search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை.
    • பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமான பய ணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண் பயணியின் உடமையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சல் ஒன்று இருந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்கத்து றை அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது அதில் 8000 அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 5.63 லட்சம் என தெரிய வருகிறது.

    அதற்கான உரிய ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இல்லை என்பதால் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதே போன்று சிங்கப்பூ ருக்கு சென்ற ஸ்கூட் விமான பயணிகளின் உடமை களை சோதனை செய்தபோது பயணி ஒருவர் சிங்கப்பூருக்கு கடத்த இருந்த ரூபாய் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க எண் மற்றும் யூரோ பறிமுதல் செய்யப்பட்டது.

    சுங்கத்து றை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிக அளவில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த முனியப்பன் (வயது 59) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.

    அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11.7.2024 அன்று விண்ணப்பித்துள்ளார். முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

    இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்த பொழுது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (வயது 39) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார்.

    இதையடுத்து மனையை உட்பிரிவு செய்து கொடுக்க சர்வேயர் முருகேசன் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில் முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் குழுவினருடன் முனியப்பனிடம் இருந்து சர்வேயர் முருகேசன் பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    திருச்சி:

    ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகளுக்குட்பட்ட சில ஊராட்சிகளையும் லால்குடி, திருவெறும்பூர் தொகுதிகளுக்குட்ட சில ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    • 800 கிலோவுக்கும் அதிகமான விபூதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    • ஆர்டருக்கு ஏற்ப விபூதி சப்ளை செய்யப்படுகிறது.

    திருச்சி:

    கோவில்களில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக சிவன் மற்றும் முருகன், அம்மன் கோவிலில் விபூதி முக்கிய பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருச்சி திருவானைக் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 2022-ம் ஆண்டு மே மாதம் விபூதி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது.

    அதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. காவிரிக்கும் கொள்ளிடம் ஆற்றுக்கும் நடுவில் அமைந்துள்ள இந்த கோவில் இயற்கையான நீரைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது.

    இங்குள்ள கோசாலையில் இருந்து சேகரிக்கப்படும் பசுவின் சாணம் கோவிலுக்குள் உள்ள நாச்சியார்தோப்பில் பல்வேறு உருண்டை வடிவங்களில் உலர்த்தப்பட்டு பின்னர் விபூதி தயாரிக்கப்படுகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் வழங்கிய 48 பசுக்கள் மற்றும் கன்றுகள் கோசாலையின் மூலமாக பராமரிக்கப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் விபூதிக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு தயாராகும் விபூதி திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு சிவன் கோவில்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும்

    திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் தவிர கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கோவில்களுக்கும் கூட கடந்த 2 ஆண்டுகளில் தேவையைப் பொறுத்து 800 கிலோவுக்கும் அதிகமான விபூதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இங்கு கோவில் பணியாளர்கள் மாட்டு சாணத்தை பயன்படுத்தி, வேறு பொருட்கள் மற்றும் ரசாயனம் கலக்காமல், விபூதி தயாரிக்கிறார்கள் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள குறைந்தது 20 கோவில்களுக்கு ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 880 கிலோ விபூதி சப்ளை செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமி நாதசுவாமி கோயில், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், ஆலங்குடி முல்லை வனநாத சுவாமி கோயில், திருக்கருகாவூர் கோவில் உள்ளிட்ட கோயில்களுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி அருகே வயலூர் முருகன் கோவில், கடலூர் விருத்தாசலம், வடலூர் சத்திய ஞான சபை ஆகிய கோவில்களுக்கு ஆர்டருக்கு ஏற்ப விபூதி சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த விபூதி ஒரு கிலோவுக்கு ரூ. 200 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் 120 கிலோ விபூதி கையிருப்பில் உள்ளது. இங்கு கோசாலையில் பராமரிக்கப்படும் பசுக்களுக்கு கிட்டத்தட்ட 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலில் பயிரிடப்படும் பசுந்தீவனம் அளிக்கப்படுகிறது என்றார்.

    தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர்கோவில் மற்றும் திருவண்ணாமலை கோவில்களில் விபூதி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.
    • குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அங்கன்வாடி முதல் எட்டாம் வகுப்புகள் வரை சுமார் 220- மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சிதிலமடைந்து விட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்டிடத்தை இடித்து, அந்த இடத்தில் தற்போது ஒரு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளிக்கு 3 -வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் லேப் கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.

    ஆனால் ஊருக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிய கட்டிடங்களைக் கட்டினால் மாணவர்களுக்கு போதிய இடவசதி கிடைப்பதோடு மட்டும் அல்லாமல விளையா ட்டு மைதானமும் அமைக்கலாம். பள்ளி, தற்போது ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ளதால் கிழக்கு பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் ஆபத்தான சூழ்நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், புதிய இடத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஆகியோர்களுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மீண்டும் பள்ளி வளாகத்தில் உள் பகுதியில் கட்டிடம் கட்ட வேலைகள் ஆரம்பித்ததால் ஆத்திரமடைந்து வயலப்பாடியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் கண்ணதாசன், ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மாணவர்களை அழைத்தபோது பெற்றோர்கள் அனுப்ப மறுத்துள்ளனர். பள்ளி திறந்து 2 மணி நேரம் ஆகியும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டாச்சியர் கோவிந்தம்மாள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் இன்னும் சில நாட்களில் வேறு இடத்தை தேர்வு செய்து அங்கு புதிய கட்டிடம் கட்டி இந்த பள்ளியை மாற்றி தருவதாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

    • விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
    • அ.தி.மு.க.வி.னரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்தார்.

    இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த இன்னொரு புகாரில் தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை, அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் பெற்று பத்திரப் பதிவு மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து கரூர் நகர காவல் நிலைய போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையே எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனு தள்ளுபடி ஆன நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

    அதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் மற்றும் ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களை தேடினர்.

    இந்த நிலையில் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று அதிகாலை கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் அழைத்து வந்தனர்.

    பின்னர் சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

    நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய ஜெயிலிலும், பிரவீன் குளித்தலை கிளை ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக போலி சான்றிதழ் கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் நேற்று நள்ளிரவு சென்னையில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவரிடம் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எம்.ஆர். விஜயபாஸ்கரை தொடர்ந்து அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அ.தி.மு.க.வி.னரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை.
    • கல்வி, விவசாயம் துறைகள் மோசமடைந்துள்ளன.

    திருச்சி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது.

    திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கி பேசியதாவது,


    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதை கண்டு கொள்ளாமல் திமுக அரசு மவுனம் காக்கிறது. தமிழகத்தில் உண்மையான ஜனநாயகம் மலரவில்லை. கல்வி, விவசாயம் துறைகள் மோசமடைந்துள்ளன. விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காவிரி நதிநீர் என்பது விவசாயிகளின் உயிர் பிரச்சனை. இதில் திமுக அரசு நாடகமாடுகிறது. திமுக கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகாவுக்கு சென்று தண்ணீர் பெற்றுக் கொடுக்க திமுகவினர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி கொலை-கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? இப்போது திமுக. அரசை பார்த்து திமுக. ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும் என்று நாங்கள் கூறுகிறோம்.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது அவசியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை பேசும்போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்காததால் திமுகவினர் தைரியமாக உள்ளனர். தமிழகத்தில் 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. 19,260 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 10 ஆயிரம் பள்ளிகள் சிதிலம் அடைந்துள்ளன. 45 ஆண்டுகளாக வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 50 ஆண்டுகளில் அமையாத, காமராஜரின் சிறப்பான ஆட்சி 2026-ல் அமையும். என்றார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர். அவர் கட்டிய பள்ளிகள், அணைகள், தொழிற்சாலைகள் தான் இன்றளவும் உள்ளது.


    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது.

    கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் மது விலக்கை நீக்கினார். காமராஜர் நூற்றாண்டுவிழாவை காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக பாமக தான் கொண்டாடியது. என்றார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியது:

    மக்கள் விரும்பும் நேர்மையான, ஊழலற்ற, பூரண மதுவிலக்கு ஆட்சியை தர வேண்டும் என்பது எங்கள் கனவு. காமராஜர் நேர்மையாக ஆட்சி நடத்தினார். இப்போதைய ஆட்சியில் ஊழல் தலை விரித்தாடுகிறது. என்றார்.

    முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி நன்றி கூறினார்.

    • பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன்.
    • பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டங்களால் பயன் அடைந்தார்.

    இதனால் பிரதமர் மோடி மீதான அதிக ஈடுபாட்டின் காரணமாக அவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினார். ரூ.1.25 லட்சம் செலவு செய்து 6 மாதமாக கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.

    இவர் கட்டியுள்ள கோவிலில் பிரதமர் மோடிக்கு அழகிய மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் சாமி படங்களுடன், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களையும் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்தால் சிறப்பு வழிபாடு செய்வது என்றும்,பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல் வைத்தார்.

    அவரது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து மோடிக்கு தான் கட்டிய கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன். இப்போது தேங்காய், மாங்காய், மரவள்ளி போன் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு விவசாய சாகுபடியிலும் கிடைத்த லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, 5 ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன். அவர் 3-வது முறை பிரதமாக வேண்டும், என்று பழநி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.

    அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், பழனியில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன்.

    பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனக்கு பிறகும், நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்காக நிலத்தை எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன். பிரதமர் நீடுழீ வாழ வேண்டும். 2030-ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு.
    • எனது உயிருக்கு பாதுகாப்பில்லை.

    திருச்சி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அப்போது தமிழக அரசு குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சிறுகமணி பேரூராட்சி கவுன்சிலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பின்னர் தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவரை திருச்சி தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மாஜிஸ்திரேட் எண் 3 ஆஜர் படுத்தினர.

    நீதிபதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் ஜாமீனில் விடுவித்தார். பின்னர் சாட்டை துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    தி.மு.க. அரசு என் மீது போட்ட 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு. எங்கள் தரப்பு வக்கீல்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி என்னை விடுவித்துள்ளார்

    14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்து வருகிறது. ஆனால் என்னை எஸ்.சி., எஸ்.டி. பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் முடக்க பார்க்கிறார்கள்.

    நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவன். அந்த மக்களுக்காகவே அதிகமாக குரல் கொடுத்துள்ளேன்.

    நான் மேற்கோள் காட்டி பாடிய பாடல் 31 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பாடலாக உள்ளது.

    சண்டாளன் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வார்த்தை என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. யாரும் இந்த அரசுக்கு எதிராக பேசக்கூடாது என தி.மு.க. அரசு அடக்கு முறையை கையாள்கிறது.

    பா.ஜ.க.வை பாசிசம் என்று சொல்லும் தி.மு.க.வுக்கு இது பாசிசம் என்பது தெரியாதா?

    இந்த வழக்குக்கு எந்த தொடர்பும் இல்லாத எனது கைபேசியை முதலில் போலீசார் பறித்துக் கொண்டார்கள்.

    என்னை கைது செய்தால் போலீசாரின் டெம்போ வேனில் அழைத்து வர வேண்டும். அதற்கு மாறாக என் காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது டிரைவர் முழு போதையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் என்னை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய பார்த்தது.

    மதுரையில் விபத்து நடந்து கார் சேதமடைந்த பின்னரே போலீஸ் வேனில் ஏற்றினர். எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்றம் தான் என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார்.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார்.

    தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

    இதைதொரட்ந்து, சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன்படி, பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சாட்டை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால், சாட்டை துரைமுருகனை திருச்சி நீதிமன்ற முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவலில் செல்ல தேவையில்லை எனக் கூறி விடுவித்தனர்.

    • கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது.
    • நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அபிசேக், பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டின் ஆகியோர் இன்று ஜங்சன் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையிலிருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. பின்னர் பயணிகள் அந்த ரெயிலில் ஏறி இறங்கினர். அப்போது முன்பதிவு பெட்டியில் இருந்து இறங்கிய ஒரு நபர் கையில் பெரிய பையுடன் வேக வேகமாக புறப்பட்டுச் சென்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை மடக்கி பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கட்டி, தங்க நகைகள் இருந்தது. ஆனால் அந்த நபரிடம் அதற்கான ரசீது எதுவும் இல்லை.

    அதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன்( வயது 25) என்பது தெரியவந்தது.

    நகை மற்றும் பணத்தை அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடந்து வருகிறது.

    அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வருமான வரித்துறை மற்றும் வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று பணம் மற்றும் நகையை மதிப்பிட்டு வருகின்றனர்.

    இதில் ரொக்க பணம் ரூ. 15 லட்சமும், ரூ.1 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 2.45 கிலோ தங்க நகைகளும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். கைப்பற்றப்பட்ட நகை, பணம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? அல்லது ஹவாலா பணமா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

    திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது.
    • வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவில் சாமி சன்னதி வாயிலில் மணி மண்டபம் உள்ளது. ஆனால் அந்த மணிமண்டபத்தில் இருந்த மணி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இக்கோவிலில் மணியோசை கேட்காத நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் உபயதாரர்கள் மூலம் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வெண்கல மணி இக்கோவிலுக்காக புதிதாக செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் சீனிவாசன் ஸ்தபதி மூலம் செய்யப்பட்டுள்ள இந்த வெண்கல மணி 520 கிலோ எடை கொண்டது.

    அழகிய வடிவ மைப்புடன் செய்யப்பட்டு உள்ள இந்த வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    நேற்று இரவு மாணிக்க வாசகரின் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் மாணிக்க வாசகரின் புறப்பாட்டு ஊர்வலத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க இந்த வெண்கல மணி எடுத்து வரப்பட்டது. இன்று புதன் கிழமை இந்த வெண்கல மணி பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    வருகிற 12-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் உச்சிகால பூஜையின் போது புதியதாக பொருத்தப்பட்ட வெண்கல மணியோசை கோவில் முழுவதும் ஒலிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×