என் மலர்
நீங்கள் தேடியது "திமுக எம்பி"
- இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
- எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
எஸ்ஐஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது, அவை தீர்க்கப்படவில்லை.
இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக திமுக மீது அதிமுக குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.
- உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்றும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதம் அளிக்க தயாரா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க., எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும்.
அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
ஒன்றிய பாஜக அரசின் இந்த சதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக் கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து.
இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.
மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் அமித்ஷா அவர்களே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?
- நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர்," 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது என்பது திமுக குடும்பத்தின் DNA-வில் கலந்தது. அதற்கு ஸ்டாலினின் தங்கையான கனிமொழி எப்படி விதிவிலக்காவார்?
தன் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக இளைஞர்கள் குறித்தோ, திமுக அனுதாபி ஞானசேகரனின் தொடர்புகள் குறித்தோ, SIR குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மிதவாதியாக இருந்த கனிமொழி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பை, தங்களுக்கு கிடைத்த வெற்றி போல சித்தரித்து அறிக்கை உருட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?
நீங்கள் இந்த வழக்கில் தலையிடவே கூடாது எனத் தானே நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது?
அதனை நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
நீங்கள் தலையிடவே கூடாது என்று அமைக்கப்பட்ட இந்த SIT விசாரணையில் நீங்கள் தலையிட்டு, நீர்த்துப் போகச் செய்து, வழக்கை அவசரப்படுத்தி முடித்துவிட்டு, அந்த "SIR"-ஐ காப்பற்றிவிட்டோம் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வர 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என Timeline போடும் கனிமொழி, அதில் 4 1/2 ஆண்டுகள் அவர் அண்ணன் ஆட்சி என்று மறந்துவிட்டாரா? அல்லது, தெரிந்தே, உட்கட்சி பூசலில் Same Side Goal அடித்துவிட்டாரா?
பொள்ளாச்சி வழக்கை முறையாக CBI விசாரித்து, சரியான தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. அதிலும் சம்மந்தம் இல்லாத நீங்கள் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றதால் தான், இந்த கேள்வியைக் கேட்கிறோம்.
"அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை"- அப்படியா? நாங்கள் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட SIT என்று தானே நினைத்தோம்? அப்படியென்றால், நீதிமன்ற உத்தரவை மீறி நீங்கள் விசாரித்தீர்களா? நீதிமன்ற தீர்ப்பை மீறி விசாரித்து, யாரைக் காப்பாற்றினீர்கள்?
அண்ணா பல்கலை வழக்கு மட்டுமல்ல- ஒவ்வொரு வழக்கிலும் உங்கள் அண்ணன் அரசு எந்த லட்சணத்தில் விசாரிக்கிறது என்பதற்கு நீதிமன்றங்கள் கொடுக்கும் தொடர் சம்மட்டி அடிகளே சாட்சி!
இதற்கெல்லாம் முத்தாய்ப்பான பேரிடியாக தங்கள் பாதுகாப்பை இழந்து நிற்கும் தமிழக மக்கள், ஜனநாயகப் பூர்வமாக 2026-ல் கொடுக்கப் போகும் தர்ம அடி காத்திருக்கிறது!
#யார்_அந்த_SIR
#SIRஐ_காப்பாற்றியது_யார்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
- உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக வரவேற்பு அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை செயலாளரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
அரசு ஊழியர்கள் ரூ.1 லட்சம் வரை பணம் வைத்திருந்த புகார்களை வைத்துக்கொண்டு டாஸ்மாக்கில் நுழைந்து ED அத்துமீறியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டன. சில வழக்குகள் விடுதலையும் ஆகி இருக்கின்றன.
இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று அமலாக்கத்துறையின் நடவடிக்கை முறையற்றவை, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கின்றார்கள், கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார்கள்.
எனவேதான் உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கை மாநில சுய ஆட்சிக்கு எதிரானவை என்பதை ஏற்றுக்கொண்டு தடை வதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
டாஸ்மாக் வழக்கில் EDக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பது இந்தியா முழுமைக்குமான உத்தரவு.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் ED நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தராகவே டாஸ்மாக் வழக்கு உத்தரவை பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
- நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.
பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில், ஈடுபட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
அதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துரைக்க கனிமொழி தலைமையில் குழு ரஷ்யா, ஸ்பெயின் செல்ல உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.
ஒத்துழைப்பு நல்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தந்த பிரதமர் மோடி, அமைச்ர் உள்ளிட்டோருக்கு நன்றி.
நாட்டின் நலனை பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொதுக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
- பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.
மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.
அக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், பொதுக் கூட்டத்திற்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் மேஜை அருகே ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.
பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.
விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார்.
மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.
- அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்பு மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.
மேலும், அரசியல் நிர்ணய சபைக்கு வல்லபாய் பட்டேல் அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி மக்களவையில் எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.
பாராளுமன்ற கூட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்பு மசோதாவில் பிரதிபலிக்கவில்லை.
சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பணவீக்கம் அதிகரித்த போதிலும், வருமான உச்சவரம்பு மற்றும் உதவித்தொகைகள் மாற்றம் காணாமல் உள்ளன.
- போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் உதவித்தொகை திட்டங்களுக்கு இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை.
தி.மு.க எம்.பி வில்சன் பாராளுமன்றத்தில் போஸ்ட் - மெட்ரிக் மற்றும் ப்ரீ - மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பினை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தக் கோரி உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்கள், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பானது நீண்ட காலயமா ரூ.2.5 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.
இந்த இரண்டு லட்சம் என்கிற வருமான வரம்பானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைந்த திருத்தங்களை செய்யலாம் என்ற வீதிமுறையின் கீழ் 2010 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வகையில் திருத்தமானது கடைசியாக கடந்த 2013 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், கல்விச் செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்த போதிலும், வருமான உச்சவரம்பு மற்றும் உதவித்தொகைகள் மாற்றம் காணாமல் உள்ளன.
மாறாக, இந்திய அரசாங்கமானது சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வருமான வரம்பினை ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இதேபோன்று எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் உயர்தர கல்வித்திட்டம் போன்ற திட்டங்களுக்கான வரம்பு ரூ.8 லட்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் உதவித்தொகை திட்டங்களுக்கு இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஏராளமான தகுதி படைத்த மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறமுடியவில்லை.
உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதமானது, மற்றவர்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது.
இந்த இடைவெளியைக் குறைப்பதிலும், உயர்கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதிலும் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்றால், கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும்.
எனவே, போஸ்ட் - மெட்ரிக் மற்றும் ப்ரீ - மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பினை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்.
- பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?
அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.
பவன் கல்யாணின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜகவுடனான கூட்டணிக்கு முன்பாக Go Back Hindi என பவன் கல்யாண் பேசியதை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக கூட்டணிக்கு முன்பு, "நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என 2017ல் பவன் கல்யாண் தெரிவித்திருத்திருந்தார்.
மேலும் அந்த பதிவில், " மொழிபேதங்களை கடந்து திரைப்படங்களை காண தொழில்நுட்பம் வழிவகை செய்துள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.
- குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்.
- எம்.எம்.அப்துல்லா பார்வையாளர் பகுதியில் அமருவதற்காக வந்தபோது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது.
புதுக்கோட்டை:
இந்திய நாட்டில் 74-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையாளர்கள், அரசு நடைமுறை விதிகளின்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மட்டுமல்லாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது.
ஆனால் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த அரசு நடைமுறை விதியும் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோருக்கு இருக்கைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அவர் பார்வையாளர் பகுதியில் அமருவதற்காக வந்தபோது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா குடியரசு தின விழாவை புறக்கணித்து விட்டு உடனடியாக தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் அங்கிருந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது ஒரு புறம் இருக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்ற மாநிலங்களவை உறுப்பினர் தனக்கு இருக்கை ஒதுக்கப்படாமல் இருந்தாலும், குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் விழாவை புறக்கணித்து சென்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் இந்த பிரச்சினை எதனால் ஏற்பட்டது, இருக்கை ஒதுக்காமல் இருந்தது யார் தவறு? என்பது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி எம்.எம்.அப்துல்லா எம்.பி. கூறுகையில், இருக்கை ஒதுக்கப்படவில்லை என்பதற்காக விழாவை புறக்கணித்து செல்லவில்லை, எனக்கு வேறு வேலை இருந்ததால் உடனடியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
- லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலான அணியினர் திரண்டு காட்பிரே நோபுளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தென் இந்திய திருச்சபை எனப்படும் கிறிஸ்தவர்களின் சி.எஸ்.ஐ. அமைப்பு கடந்த 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இது தென் இந்தியாவில் வலுவான கிறிஸ்தவ அமைப்பாகும். தென்னிந்தியா முழுவதும் இந்த அமைப்புக்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இதில் 1,214 பேர் மத போதகர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பில் சுமார் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த அமைப்புக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் இந்திய திருச்சபை சார்பில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் இலங்கையில் தென் இந்திய திருச்சபை ஏராளமான பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படி தென் இந்திய திருச்சபை தென் இந்தியாவில் 104 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. 2000 பள்ளிக்கூடங்கள், 130 கல்லூரிகளும் இந்த சபையால் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கு தென் இந்திய திருச்சபை நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுவது உண்டு.
இந்த திருச்சபையின் பேராயர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது வேதநாயகம் என்பவர் தலைமையில் ஒரு அணியும், ஜெயசிங் என்பவர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.
இதில் ஜெயசிங் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து லே செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெயசிங் பரிந்துரையின் பேரில் திருமண்ட திருச்சபையின் பேராயராக பர்னபாஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளில் பணி நியமனம் செய்வது தொடர்பாக பேராயர் பர்னபாசுக்கும், லே செயலாளர் ஜெயசிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கவே கடந்த சில மாதங்களாக பேராயர் பர்னபாஸ் தலைமையில் ஒரு அணியினரும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவாக பிரிந்தனர். இதில் ஜெயசிங் அணியில் நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், திருச்சபை மேலாளர் மனோகர் உள்பட பலர் இருந்தனர். தொடர்ந்து பணி நியமனம் விவகாரத்தில் அவர்க ளுக்குள் உச்சகட்ட மோதல் நீடித்தது.
ஒருகட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள டயோசீசன் அலுவலகத்தில் இருந்த மானேஜர் அறையை ஒரு தரப்பினர் பூட்டு போட்டனர். அதனை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மற்றொரு தரப்பினர் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றபோது 2 தரப்பினருக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி.யை. அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் அருள் மாணிக்கம் என்பவரை பேராயர் பர்னபாஸ் புதிய தாளாளராக நியமித்தார். அவர் பதவியேற்க பள்ளிக்கு சென்றபோது, ஞானதிரவியம் ஆதரவாளர்கள் அங்கு சென்று மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சி.எஸ்.ஐ. டயோசீசன் அலுவலகத்திற்கு பேராயர் பர்னபாஸ் அணியை சேர்ந்த பாளை இட்டேரியில் சபை நடத்திவரும் மதபோதகரான காட்பிரே நோபுள் என்பவர் சென்றார். அப்போது அங்கு லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலான அணியினர் திரண்டு காட்பிரே நோபுளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலானது.
இதில் காயம் அடைந்த அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரத்தக்கறையுடன் சென்று புகார் அளித்தார்.
அதில், ஞானதிரவியம் எம்.பி. தூண்டுதலின் பேரில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மதபோதகரை தாக்கிய புகாரின்பேரில் ஞானதிரவியம் எம்.பி., பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஜான்(வயது 45), டயோசீசன் மேலாளர் மனோகர் உள்பட 12 பேர் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 25 பேர் என மொத்தம் 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 294(பி), 323, 502(2), 109 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய ஜான் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
- முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணி நியமனம், தாளாளர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் திருச்சபையில் பேராயர் பர்னபாஸ் தலைமையிலும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலும் நிர்வாகிகள் 2 அணியினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு தரப்பினர் பாளை ஐகிரவுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள டயோசீசன் அலுவலகத்தில் சில அறைகளை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர்.
இதனால் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பாளை இட்டேரியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபுள் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதுதொடர்பாக அவர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் இரவு திருச்சபையில் குழப்பம் விளைவிப்பதாக கூறி நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், லே செயலாளர் ஜெயசிங், பொருளாளர் மனோகர், வக்கீல் ஜான் உள்பட 13 பேர் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 20 பேர் என மொத்தம் 33 பேர் மீது பாளை போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜான் கைது செய்யப்பட்டார். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நேற்று நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிஷப் பர்னபாஸ் உத்தரவின்பேரில் ஜான்ஸ் பள்ளி தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி. கடந்த வாரம் நீக்கப்பட்டு, வக்கீல் அருள்மாணிக்கம் புதிய தாளாளராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்க சென்றபோது அங்குள்ள அலுவலகத்திற்குள் புகுந்து ஞானதிரவியம் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக அருள்மாணிக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த மனுவில், என்னை ஞானதிரவியம் எம்.பி., வக்கீல் ஜான், லே செயலாளர் ஜெயசிங் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 10 பேர் ஜான்ஸ் பள்ளி அலுவலகத்திற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் எனது அலுவலகத்தில் இருந்த பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பணம் வரவு-செலவு புத்தகம் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், மனு ரசீது வழங்கினர். தொடர்ந்து ஞானதிரவியம் எம்.பி., அவரது ஆதரவாளர்கள் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை டயோசீசன் அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் அறைகளை திறக்குமாறு பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க அங்கு வரலாம் என்று கூறப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






