என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
    X

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

    • மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
    • கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    சீர்காழி:

    தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×