search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவர்சோலையை அடுத்து நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் யானை கூட்டங்கள், குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு காண கோரியும் அஞ்சுகுன்னு பகுதியில் கிராம மக்கள் கடந்த 11-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 16-வது நாளை எட்டியுள்ளது.

    இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து, சீனிவாசன், வசீம் உள்பட 4 கும்கி யானைகள் இங்கு அழைத்து வரப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இருப்பினும் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று, தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டாய்மட்டம், காரக்குன்னு பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அந்த யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடலூா் வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனத் துறையினா், யானை விரட்டும் காவலா்கள், சிறப்புக் குழு வனக் காவலா்கள், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி கோட்ட யானை விரட்டும் பணியாளா்கள் ஆகியோா் 4 கும்கி யானைகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஊருக்குள் புகுந்த யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    • மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.
    • கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீலகிரியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டுகிறது.

    மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது. மண்சரிவுகளும் ஏற்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

    பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ஊட்டி அருகே உள்ள கேத்தி பகுதியில் போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த மரம் முறிந்து போலீஸ் நிலையத்தின் மீது விழுந்தது.

    இதில் போலீஸ் நிலையம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர்.

    சாலையிலும் இந்த மரம் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி பிங்கர் போஸ்ட், குளிசோலை பகுதிகளிலும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலை முள்ளிகொரையில் மரம் ஒன்று விழுந்தது. இதனால் இந்த வழித்தடத்திலும் போக்குவரத்து தடைபட்டது. மரம் வெட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

    குன்னூர்-ஊட்டி சாலையில் எம்.ஜி. காலனி பகுதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில், கார் சுக்குநூறாகிறயது.

    கோடேரி, பெங்கால் மட்டம், கைகாட்டி , குன்னக்கம்பை, அதிகரட்டி, குந்தா பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளில் 7 இடங்களில் மின்கம்பம் மீதும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.

    ஊட்டி அருகே முத்தோரை பாலடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக காலநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை, காற்றுடன், குளிரும் சேர்ந்து கொண்டுள்ளது.

    மாவட்டம் முழுவதுமே கடும் குளிரும் நிலவுகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகள், சுவர்ட்டர் அணிந்து கொண்டே வெளியில் வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

    மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    தொடர் மழை மற்றும் குளிரால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் அதிக காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஊட்டி, குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சேரங்கோடு-98, பந்தலூர்-70, கூடலூர்-61, அப்பர் கூடலூர்-60, தேவாலா-57, கிளைன்மார்கன்-44, ஓவேலி-42, செருமுள்ளி-38, பாடந்தொரை-36.

    • குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது.
    • பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    பந்தலூர், மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதிர்காடு, பாட்டவயல், கரியசோலை, சேரம்பாடி, எருமாடு உள்பட தாலுக்கா பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

    இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது.
    • குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    காற்றின் வேகத்தால் ஊட்டி அருகே உள்ள கோவில்மேடு பகுதியில் வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து, கூரை ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு தரையில் கிடக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கோடேரி, கைகாட்டி, வண்டிச்சோலை, பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    குறிப்பாக காமராஜர் புரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரையும் காற்றில் பறந்தன. குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளன.

    உபதலை, மேல்பாரத் நகர், சப்ளை டிப்போ, பழைய அருவங்காடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மரங்கள் விழுந்த பகுதிகளில் குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சின்ன வண்டிச்சோலை பகுதியில் 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி சீரமைத்தனர்.

    காத்தாடி மட்டம் அருகே சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது மரத்தின் கீழே இருந்த கோவில் சேதம் அடைந்தது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் தொடர்ந்து விழுந்து வருவதால், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வீசிய சூறவாளி காற்றுக்கு, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கொய்மலர் சாகுபடி குடில்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன. பல இடங்களில் குடில்களின் பிளாஸ்டிக்குகள் கிழிந்துள்ளதால் மலர் சாகுபடி தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொய்மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு, கோத்தகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை காற்றில் பறந்தது. இந்த பணிமனை தற்போது தான் புதிதாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வீசி வரும் சூறவாளி காற்றுக்கு மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

    இதேபோல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்து சேதம் அடைந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து மின் வினியோகம், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று தொடர்ந்து வீசுவதால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்

    நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

    • போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது.
    • மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த ஒருவாரமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் அங்குள்ள போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்வதால் அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே குன்னூர் அடுத்த உபதலை-பழத்தோட்டம் சாலையில் நேற்று ராட்சத மரம் மின்கம்பி மீது விழுந்ததால் அந்த வழித்தடத்தில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மின்வாளால் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும் அங்குள்ள பெரும்பாலான விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மழையின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டம், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    • வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக சமவெளி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வனத்தையொட்டிய அடிவாரப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது.

    இந்த நிலையில் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு வந்தன.

    பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து பக்கத்திலுள்ள மளிகை கடையையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.

    இதனையடுத்து சுமார் ஒரு கி.மீ.. தொலைவுக்கு நடந்துசென்ற காட்டு யானைகள் கொலகம்பை பகுதியில் உள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கு இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றது. தொடர்ந்து பஜார் பகுதியில் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை ருசித்தன.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானைகள் இன்று காலை கம்மந்து வனப்பகுதியில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    தொடர்ந்து வனச்சரகர்கள் ரவீந்திரநாத் (குன்னூர்), சீனிவாசன் (குந்தா) ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

    காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் பீதி அடைந்ததுடன் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
    • தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகம் சென்று விட்டு திரும்புவது தான் வழக்கம்.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளை பார்க்கவும், வனத்திற்கு நடுவே சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியிலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டியது.

    கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை 3 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது.

    மேலும் தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கூறுகையில், வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெப்பக்காட்டில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது என்றார்.

    • தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
    • ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பரவலாகவே அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீலகிரியில் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து வந்தன.

    நேற்று பெய்த மழைக்கும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    ஊட்டியில் இருந்து முத்தோரை பாலடா செல்லும் சாலையில் முள்ளிக்கொரை பகுதியில் அடுத்தடுத்து 5 மரங்கள் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.

    அந்த சமயம் அந்த வழியாக வந்த கார் ஒன்று மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதனை தொடர்ந்து கார் அங்கிருந்து சென்றது. மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தின் மீதும் மரம் விழுந்தது.


    ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட், கால்ப் லிங்ஸ் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. மரம் மின்கம்பம் மீது விழுந்ததால் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி, குந்தா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் நின்றிருந்த சிறு, சிறு மரங்கள் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு முறிந்து ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத் துறையினர் அந்த மரங்களை உடனுக்குடன் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ஊட்டி தாசபிரகாஷ் சாலையிலும் ராட்சத மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அத்துடன் அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் மீது விழுந்ததில் அவை அறுந்தன.

    உடனடியாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஊழியர்கள் விரைந்து வந்து அதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கூடலூரில் இருந்து மைசூரு மற்றும் கேரளா செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் அதிகளவில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது.

    ஓவேலி, தேவர்சோலை சுற்றுவட்டாரத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.

    கூடலூர்-மைசூர் சாலையில் மாக்கமூலா பகுதியில் பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் புதர் விழுந்தது.

    நாடுகாணி வனச்சரக எல்லைக்குட்பட்ட புளியம்பாறை கோழிக்கொல்லியில் சாலையோரம் இருந்த மரங்கள் கனமழையால் முறிந்து சாலையில் விழுந்தது.

    பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாட்டவயல் சாலையில் அய்யங்கொல்லி பகுதியில் மரம் விழுந்தது. இந்த பகுதிகளில் தீயணைப்பு துறையினர் விரைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் அத்திகுன்னாவில் இருந்து அத்திமாநகர் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் மரமும் முறிந்து விழுந்தது. அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

    ஊட்டியில் பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு சில பகுதிகளில் வீடுகளின் சுவரும் இடிந்தது.

    உப்பட்டி, சேலக்குன்னாவில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சுசீலா என்பவரின் வீட்டின் பக்கவாட்டு சுவர், குந்தலாடி பூதானகுன்னுவில் உள்ள உதயகுமாரின் வீடு, பந்தலூர் பகுதியில் ஒரு வீடும் மழைக்கு சேதம் அடைந்தது.

    மழையுடன், கடும் குளிரும் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.
    • விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையால் தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுற்றி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    கூடலூர்-மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டது.

    தரைப்பாலம் மூழ்கியதால் மசினகுடி ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர் கோக்கால் பகுதியில் சாலைகள் மற்றும் தெருக்களில் விரிசல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள முதியோர் காப்பகம் மற்றும் வீடுகளில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டது.

    இருவயல் கிராமத்தை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 48 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பந்தலூர், சேரம்பாடி திருவள்ளுவர் நகர் பகுதியில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள் முன்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    கனமழையால் ராஜகோபாலபுரம் புதுக்காலனியில் மண்சரிவு ஏற்பட்டது. நெலாக்கோட்டை அடுத்த விலாங்கூர் கிராமத்தில் மழைக்கு மதரசா கட்டிடம் விழுந்து சேதமானது.

    எருமாடு அருகே சிறைச்சாலை பகுதியில் இருந்து வெள்ள கட்டு என்ற இடத்திற்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதுமாக மூடியது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலை, முத்தோரை பாலடாவில் இருந்து லவ்டேல் செல்லும் சாலையிலும் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.

    அப்பர் பவானியில் விடிய, விடிய பெய்த மழைக்கு அங்குள்ள மின்வாரிய ஓய்வு விடுதிக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு மண் திட்டு சரிந்து விழுந்தது.

    பாலடா அருகே பைகமந்து ஒசட்டி பகுதியில் சாலையோர மண்திட்டு சரிந்து நடுரோட்டில் விழுந்தது. சாலையோரம் இருந்த மின் கம்பமும் சாய்ந்ததால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்தது.

    இத்தலார், அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் 3 இடங்கள், பிக்கட்டி, மணியட்டி, அட்டுபாயில் ஆகிய பகுதிகளில் 3 என மொத்தம் 6-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-204, எமரால்டு-123, அப்பர் பவானி-106, கூடலூர்-72, அப்பர் கூடலூர்-71, தேவாலா-68, நடுவட்டம்-63, செருமுள்ளி-56, பாடந்தொரை-52.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
    • உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    இந்நிலையில் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் விரைந்தனர்.

    உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    நீலகிரிக்கு சென்ற ஒவ்வொரு குழுவிலும் தலா 10 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

    ×