என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாற்றுத்திறனாளி வாலிபரின் பிறந்த நாளில் திடீரென அழுத அமைச்சர் காந்தி
    X

    மாற்றுத்திறனாளி வாலிபரின் பிறந்த நாளில் திடீரென அழுத அமைச்சர் காந்தி

    • பள்ளி நிர்வாகி கமலா காந்தி தலைமையில் ஜாபரின் பிறந்தநாள் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • உங்களுடைய தயவால் தான் எங்களது மகனையும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளார் என உருக்கமாக பேசினார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரில் மன வளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 'விஸ்வாஸ்' சிறப்பு பள்ளி மற்றும் பகல் நேர காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த விஸ்வாஸ் பள்ளியை அமைச்சர் ஆர்.காந்தியின் மனைவி கமலா காந்தி நிர்வகித்து வருகிறார்.

    இப்பள்ளியில் ராணிப்பேட்டையை சேர்ந்த நூர்ஜகான் என்பவரின் மகன் ஜாபர் (30) என்ற வாலிபர் சிறுவயதில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகவே பராமரிக்கப்பட்டு வருகிறார்.

    தற்போது அந்த வாலிபரின் மருத்துவ பரிசோதனையில் உடலில் உள்ள செல்கள் படிப்படியாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று அந்த வாலிபரின் பிறந்த நாள் என்பதால் அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகி கமலா காந்தி தலைமையில் ஜாபரின் பிறந்தநாள் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். ஜாபருக்கு பிறந்த நாள் பரிசுகள் வழங்கி, கேக் வெட்டி, மனவளர்ச்சி குன்றிய ஜாபருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

    அப்போது ஜாப்பரின் தாய் அமைச்சர் ஆர். காந்தியிடம் கூறியதாவது,

    எங்களது குடும்பம் வறுமையில் இருந்ததால் எனது மகனை 2 வயதில் உங்களது பள்ளியில் சேர்த்தேன். உங்களது சிகிச்சையால் எனது மகன் மூளை பாதிப்பில் இருந்து தற்போது நடப்பது, பேசுவது உள்ளிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    உங்களுடைய தயவால் தான் எங்களது மகனையும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளார் என உருக்கமாக பேசினார். இதனை கேட்டுக் கொண்டு இருந்த அமைச்சர் ஆர்.காந்தி உணர்ச்சி மிகுதியால் கதறி அழுது கைகூப்பி கும்பிட்டார். மேலும் ஜாபரின் கன்னத்தை தடவி,தலையை கோதிவிட்டார்.

    கணவர் அழுவதை கண்ட அவரது மனைவி கமலா காந்தியும் கண்ணீர் சிந்தினார். இந்த உருக்கமான சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பிரியாணி, கேக், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ஜாபரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். ஜாபரின் தாய் நூர்ஜகானுக்கு அதே பள்ளியில் வேலையும் வழங்கினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×