என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம்: கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
    X

    கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் கேரளா செல்லும் பஸ் நிறுத்தம் பஸ் மற்றும் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கும் காட்சி.

    தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம்: கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

    • கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    கோவை:

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பொதுபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை காந்திபுரத்தில் இருந்து கொச்சி, எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று, உக்கடத்தில் இருந்து குருவாயூர், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கேரளாவில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர், கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு கேரள போக்குவரத்து ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இன்று ஓடவில்லை. உக்கடம் பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் நிறுத்தி வைக்க கூடிய இடம் இன்று பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சிலர் ரெயில்கள் மூலமாக கேரளாவுக்கு சென்றனர். இதனால் கேரளாவில் இருந்து கோவை வந்த ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை கோவையில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×