என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு - நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மதுரை கோர்ட்டில் ஆஜர்
- சி.பி.ஐ. மதுரை மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தது.
- மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் காவலாளி அஜித் குமார் மீது நிகிதா என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நகை திருடியதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் திருப்புவனம் தனிப்படை போலீசார் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் படுகாயம் அடைந்து இறந்தார்.
தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
அண்மையில் சி.பி.ஐ. மதுரை மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தது. அதில் நிகிதா பொய் புகார் அளித்ததாகவும், போலீஸ் விசாரணையில் அஜித் குமார் தாக்கப்பட்டு இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது நகை திருட்டு என பொய் புகார் அளித்த நிகிதா மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அறிவுறுத்தினார்.
அதன்படி அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதன்படி இன்று காலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜரானார். மாவட்ட கோர்ட்டு உத்தரவுப்படி நிகிதாவிடம் சி.பி.ஐ. புகார் தொடர்பாக விசாணை நடத்துவார்கள் என தெரிகிறது.






