என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரதமர் மோடி வருகை தரும் நிலையில் மத்திய அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    பிரதமர் மோடி வருகை தரும் நிலையில் மத்திய அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கும் ஜவஹர் நவோ தயா வித்யாலயா பள்ளி இ-மெயில் ஐ.டி.க்கு, வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது.

    அதில் பிரபல நகைச்சுவை நடிகரின் பேத்தி என்றும் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து போலீசில் புகார் அளித்தும் அவர் அரசியல் பிரமுகர் என்பதால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்காக மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எனது நீதிக்காக நக்சலைட் மாணவர் பிரிவு உதவி செய்து வருகிறது. அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவோதயா பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.

    இவ்வாறு அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், உடனடியாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. சோதனை போது மாணவர்கள் அனைவரும் பள்ளியின் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் குறித்து காலாப்பட்டு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தர உள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகை தர உள்ள விமான நிலையம், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானம் மற்றும் புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    புதுச்சேரி எல்லை பகுதி மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    Next Story
    ×