என் மலர்
உலகம்

இந்தியா-பாகிஸ்தான் போரை அதிபர் டிரம்ப் நேரடியாக தலையிட்டு நிறுத்தினார் - மார்கோ ரூபியோ திட்டவட்டம்
- இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தினார்.
- டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பைசரன் புல்வெளி சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்ததாக கூறி மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்ட மோதல் 3 நாட்களுக்கு பின் மே 9 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில்தான் மோதலை நிறுத்தியதாக இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது அமெரிக்கா நேரடியாக தலையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரூபியோ, டிரம்ப் 'அமைதியின் அதிபர் '. "அதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றபோது, நாங்கள் நேரடியாக தலையிட்டோம். அதிபரால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடிந்தது" என்று கூறினார்.
மேலும் கம்போடியா-தாய்லாந்து, அஜர்பைஜான்-ஆர்மீனியா மற்றும் காங்கோ-ருவாண்டாவில் ஏற்பட்ட மோதல்களுக்கு அமைதியைக் கொண்டுவந்தது அமெரிக்காதான் என்றும் ரூபியோ கூறினார்.
மேலும் டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாதத்திற்கு ஒரு போரை நிறுத்தி வரும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.






