search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95366"

    • மலேசியாவின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
    • 5000-த்திற்கும் மேற்பட்டார் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த கனமழையினால் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவின் சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, நாளை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
    • பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனுடன் கடும் பனிப்பொழிவும் நீடித்தது.

    இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்துள்ளது .

    தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, 8 ம் நம்பர் கரம்பை, பூதலூர், ஆலக்குடி, கல்வராயன்பேட்டை , சித்திரக்குடி, சீராளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்ய வேண்டிய சம்பா பயிர்கள் அதிகளவில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மழை நீடித்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மகசூலும் குறையும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்தும் 25 மூட்டை கூட நெல் கிடைக்காது. எனவே பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    • காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


    மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    • மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் அதி கனமழை பெய்துள்ளது.
    • அதிகபட்சமாக அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    பாலைவன நாடான சவுதி அரேபியாவில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.

    புனித நகரங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் பெய்த அதி கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகிலுள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.

    மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் மிக கனமளிக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    • பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின

    இயற்கைப் பேரழிவுகள் எந்த காலத்திலும் இருந்து வரும் ஒன்று. ஆனால் சமீப காலங்களாக அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குகிறது. தீவிர வானிலை நிலைமைகள், காலநிலை நெருக்கடிகளும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.

    காலநிலை மாற்றம் என்றால் என்ன?

    காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் வானிலை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால மாற்றமாகும். இது இயற்கையாக நிகழக்கூடியது என்றாலும், புதைபடிவ[fossil] எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் 1800 களில் இருந்து காலநிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

    உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்தாத பட்சத்தில் ஆபத்துக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நூற்றாண்டின் இறுதியில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.

    இதற்கான முன்னறிவிப்பாக இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் வெப்ப அலைகள், காட்டுத்தீ, சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை காலநிலை மாற்ற பேரழிவுகள் பலிகொண்டுள்ளது. 

    பேரழிவுகள்

    அட்லாண்டிக் கடலில், 11 சூறாவளிகள், 18 புயல்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்க பகுதிகளில், ஜூலையில் பெரில், ஆகஸ்டில் டெபி, செப்டம்பரில் ஹெலன் மற்றும் அக்டோபரில் மில்டன் ஆகிய கொடிய சூறாவளிகளால் 330-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பில்லியன் டாலர்கள் வரை சேதம் ஏற்பட்டது.

    மே மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் வாக்கில் தெற்கு பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் மே மாதத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில், 300 க்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டது. 6,000 வீடுகள் முற்றாக அழித்தன.

    கேரளாவில் ஜூலையில், நிலச்சரி மற்றும் கனமழையால் வயநாடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர்.

    தென்கிழக்கு ஆசியாவில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட யாகி என்ற சூப்பர் புயல், கிட்டத்தட்ட 600 பேரைக் பலிகொண்டது.

    அக்டோபர் பிற்பகுதியில் தென்கிழக்கு ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வறண்ட பிரதேசமான மத்திய கிழக்கிலும் ஏப்ரலில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. துபாய் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.

     

    பருவநிலை மாற்றம் வறட்சி, மழைப்பொழிவு மற்றும் வெப்பத்தால் பயிர்கள் சேதமடைந்து உணவுப் பற்றாக்குறை, உலகளவில் விவசாயத் தொழிலுக்கு இழப்புகளை அதிகரித்தது.

     வெப்ப அலை மரணங்கள்

    மழை வெள்ள பேரழிவுகளை தவிர்த்து, இந்த வருடம் கோடையில் உலகளவில் உணரப்பட்ட வெப்ப அலை ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது.

    உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை ஜனவரி முதல் செப்டம்பர் வரை சராசரியை விட 1.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

    உலகளாவிய சராசரி வெப்பநிலை ஜூலை 22 ஆம் தேதி 17.15 டிகிரி செல்சியஸை எட்டியது. இதுவே இந்த வருடம் பூமியில் வெப்பமான நாளாக பதிவுசெய்யப்பட்டது. ஜூலை 21 பதிவான 17.09 டிகிரி செல்ஸியஸ் இரண்டாவது வெப்பமான நாளாக பதிவானது.

    இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ விளைவு காரணமாக பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை நிலவியது. ஹீட்ஸ்ட்ரோக் வெப்ப அலைகளால் ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன.

    ஹீட்வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் பாதிப்புகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கூறுகிறது.

    ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    ஐரோப்பாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளில் வெப்ப அலை காரணமாக 19 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன, குறிப்பாக கிரீஸ் மற்றும் இத்தாலியில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.

    அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவானது. வெப்பம் தொடர்பான நோய்களால் மெக்சிகோவில் 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளது. 

     தீர்வுதான் என்ன?

    காலநிலை மாற்றத்தால் மறைமுகமாக இதய நோய்கள், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பல முக்கிய காரணங்கள் போன்ற கொடிய நோய்களால் உயிர்கள் பறிபோகின்றன.

    2024-ஐ திரும்பிப் பார்க்கும்போது, நாம் அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஒரு நாள் நமது கிரகம் மனிதகுலம் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பது நிரூபணமாகிறது.

    உலகளாவிய அமைப்புகளும் அரசாங்கங்களும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற கடுமையான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதே தீர்வாகும். 

    • குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.
    • தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி குள்ளனுர் கோணனூர், வடமலம்பட்டி மற்றும் அதன் சுற்றிய வட்டார கிராமங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது.

    கனமழைக்கு குள்ளனூர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.

    மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரானது புகுந்து பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இரவு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் வீட்டிலிருந்த அரிசி துணி மற்றும் பொருட்கள் ஆவணங்கள் சேதமாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தற்பொழுது குடியிருப்பு வாசிகள் வீட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் கிராம மக்களுக்கு கூறுகையில்,


    குள்ளனூர் கிராமம் முதல் போச்சம்பள்ளி வரையில் தண்ணீர் செல்லும் பாதையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்து மண் கொட்டி சமப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீரானது செல்ல பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    எனவே தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த பகுதிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் ஏரி கால்வாய் பகுதிகளை அகலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கவும், உடனே உணவு வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
    • சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி கல்லூரணி, மேலப்பாவூர், குறுங்காவனம், கீழப்பாவூர், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

    சாலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டை செடிகள் பாரவி இருந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதுவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


    பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.

    நாகல்குளம் பகுதி வழியாக குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஒரு சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதில் அதிகாரிகள் தலையிட்டு குளங்களுக்கு செல்லும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

    கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முக்கானி, ஏரல் பகுதிகளில் உள்ள பாலங்களில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அணையின் நீர்மட்டம் 126.65 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணையின் மொத்த நீர் இருப்பு 4,190 மில்லியன் கனஅடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    வெள்ளப்பெருக்கு தொடர் மழை காரணமாக இன்றும் தேனி மாவட்டத்தில் 2-ம் நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சுருளி அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதுடன் மக்கள் நடந்து செல்லும் பாதையிலும் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேகமலை, சின்னசுருளி அருவியிலும், கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.

    பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சென்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 127.65 அடியாக உள்ளது. 2 நாட்களில் சுமார் 8 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு 17652 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4190 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடிக்கும் கீழ் இருந்த நிலையில் இன்று காலை 5 அடிக்கு மேல் உயர்ந்து 55.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10347 கன அடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2759 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 672 கன அடி. திறப்பு 566 கன அடி. இருப்பு 435.32 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.11 அடியாக உள்ளது. ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 666 கன அடியாகவும், திறப்பு 30 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 96.55 மி.கன அடியாக உள்ளது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 122.57 கன அடி. இருப்பு 79.57 மி.கன அடி.

    பெரியாறு 54, தேக்கடி 100, சண்முகாநதி அணை 84, ஆண்டிபட்டி 35, அரண்மனைபுதூர் 28.2, வீரபாண்டி 12.4, பெரிய குளம் 55.2, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 33, வைகை அைண 34, போடி 18.8, உத்தமபாளையம் 47.8, கூடலூர் 37.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
    • திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.

    சென்னை முதல் நெல்லை வரை அனேக மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல் திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது.

    திருச்சியில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழைக்காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.

    தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

    இதற்கிடையே திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • பருவமழை நேற்று வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்று 32 சதவீதமாக உள்ளது.
    • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 54 செ.மீ. பெய்துள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, இதுவரை நாட்களில் பெய்த பருவ மழை குறித்தும், இனி மேல் பெய்யும் மழை குறித்தும் அவர் விவரித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

    மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு பகுதியில் நிலவுகிறது.

    நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.

    பருவமழை நேற்று வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்று 32 சதவீதமாக உள்ளது.

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 54 செ.மீ. பெய்துள்ளது.

    வரும் 17,18ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×