என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ராணிப்பேட்டை
- கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
- சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது.
- பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.
புலிவலம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதில் 1,305 படிகள் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை மீது ஏறிச்சென்று தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
அவர்கள் எளிதில் மலைக்கு சென்று யோக நரசிம்மரை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்பேரில் தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது. இப்பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.
மேலும் ரோப்கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர். காந்தி தலைமையிலான நன்கொடையாளர்கள் மூலம் ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரோப்கார் அமைவிடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது விரைவில் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும் என தெரிவித்தனர்.
லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலின் ரோப்கார் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 105 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது.
சென்னையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணம் வந்தால் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மரை எளிதில் தரிசனம் செய்யலாம்.
இதனால் அதிகமான பக்தர்கள் சென்னையில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர்.
இவரது 2-வது மனைவி வெண்ணிலா (28) மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4).கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார்.
இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்களுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
எர்ணாகுளம்-ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.
இதில் வெண்ணிலா மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
அங்கு விரைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன
- ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ரூ.5 கோடி கொடுத்து விட்டார். அதை கொண்டு வந்தவரை போடா ராஸ்கல் என்று சொல்லி திருப்பி அனுப்பினேன். உடனே எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இந்த தகவலை தெரிவித்தேன். அவர் அண்ணே நானும் கேள்விப்பட்டேன். நீங்கள் இனிமேல் வீட்டில் இருக்க வேண்டாம்.
நான் ஒரு இடம் ஏற்பாடு செய்கிறேன் அங்கே போய் இருங்கள் என்றார். எனக்காக லாட்ஜில் தனியாக அறை எடுத்துக் கொடுத்து 15 பேரை பாதுகாப்புக்காகவும் வைத்தார்.
எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. செல்போனில் தலை எடுப்பேன். உயிரை எடுப்பேன் என்று பல அறைகூவல்கள் வந்தன. அத்தனையையும் தாங்கிக் கொண்டேன். பணத்திற்காகவோ அல்லது என் உயிர் போகும் என்பதற்காகவோ பதவிக்காகவோ இந்த இயக்கத்தில் வாழ்பவன் தமிழ் மகன் உசேன் அல்ல.
மக்களுக்காக செயல்படுகிற பாடுபட ஏற்றமிகு தொண்டர்கள் உள்ள இயக்கம் அ.தி.மு.க. அதனை எண்ணிப் பார்த்து இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளித்தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தனக்கு சாதகமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 கோடி அனுப்பி வைத்ததாக தமிழ் மகன் உசேன் பேசியது தற்போது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வந்தே பாரத் ரெயில் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
- ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 20 நிமிடம் காலதாமதமானது.
மேலும் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரெயிலும் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.
அதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.
இதனால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சீக்கராஜபுரம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமதாஸ். இவரது மனைவி ஜமுனா (வயது 50). இவர் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியில் அரசினர் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவருடன் ஜமுனா பைக்கில் வந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஐவிபிஎம் அருகே வந்த போது, பைக்கில் சாலை ஓரத்திலிருந்து சாலையில் ஏற முயன்ற போது எதிர்பாராதவிதமாக ஜமுனாவும் அவரது கணவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது பின்னால் சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கன்டெய்னர் லாரி ஏறியதில் ஜமுனா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.
- கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 38 ). தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது.
கண்ணாடிவிரியன் பாம்பு அவரை கடித்தது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.
மேலும் கண்ணாடிவிரியன் பாம்பையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு கதிரவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
- அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.
- நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது.
அரக்கோணம்:
அரக்கோணம் வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சேலம் அணுமின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.
அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தை கடந்த போது கடைசி பெட்டியில் புகை வந்தது. இதைப் பார்த்த திருவள்ளூர் ரெயில் நிலைய போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.
பின்னர் அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் சோதனை செய்தனர்.
நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது. அந்தப் பெட்டியை தனியாக துண்டித்தனர்.
உயர் மின்னழுத்த ஒயர்கள் இல்லாத பகுதிக்கு தீ பற்றிய பெட்டியை எடுத்துச் சென்றனர். பின்னர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயிலில் பற்றி எரிந்த தீயை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து நிலக்கரி அழுத்தம் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
- தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது. இங்கு அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
அதிகாலை 4.20 மணி அளவில் மகேந்திரவாடி ரெயில் நிலையம் லூப் லைன் வழியாக வரும்பொழுது சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.
இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.
லூப் லைனில் சக்கரங்கள் தடம் புரண்டதால் பிரதான தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.
- பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
- ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மொத்தம் 8 பிளாட்பாரம் உள்ளன. இதில் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் நேற்று 5-வது பிளாட்பாரத்திற்கு அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. சீருடையில் 2 மாணவர்கள் வந்தனர். அவர்கள் திடீரென தண்டவாளத்தில் குதித்து கட்டி பிடித்து புரண்டனர். ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடித்தான்.
அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த ரெயில்களும் வரவில்லை. இது ஏதோ சினிமா சூட்டிங் நடப்பது போல் அரங்கேறியது.
இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மாணவர்களை விரட்டியடித்தனர்.
இந்தக் காட்சி தற்பொழுது அரக்கோணம் மக்களிடையே வீடியோவாக பரவிவருகிறது.
கஞ்சா போதையில் மாணவர்கள் ரெயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் பகுதியில் பள்ளி கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்கும் நபர்களையும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- அரசு மதுபான கடை திறந்தால் வெளி சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும்.
- கடை இல்லாததால் வெளிசந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
ராணிப்பேட்டை:
பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும் பொதுமக்கள் மனு அளித்து வரும் நிலையில் குடிமகன்களின் கோரிக்கை அதிகாரிகளை வியப்படைய செய்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் வந்து மது வாங்கி குடித்து பொழுதை கழித்தனர். திடீரென அந்த கடை மூடப்பட்டது.
இதனால் அந்த பகுதி குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஊரில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு சென்று மது குடித்து வருகின்றனர். இதனால் பெட்ரோல் பயண செலவு ஏற்படுகிறது.
அதன் காரணமாக தற்போது கிராமத்தில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது வாங்கும் நிலைக்கு குடிமகன்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு முடிவு கட்ட குடிமகன்கள் முடிவு செய்தனர். 40-க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததாக தெரிவித்தனர்.
எங்கள் ஊரில் ஏற்கனவே அரசு மதுபான கடை இருந்தது. தற்போது கடை இல்லாததால் இந்த பகுதியில் நாள் முழுவதும் வெளிசந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இங்கே அரசு மதுபான கடை திறந்தால் வெளி சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும் மற்றும் அரசு நிர்ணயத்த விலையில் எங்களுக்கு மதுபானம் கிடைக்கும். ஆகையால் எங்கள் பகுதிக்கு அரசு மதுபான கடை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிகாரி நேரில் ஆய்வு
- தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட உத்தரம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு இருளர் இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் பாலச்சந்தர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையப்புதீன், வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கிராம நிர்வாக அலுவலர் பூபாலன், ஊராட்சி செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்