என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி, அவலாஞ்சியில் கடும் உறைபனி- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
- பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உறைபனி காணப்பட்டது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக உறைபனி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் அவலாஞ்சி, தலைகுந்தா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான உறைபனி காணப்பட்டது. தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனால் அங்கு கடும் குளிரும் நிலவியது.
இன்றும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. உறைபனியால் ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
இதுதவிர சாலையோரப் புல்வெளிகள், வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்களின் கண்ணாடிகள், தோட்டப் பயிர்கள் அனைத்தும் உறைபனியால் மூடப்பட்டு காணப்பட்டன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக 5.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் காய்கறி அறுவடை, தேயிலை தோட்டப் பணிகள், பால் சேகரிப்பு, கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும், உறைபனி காரணமாக சில இடங்களில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகள் கருகி உள்ளதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.






