search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மெரினாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்- கடலில் குளிக்க தடை
    X

    காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மெரினாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்- கடலில் குளிக்க தடை

    • மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் திரண்டு வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் காலையிலேயே கூடுவார்கள்.

    மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். சென்னையில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உற்சாகமாக பொழுதை போக்குவார்கள். இதேபோன்று மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    மெரினாவில் நாளை பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் கடலில் இறங்கி கால் நனைக்கும் பகுதியில் சவுக்கு கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் இன்று நடைபெற்றன. மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மெரினாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் பைனாகுலர் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சிறுவர்-சிறுமிகளின் கைகளில் பெற்றோர்கள் மற்றும் காவல் உதவி மைய செல்போன் எண்கள் அடங்கிய சிறிய வடிவிலான 'டேப்'பை ஒட்டுதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிரோன்களை இயக்குவதில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 ஆயிரம் போலீசாருடன் 1000 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.

    மெரினாவில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சூரிய ஒளி உதவி மையங்கள் ஏற்படுத்த உள்ளன. 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

    இந்த வருடம் மெரினா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் காவல் உதவி மையங்களை இரவு நேரங்களில் பொதுமக்கள் எளிதாக அடையாளம் கண்டு காவல் உதவி பெற முடியும்.

    காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிக்கவும் இந்த காவல் உதவி மையங்கள் பெரிதும் உதவும்.

    மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×