search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி:

    பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பணபட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தற்போது இருந்தே தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை என நடத்திய சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியுள்ளன.

    மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பிரிவில் அதிகாரிகள் வாகன சோதனைகள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அ.தி.மு.க. கொடி கட்டிய கார் அந்த வழியாக வந்தது. உடனே அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியை அடுத்துள்ள காராம்பட்டி யைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கிருபாகரன் (வயது 29) இருந்தார்.

    தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் கிருபாகரனிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
    • மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன்படி பணப் பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியாக ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ குழு என 3 குழுவினரும் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் முழுவதிலும் 70 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்குடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது காரில் இருந்த காளையார் கோவில் பகுதியை உடையப்பன் என்பவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத நிலையில் பறக்கும்படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாச்சியர் ஷாலினியிடம் ஒப்படைத்தனர்.


    இதேபோன்று மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கடவூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனை யிட்டனர். அதில் பல ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள், சட்டைகள், டி-சர்ட்டுகள், பட்டாசுகள் ஆகியவை பெட்டி பெட்டியாக உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பொருட்களை ஒப்படைத்துசென்றனர்.

    இதேபோல் மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சமயம் சிவகாசியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற ஆம்னி பேருந்தை மடக்கி அதில் முழுவதுமாக சோதனை நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றியும், விதிகளை மீறியும் 11 பெட்டிகளில் முழுவதுமாக பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.

    லட்சக்கணக்கு மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினியின் அனுமதியுடன் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பட்டாசு பெட் டிகள் ஒப்படைக்கப்பட்டது.

    முதற்கட்டமாக இந்த பட்டாசு பெட்டிகள் ஆந்திராவில் தேர்தல் காலத்தில் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்டதா? யார் அனுப்பியது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவில் கட்டுகட்டாக ரொக்க பணம், கண்டெய்னர் லாரியில் பெட்டி பெட்டியாக பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதா? என்ற அடிப்படையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணலாம்.

    • இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
    • தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தலையை எண்ணுவது தான் ஜனநாயகத்தின் வேலை. எண்ணிக்கையை வைத்து தான் தெருவில், ஊரில், அரசியலில், பாராளுமன்றத்தில் மரியாதை. நம்பர் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். நான் சமூகத்தைச் சார்ந்து சொல்லவில்லை, மதத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.


    இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டேபோகிறது. இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் சமநிலை இருக்காது என்பதால் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் வருகிறது, நல்லவருக்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என நம்பி பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். ஓட்டு போட ரெட்டியார் சமூகம் தயங்க கூடாது. பணம் வாங்காமல் வாக்களியுங்கள். நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என எழுதி கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்களில் உறுதிமொழி பதாகைகள் வைக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தால் நிச்சயம் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இரு தினங்களில் தமிழக பயணத்தை மேற்கொண்டு முடிக்க உள்ளார். அதற்குள் இந்தியாவினுடைய பா.ஜ.க. வேட்பாளர்கள் முழு பட்டியல் வெளியிடப்படும். பா.ஜ.க.வும், கூட்டணி கட்சியும் 39 தொகுதியிலும் பிரதமர் மோடி வேட்பாளராக நிற்கிறார் என எண்ணிதான் நாங்கள் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளோம். மீண்டும் மூன்றாம் முறையாக மோடி 3.0, அதில் வெற்றி பெறுவோம்.

    தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.வின் வாக்குகள் பா.ஜ.க.விற்கு நல்ல பலன்களாக வந்தடையும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் தி.மு.க. கட்சி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது. இது ஏற்கனவே இருந்த நடைமுறைதான். இடையில் இந்த நடைமுறை மாறி விட்டது.


    கப்பலூர் சுங்கச்சாவடி யாருடைய ஆட்சியில் வந்தது என மத்திய நெடுஞ் சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கேள்வி கேட்டதற்கு, கனிமொழி மற்றும் மாணிக்கம் தாகூர் இருவரும் வாயை பொத்திக் கொண்டனர். சுங்கச்சாவடி நடைமுறையே வரும் காலத்தில் மாற உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ஆங்காங்கே சென்சார் மூலம் பயணம் முறையில் மாற்றப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்ப வரி வசூல் செய்யப்படும்.

    இதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. இந்தப் பகுதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுது கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. ஜனநாயகத்தை தி.மு.க. கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே நோட்டுக்கு வாக்களிக்க வேண்டாம் என பா.ஜ.க. சார்பில் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுடன், ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பதாகைகளை வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    சமயபுரம்:

    மலேசியாவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 52). இவர் தனது மனைவி வனிதா, மகள் பிரிதிகா. சந்திரன் மகள் பிரிதிகாவின் சிகிச்சைக்காக உறவினர்கள் 3 பேருடன் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டார். இதற்காக நேற்று அதிகாலை அவர்கள் திருச்சி வந்தனர்.

    காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு பின் சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் சமயபுரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

    அப்போது சந்திரன் கையில் இருந்த பையை மறந்து ஓட்டலில் விட்டு சென்றார். சந்திரன் குடும்பத்தினர் காரைக்குடி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது கையில் இருந்த பையை காணதால் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர்கள் காரைக்குடியில் இருந்து மீண்டும் சமயபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வந்து விசாரித்தனர். அப்போது இந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த உணவகத்தில் துப்புரவு பணியாளர் அலமேலு(34) என்பவர் சந்திரனின் கைப்பையை எடுத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சமயபுரம் போலீசார் அலமேலுவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அலமேலு கைபையை எடுத்து தன் கணவர் அலெக்சிடம் கொடுத்து அதில் உள்ள வெளிநாட்டு பணம் மற்றும் நகையினை எடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    இதை தொடர்ந்து அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர். பாஸ்போர்ட்டுகளை தான் எரித்து விட்டதாக போலீ சாரிடம் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    • வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது.
    • காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு முதல் மதுரை மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் 3 நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வாகன தணிக்கையின்போது காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தால் உடனடியாக பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் 49 ஆயிரத்திற்கு அதிகமான பணம் எடுத்துவந்தால் உரிய ஆவணங்களை காண்பித்து பின்பு பணத்தினை பெற்று செல்வதற்கான சிறப்பு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. சரக்கு வாகனங்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் எடுத்துசெல்லப்படுகிறதா? எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர்.
    • தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.

    மதுரை:

    சென்னையில் அருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் ஏறினார். நீண்ட நேரமாக கைக்குழந்தை பசியால் அழுவதை பார்த்த சக பயணிகள் குழந்தையை வைத்திருந்த நபரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினர்.

    இதனையடுத்து மதுரை ரெயில் நிலையத்தில் குழந்தையுடன் அந்த நபர் இறங்கியவுடன் அவரை பின்தொடர்ந்து சில பயணிகள் சென்றனர். ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலோ என்ற அச்சத்தில் அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குழந்தையுடன் வந்த பயணியை பிடித்து சக ரெயில் பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் காரணமாக குழந்தையை தூக்கி வந்தது தெரிந்தது.

    இதனையடுத்து அவருடைய மனைவிக்கு தகவல் கொடுத்து மனைவியிடம் குழந்தையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையே நள்ளிரவு 2 மணி முதல் பச்சிளங்குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. பலர் பாட்டில் மூலமாக பால் கொடுத்தபோதும் குழந்தை பால் அருந்தவில்லை. தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.

    இதற்கிடையே ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர். அப்போது அங்கு வந்து கோவை செல்வதற்காக மதுரை ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் குழந்தைக்கு பால் புகட்ட முன்வந்தார்.

    கோவை செல்லும் ரெயில் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலையில் குழந்தையின் அழுகையை உணர்ந்து தாயுள்ளத்தோடு வந்து பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி குழந்தையின் பசியாற்றினார். பசியால் பல மணிநேரம் அழுத குழந்தைக்கு கருணையோடு தாய்ப்பால் புகட்டிய பெண்ணை பலரும் பாராட்டினர். மேலும் பயணிகள் சிலரும், ரெயில்வே போலீசாரும் அவருக்கு இனிப்புகளை வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

    • ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
    • ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந் துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    பங்குனி உத்திர நாளன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்க மன்னார் சன்னதியில் வீற்றியிருந்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சனம் பட்டர் கொடியேற்றி கொடிமரத்திற்கு அபிஷேகம் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜைகளை நடத்தி வைத்தார்.

    தொடர்ந்து பூஜையை உடனிருந்து செய்த ரங்கராஜ் என்ற ரமேஷ் பட்டர், சுதர் சன பட்டர், ஐகிரி வாசன் பட்டர், கோபி பட்டர், முத்து பட்டர் சிறப்பாக பூஜைகள் செய்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறுகிறது .

    திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் காலை மற்றும் இரவு வேலைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி.
    • பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை.

    மதுரை:

    மதுரை கோச்சடையில் புதிய ரேசன் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது தி.மு.க.

    நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. தி.மு.க. காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்.

    மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார்.


    அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பா.ஜ.க.வுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா? தொடர்வாரா? என்பது தெரியும்.

    கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லா சமூகத்ததையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாரதிய ஜனதா அப்படி கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மனவேதனை.

    பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. தேர்தலில் மக்கள் நன்றாக பதில் கொடுப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்கள் போனால் போகட்டும் எங்களுக்கு கவலை இல்லை.

    கடந்த முறை தேர்தலில் மசூதி பக்கம் செல்லவே முடியவில்லை. பா.ஜ.க.வை விட்டு வாருங்கள். நாங்கள் அனுமதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறினார்கள். பா.ஜ.க.வை ஆதரித்ததால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம். நாங்க என்ன இழி பிறவியா?

    விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் சிறு பிள்ளைகள். 2026-ம் ஆண்டு தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு தி.மு.க.வுக்கு தான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் தி.மு.க.வுக்கு கோபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காக்க வைக்கப்பட்டு செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனை நடைபெற்றதை பார்த்து விற்பனையில் ஈடுபட்டனர்.

    பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது எனவும், செவிலியர்கள் யாரும் சேலை விற்பனை செய்வதை வேடிக்கை பார்க்க செல்லவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    மதுரை:

    இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர்.

    ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுப்பது, மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வீலிங் செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தால் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி எரித்து அதில் குதிப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆற்றுப்பகுதிக்கு செல்லும் 4 வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஆற்றுக்குள் பெட்ரோலை வட்டமாக ஊற்றுகின்றனர். பின்னர் அதில் ஒரு வாலிபர் தீக்குச்சியை கொளுத்தி அதில்போட வட்ட வடிவில் தீ குபீரென்று எரிய தொடங்கியது.


    அந்த நேரத்தில் அருகில் இருந்த சுவற்றில் ஏறியிருந்த வாலிபர் ஒருவர் அந்த தீயில் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட அந்த வாலிபர் தண்ணீரில் இருந்து வெளியேறுகிறார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களால் நீர்நிலைகளுக்கும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

    ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சிலருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    • திருமணத்தின் போது 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.
    • மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார்.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் பாரதியார் மெயின்ரோடு திரவுபதி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் பால் பாண்டியன் மகள் அனுசுயா (வயது 28). இவர் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். அப்போது என்னுடன் வேலை பார்த்த பேராசிரியரான விஜய் என்பவரை காதலித்து 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எங்கள் வீட்டின் சார்பில் 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.

    இந்தநிலையில் எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எனது கணவர் விஜய் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு எனது பெற்றோர் அளித்த நகைகளை ரூ.12 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார்.

    மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தில் அவரது கள்ளக்காதலியின் பெயரில் வீடு வாங்கியுள்ளார். இதை கண்டித்த என்னை மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்து வருகின்றனர் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

    மனுவை பரிசீலித்த போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை சித்ரவதை செய்ததாக அனுசுயாவின் கணவர் விஜய், மாமியார் ஜெயலட்சுமி, கணவரின் சகோதரி சுகப்பிரியா, சுகப்பிரியாவின் கணவர் சிவயோகம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
    • சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    ×