என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஷா யோகா"

    • தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
    • தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.

    கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை மற்றும் தமிழகத்தின் முக்கியப் பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ஆதியோகி ரத யாத்திரை நேற்று (25/12/2025) மதுரையை வந்தடைந்தது. அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

    ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை தென்கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்துகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.

    அந்த வகையில், மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

    தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கடந்த 23-ஆம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

    வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

    தென்மண்டல யாத்திரை தேனி வழியாக இன்று மதுரையை வந்தடைந்தது. நேற்று (டிசம்பர் 25) முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரதம் பயணிக்க உள்ளது.

    மதுரையில் ஆதியோகி ரதம் ஜங்ஷன், அண்ணா நகர், பி.பி.குளம் போன்ற முக்கியப் பகுதிகள் வழியாக பயணிக்க உள்ளது. குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், செல்லூர் திருவாப்புடையார் மற்றும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆகிய திருக்கோயில்கள் வழியாக செல்ல உள்ளது.

    மதுரையை தொடர்ந்து, வரும் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் இந்த ரத யாத்திரை தொடர உள்ளது. அதனைத் தொடர்ந்து டிச'31-ஆம் தேதி முதல் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி வழியாக விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    பின்னர் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தென்காசி, சுரண்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கூடங்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாகப் பயணிக்கும் இந்த ரதமானது, பிப்ரவரி 1 முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், வெள்ளிச்சந்தை, நாட்டாலம், மார்த்தாண்டம், மேல்புறம் மற்றும் புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகப் பயணிக்க உள்ளது.

    ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகச் சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

    இதனுடன், 'சிவ யாத்திரை' எனும் பாதயாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாகக் கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

    • வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
    • கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

    கோவை:

    சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.

    ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுத்தொகையையும் வழங்கினர்.

     

     

    இவ்விழாவில் பேசிய அமைச்சர் "இந்த விழாவை பார்க்கும் போது, இதன் பின்பு இருக்கும் சத்குருவின் தொலைநோக்கு பார்வையை உணர முடிகிறது. ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் நம் தேசத்தை சுயசார்பு மற்றும் விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும்.

    கிராமப்புறங்களில் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்க சத்குரு உதவ வேண்டும். எங்களுக்கு இதில் வழிகாட்ட ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். பாரதத்தின் உண்மையான திறமைகள் கிராமங்களில் தான் இருக்கிறது. அதே போன்று போதை ஒழிப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளிலும் ஈஷா உதவ வேண்டும்" எனக் கூறினார்.

    விழாவில் சத்குரு பேசுகையில், "நம் மக்கள் உற்சாகமான, வலிமையான, துடிப்பான, திறமையான, ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், நாம் இந்த பூமியிலேயே மிகப்பெரிய அற்புதமான சமூகமாக இருக்கலாம். ஆனால், மக்களை உடல் ரீதியாக பலவீனமான, மனரீதியாக குழப்பமான, கவனக்குறைவான மற்றும் திறமை, தகுதி, திறன்கள் இல்லாத சமூகமாக விட்டுவிட்டால், நாம் பெரிய பேரழிவாக இருப்போம்.

     

    இதுவே சரியான நேரம், நம்மிடம் இருப்பது பெரும் மக்கள்தொகை, நம் மக்களில் 50% இப்போது 30 வயதுக்குக் கீழ் உள்ளனர். அவர்களைத் திறம்படுத்தி, குறிப்பிட்ட உற்சாகத்தை ஏற்படுத்தினால், இந்த நாட்டுடன் எந்த நாடும் போட்டியிட முடியாது. உற்சாகமான மனிதர்களை நீங்கள் உருவாக்கி விட்டால் அவர்களை யாரும் நிறுத்த முடியாது.

    உற்சாகமான மனிதர்கள் மற்றும் இணைந்து செயல்படும் தன்மையை உருவாக்க வேண்டும். விளையாட்டு இதனை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் உருவாக்கும். ஈஷா கிராமோத்சவம் 2028 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 28 மாநிலங்களிலும் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்.

    சாய்னா நேவால் பேசுகையில், "இங்கு இருக்கும் 15, 000-க்கும் மேற்பட்ட மக்களின் உற்சாகம் என்னால் நம்ம முடியவில்லை. பல தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளோம். ஆனால் இது போன்ற உற்சாகமான சூழல் கிரிக்கெட்டில் நடக்கும் அதன் பிறகு இங்கு தான் நடக்கிறது என அமைச்சரிடம் கூற நினைத்தேன். நம் தேசத்தில் விளையாட்டை வளர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஈஷா கிராமோத்சவம் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் சத்குருவிற்கு நன்றி" எனக் கூறினார்.

     

    செஸ் கிராண்ட் மாஸ்டர் வைசாலி பேசுகையில், "சத்குருவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி தோல்விகளை கடந்து களத்தில் விளையாடியதே வெற்றி தான். எனக்கு செஸ் விளையாட்டு, வெற்றி தோல்வி என்பதை தாண்டி என்னை வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. வெற்றி தோல்விகளை எவ்வாறு சமமாக எடுத்துக்கொள்வது, சவாலான சூழல்களில் அமைதியாக நடந்து கொள்வது போன்றவற்றை விளையாட்டு கற்றுத் தரும்." எனக் கூறினார்.

    17 ஆவது ஈஷா கிராமோத்சவம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.

    ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஆதியோகியில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி வென்றது. கர்நாடகாவை ஹெகதிஹள்ளி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணி முதல் வென்றது. கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாரா வாலிபால் போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

    வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட்டது.

    இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

    இவ்விளையாட்டு திருவிழாவின் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு நாளை முன்னிட்டு ஆதியோகி முன்பு மிகப் பிரம்மாண்டமான முறையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் காலை முதல் மாலை வரை 6 மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இத்திருவிழாவில் வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20-க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைப்பெற்றன. வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் 6 மாநில பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவு அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.

    இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.
    • சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 26-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

    சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது. இதை உணர்த்தும் விதமாக பல்வேறு மதங்களின் சின்னங்களை தாங்கிய 'சர்வதர்ம ஸ்தம்பம்' எனும் தூண் தியானலிங்க வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகிறது. 

    இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் "ஆஉம் நமசிவாய" மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, கிருத்தவ பக்தி மற்றும் சூஃபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினர். பின்னர் புகழ்பெற்ற 'தேவார பதிகங்களை' மயிலை சத்குரு நாதன் அவர்களும், 'ருத்ர-சமக வேத பாராயணத்தை' சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர். அடுத்ததாக 'செரா மே' என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் 'புத்த மந்திர உச்சாடனம்' மற்றும் 'இஷால் முராத்தின்' இஸ்லாமிய அர்பணிப்பும் நடைபெற்றது.


    அதனைத் தொடர்ந்து குருத்வாரா சிங் சபா சார்பில் 'குருபானி பாடல்கள்', சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், '

    நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் 'சூஃபி பாடல்கள்' மற்றும் 'ஏடாகூடம் இசைக்குழு'வின் சார்பில் 'கிருத்தவ பக்தி பாடல்களும்' பாடப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்ட 'தீட்சை' எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குரு பூஜை மற்றும் இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன. இறுதியாக சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியோடு இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்கு பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.
    • பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் "தென்னிந்திய தென்னை திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஜன 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    "தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த "தென்னிந்திய தென்னை திருவிழா" நிகழ்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் "இயற்கை சந்தையில்" 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு முத்துகுமார் கூறினார் அவரோடு முன்னோடி விவசாயி வள்ளுவன் அவர்கள் உடன் இருந்தார்.

    • தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.

    அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்.31) 75,000-க்கும் அதிகமான பக்தர்கள் கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.

    மேலும், சுற்றுவட்டார பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ×