search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
    • தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

    குன்னூர் அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து காட்டு ப்பகுதிக்குள் விழுந்தன. தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து குன்னூர் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் வனத்துக்குள் கொளுந்து விட்டெரிந்த காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் வனத்துக்குள் பற்றிஎரியும் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினருக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற பழமையான மரங்கள் செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாயின.

    அதுவும் தவிர பாரஸ்ட்டேல் பகுதியில் மான், முயல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் சுற்றி திரிந்து வந்தன.

    குன்னூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் வசித்த வன விலங்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

    இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேற்று மாலை உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குன்னூரில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்புப்படை போலீசாரை வரவழைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை ஊழியர்கள் சம்பவ இடத்தில் கா ட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதற்கிடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் வண்டிச் சோலை, பாரஸ்ட்டேல் பகுதியில் இருந்த வன விலங்குகள் தற்போது இடம்பெயர்ந்து கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று நடமாடி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவும் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின.
    • வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின. மேலும் வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    இதுகுறித்து தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் வனத்துக்குள் தீ விபத்து காரணமாக பரவி நிற்கும் அடர்ந்த புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாரஸ்ட்டேல் காட்டுப்பகுதியில் பற்றியெரியும் தீயை, கடந்தாண்டு போல ஹெலிகாப்படர் பயன்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதற்கிடையே குன்னூர் தீவிபத்து தொட ர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள ஒரு தேயிலை தோட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையற்ற பொருட்களை குவித்து தீ வைத்து எரித்தனர். பின்பு தீயை அணைக்காமல் சென்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து குன்னூர் வனத்தில் பற்றியெரிந்த தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக பாரஸ்ட்டேல் தேயிலை தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலன் இன்பம் மற்றும் தொழிலாளர்கள் கருப்பையா (வயது 65), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    • பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

    இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம்.
    • புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன், பதவியேற்ற பின் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதாவினர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார். என் மண், என் மக்கள் தமிழக யாத்திரையில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார். பா.ஜ.க.வின் இந்த யாத்திரை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பா.ஜனதா முக்கிய கட்சியாகவும் வளர்ந்து கொண்டு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தோல்வியுற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டு உள்ளது. குரங்கு கையில் பூமாலை கொடுத்ததுபோல தி.மு.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, 2ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு சாலை அமைப்பதற்கு பதிலாக தனக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சாலை அமைத்துள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்றது வருகிறது.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற, லஞ்சம் வாங்குகின்ற மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருக்கிறது.

    ஊட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் லஞ்சம் வாங்குவதாக மற்றொரு கவுன்சிலர் குற்றம் சாட்டினார். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகளுக்கு விருப்பமில்லாமல் ஊட்டி மார்க்கெட் கடைகள் இடிக்கப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களாக தி.மு.க. வினர் உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கட்சி தனியாக போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தி.மு.க. கூட்டணிக்கு சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரிடம் மண்ணை கவ்வினார். எனவே கமல்ஹாசன் பா.ஜ.க.விற்கு ஒரு பொருட்டே இல்லை.

    நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். மகளிர் தினத்தன்று மகளிருக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கியாஸ் விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டிற்கு மட்டும் 3½ கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கழிப்பிடங்கள் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 11 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 400 ரூபாய் வீதம் கியாஸ் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவை மிகச்சிறந்த சுற்றுலா நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஊட்டி நகரும் இணையும். ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை. வாகன நிறுத்துமிடம் இல்லை. இதையெல்லாம் சரி செய்யும் விதத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் பணியாற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், ஊட்டி நகர தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
    • பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் அனல்வெயில் கொளுத்தி வருகிறது.

    இதன்காரணமாக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் மக்கள் வருகை இருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் அங்கு மக்கள் அதிகம் கூடுவர்.

    தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு எண்ணற்ற மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு அங்கு தற்போது மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர்கள் பூங்காவின் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி படகு குழாம் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. அங்கு அவர்கள் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஊட்டி ஏரியில் உள்ள மிதிபடகு, எந்திர படகு ஆகியவற்றின் மூலம் சவாரிசெய்து, ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்று உள்ள இய ற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    இதுதவிர தொட்டப்பெட்டா காட்சிமுனையம், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின்நோஸ் மற்றும் கோத்தகிரி காட்சிமுனையம் ஆகிய சுற்றுலா பிரதேசங்களிலும் திரளான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள மலர் மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்காக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள கக்கநல்லா உள்ளிட்ட முக்கிய சோதனைச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவந்த வண்ணம் உள்ளன.

    • பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
    • அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் "தனித்திறமையை வளர்த்து முன்னேற்றத்தை விரிவுபடுத்துங்கள்" என்கிற வாசகத்தை மையமாக கொண்டு, கோத்தகிரி குஞ்சப்பனை இருளர் பழங்குடியின கிராமத்தில், கலெக்டர் அருணா தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலெக்டர் அருணா மற்றும் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

    பின்னர் பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இதில் மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீனாதேவி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

    • ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது கொடநாட்டில் நடந்த புலன் விசாரணை தொடர்பான அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

    • யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த மாயார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது51). தொழிலாளி.

    இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து அந்த வழியாக நடந்து சென்றார்.

    அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்தது. யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.

    ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து, அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவர்சோலை சர்க்கார் மூலை பகுதியை சேர்ந்தவர் மகாதேவ். இவர் அந்த பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை பணி முடிந்து, தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தேவர்சோலை பகுதியில் வந்த போது அவரை ஒற்றை யானை வழிமறித்தது.

    யானை நிற்பதை பார்த்ததும், அங்கிருந்து தப்பியோட அவர் முயற்சித்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவரை யானை தாக்கி தூக்கி வீசியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.

    பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மகாதேவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    நீலகிரியில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
    • ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சினையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.

    ஊட்டி மார்க்கெட்டில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் இங்கு பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாயமா என்று தெரியவில்லை. ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், மண்டலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஊட்டி மார்க்கெட்டில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்பிக்கு நன்றி. அதேபோல், மார்க்கெட் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
    • நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியிருப்பதாவது:-

    பாண்டிச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.

    நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.

    வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை, பாராளுமன்ற குழு அறிவிக்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
    • 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    ×