என் மலர்
கோயம்புத்தூர்
- SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
- சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன.
- மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
கோவை:
'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்றைய மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும், சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரிகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது.
சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்தபோதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும், ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன.
இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும்.
உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தத்தால் தற்கொலை அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளின் தலைநகராக தமிழகம் உள்ளது.
அந்த வகையில் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாச்சாரத்தையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது. நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது.
ஆரியம், திராவிடம் என பலரும் பிரிக்க நினைத்தாலும் அவர்கள் தோற்றுப் போவார்கள். காரணம் அவர்களிடம் இருப்பது பொய்யான கருத்துக்கள் தான். அந்த வகையில் சரஸ்வதி நதி நாகரிகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
- பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.
கோவை:
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் அந்த மின்வழித்தொகுப்பில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.
மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
- நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனைமலை:
கோவை மாவட்டம் ஆழியார் அருகே கவியருவி உள்ளது.
இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் கவியருவியில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.
இந்த நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆங்காங்கே மலைகளில் இருந்து அருவி போல் நீர் வந்து கொண்டிருப்பதால் அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும்.
- தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
பேரூர்:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் குறைந்த காலத்தில் அதிக லாபம் பார்க்க முடியும்.
இதன்காரணமாக அங்குள்ள விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் தக்காளி,வெண்டை, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்தரி போன்றவற்றை நடவு செய்து உள்ளனர். காய்கறி விளைச்சலுக்கு போதிய தட்பவெப்பநிலை மற்றும் சீதோஷ்ண சூழ்நிலை இருந்தால் மட்டுமே விளைச்சல் நல்ல முறையில் இருக்கும்.
ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளாகவே தொண்டாமுத்தூர் பகுதிகளில் காலநிலை மாற்றம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தீத்திபாளையம், மாதம்பட்டி, குப்பனூர், சென்னனூர், வடிவேலாம்பாளையம், செம்மேடு, தென்னமநல்லூர், தேவராயபுரம் பகுதிகளில் சின்ன வெங்காயத்தை நடவு செய்து இருப்பு வைத்து கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கும் மேல் விவசாயிகள் விற்பனை செய்து விட்டனர்.
இதற்கு விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு போதிய விலை கிடைக்க இயலாததால் அங்கு தற்போதுஅதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் 50 சதவீதம் தக்காளிகளை விவசாயிகள் பறித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். விவசாய தோட்டங்களில் மீதம் உள்ள தக்காளி பயிர்கள் பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அதிகப்படியான பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பூக்கும்-காய்க்கும் தருவாயில் உள்ள தக்காளி செடிகளுக்கு பூஞ்சாண நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காய்ப்புழு தாக்குதல், செம்பேன், இழைப்புள்ளி நோய், வேர்வாடல் நோய் போன்ற நோய்களின் தாக்குதல் தக்காளி விளைச்சலை பெருமளவில் பாதித்து உள்ளது. பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும். ஆனால் தற்போது 4-5 டன்கள் வரை அறுவடை செய்ய முடிகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. விவசாய தோட்டங்களில் தக்காளி பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.10 லட்சம் முதல் 1 1/4 லட்சம் வரை செலவாகிறது.
ஆனால் தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு போதியவிலை கிடைக்காததால் அங்குள்ள விவசாயிகள் தற்போது பாக்கு, வாழை போன்ற பயிர்களை விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே கோவை மாவட்ட விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளி உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு தோட்டக்கலை, வேளாண் அதிகாரிகள் கால சூழலுக்கு ஏற்ப தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் பருவநிலை மாற்றத்தை பாதிக்கப்படும் தக்காளி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
- கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி இளநீருக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிரா, அசாம், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது. இவ்வாறு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
இளநீர்விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீர் டிசம்பர் 8-ந்தேதி முதல் ரூ.23 ஆகவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுவதாலும், பொள்ளாச்சி பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும், இளநீர் வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வாரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
- எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் கோவை மாவட்டத்திற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள எந்திரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டு பின்னர் அந்த அறைக்கு சீல் வைப்பது வழக்கம்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையொட்டி இன்று கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் 8,391 வாக்குப்பதிவு கருவி எனப்படும் பேலட் எந்திரங்கள், 5 ஆயிரத்து 245 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 5,885 வாக்குச்சீட்டு சரிபார்க்கும் கருவி எனப்படும் வி.வி.பேட் எந்திரம் என மொத்தம் 19,521 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட சோதனை பணி இன்று கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார். இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளானது 1 மாதம் வரை நடைபெற உள்ளது. இதனை தினமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்க்கும் பணியில் 19 ஆயிரம் மின்னணு எந்திரங்களும் தற்போது எந்த நிலையில் உள்ளது என பரிசோதனை செய்யப்படும். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டப்படும் பேலட் எந்திரத்தின் அனைத்து பொத்தான்களும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சரிபார்க்கப்படுகிறது. மேலும் அந்த எந்திரத்தில் உள்ள தேர்தல் கால தகவல்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் அழிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழக அரசியலில் பா.ஜ.க. தன்னை வளர்த்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
- தமிழக தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணியை நடத்துகிறது.
கோவை:
கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத் தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடியது போல் தொழிலாளர் போராட்டம் நடக்கும்.
தமிழக அரசியலில் பா.ஜ.க. தன்னை வளர்த்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அவர்களால் மதம் சார்ந்த கொள்கைகளை சொல்லி கட்சி வளர்க்க முடியவிலலை. அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை போல் இங்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் கடவுளின் பெயரால் பிரச்சனை செய்து அரசியல் நடத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை அரசியல் ஆக்கி வருகின்றனர். கலவரத்தை உருவாக்கி பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது.
இதே பிரச்சனை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வந்தபோது அதை அவர் நிராகரித்தார். இதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பும் வந்தது. ஆனால் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்ற சொன்ன அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி இதை ஆதரிக்கிறார். பா.ஜ.க. என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டும் நிலையில் இருக்கிறார்.
தி.மு.க. உடனான இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவானதாகும். தொகுதி உடன்பாடு அடிப்படையில் உருவானதல்ல. அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கூட்டணி தொடர்கிறது.
இந்த தேர்தலில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும்போது, நாங்களும் கூடுதல் தொகுதிகளை கேட்போம். எத்தனை என்பது பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணியை நடத்துகிறது. அதனால் தமிழகத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
- 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவை:
நாடு முழுவதும் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளடக்கிய கேபின் க்ரு ஓய்வு நேரத்தை 36-ல் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் உள்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவை திரும்ப பெற்ற நிலையிலும் விமானங்கள் சேவை ரத்து செய்யப்படுவது தொடர்ந்தது. நேற்று கோவையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று 7-வது நாளாக கோவையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் 2 விமானம் உள்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மாற்று பயணம் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இங்களுக்கு சென்றனர்.
இதற்கிடையே இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வந்த விமான பயணிகள் வெளியில் செல்லும் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவரின் சூட்கேட்ஸ் அறை கண்ணாடி கதவில் பட்டு கண்ணாடி கதவு உடைந்தது.
இதுகுறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பயணி அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக சூட்கேஸ் பட்டதால் கண்ணாடி கதவு உடைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என்று மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதேபோல காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர கோவை ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை போடப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும்.
- சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 25, 27, 29, 31 மற்றும் ஜனவரி 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி செல்லும்.
மறுமார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.
இதேபோல மேற்கண்ட நாட்களில் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஊட்டியில் இருந்து மதியம் 2.50, மாலை 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் குன்னூர் செல்லும். மறுமார்க்கத்தில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 10.45 மணிக்கு ஊட்டி செல்லும்.
மேலும் வருகிற 25, 26, 27, 28, 29, 30, 31 மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 16, 17, 18, 24, 25, 26-ந்தேதி வரை குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். அதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.
ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அவற்றில் முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். பின்னர் அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
இரண்டாவது சுற்று 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
- பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள சண்முகபுரம் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் அர்த்தநாரிப்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
இதன்காரணமாக பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பாலாற்றின் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆஞ்சநேயர் கோவில் நடை சாத்தப்பட்டது.
பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், பாலாற்றங்கரையில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.
பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கோவை கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சண்முகா எஸ்டேட், சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையிளர் தடை விதித்து இருந்தனர். இந்த நிலையில் ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் கவியருவியில் தற்போது சீராக தண்ணீர் கொட்டி வருகிறது.
எனவே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்தனர். தொடர்ந்து கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி வழியாக புறப்பட்டு சென்று அங்குள்ள கவியருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புவதை பார்க்க முடிந்தது.
மழையின் அளவு, நீர்வரத்து ஆகியவற்றை பொறுத்து கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.






