என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    கோவை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார்.

    நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.

    அதனை தொடர்ந்து அவர் நேற்றிரவு கோவை வந்து தங்கினார். இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டையில் ரூ.19½ கோடியில் கட்டப்பட்டுள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அங்கு ரூ.9½ கோடியில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.


    • தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது.
    • சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளது.

    தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெண்கள், அரசியல், சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் . ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம்.

    தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது. சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளது. ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    ரெயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை முதன்மையாக கவனிக்க வேண்டும்.

    தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. தமிழை கொண்டாடுவது பா.ஜ.க ஆனால் தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு .

    ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் தி.மு.க. சாதனைகள் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இது ளிப்படையான பாரபட்சம் . இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே "சங்கி" என்று சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கி என அழைப்பது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    த.வெ.க தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றிருந்தார். அங்கு அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அண்டை நாடுகளே வியந்து போய் இருக்கின்றன. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியானது உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் நடந்துள்ளது.

    இதுவரை மலேசியாவில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் தான் ரோடு ஷோ சென்றுள்ளனர். ஆனால் இந்த முறை இவருக்கு ரோடு ஷோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை தான் தேவை என தமிழகத்தில் உள்ள பெண்கள், இளம் வயதினர் என அனைவரும் ஒருமனதாக குரல் கொடுக்கும் காட்சியை நாம் பார்த்து வருகிறோம்.

    நான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அங்கு ஆர்ப்பரித்து வரக்கூடிய கூட்டத்தை பார்க்கும் போது 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் 88-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆகியோருக்கு திரண்ட கூட்டத்தை போன்று தற்போது தமிழகத்தில் விஜய்க்கு கூட்டம் வருவதை பார்க்க முடிகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றமானது எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில், விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து அந்த பணியை நிறைவேற்றுவோம்.

    த.வெ.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல இடங்களில் கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள். இதுவரையிலும் அந்த கருத்துக்கள் என்னை போன்றவர்களின் கவனத்துக்கு வரவில்லை. கவனத்திற்கு வந்தால் தான் அதற்கு பதில் அளிக்க முடியும்.

    ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்வர். பொதுவாக ஒரு புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறது. ஒரு வரலாறு படைக்கிற இயக்கம். எது வேண்டுமானாலும் மக்கள் கோரிக்கை வைக்கும் போது அந்த கோரிக்கைக்கு ஏற்ப எப்படி நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்.

    எங்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். த.வெ.க தலைவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி இணைய முடியும் என தெளிவாக சொல்லிவிட்டோம்.

    த.வெ.க., பா.ஜ.க மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்ற திருமாவளவனின் கருத்து வேறு. இதே தி.மு.க வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும்.

    எங்கள் தலைவர் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசும் போது 2 கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த மக்களும் அதற்கு கரகோஷம் அளித்தனர். கொள்கை ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். யாரை அப்படின்னு அவர் கேட்டபோது மக்கள் சொன்னார்கள். மக்கள் உணர்வை தான் அவர் பிரதிபலிக்கிறார். எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    த.வெ.கவில் எந்தெந்த தலைவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்துக்குள் அத்தனையும் உங்களுக்கு தெரியும் என்றார். 

    • வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை.
    • இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது65).

    இவர் அந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெபமார்ட்டின். இவர்களுக்கு ரூபா என்ற மகள் உள்ளார்.

    இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ரூபா தனது பெற்றோரின் வீட்டின் அருகேயே வசித்து வருகிறார். ராஜனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்.

    இந்த நிலையில் ராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மனைவி மற்றும் மகள் ரூபாவுடன் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு இன்று காலை கோவைக்கு வந்தார்.

    பின்னர் ரூபா அவரது வீட்டிற்கு சென்று வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு தானாகவே திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார்.

    ஊருக்கு செல்வதற்கு முன்பாக ரூபா தனது வீட்டில் மொத்தம் 103 பவுன் நகைகளை பீரோவில் பூட்டி வைத்து சென்றிருந்தார். இன்று காலை வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 103 பவுன் நகைகளும் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்ததும் கோவை தெற்கு உதவி கமிஷனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி உள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. பீரோவும் உடைக்கப்படவில்லை. இதனால் தெரிந்தவர்கள் யாரோ இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் போலி சாவி தயாரித்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

    கோவையில் தனியார் பள்ளி ஆசிரியையின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிதான் ஹசாரிகாவிற்கு, வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
    • வேலை முடிந்து வந்த பிதான் ஹசாரிகா மதுபோதையில் படுத்து தூங்கினார்.

    அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா (வயது 33). இவருடைய மனைவி ஜிந்தி. இவர்கள் கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பிதான் ஹசாரிகா பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.

    பிதான் ஹசாரிகாவிற்கு, வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. அவர் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.

    தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களுடன் அடிக்கடி வீடியோ கால் மூலம், பிதான் ஹசாரிகா பேசி வந்தார். கணவரின் செல்போனை வாங்கி பார்த்த மனைவி ஜிந்தி, கணவரை கண்டித்தார். ஆனால் அவர் பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை

    சம்பவத்தன்று ஜிந்தி வெளியில் சென்று இருந்தபோது, பிதான் ஹசாரிகா வீட்டிற்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த ஜிந்தி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கணவர் மீது ஜிந்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கணவரை கண்டித்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பிதான் ஹசாரிகா, தனது மனைவி ஜிந்தியை, சொந்த ஊரான அசாம் மாநிலத்துக்கு சென்று விடுமாறு மிரட்டியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கணவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வந்த பிதான் ஹசாரிகா மதுபோதையில் படுத்து தூங்கினார். கணவர் மீது கோபத்தில் இருந்த ஜிந்தி, சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து பிதான் ஹசாரிகாவின் மர்ம உறுப்பை அறுத்து வீசினார். பின்னர் கணவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அறையில் இருந்து வெளியே வரமுடியாத பிதான் ஹசாரிகா, கத்தி கூச்சல் போட்டு அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிதான் ஹசாரிகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிந்தியை கைது செய்தனர்.

    • மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் நேற்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்தது.
    • கல்குகையில் இருந்த கருஞ்சிறுத்தை குட்டி மாயமாகி இருந்தது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, காட்டெருமை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் நேற்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்தது.

    பின்னர் கருஞ்சிறுத்தை அங்குள்ள யாரும் வசிக்காத ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு தனது குட்டியை விட்டு விட்டு தாய் சிறுத்தை அங்கிருந்து சென்று விட்டது.

    குட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கருஞ்சிறுத்தை குட்டி இருந்தது.

    அதிர்ச்சியான அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு கூண்டுடன் விரைந்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் இருந்த கருஞ்சிறுத்தை குட்டியை மீட்டு கூண்டுக்குள் அடைத்தனர்.

    பிடிபட்ட கருஞ்சிறுத்தை குட்டியை எடுத்து கொண்டு மருதமலை அடிவாரத்தையொட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுத்தை குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக அங்கு ஒரு கல்குகையின் அருகே சிறுத்தை குட்டியை விட்டனர்.

    5 மணிக்கு அங்கு சிறுத்தைகள் வந்தது. ஆனால் கருஞ்சிறுத்தை குட்டி அவற்றுடன் செல்லவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் அதனை கண்காணித்தனர்.

    மாலை 5.15 மணிக்கு மீண்டும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கல்குகையில் இருந்த கருஞ்சிறுத்தை குட்டி மாயமாகி இருந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் வனத்திற்குள் சென்று பார்த்தனர். அப்போது கல்குகை இருந்த இடத்தில் இருந்து 300 அடி தூரத்தில் கருஞ்சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கருஞ்சிறுத்தை குட்டியை பார்த்தனர். தொடர்ந்து சிறுத்தை குட்டி எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும்.
    • மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

    கோவை:

    மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும். தி.மு.க. தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

    இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.

    மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை.

    அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்றார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள்.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது அவர் கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில் அவர் கரூர் தொகுதியில் இருந்து இடம் மாறி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். தான் கோவையில் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கப்பட்டுள்ளனரா? என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும். அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

    தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். தி.மு.க.வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள். மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க.வும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதி மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை.

    நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது. கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு என்றார். 

    • ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.
    • தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள்.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    எஸ்ஐஆர் குறித்து ஏற்கனவே த.வெ.க தலைவர் விஜய் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவே பொருத்தமாக இருக்கும்.

    ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர். அது அவர்களின் கருத்து.

    தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து, இன்று மாலை தலைவரிடம் பேசிவிட்டு அது எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவரிடம், களத்தில் இல்லாத கட்சி தமிழக வெற்றிக்கழகம் தான் என தமிழிசை தெரிவித்துள்ளது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன் பதில் அளித்து கூறும்போது, அது அவருடைய கருத்து. களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் தான் தீர்ப்பளிக்கும் என்றார்.

    அதேபோன்று த.வெ.க.வின் அடுத்த வியூகம் என்ன என்பது தொடர்பான கேள்விக்கு, எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என்பதை பார்த்து நாடே வியக்கும் என அவர் தெரிவித்தார்.

    • கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை கோவை மாவட்டத்திலும் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்று முடிந்தது.

    பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பவன்குமார் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு, இறந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 பேர், இரட்டைப்பதிவுகள் 23 ஆயிரத்து 202 பேர், இதர காரணங்கள் 380 பேர் என கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதாவது 20.17 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் குடிபெயர்ந்தவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இப்படி மாறியவர்கள் மட்டுமே 20 சதவீத வாக்காளர்கள் இருப்பர். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் போது பலரும் இறந்து விட்டனர். இவையே வாக்காளர் பட்டியலில் அதிகம் பேர் நீக்கப்பட்டதற்கான காரணம் ஆகும்.

    கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் நீக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்களில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 வாக்காளர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் தான்.

    இதற்கிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விவரங்கள், நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களுடன் அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் படிவம் 7, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8, ஆதார் எண் இணைக்க படிவம் 6 பியை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவரிடம் ஜனவரி 18-ந் தேதி வரை அளிக்கலாம். ஆன்லைன் வாயிலாக www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் Voter Helpliner என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கோவை:

    தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.

    இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் எனும் உயிர் நீதிமன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை அத்துக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
    • சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.

    இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ×