என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaanum pongal"

    • கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர்.
    • கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக வேளாங்கண்ணி அமைந்துள்ளது. இங்கு கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்ககூடிய புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கடற்கரை நகரமாக விளங்ககூடிய வேளாங்கண்ணி ஆன்மீகம் நகரம் மட்டும் இல்லாமல் பொழுது போக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

    எப்போதுதே வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந்தேதியில் இருந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டுகடங்காத அளவில் உள்ளனர்.

    இன்று காணும் பொங்கலை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு அதிகாலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள், மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காக கூட்டம் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காணும் பொங்கலை முன்னிட்டு பலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து கடற்கரையை சுற்றி பார்த்து குளித்து மகிழ்ந்தனர்.

    வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை சாலை, நடுத்திட்டு, தியான கூட்டம், முடி காணிக்கை செலுத்தும் இடம், பழைய மாதா கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளதால் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஏராளமான கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.

    பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.

    மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

    ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.

    இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காணும் பொங்கலையொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.
    • காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காணும் பொங்கலை யொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.

    காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள், கத்தி, அரிவாள் போன்றவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை சோதனை சாவடியில் யாரேனும் தடை செய்யப்பட்ட பொருட்களுடன் பிடிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 4-30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.

    அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் வனத் துறையினர், போலீசார், என்.சி.சி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தலையணையில் வாகன நெரிசல்களை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குளிப்பதற்கு ஏதுவாக சுற்றுலா பயணிகள் குளிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவோர் வன பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    தை ஒன்றாம் தேதி பொங்கல் கொண்டாட்டமும் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் களைகட்டும்.

    மூன்றாவது நாள் காணும் பொங்கலாக மக்கள் சுற்றுலா தலங்களில் ஒன்று கூடி மகிழ்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித கொண்டாட்டங்களும் பெரிய அளவில் நடைபெறவில்லை. அந்த வகையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கும் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொங்கலையொட்டி வரும் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை வரவேற்க மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைவீதிகளில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வீடுகளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடும் மக்கள் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள். வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் தீட்டி மாட்டுப் பொங்கலையும் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.

    மூன்றாவது நாளான 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட மக்கள் இப்போதே ஆவலுடன் உள்ளனர்.

    சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரையில் மிகுந்த உற்சாகத்தோடு இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்குட்பட்ட அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை உயரதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

    மெரினா கடற்கரை மட்டுமன்றி சென்னையில் உள்ள சிறிய மாநகராட்சி பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை அத்தனை பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் காணும் பொங்கல் அன்று அலைமோதும்.

    கிண்டி சிறுவர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகரம் முழுவதும் 16 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றைய தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்று பொழுதை போக்குவார்கள்.

    காணும் பொங்கல் அன்று மாலை 6 மணியில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடத் தொடங்கி விடுவார்கள். இரவு 9 மணி அளவில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் காணப்படும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் யாரும் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை மணல் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் கூட்டத்தை கண்காணிக்க உள்ளனர். குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தற்காலிகமாக திறக்கப்பட உள்ளது.

    அதில் இருந்தபடியே காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க உள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நாளில் இருந்தே மெரினா கடற்கரையில் மக்கள் பொழுதைப் போக்க திரளாக கூடுவார்கள் என்பதால் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதை அடுத்து வருகிற 14-ந் தேதி சனிக்கிழமை மாலையில் இருந்தே மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று பொங்கலை ஒட்டி மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    • சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது
    • கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. கடற்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையம் நிறுவப்பட்டது.

    இவற்றின் பயன்பாட்டை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர், மெரினா கடற்கரையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்டுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, திஷா மிட்டல், துணை கமிஷனர்கள் பி.மகேந்திரன், ரஜத் சதுர்வேதி, ரோகித்நாதன் ராஜகோபால், தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி கமிஷனர் பாஸ்கர் உள்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மெரினா கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உதவி மையம் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் எளிதில் அடையாளம் கண்டு அவசர உதவியை பெற முடியும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். அவசர தேவைக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, இந்த போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு (17-ந் தேதி) மெரினா கடற்கரையில் மட்டும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 9 நவீன டிரோன்கள் வாயிலாகவும் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டார். மேலும் அவர், கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்று சிறப்பித்தார்.

    கிராமிய மனம் கமழும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

    • மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் திரண்டு வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் காலையிலேயே கூடுவார்கள்.

    மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். சென்னையில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உற்சாகமாக பொழுதை போக்குவார்கள். இதேபோன்று மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    மெரினாவில் நாளை பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் கடலில் இறங்கி கால் நனைக்கும் பகுதியில் சவுக்கு கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் இன்று நடைபெற்றன. மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மெரினாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் பைனாகுலர் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சிறுவர்-சிறுமிகளின் கைகளில் பெற்றோர்கள் மற்றும் காவல் உதவி மைய செல்போன் எண்கள் அடங்கிய சிறிய வடிவிலான 'டேப்'பை ஒட்டுதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிரோன்களை இயக்குவதில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 ஆயிரம் போலீசாருடன் 1000 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.

    மெரினாவில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சூரிய ஒளி உதவி மையங்கள் ஏற்படுத்த உள்ளன. 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

    இந்த வருடம் மெரினா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் காவல் உதவி மையங்களை இரவு நேரங்களில் பொதுமக்கள் எளிதாக அடையாளம் கண்டு காவல் உதவி பெற முடியும்.

    காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிக்கவும் இந்த காவல் உதவி மையங்கள் பெரிதும் உதவும்.

    மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. காணும் பொங்கலான இன்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்த வண்ணமாக உள்ளனர். அவர்கள் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக சென்றதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று 2 மணிநேரம் முன்னதாக காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது.
    • இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம்.

    17.1.2023, தை-3, (செவ்வாய்கிழமை)

    பொழுது புலர்ந்தது முதல் இருள் சூழும் வரை தங்கள் ஜீவனத்திற்காக உழைத்து வாழ வேண்டும் என்பது உலக நியதி. ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே பண்டிகைகள் கொண்டாடுவதை நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர முடியாது.

    அதனால் முற்காலத்தில் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும்.

    இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட ஊர் மக்களை எளிதில் எந்த கொடிய நோய் , இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாது. கால சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது.

    காவல் தெய்வத்திற்குரிய பூஜை வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில்வளர்ச்சி போன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும். இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம்.

    காணும் பொங்கல் அன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில் கண்டு ஆசி பெறுவது சிறப்பு.

    • கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர்.
    • காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.

    தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை, மறுநாள் தைப்பொங்கல், அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், 4-ம் நாள் காணும்பொங்கல் கொண்டாடப்படும்.

    சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் முக்கிய பண்டிகை பொங்கல் ஆகும்.அதன் பின்காணும் பொங்கல் தினத்தில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதலாகும்.வீட்டில் மூத்தவர்களின் ஆசி பெற்று அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொண்டு விளையாட்டுப் போட்டி, உறிஅடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீர சாகசபோட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் இளைஞர் கள் பங்கேற்பார்கள்.

    சென்னை மெரினா கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.பல ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதே காணும் பொங்கலின் சிறப்பு ஆகும்.

    காணும் பொங்கலில் உறவுகள், நட்புகள், அறிமுகம் இல்லாத அக்கம் பக்கத்தினர், விரும்பாதவர்களையும் தேடி சென்று சிரித்து,ஆனந்தம் கொள்ள வேண்டும்.

    17-ந்தேதி தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட மக்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பல ஆயிரம் மக்கள் ஒரேநேரத்தில் கூட்டமாக கூடுவார்கள். கார், வேன்களில் மெரினா கடற்கரைக்கு படையெடுத்து வர உள்ளனர்.மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பு முழுவதும் மீண்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தோட உள்ளது.

    கடற்கரையில் சிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாடுவார்கள். கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர். கண்ணாமூச்சி விளையாட்டும் களைகட்டும். வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை கடற்கரையில் அமர்ந்து மக்கள் சாப்பிடுவார்கள்.

    • இன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
    • குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை :

    காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி இன்று கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை களிக்க உள்ளனர். எனவே போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந் தேதி (இன்று) பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்பட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவார்கள்.

    எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அறிவுரைகள், இணை கமிஷனர்கள் ஆலோசனைகளின் பேரில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    போலீசாருக்கு உதவியாக 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பிலும் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 போலீஸ் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்சுகளில் மருத்துவ குழுவினரும், மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும், மோட்டார் படகுகள் மற்றும் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளித்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

    காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீசார் கண்காணிப்பார்கள். மேலும் குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள், முதியோர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஆண்டு மெரினா கடற்கரை மணற்பரப்பில் திறக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்காற்றும்.

    கடற்கரையையொட்டிய பகுதிகளில் தமிழ்நாடு போலீஸ்துறை கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக போலீசாரால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள 11 உதவி மையங்களிலும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் குழந்தை, பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதி குழந்தைகள் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 2 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம், குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்படும். மேலும் அதிக திறன் கொண்ட 2 பெரிய டிரோன் கேமராக்கள் மூலம் பொதுமக்களுக்கு போலீசாரின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களில் 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை போலீசாரின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
    • ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு வருடமும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பெண்கள் ஒரு நாள் முழுவதும் ஒன்று கூடி ஆடி, பாடி பொழுதை கழிப்பார்கள். பெண்கள் மட்டுமே வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி அனுமதிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை.

    இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வருடம் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வ.உ.சி. பூங்காவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் வரத் தொடங்கினர்.

    ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பாண்டி பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். மியூசிக்கல் சேர் விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வ.உ.சி. பூங்காவில் கூடியதால் வ.உ.சி. பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வ.உ.சி. பூங்கா 2 கேட்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    • மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.

    மாமல்லபுரம்:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குடும்பத்துடன் அவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இன்று காலையில் இருந்தே குடும்பத்துடன் வரத்தொடங்கினர்.

    இதையடுத்து மாமல்லபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, ஐந்துரதம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் என 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    பூஞ்சேரி டோல்கேட், புறவழிச்சாலை பகுதியில் இருந்து கடற்கரை கோயில், புலிக்குகை, ஐந்துரதம், அர்சுணன்தபசு போன்ற புராதன சின்னம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாமல்லபுரம் பஸ் நிலையம் வரை செல்ல தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அடையாறு டெப்போக்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர மினிபஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்ய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகம் அடைந்தனர். மாமல்லபுரம் பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். திருட்டு, பெண்களை கேலி செய்தல், போதை ஆசாமிகளை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர்.

    மேலும் மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டச்சுகல்லறை, நிழல் கடிகாரம், பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மர நிழலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்கனவே சமைத்து கொண்டு வந்து இருந்த உணவை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பழவேற்காடு பகுதி மக்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது.

    சுற்றுலா பயணிகளின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டி.எஸ்.பி. கிரியா சக்தி திருப்பாலைவனம் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பொன்னேரி தீயணைப்பு அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    வடசென்னை அனல்மின் நிலையம், பழவேற்காடு செல்லும் சாலை, காட்டு பள்ளி, பொன்னேரி -பழவேற்காடு சாலை ஆண்டார் மடம், போளாச்சி அம்மன் குளம், ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    ×