என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!
    X

    உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

    கற்திட்டை அமைந்திருக்கும் இடத்தை பாண்டியன் திட்டு என்றழைக்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கல்லாபுரம் உத்தில் வாய்க்கால் பரமானந்தம் வயலுக்கு அருகில் அமராவதி ஆற்றின் கரையின் தெற்குப்பகுதியில் வயல் வெளிகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான கற்திட்டை ஒன்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தினர்.

    இது குறித்து தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது :

    கரைவளி நாடான கல்லாபுரத்தில் பெரிய அளவிலான கற்திட்டை சிதில மடைந்திருந்தது. இதற்கு முன்பாக இந்தக்கரைவளியில் வேறெங்கிலும் இது போன்ற கற்திட்டை கிடைக்கப்பெறவில்லை.

    இது ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக பெருங்கற்காலத் திட்டை அமைப்பாக இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்றாக பாறைகள் சிதிலமடைந்துள்ளது. இந்தக் கற்திட்டை அமைந்திருக்கும் இடத்தை பாண்டியன் திட்டு என்றழைக்கின்றனர்.

    கரைவளியில் ஆங்காங்கெ பாண்டியன் பெயரில் கரடு இருப்பதும், மலைப்பகுதியில் மடம் என்ற பெயரில் இருப்பதும் களத்தரவுகளில் தெரிய வருகிறது. அமராவதி மலைப்பகுதியில் பாண்டியராஜா மடம், கொற்றவன் கரடு, பாண்டியன் திட்டு என்ற பெயர்களும் உள்ளது.

    இந்தக் கற்திட்டைகள் மூன்று கல் குத்துக்கற்கள், மூடுகல் 12×8 ஒரே பாறைக்கல் உயரம் 4 அடி 10×4, மற்றும் 6×3, 6×4 வகையில் பாறைக்கற்கள் என ஒன்றின் மேல் ஒன்றாக மொத்த 8 பாறைக்கற்கள் விழுந்துகிடக்கிறது.

    இது குறித்த அந்தப்பகுதியில் மக்களிடம் கேட்டபோது இது வரலாற்றுச்சின்னம் என்பது தெரியாமல் ஜே.சி.பி இயந்திரத்தால் இதனை சிதிலமடையச் செய்தது கள ஆய்வில் தெரியவந்தது.

    அமராவதி கரைவளியில் கல்லாபுரம் சிற்றூரான ஆயிரம் காலத்திற்கும் முற்பட்டதென கல்வெட்டுகள் வழி உறுதி செய்திருந்தாலும், அதற்கு முன்பாக அமராவதி நதிக்கரையில் மக்கள் வசித்தமைக்காக நாகரிகங்கள் இருந்துள்ளதை ஏற்கனவே உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொல்லியல் சின்னங்கள் வழி ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

    பெருங்கற்காலக் கற்திட்டை கிடைத்திருப்பதன் மூலம் அமராவதி கரை வளிப்பகுதி மூவாயிரம் காலத்திற்கும் முற்பட்டவை எனவும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட ஆன்பொருநை குறித்தான பாடல்களும் நமக்கு சான்றாகத் திகழ்கிறது.

    இந்தக் கள ஆய்வில் பேராசிரியர் முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெய்சிங்,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வி.கே. சிவகுமார், அருள்செல்வன், மற்றும் வீரய்யன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    Next Story
    ×