என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருச்சிராப்பள்ளி
- ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம்:
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- கூட்டத்தின் தலைவன் மதுசூதனன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளான்.
- கொள்ளையர்கள் கடந்த சில நாட்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
ராம்ஜிநகர்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டதாக புகார் வந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கண்ணாடி உடைத்து திருடப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். குற்றவாளிகளின் படங்கள் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையம் மட்டும் அல்லாமல், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதன் பலனாக டெல்லியில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்தவர்கள். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையர்கள் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தது தெரியவந்தது. இதற்காக திருச்சியில் இருந்து புறப்பட்டு ஜாம்நகர் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், இவர்கள் பல திட்டங்கள் போட்டும் உள்ளே போக முடியவில்லை. இதனால் ஜாம்நகர் வந்து திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து ராஜ்கோட் போலீஸ் சூப்பிரெண்டு ராஜு பார்கவ் கூறும்போது:-
இக்கூட்டத்தின் தலைவன் மதுசூதனன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளான். மதுசூதனன்தான் தலைவனாக இருந்து கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி தருபவன். இந்த கொள்ளையர்கள் கடந்த சில நாட்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே கருத்து வேறுபாடு முளைத்தது.
- தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்பட உள்ள நிலையில் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி ஒதுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க. காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும், பா.ஜ.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கரூர் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில் திருச்சி தொகுதியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், கரூரில் ஜோதிமணியும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பின்னர் ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே கருத்து வேறுபாடு முளைத்தது. இதனால் கரூர் தொகுதியை மீண்டும் அவருக்கு ஒதுக்கக்கூடாது என உள்ளூர் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் போட்டியிடுவதில் திருநாவுக்கரசரும் ஜோதிமணியும் உறுதியாக உள்ளனர்.
ஆகவே தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பாண்டிச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது எந்தெந்த தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை நிறைவடையும்போது எந்தெந்த தொகுதிகள் என்பது தெரிய வரும். ஆகவே நான் மேலும் இதில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றார்.
- மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்குப் பிறகே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
- மாடு பிடி வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அடுத்த ஆதனக்கோட்டை மோட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை வட்டாட்சியர் பரணி கொடியசைத்து ஜல்லிக்கட்டினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்து துறையினரால் அனுமதிக்கப்பட்ட 100 மாடு பிடி வீரர்களும் 700 ஜல்லிக்கட்டு காளைகளும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள், கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல், மாடுபிடி வீரர்களும் பரிசோதனைக்குப் பிறகே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ர் ராகவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
இப்போட்டியில் மாடு பிடி வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர். மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, எவர்சில்வர் பொருட்கள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
- சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
- சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.
இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையாதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
ராம்ஜிநகர்:
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமம் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் 700 காளைகள் 350 மாடுபிடி வீரர்கள் பங்குபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி பழனியாண்டி எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மின்விசிறி, பாத்திரங்கள் ரொக்க பரிசு போன்றவை வழங்கப்பட்டன. மாடுகளை அடக்க முற்பட்ட திண்டுக்கல் பூபதி ராஜா (25) குஜிலியம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (25) பாகனூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (35) கோடாங்கி பட்டியைச் சேர்ந்த சின்னு (35) விராலிமலையை சேர்ந்த விஜயகுமார் (27) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் அளுந்தூர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, நாகமங்கலம் வெள்ளைச்சாமி, நாவலூர் குட்டப்பட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், தி.மு.க. நிர்வாகிகள் யாகபுடையான் பட்டி ஆரோக்கியசாமி, மலைப்பட்டி சந்திரன் மற்றும் மணிகண்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்து கருப்பன், தொழிலதிபர் மங்கதேவன் பட்டி கணேஷ் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையாதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா.
- மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.
மண்ணச்சநல்லூர்:
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று காலை தொடங்கியது.
மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கவும், தீவினைகளையும் அணுகாமல் இருக்கவும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.
வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதம் இருப்பார்.இதற்கு பச்சைப் பட்டினி விரதம் என பக்தர்கள் அழைக்கின்றனர்.இந்த 28 நாட்களும் திருகோவிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு நீர்மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
பூச்சொரி தல் விழாவை ஒட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப் பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுகளுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இன்று முதல் பூச்சொரிதல் விழா தொடங்கியதால் சமயபுரம் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டது.
- பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சர்பத் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். மகன் தேவ பிரசாத் (27) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தனியாக வசித்து வரும் வரதராஜ் சம்பவத்தன்று காலை, தனது வீட்டைக் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக தாழ் இடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜ் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்ற தோடு, பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 8 1/2 பவுன் எடையுள்ள தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
மேலும் வீட்டின் பின்புறமாக வந்த மர்ம நபர்கள் மூங்கில் குச்சியை பயன்படுத்தி, வீட்டின் மீது ஏறி ஓட்டினை பிரித்து, உள்ளே சென்று வீட்டின் கதவினை உட்புறமாக தாள் போட்டு விட்டு திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வரதராஜ் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
துறையூரின் மைய பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
- சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.
முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நூலை எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர் உ.லாவண்யா பெற்றுக் கொண்டார்.
- நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சிரா பதிப்பகம் மற்றும் சிரா இலக்கியக் கழகம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா திருச்சி ப்ரீஸ் ரெசிடென்சியில் நடந்தது.
விழாவில் பெண்ணே பேசு என்ற புத்தகத்தை சிரா பதிப்பகத்தின் நிறுவனர் தங்கபிரகாசி ராமச்சந்திரன், சிரா இலக்கியக் கழக தலைவர் கவிஞர் பா. ஸ்ரீராம், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000-த்தின் 2024-25-ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபீஸரும், சிரா இலக்கியக் கழக புரவலவருமான மேஜர் டோனர் டாக்டர் கே. ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.வி. பள்ளியின் முதல்வர் பொற்செல்வி, சிரா இலக்கியக் கழக துணைத் தலைவர் எழுத்தாளர் கேத்ரின் ஆரோக்கிய சாமி, திருச்சிராப் பள்ளி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மூத்த எழுத்தாளர் மழபாடி ராஜாராம் , மருத்துவர் மணி மேகலை ஏகநாதன் ஆகியோர் வெளியிட்டு பேசினர்.
நூலை எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர் உ.லாவண்யா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவரையும் விழா குழுவினர் கவுரவித்தனர்.
- வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது.
- தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.
திருச்சி:
இந்திய ஜனநாயக கட்சியின் 'தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்' என்ற பெயரில் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெயசீலன் வரவேற்று பேசினார்.
கூட்டணி கட்சிகள் சார்பில் புதிய நீதிகட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழக நிறுவனர் தேவநாதன், த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மே மாதம் 3-வது வாரம் மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்பார். இந்தியாவில் உள்ள 543 எம்.பி.க்களையும் ஒரே மேடையில் உட்கார வைத்து அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை புத்தகமாக போட்டுக் காட்டக் கூறினால், அதில் அதிக பணிகளை செய்தவர்கள் பட்டியலில் பாரிவேந்தர் தான் முதலிடத்தில் இருப்பார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தவிர அவர் சம்பாதித்த பணம் ரூ.126 கோடியை தனது தொகுதியில் கல்விக்காகவும், ஆன்மீகத்திற்காகவும் பொது மக்களுக்காகவும் செலவு செய்துள்ளார்.
ராஜராஜ சோழன் காலத்தில் அவருக்கு எவ்வளவு பெருமை இருந்ததோ அதை மீட்டு எடுக்க வேண்டும். பிரதமர் மோடி செங்கோலை அறத்தின் சாட்சியாக புதிய பாராளுமன்றத்தில் வைத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.
தொன்மையான தமிழ் மொழியை பிரதமர் ஐநா சபை வரை கொண்டு சென்று பெருமை சேர்த்து உள்ளார். அடுத்த 5ஆண்டு காலத்தில் திராவிட கட்சி இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகத்தில் வளர்ச்சி அரசியலை பேசாமல் பிரிவினை அரசியலை பேசுகிறார்கள்.
வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது. என்று அப்போதே அண்ணா விட்டுவிட்டார். அதை தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது. 2024 தேர்தல் முடிவில் தி.மு.க. என்ற கட்சி இல்லாத நிலை ஏற்படும். பின்தங்கிய இந்த பெரம்பலூர் தொகுதியில் ரெயில் வசதி வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கனவை பாரிவேந்தர் மோடியிடம் மத்திய மந்திரிகளிடமும் பேசி வந்துள்ளார்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பாரிவேந்தர் மீண்டும் எம்.பி. ஆகும்போது, அடுத்த பட்ஜெட்டில் பெரம்பலூர் ரெயில் வழி தடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதை அவரே திறந்து வைப்பார். இந்தியா முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை கொண்டு வருகிறோம். அதில் முதல் பள்ளி பெரம்பலூருக்கு வேண்டுமென்று முதலில் கடிதம் எழுதியவர் பாரிவேந்தர். அத்துடன் அதற்கு இடமும்கொடுத்து கட்டிடமும் கட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார். அவருடைய வெற்றி இந்த தொகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. பேசுகையில்,
2014-ம் ஆண்டு மோடி குஜராத்தில் ஊழலற்ற ஆட்சி நடத்தி வந்தார். அதன்பின்னர் மோடியுடன் பல மேடைகளில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றேன். அப்போது அவரிடம், விரைவில் பிரதமராக ஆவீர்கள் என்று கூறினேன். அதன்படி அவரும் பிரதமர் ஆனார். தமிழன், தன்னை தமிழன் என்று வெளியே கூற தயங்கும் நேரத்தில், தமிழை உலகம் எல்லாம் அவர் பரப்பி வருகிறார்.
பிரதமர் மோடி ஒரு ஞானி, அவர் எங்கு சென்றாலும் இந்தியா உயர்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் 3-வது முறையாகவும் பிரதமர் ஆவார் என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. 3-வது முறையல்ல, 4-வது முறையும் நரேந்திரமோடி தான் பிரதமர் ஆவார். இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து பா.ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.
- மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் பேல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 52) அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவியும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியரின் மகன், மகள் இருவரும் வெளியூரில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் இரண்டு பேரும் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.
பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு உள்பக்க அறையில் படுத்து தூங்கினர்.
இந்த தலையில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வேறொரு அறையில் பீரோவில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் திருட்டு நடந்தது அவர்களுக்கு தெரியவந்தது. அன்பரசன் திருபெரும்பூர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்