என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பத்மஸ்ரீ விருது பெற்ற கோத்தகிரி ஓவியரின் மகள் மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்
    X

    பத்மஸ்ரீ விருது பெற்ற கோத்தகிரி ஓவியரின் மகள் மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்

    • மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
    • கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.

    இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அவரது மனைவி சுசீலா மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்கு பிறகு கல்வி கட்டணம் செலுத்த வழியின்றி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி பத்திரிகையில் வெளியானது.

    இதுகுறித்து தகவலறிந்த மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் வாசுகி மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளும்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கலெக்டர் அறிவுரையின்பேரில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து வாசுகி ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அவர் நேற்று கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.

    இதுகுறித்து வாசுகியின் தாயார் சுசீலா கூறியதாவது:-

    "எனது மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய பத்திரிகைகள், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. எனது மகள் முழுமையாக படிக்க அனைத்து உதவிகளையும் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்களின் கல்விக்கான உதவி மற்றும் நாங்கள் குடியிருக்க அரசு சார்பில் கோத்தகிரியில் ஒரு வீடும் கட்டி கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    Next Story
    ×