என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களின் எண்ணத்துக்கு நேர்மாறானது - ஜி.கே.வாசன்
- விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை.
- மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.
திருச்சி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களின் எண்ணத்துக்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. இது மக்கள் மனநிலைக்கு ஏற்ற கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.
ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த பிரயோசனமான அறிவிப்பும் இல்லை.
மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில் தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூட சுயாட்சியை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை. த.மா.கா. குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என் கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் என் கவனமும், செயல்பாடும் உள்ளது.
ராஜ்ய சபை உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. த.மா.க.வை பொருத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் எம்பது தான் முதல் பணி. வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு குறித்து சிந்திக்கவில்லை.
லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி த.மா.கா.தான். தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால், மாநில சுயாட்சி, கவர்னர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு தி.மு.க. அரசு. மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.
காங்கிரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தான். சுக்குநூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்குநுறாக தான் போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






