என் மலர்
நீங்கள் தேடியது "டிரோன் தாக்குதல்"
- தென் கொரிய டிரோனை சுட்டு வீழ்த்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
- அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என தென்கொரியா மறுத்துள்ளது.
சியோல்:
தங்களது வான்பரப்பில் தென் கொரியாவின் டிரோன் அத்துமீறி பறந்தது என வடகொரியா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் கொரியாவின் டிரோன்கள் எல்லை தாண்டி வந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பறந்ததாக கூறப்பட்டது. அந்த டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்ததாகவும் கூறிய வடகொரியா, உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அந்த டிரோன் தங்களுடையது அல்ல. வடகொரியாவைத் தூண்டும் எண்ணம் தங்களுக்கு இல்லை என தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும் தென்கொரியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
- ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. நோவ்கோ பிராட் பிராதியத்தில் உள்ள புதினின் அரசு இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாகவும் ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் உக்ரைன் டிரோன் தாக்குதலில் புதினின் இல்லத்தை குறி வைக்கவில்லை என்று ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் விமானத்தில் அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தவில்லை என்பதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அங்கு தாக்குதல் நடந்ததாக நான் நம்பவில்லை. அன்றைய தினம் ரஷிய அதிபருடன் தொலைபேசியில் பேசினேன். புதினும் இந்த விஷயத்தை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
20 அம்ச திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
இது சமாதான முயற்சிகளை பலவீனப்படுத்தும் மாஸ்கோவின் முயற்சி தவிர வேறொன்றுமில்லை என்று ஐரோப்பிய அதிகாரிகள் வாதிட்ட பிறகு அமெரிக்காவின் இந்த முடிவை டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
- புத்தாண்டு இரவு உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
- ரஷியாவின் ராணுவ இலக்குகளை மட்டும் இலக்கு வைத்ததாக உக்ரைன் விளக்கம்.
ரஷியா- உக்ரைன் இடையிலான சண்டை 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது. சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திதான் வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் ஆக்கிரமிப்பு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கஃபே மற்றும் ஓட்டல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 27 பேர் உயிரிழந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
கெர்சன் பிராந்தியத்தில் உள்ள கோர்லி கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐந்து மைனர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியாவின் இந்த குற்றச்சாட்டு உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரைன் பொதுப்படைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரோ லிகோவி இது தொடர்பாக கூறுகையில் "உக்ரைன் படைகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ரஷியாவின் ராணுவ இலக்குகள், எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறை தொழிற்சாலைகள் மற்றும் பிற சட்டப்பூர்வ இலக்குகளுக்கு எதிராக மட்டுமே தாக்குதல்களை நடத்துகின்றன.
நடந்துகொண்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதற்காக, தவறான தகவல்களையும் பொய்களையும் ரஷியா மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறது.
புத்தாண்டு தினத்தன்று இரவு உக்ரைன் ராணுவம் தாக்கிய இலக்குகளின் தெளிவான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கெர்சன் பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் மீதான தாக்குதல்கள் இடம்பெறவில்லை" என்றார்.
- இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
- 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்கள் காணப்பட்டன.
தலைநகர் மாஸ்கோவின் அருகே உள்ள நோவ்கோரோட் பகுதியில் அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உக்ரைன் 91 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டி இருந்தது.
ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் நோவ்கோரோட் பகுதியில் உள்ள புதினின் இல்லத்தைத் தாக்க உக்ரைன் அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அந்த வீடியோவில், 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்களுக்கு அருகில் ரஷிய வீரர் ஒருவர் நிற்பது போன்ற காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ நகைப்புக்குரியது என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. இத்தகைய போலியான ஆதாரத்தை உருவாக்க ரஷியா இரண்டு நாட்கள் ஆகியுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் கிண்டலாக தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்கவின் சி.ஐ.ஏ புலனாய்வு அமைப்புநடத்திய ஆய்வில், உக்ரைன் புதினின் இல்லத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முடிவுக்கு வந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
- அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.
ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
- இது ஒரு அப்பட்டமான பொய் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது. இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புதின் இல்லத்தின் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
- ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி.
- நாளை டிரம்ப்- ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நாளை (ஞாயிறு) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 8 பேராவது காயம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டினிப்ரோ மாவட்டத்தில் உள்ள 18-வது மாடி ரஷியாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். டார்னிட்சியா மாவட்டத்தில் உள்ள 24 மாடி கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக தொழில்துறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர்
- இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரலில் 26 பேர் கொல்லப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கு பதிலடியா இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியது.
இந்த டிரோன்களை இந்திய ராணுவம் திறம்பட சுட்டு வீழ்த்தியது. தற்போது, அவற்றில் ஒன்றை டெல்லியில் ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி காட்சிப்படுத்தியுள்ளார்.
துருக்கியில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் டிரோன்களைப் நடுவானில் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் அதில் ஒரு டிரோனை துண்டுகளிலிருந்து மீண்டும் உருவாக்கியது.
இன்று நவம்பர் 15 விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தரை குறிவைத்து லாகூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த வகை டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
மே 10 அன்று விமானப் படையால் 2000 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
- மழலையர் பள்ளி மீது நடத்திய தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
- இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கெய்ரோ:
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) சண்டையிட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் துணை ராணுவம் தெற்கு கோர்டோபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மற்றும் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழலையர் பள்ளி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 குழந்தைகளும் அடங்குவர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.
- 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
- அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய உக்ரைனில் ரஷிய டிரோன் தாக்குதலில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
வியாழக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
அதே நேரம் ரஷிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு தாக்குதல் நடத்த வந்த 85 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலிலும், ரஷிய அதிபர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சூழலிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
- தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
துருக்கி அருகே கருங்கடலில் ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய டிரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது.
துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் ரஷியாவை சேர்ந்த 'கைரோஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. காலி டேங்கர்களுடன் ரஷியாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் இருந்த 25 மாலுமிகளை மீட்டனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பலான 'விராட்' மீதும் டிரோன் தாக்குதல் நடந்தது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. மேற்கு நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோதும் ரஷிய இந்த கப்பல்கள் மூலம் எண்ணெய் விற்று, உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டி வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
எனவே நீரில் செல்லக் கூடிய டிரோன்கள் மூலம் அவற்றை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
- இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் போது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றது. இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்த நிலையில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மீறி தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.






