என் மலர்
உலகம்

ஏ.ஐ. உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்: அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டு
- டெல்லியில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு தொடங்குகிறது.
- இதுதொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
நியூயார்க்:
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு(AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.
இந்த மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட 20 நாடுகளின் தலைவர்கள், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் உள்ளிட்ட ஏஐ துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்துவதற்காக இந்தியாவை மனதார வாழ்த்துகிறேன். மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு தன்னை வளர்த்து கொள்வதும், உலகளாவிய கருவியாக மாறுவதும் மிகவும் அவசியம்.
உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம்.
ஏ.ஐ.யின் ஆற்றல் மற்றும் அதன் அனைத்துவித ஆபத்துகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஏஐ முழு உலகிற்கும் என்பதை உறுதி செய்யவும் இந்தியா பொருத்தமான இடம்.
இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மையமாக நான் பார்க்கிறேன். இந்தப் பன்முக உலகத்தை வடிவமைப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்களிப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.






