என் மலர்
நீங்கள் தேடியது "மெரினா கடற்கரை"
- மெரினா கடற்கரையில் நெய்தல் நிலப்பரப்பை சீர்குலைக்கும் செயலாகும்.
- ரோப் கார் திட்டத்தை கொண்டு வருவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மலைப் பிரதேசங்களிலும், பனிப் பிரதேசங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை கடற்கரை பகுதியில் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன?
பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த செயல் இருக்கும் இயற்கையான புகழ்வாய்ந்த மெரினா கடற்கரையில் நெய்தல் நிலப்பரப்பை சீர்குலைக்கும் செயலாகும்.
கார்ப்பரேட் நிறுவனம் லாபம் சம்பாதிக்க மெரினா கடற்கரையை விற்க நினைப்பது வரலாற்று அபத்தம் மட்டுமல்ல, சென்னை வாழ் மக்களுக்கும், மீனவர்களுக்கும் இழைக்கும் பெரும் அநீதியாகும்.
ஏற்கனவே மெரினா கடற்கரையில் நீலக்கொடி பிரதேச திட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நீலக்கொடி பிரதேச திட்டத்தை மெரினா கடற்கரையில் அமல்படுத்தக் கூடாது என அனைத்து மீனவ கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்பகுதியில் ரோப் கார் திட்டத்தை கொண்டு வருவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இந்த திட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
- உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இந்த அளவிற்கு கடைகள் இல்லை.
- உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி
மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு விசாரித்து வருகிறது.
ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் பேசிய நீதிபதிகள், "உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இந்த அளவிற்கு கடைகள் இல்லை. உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை. கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது எனவும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தலா 100 உணவகம், பொம்மை மற்றும் பேன்சி கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள கடைகளை அகற்றிவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
- தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 110, புதுச்சேரியிலிருந்து 90, காரைக்காலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, பலத்த காற்று வீசுவதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது.
- கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
மெரினா சென்னையின் முக்கிய அடையாளம். உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஒற்றை பெயர் சென்னையின் வரலாற்றை சொல்லும். பல கனவுகளுடன் சென்னைக்கு வருபவர்களுக்கு அலைகளும், கடற்கரை மணற்பரப்பும் வாழ்க்கையை மகிழ்விக்கும் வழிகாட்டியாக காலம் காலமாக திகழ்ந்து வருகிறது.
வரலாறு படைத்த தலைவர்களை சிலைகளாக தாங்கிக்கொண்டு, உழைப்பை வலியுறுத்தும் உழைப்பாளர் சிலையை தன்னகத்தே கொண்டுள்ள மெரினாவில் பல சரித்தர சாதனை கூட்டங்கள், பேரணிகள் அரங்கேறியுள்ளது. மண்ணின் மக்களின் உணர்வுகளுடன் கலந்து விட்ட மெரினா இன்றைக்கு ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது.
தினமும் வந்து செல்லும் மக்களை மகிழ்விக்காமல் ஒருபோதும் மெரினா விட்டதில்லை, அதன் அலைகளும் ஓய்ந்ததில்லை. அந்த அளவுக்கு சென்னையுடன் ஒன்றி பிணைந்த மெரினா தற்போது, காலத்திற்கேற்ப தன்னை மாற்றி வருகிறது. நீலக்கொடி சான்றை பெறும் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது.

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் அலங்கார வளைவு.
பாதம் நனைக்கும் அலைகளை ரசித்த மக்களுக்கு தற்போது பெரியவர்கள் அமரும் மூங்கில் இருக்கைகள், கோவாவை போன்று படுத்துக்கொண்டு கடலை ரசிக்கும் இருக்கைகள், நிழலுக்காக ஒதுங்கும் கோபுர குடைகள், மூங்கிலால் ஆன வரவேற்பு அலங்கார வளைவுகள் என மெரினா ரொம்பவே மாறி போச்சு.
கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது. இது குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. காலி பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
உடற்பயிற்சி உபகரணங்கள், மணற்பரப்பில் நடந்து செல்ல நவீன பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி, அவர்கள் பொழுதை போக்குவதற்கு சிறப்பு உபகரணங்கள், போதுமான அளவு கடற்கரை உள்ளே மூங்கிலால் அமைக்கப்பட்ட கழிவறைகள் என மெரினா கடற்கரை அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பல மாற்றங்களை கடந்து, நவீன மயமாகி வரும் மெரினாவில், பட்டினப்பாக்கம் வரை நீண்ட தூரத்திற்கு கடல் உணவக கடைகளின் விற்பனையும் களை கட்டி வருகிறது. இருளில் ஒளிரும் வண்ண விளக்குகளால் மெரினாவின் மொத்த அழகும் மனதை அள்ளிச் செல்லும். மெரினாவின் அழகையும், நவீனத்தையும் சேதப்படுத்தாமல் ரசிப்பதே உயிர்ப்பாக இருக்கும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.
- கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.
இந்தநிலையில் இணை கமிஷனர் விஜய குமார் தற்போது புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.
நேப்பியர் பாலம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள மெரினா கடல் பகுதியில் 7 இடங்களில் கடல் நீருக்குள் சுழற்சி இருப்பதாகவும் அந்த பகுதியில் கடலில் குளிப்பவர்கள் சுழற்சியில் சிக்கி அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிரை விடுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு பலன் கிடைக்கும் என் நம்புவதாக போலீசார் தெரிவித்தனர்.
- ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
- கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, அண்ணாநகர், நுங்கம்பாக்கம் உள்பட 10 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு தனியார் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக நிறுவனம் சார்பில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 1 மணி நேரத்துக்கு இரு சக்கரவாகனங்களுக்கு 5 ரூபாய், 4 சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், பஸ்-வேன்களுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கான ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பாக 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
- நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
- பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும்.
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது. நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநிகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
- அடுத்த வாரத்தில் இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதி அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது.
சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையில் மாற்றுதிறனாளிகள், முதியோர்கள் வீல்சேருடன் சென்று கடல் அலையை ரசிக்க கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் சிறப்பு அனுமதி அளித்து உள்ளது.
இந்த சிறப்பு நடைபாதை 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டு உள்ளது. கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே மணல் பரப்பில் மரப்பலகையால் இந்த சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.1 கோடி செலவில் இந்த நடைபாதை அமைப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் அடுத்த வாரத்தில் இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிப்பதற்காக 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
- மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்துவைத்தார்.
- இந்த நடைபாதை சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம்.
மேலும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று மாலை திறந்துவைத்தார். இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நேரு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
- கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
- வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது
கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந்தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது
கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் கட்டுமானகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.
வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
- மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை பிறர் பயன்படுத்துவதாக புகார்.
- அனைவரும் பயன்படுத்தினால் பாதை சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக குற்றசாட்டு.
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளிகளும் ரசிப்பதற்காக நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப் பட்ட இந்த சிறப்பு பாதையை கடந்த 27ந் தேதி அமைச்சர்கள் மற்றும் உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க இந்த நடைபாதையின் இருபுறங்களிலும் மரத்தால் ஆன கைப்பிடிகள் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த சிறப்பு பாதை வழியாக கடலின் அருகே சென்று அலைகளில் கால்களை நனைத்தபடி கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு பாதை திறக்கப்பட்ட முதல் நாள் மாற்று திறனாளிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மற்றவர்களும் அந்த பாதையை பயன்படுத்தி கடற்கரைக்குள் செல்வதாக புகார் எழுந்துள்ளது. அனைவரும் பயன்படுத்தும் போது சிறப்பு பாதை சேதம் அடையும் என்றும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்று திறனாளிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மெரினாவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதைக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை அலங்கோலமாக உள்ளது.
- மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது.
சென்னை:
ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை என பெயர் பெற்றது சென்னை மெரினா கடற்கரை ஆகும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் மெரினா கடற்கரை மணற்பரப்பில் குளம்போல் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை அலங்கோலமாக உள்ளது. மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள மழைத் தண்ணீரில் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.
அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. கனமழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டிகடைகள், மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன.
மழையால் இந்த கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.
கடற்கரையில் துர்நாற்றம் வீசும் மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






