search icon
என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பட்ஜெட்டில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டக்கூடாது.
    • மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரியம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. ரூ 18,400 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தும் ரூ 10 ஆயிரம் கோடியாக நஷ்டம் அதிகரித்துள்ளது. 22-ம் ஆண்டு ரூ 36500 கோடியும், 23-ம் ஆண்டு வணிக நிறுவனங்கள் மூலம் 34 ஆயிரம் கோடி கிடைத்தும் 3420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு முறையும் மின்கட்டணமாக ரூ 2400 கோடி கூடுதல் வருவாய் கிடைப்பதாக அரசு கூறுகிறது. கட்டண உயர்வுக்கு பின்னும் நஷ்டத்தில் உள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டம் குறித்த வடிவம், தேதி குறித்த கூட்டுப்பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் கூடி தேதி முறைப்படி அறிவிக்கப்படும்.

    திண்டிவனம்-நகரி ரெயில்பாதை பணிகளுக்கு கணிசமான நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-திருவண்ணாமலை ரெயில் பாதைக்கு 696 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்கவேண்டும். கிழக்கு கடற்கரை பாதை திட்டத்திற்கு ரூ 205 கோடி ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை கடந்துவிட்டது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர். கரும்பு சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக சர்க்கரை ஆலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பள்ளி மேலாண்மை குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. அரசுத்துறையின் தற்காலிகப்பணிகளுக்கு ரூ 20 ஆயிரம் நிர்ணயிக்கப்படவேண்டும். அமைப்புச்சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினமும் ரூ. 600 வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ 200 வழங்குவது தொழிலாளர் விரோத போக்காகும்.

    பட்ஜெட்டில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டக்கூடாது. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வாங்கியும். ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதும் சுரண்டலே ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உடனிருந்தார்.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- அய்யாவின் 86-ஆம் பிறந்தநாளில் சமூகநீதி காக்க உறுதியேற்போம்!- அன்புமணி ராமதாஸ்

    • விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார்.
    • தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவரின் உறவினர் நேசம் என்பவர் கடந்த 28.11.2021 அன்று இறந்துவிட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக 27.11.2022 அன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் 25 சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி செலுத்தினார். பின்னர் மறுநாள் 28.11.2022 அன்று ஆர்டர் கொடுத்தப்படி 25 பார்சல் சாப்பாட்டை ஆரோக்கியசாமி வாங்கினார். அதற்கு ஒரிஜினல் ரசீது கேட்டபோது ஓட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டு, சிறிய ரசீது எழுதி கொடுத்துள்ளார்.

    அதன்பிறகு வீட்டிற்கு சென்று முதியோர்களுக்கு உணவு பொட்டலங்களை ஆரோக்கியசாமி வழங்கியுள்ளார். அப்போது அந்த பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆரோக்கியசாமி, ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.

    இதையடுத்து ஆரோக்கியசாமி, இதுகுறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினார்கள்.

    அதில், ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-ம், தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக ஓட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சரை அவதூறாகவும், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி., மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் எம்.பி. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.

    • கஞ்சாவை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • சில்லரை வியாபாரிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே காரில் கடத்த முயன்ற 232 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கேரளாவை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

    கேரளாவில் இருந்து கஞ்சா கடத்திக்கொண்டு ஒரு கும்பல் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் பாதிரி கிராமத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 2 கிலோ, 5 கிலோ பாக்கெட்டுகளாக இருந்த 232 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், தொடர்ந்து சரக்கு வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் உதயகுமார் (வயது 44), சலாம் மகன் ஆசிப் (25) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

    மேலும், இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து, இவர்கள் இருவரும் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தனர். இதனை எங்கெங்கு வழங்குகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் கேரளாவில் இருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு, தொடர்ந்து இவர்கள் கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், சில்லறை வியாபாரிகளுக்கு 2 கிலோ, 3 கிலோ, 5 கிலோ விதம் பிரித்து கொடுத்து கஞ்சாவை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் இவர்கள் பல நாட்களாக இந்த தொழிலை செய்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய சில்லரை வியாபாரிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.
    • அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க 45-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து நிருபர்களை சந்தித்தார்.

    வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் கோரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அதற்கேற்ப எல்லா மக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் வன்னியர்களுக்கு மக்கள் தொகையில் 20 விழுக்காடு என்பதனால், அவர்களுக்கு 20 விழுக்காடு கொடுக்க வேண்டும். அதேபோல் வன்னியர்களுக்கு 18-ல் இருந்து 22 ஆக உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும்.

    தீர்மானம் நிறைவேற்றி 44 ஆண்டுகள் 11 ஆயிரம் கிராமங்களில் பரப்புரை செய்து மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை சொல்லி சர்வ விகிதாச்சாரங்களை பெற்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஒரு நாள் சாலை மறியல் ஒரு நாள் ரெயில் மறியல் 7 நாள் தொடர் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி 10.5 என்ற அளவாவது இடஒதுக்கீடு கொடுங்கள் என்று சொன்னபோது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு வழங்கினார்கள். அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.

    45 ஆண்டு காலங்கள் ஆகியது. ஆனால் அந்த கோரிக்கை அப்படியே இருக்கிறது, அதனால் மீண்டும் ஒருமுறை தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மிகப்பெரிய போராட்டத்தை 7 நாள் சாலை மறியலை விட கடுமையாக செய்தால்தான் இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள இளைஞர்கள் ஆர்வமாக துடிப்போடு இருக்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டதை ஏமாற்றப்பட்டது யாரால் எதனால் என்று புரியாமல் இருந்தவர்களுக்கு நாங்கள் புரிய வைத்திருக்கிறோம்.

    அவர்கள் இப்பொழுது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த போராட்டம் மிகவும் கடுமையான போராட்டமாக இருக்கும். 45 ஆண்டு அடி எடுத்து வைக்கும் இந்த தினத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு ஒட்டுமொத்த சமுதாயமும் இந்த போராட்டத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். ஆகையால் அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.
    • சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் 7-வது வார்டு குறுக்கு தெரு, நடுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.

    இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.

    சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சேரும் சகதியமாக உள்ள இந்த தெருவில் நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். இந்த சாலையை சீரமைக்கவிட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக மீன் பிடிக்கும் போராட்டம், நீச்சல் அடிக்கும் போராட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

    • தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது.

    வானூர்:

    புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையோர பகுதிகளுக்கு மதுபாட்டில் கடத்தி வந்து விற்கப்படுகிறது. இதனை தடுக்க தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், தென்கோடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் உருளையன்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 130 குவார்ட்டர் பாட்டில், 4 புல் பாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.

    • திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தோல்வியடைந்தது குறித்து வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்தது. பரிசுப்பொருட்கள் மூலமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

    * திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.

    * இடைத்தேர்தலில் தோல்வி பயத்தை திமுகவிற்கு ஏற்படுத்த முடிந்தது என்பதே மனநிறைவு.

    * அப்பாவி மக்களிடம் ரூ.1000, ரூ.500 காட்டி அவர்களை ஏமாற்றி திமுக வாக்கை பெற்றுள்ளது. இதற்காக பெருமைப்படக்கூடாது.

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது என்று கூறினார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
    • பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

    இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டநிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

    எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    • மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது.
    • வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதையொட்டி காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    அதுபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளும் கொண்டு வரப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதற்காக அங்குள்ள தனி அறையில் 2 மேஜைகள் போடப்பட்டு அங்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது சில வாக்குச் சீட்டுகளில் கூடுதல் மை கொட்டி இருந்தது.

    இதனால் அந்த வாக்குச் சீட்டுகளை செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு பா.ம.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சர்ச்சை நிலவியது.

    அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 14 கிராம உதவியாளர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 150 பேர் ஈடுபட்டனர்.

    வாக்கு எண்ணிக்கையை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஏதுவாக, வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 28 இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 1,195 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    வாக்கு எண்ணிக்கையை 20 சுற்றுகளாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 9.30 மணி அளவில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 8,565, பாம.க. வேட்பாளர் சி.அன்புமணி 3,906, நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 303 வாக்குகள் பெற்று இருந்தனர். 2-வது சுற்றில் தி.மு.க. 12,002, பாம.க. 5904, நாம் தமிழர் 819 பெற்றனர்.

    2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 6,524 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். 3-வது சுற்றில் தி.மு.க. 18,057, பா.ம.க. 7,323, நாம் தமிழர் 1,383 வாக்குகள் பெற்றன. 4-வது சுற்றில் தி.மு.க. 24,169 பா.ம.க. 9,131, நாம் தமிழர் 1,500 வாக்குகள் பெற்றன.

    4-வது சுற்று முடிவில் தி.மு.க. 15038 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை யில் இருந்தது. 10.30 மணி அளவில் 5-வது சுற்று முடிவுகள் வெளியானது. அப்போது தி.மு.க. 24,171, பா.ம.க. 8,825, நாம் தமிழர் 1,763 வாக்குகள் பெற்று இருந்தன.

    இதனால் 5-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்ப ளர் அன்னியூர் சிவா 15,346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 6-வது சுற்று முடிவில் தி.மு.க. 31,151, பா.ம.க. 11,483, நாம் தமிழர் கட்சி 2,275 வாக்குகள் பெற்று இருந்தன. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 19,668 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு சுற்று முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். நண்பகல் 12.30 மணி நிலவரப்படி தி.மு.க. 83,431, பா.ம.க. 36,341, நாம் தமிழர் 6,767 வாக்குகள் பெற்று இருந்தன.

    இதன் மூலம் தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவது தொடக்கத்திலேயே உறுதியானது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில், சென்னை அண்ணாஅறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    • இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
    • வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைத்து, அறையை பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
    • ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கவுசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா (4), ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்து 10-ந் தேதி வந்துவிட்டார்.

    இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் வெளியில் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கூனிமேடு கடற்கரையோரம் ஒரு பெண் குழந்தையின் உடலும், அனுமந்தைகுப்பம் கடற்கரை ஓரம் ஒரு பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இத்தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

    பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்த போது, கரை ஒதுங்கி கிடந்த குழந்தைகளின் உடல் ஆனந்தவேலுவின் பெண் குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், 2 பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தவேலு அல்லது அவரது உடல் கரை ஒதுங்கினால் மட்டுமே நடந்தது என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×