என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. விருப்ப மனு - கால அவகாசம் நீட்டிப்பு
    X

    அ.தி.மு.க. விருப்ப மனு - கால அவகாசம் நீட்டிப்பு

    • ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி 8 நாட்கள் தொடர்ச்சியாக விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்தோடு தலைமை கழகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார்கள். 8 நாட்களில் 9 ஆயிரம் பேர் வரையில் விருப்ப மனுக்களை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் மேலும் 4 நாட்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×