search icon
என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
    • மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார்.

    இதனால் வேனில் இருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பினர். நெஞ்சு வலியால் துடித்த போதும் தனது உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய சேமலையப்பனின் செயல் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்று காலை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், காங்கயம் சத்யாநகரில் உள்ள சேமலையப்பன் வீட்டிற்கு சென்றார்.அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ. 5 லட்சம் நிதிக்கான காசோலையை சேமலையப்பன் பெற்றோரிடம் வழங்கினார் .

    அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும் உயிரிழந்த சேமலையப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடை பெற்றது. இதில் ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    சேமலையப்பன் குடும்ப த்தினர் கூறுகையில், 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி எங்களது குடும்பத்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளார் என்றனர்.

    இறந்துபோன சேமலையப்பனுக்கு லலிதா என்ற மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். லலிதா சேமலையப்பன் வேலை பார்த்த தனியார் பள்ளியிலேயே வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார். இதனால் வேனில் இருந்த குழந்தைகள் பத்திரமாக இருந்தனர்.

    இறந்து போன மலையப்பனுக்கு மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இச்சம்பவம் பற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இறக்கும் தருவாயிலும், இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
    • காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில் ஆவின் பால் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் பேபி (வயது 45). இவரது மகள் ரஞ்சனி பிரியா (25). கல்லூரி படிப்பு முடித்து விட்டு அரசு வேலை தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் பேபி , மகள் ரஞ்சனி பிரியா மற்றும் உறவினர் சிவக்குமார், பால்பண்ணையில் டிரைவராக பணிபுரியும் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்றிரவு திருச்செந்தூரில் இருந்து காங்கயத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பெரியசாமி ஓட்டினார்.

    இன்று காலை காங்கயம் கருக்கம்பாளையம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.

    காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ரஞ்சனி பிரியா மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பேபி, சிவக்குமார் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர்.
    • அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே காந்திநகரில் உள்ள ஒரு ஏ. டி.எம். மையத்தில் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 28) என்பவர் பணம் எடுக்க சென்றிருந்தார். எதிர்பாராதமாக பணம் வராததால் ஏ.டி.எம். கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு பணத்தை எடுக்காமல் சென்று விட்டார். அதன் பின்னர் அங்கு பணம் எடுக்கச் சென்ற 12-ம் வகுப்பு மாணவர்களான முகிலன், கவுஷிக் இருவரும் பணம் எடுத்த போது கூடுதலாக ரூ.10 ஆயிரம் வந்திருந்தது. இதனால் அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை அலங்கியம் போலீஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து ஹரிபிரசாரத்தை வரவழைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர். மேலும் கூடுதல் பணத்தை ஒப்படைத்த அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என 2 முறை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.


    இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஒரு சில கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் தி.மு.க., அரசு 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவசாமி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, என்.எஸ்.என்.நடராஜன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், துணைச்செயலாளர் புதுப்பட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோக நாதன், வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிசாமி,எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாணவரணி செயலாளர் சதீஷ், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், முன்னாள் கவுன்சிலர் ஆண்டிபாளையம் ஆனந்த், பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், குமார், கண்ணன், கருணாகரன், ஹரிஹரசுதன், பி.கே.முத்து, நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் தனபால், ஆண்டவர் பழனிச்சாமி, கவுன்சிலர் தங்கராஜ், மற்றும் சூர்யா செந்தில், நல்லூர் சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை.
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2¾ கோடி நிதி உள்ளது. அந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டுகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நிர்வாக அனுமதிக்காக நிதியை விடுவிக்க கோரி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு (கிராம ஊராட்சி) பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு உரிய அனுமதியளிக்கப்படவில்லை.

    இதையடுத்து கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் நேற்று மதியம் முதல் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2.75 கோடி வளர்ச்சி நிதிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை. எனவே அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றிய அலுவலக மேலாளர், கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என தெரிவித்தார். இதை பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் ஏற்கவில்லை.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நேற்றிரவும் அவர் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கும் வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்வி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது.

    இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.

    மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை நகரான திருப்பூரில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் , உலக கால்பந்து போட்டி உள்பட சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அப்போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்கள் அணிவதற்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்தியா நிறுவனம் 10 லட்சம் டீ-சர்ட் பனியன்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கூறியதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக எங்களது நிறுவனம் மூலம் பெற்ற ஆர்டர்களில் இதுவரை 70 சதவீத ஆர்டர்களை முடித்து அனுப்பி வைத்துவிட்டோம். மீதமுள்ள 30 சதவீத ஆர்டர்களை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலக கோப்பைக்கான போட்டிக்கும் பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தோம். ஐ.ஓ.சி.யின் அதிகாரபூர்வ உரிம திட்டத்தின் மூலம் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு தயாரித்து அனுப்புகிறோம். ஜவுளி உற்பத்தியில் பல நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நம்பகத்தன்மையின் மூலம் நாங்கள் சுமூகமாக இயங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கபாளையம் பிரிவில் ஜி.என். கார்டன் பகுதி உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தெருவிளக்கு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நிறைவேற்றி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென ஒன்று திரண்டு நாச்சிப்பாளையம் திருப்பூர்- காங்கயம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி பாளையம் போலீசார் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி நிர்வாகத்துடன் பேசி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது.
    • கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை.

    திருப்பூா்:

    கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தடையை மீறி நடத்தியதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது சிறுவர்கள் பலர் சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில்களின் வருமானம், கோவில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.

    இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது. கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. எனவே, கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.

    ×