல்லத்தின் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
- ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி.
- நாளை டிரம்ப்- ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நாளை (ஞாயிறு) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 8 பேராவது காயம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டினிப்ரோ மாவட்டத்தில் உள்ள 18-வது மாடி ரஷியாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். டார்னிட்சியா மாவட்டத்தில் உள்ள 24 மாடி கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக தொழில்துறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர்
- இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரலில் 26 பேர் கொல்லப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கு பதிலடியா இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியது.
இந்த டிரோன்களை இந்திய ராணுவம் திறம்பட சுட்டு வீழ்த்தியது. தற்போது, அவற்றில் ஒன்றை டெல்லியில் ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி காட்சிப்படுத்தியுள்ளார்.
துருக்கியில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் டிரோன்களைப் நடுவானில் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் அதில் ஒரு டிரோனை துண்டுகளிலிருந்து மீண்டும் உருவாக்கியது.
இன்று நவம்பர் 15 விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தரை குறிவைத்து லாகூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த வகை டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
மே 10 அன்று விமானப் படையால் 2000 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
- மழலையர் பள்ளி மீது நடத்திய தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
- இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கெய்ரோ:
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) சண்டையிட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் துணை ராணுவம் தெற்கு கோர்டோபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மற்றும் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழலையர் பள்ளி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 குழந்தைகளும் அடங்குவர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.
- 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
- அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய உக்ரைனில் ரஷிய டிரோன் தாக்குதலில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
வியாழக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
அதே நேரம் ரஷிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு தாக்குதல் நடத்த வந்த 85 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலிலும், ரஷிய அதிபர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சூழலிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
- தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
துருக்கி அருகே கருங்கடலில் ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய டிரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது.
துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் ரஷியாவை சேர்ந்த 'கைரோஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. காலி டேங்கர்களுடன் ரஷியாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் இருந்த 25 மாலுமிகளை மீட்டனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பலான 'விராட்' மீதும் டிரோன் தாக்குதல் நடந்தது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. மேற்கு நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோதும் ரஷிய இந்த கப்பல்கள் மூலம் எண்ணெய் விற்று, உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டி வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
எனவே நீரில் செல்லக் கூடிய டிரோன்கள் மூலம் அவற்றை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
- இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் போது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றது. இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்த நிலையில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மீறி தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
- ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
- எண்ணெய் கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
ரஷியாவின் கருங்கடல் துறைமுகமான துவாப்சை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த எண்ணை கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணை கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலில் துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகத்தின் கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலால் ரஷியாவின் கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்படும்.
துவாப்ஸ் துறைமுகத்தில் உள்ள எண்ணை முனையம், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான ரோஸ்நெப்ட்டுக்கு சொந்தமானது. சமீபத்தில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே துவாப்ஸ் அருகே உள்ள சோஸ்னோவி கிராமத்திலும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்தது. மேலும் துவாப்சில் உள்ள ரெயில் நிலையத்திலும் சிறிது சேதங்கள் ஏற்பட்டது.
- கருங்கடலில் ரஷியாவில் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.
- உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து ரஷியா முக்கிய தளத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.
ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், ரஷிய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உள்ளார். இதனால் சண்டை நீடித்து வருகிறது.
தற்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. கருங்கடலில் ரஷிய கப்பல்களை தாக்க, உக்ரைன் கடல் டிரோன்களை (ஆளில்லா விமானம்) பயன்படுத்தி வருகிறது.
Sea Baby என அழைக்கப்படும் இந்த டிரோன்கள், ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது 1500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 2 ஆயிரம் கிலோ எடை வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
இந்த டிரோனை வெளி உலகத்திற்கு உக்ரைன் காட்டியுள்ளது. இலக்கை துல்லியமாக அளிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
செங்கடலில் உள்ள 11 கப்பல்களை உக்ரைன் டிரோன் மூலம் வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதில் போர்க்கப்பல் மற்றும் ஏவுகணை தாங்கிகளும் அடங்கும்.
உக்ரைன் தாக்குதலால் ரஷியா கிரீமியாவின் செவாஸ்டோபோலிருந்து நோவோரோசிய்ஸ்க் பகுதிக்கு முக்கிய தளத்தை ரஷியா மாற்றியுள்ளது.
- கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் சரமாரி தாக்குதல்.
- 251 டிரோன்களை வீழ்த்தியதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். ரஷியா பேச்சுவார்த்தைக்கு இணங்காததால், சண்டை நீடித்து வருகிறது.
தற்போது டிரோன்கள் மூலம் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று ரஷியாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை டிரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கு ரஷியாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷியப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. கிரீமியாவில் உள்ள எண்ணெய் நிலையத்தையும் டிரோன் தாக்கியதாவும், இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.
251 டிரோன்கள் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷியா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
- மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்தனர்.
- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து நேற்று பின்னேரத்தில் டிரோன்கள் நகரத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டது.
சுற்றுலா நகரமாக அறியப்படும் ஏலாட்டில் உள்ள மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடையாதோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏமனில் இருந்து இஸ்ரேலின் மீது தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.
டிரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது.
- உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
- ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது.
உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைனின் விமானப்படை தகவலின்படி, மொத்தம் 619 டிரோன்கள், 8 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 32 குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன.
உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் இதில் 583 இலக்குகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இதன் மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ரஷியாவின் சமாரா பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இரவில் 149 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில், சமாரா பிராந்தியத்தின் வான்வெளியில் 15 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மதியம், ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.






