search icon
என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர்.
    • அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே சம்பவத்தன்று தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நாகை -திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை மேலப்பிடாகை அருகே வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட 3 சொகுசு கார்கள் தொடர்ச்சியாக வேகமாக வந்ததை மறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த கார்களில் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (வயது 41), அவரது தம்பி சிவமூர்த்தி (38), திருப்பூர் மாவட்டம் இடுவை திருமலைகார்டனை சேர்ந்த மணிராஜ் (36), புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கவுதம் (36) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை ஆந்திரா வழியாக வேதராண்யம் கொண்டு சென்று படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெட்சிணாமூர்த்தி உள்பட 4 பேரையும் கைது செய்து 200 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேதாரண்யம் கோடியக்காடு பகுதியை சேர்ந்த அறிவழகன் (60) என்பவருக்கு கஞ்சா கடத்தில் வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அறிவழகன் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர். அதில் அறிவழகன் கஞ்சா, தங்கம் உள்ளிட்ட கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    • படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
    • வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் மீன்பிடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த நாகை பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆறுக்காட்டுத்துறை மீனவர்களின் வலையின் மீது விசை படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறை மீனவ்ாகளின் வலையை விசைப்படகு மூலம் சேதப்படுத்திய நாகை மீனவர்களை கண்டித்தும், இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, நேற்று முதல் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் ரூ.5 லட்சம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆறுக்காட்டுதுறை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் செருதூர் பாலத்தடி அருகில் இறால் பண்ணை வைத்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் இறால் பண்ணையை வந்து பார்த்துள்ளார். அப்போது பண்ணையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பாாத்துள்ளார். அப்போது பண்ணையில் இருந்த ஏரேட்டர் மோட்டார், ஜெனரேட்டர் பேட்டரி, ஏரேட்டர் கேபிள், போக்கஸ் லைட் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    உடனடியாக இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கீழையூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து இறால் பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்:-

    இந்த பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளில் தொடர் திருட்டு நடைபெறுவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    மேலும், இப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 50). மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவரும், அதே ஊரை சேர்ந்த லெட்சுமணன் (30), ராஜதுரை (28), ராமநாதன் (38), புகழ்ராஜ் (28), ராம பெருமாள் (26), ராமன் (26) மற்றும் பன்னாள் சக்கரம் பேட்டையை சேர்ந்த பாக்கிய ராஜ் (26) ஆகிய 8 மீனவர்களும், ராமானுஜத்திற்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அப்போது அனைவரும் சிறுதலைக்காட்டு கிராமத்திற்கு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று அவர்களது வலையில் சிக்கியது. அதனை கண்ட அவர்கள் உடனடியாக தங்களது படகில் கட்டி இழுத்து நள்ளிரவு கரைக்கு வந்தனர்.

    பின்னர், இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படகை கைப்பற்றி அதில் சோதனை செய்தனர். அப்போது படகில் TRB-A-1260 JFN என்றும், இரு பக்கத்திலும் Y.S.S merini என்றும் எழுதப் பட்டுள்ளது. இந்த படகு நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் இந்த படகில் என்ஜின் மற்றும் வலைகள் ஏதும் இல்லை.

    படகில் எழுதப்பட்ட படகின் எண் மற்றும் அதன் தோற்றத்தை வைத்து, அது இலங்கை நாட்டை சேர்ந்த படகு என்றும், இது கரை ஒரத்தில் மீன் பிடிக்கும் படகு என்றும் தெரிய வந்துள்ளது. இந்த படகு கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தியதா? வேறு யாரும் இலங்கையில் இருந்து வந்தார்களா? அல்லது யாழ்ப்பாணம் பகுதியில் கரையில் இருந்த படகு காற்றின் வேகத்தால் இங்கு வந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    • ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    நாகை:

    நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    முன்னதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை நேற்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகரநீர்முளை பகுதியில் உள்ள டீக்கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராஜாங்கம் (வயது 55) என்பவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். கடையின் அருகில் கோவிந்தராஜ் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். இருவரும் விவசாயிகள்.

    அதேவேளையில், கேரளாவில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கார் அகரநீர்முளை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டீ கடையின் அருகில் இருந்த ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உடனடியாக இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பாசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைஞாயிறு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.

    அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.

    • படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.
    • 2 மீனவர்களையும் மீட்டு கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஆறுகாட்டுத்துறை மீனவகிராமத்துக்கு கிழக்கே வங்ககடலில் சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு பைபர் படகு நிற்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இலங்கைக்கு சொந்தமான பைபர் படகில் 2 மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து 2 மீனவர்களையும் மீட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் , மைக்கேல் பெர்னாண்டோ என்பதும் கடலில் மீன் பிடித்த போது திடீரென படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார்கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கடத்தி செல்ல இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் வழங்கப்படும் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க துறைசார்ந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 9 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வேளாங்கண்ணி அருகே பறவை காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள், நாகை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் காரைக்காலுக்கு கடத்தி செல்ல இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதிகாரிகளை கண்டதும் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை அதிகாரி தேடிவருகின்றனர். 32 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 800 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை பனங்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    அப்போது பறக்கும்படை துணை வட்டாட்சியர் ரகு, வாணிப கழக தர ஆய்வாளர் பிரபாகரன் அலுவலக உதவிஆய்வாளர்கள் ராமன், பூவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.
    • பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கடலில் பலத்த காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.

    அதேபோல், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் குறைந்த தூரம் சென்று மீன்பிடிக்கும் பைபர் படகுகளும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.10 லட்சம் மீன் வர்த்தகம் தடைபட்டது. மேலும், பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை பகுதியில் நேற்று கடல் சீற்றம் தணிந்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து கரை திரும்பும் இந்த பைபர் படகு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கினாலும், மீன்பிடி தடைக்காலம் என்பதால் அந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றுள்ளனர்.

    • குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியை சேர்ந்தவர் ராமநாதன். வேதாரண்யம் மேற்கு பகுதி தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு அருந்ததி என்ற மகள் உள்ளார். பி.ஏ. பட்டதாரி.

    இவரும் தஞ்சாவூர் மாவட்டம், பரக்கலக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன்-பரமேஸ்வரி தம்பதியின் மகனான விஜய்யும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். விஜய் படிப்பை முடித்து விட்டு லண்டனில் பணியாற்றி வருகிறார்.

    நாளடைவில் இவர்கள் காதலித்து வருவது அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதற்கு குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, விஜய்-அருந்ததிக்கு கடந்த 3-ந்தேதி பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்ததும் நீண்ட விடுப்பு கிடைக்காத காரணத்தால் மணமகன் விஜய் லண்டன் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மணமக்கள் வீட்டார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் அருந்ததியோ தான் லண்டன் சென்று தனது காதலனை கரம் பிடிக்க போவதாக வீட்டில் கூறிவிட்டு, அதன்படி, கடந்த 8-ந்தேதி தனியாக சென்னையில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு அவரின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை லண்டனில் உள்ள முருகன் கோவிலில் மணமக்களுக்கு இந்து முறைப்படி சிவாச்சாரியார் தமிழில் மந்திரங்கள் கூறி திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழா நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த முருகன் கோவிலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் குறித்து அறிந்த அவர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

    • ஆடுகளில் ஒன்றை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பைக், லோடு வேன் மற்றும் சொகுசு கார்களில் வந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் தெற்கு பொய்கைநல்லூர் வீட்டில் ஆடுகள் மேய்சலுக்கு கொண்டு சென்று பின்னர் ஆடுகளின் உரிமையாளர் வீட்டில் ஆடுகளை எல்லாம் கட்டி கவைத்து விட்டு, பின்னர் அவர் தூங்க சென்றார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து முன்பக்க கதவை திறந்து ஒருவர் வேகமாக கீழே இறங்கினார். அங்கிருந்த ஆடுகளில் ஒன்றை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனை வைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை துரிதப்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×