search icon
என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
    • ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.

    அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.

    மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
    • பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியை நேரில் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டதுடன், சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு வருகை தருகிறார். அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    கோவையில் பிரதமரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திமு.க. தடை விதிக்க நினைத்தது. எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார்


    பி.எம்ஸ்ரீ., பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர்.

    ஆ. ராசா 2 ஜி வழக்கில் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம். தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. நாடு முழுவதும் ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    ரேசன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூர் வித்யாலயம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
    • மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாசிச பா.ஜனதா ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும். நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


    தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு. க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

    அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
    • திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் வகையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதை ஆதாரமாக கொண்டு முதலாம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 100 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2½ சுற்றுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அதே போன்று பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.

    அத்துடன் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணை மண் திட்டுக்களாகவும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியும் வருகிறது. ஆனாலும் காண்டூர் கால்வாயின் உதவியால் பாசனத்திற்கு தண்ணீரும், அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீரும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்து வருகிறது. தற்போது முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று தண்ணீர் நிறைவடைந்து 2-ம் சுற்றுக்காக தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 36.31 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

    புஷ்பலதா மற்றும் அவரது மருமகள் ஆகியோர் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தங்க சங்கிலி உட்பட 10 பவுன் நகைகளையும், 5000 ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தரச்சல் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் 10 பவுன் நகைகளை வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    • வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×