என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்

    கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    திருப்பூரில் 'பவர்டேபிள்' என்று அழைக்கப்படும் 'பனியன் தையல் உரிமையாளர்கள்' சங்கத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கட்டிங் செய்த ஆடைகளை தைத்து, செக்கிங் செய்து பேக்கிங் செய்யும் பணிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

    பனியன் தயாரிப்பாளர்களிடம் இந்த பவர்டேபிள் சங்கம் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைத்தது. அதன்படி முதல் ஆண்டு 17 சதவீதம், அதைத்தொடர்ந்து மீதம் உள்ள 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என கூலி உயர்வு பெறுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்படி தற்போது 2025ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதியில் இருந்து 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக 'பவர்டேபிள்' உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    இதனால் 7ம் தேதி முதல் கூலி உயர்வு பிரச்சினை தீரும்வரை டெலிவரி எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனர். எங்களது பாதிப்புகளை உணர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை தடையின்றி வழங்க முன்வர வேண்டும் என திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூர், ஈரோடு, சேலம், செங்கப்பள்ளி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான 'சைமா' மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டிற்கான புதிய கூலி உயர்வை சில நிறுவனங்கள் தராமல் காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். பலமுறை நேரில் சென்றும், கடிதங்கள் அனுப்பியும் எங்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் 'சைமா' சங்கத்தை அணுகியுள்ளோம்.

    புதிய கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களை அழைத்து பேசி இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு ஏற்படுத்த 'சைமா' நிர்வாகிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதனால் பல்வேறு இடங்களில் பனியன் உற்பத்தி பணிகள் முடங்கி வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

    • போலீசார் நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர்.
    • அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது

    அவினாசி:

    திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பின்னலாடை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கில் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அவ்வப்போது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதும் நடந்து வருகிறது.

    அந்த வகையில், அவினாசியை அடுத்த கணேசபுரம் வைஷ்ணவி கார்டன் பகுதியில் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையொட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு தங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது தெரியவந்தது. ஆனாலும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனர்.

    இதையடுத்து நைஜீரிய நாட்டை சேர்ந்த ஐகென்னா மேக்னஸ் (வயது 50), அவரது மனைவி ரீட்டா அவியான்போ (43), பிடிலிஸ் ஓனெரெக்லோ (46), இசுசுக்குவு ஜான் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 4 பேரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது.
    • உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம் கடந்த 2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.

    முன்னணி பிராண்டடு நிறுவனங்கள், வங்க தேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது. இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.முன்னணி பிராண்டடு நிறுவனங்களும், வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என உணர்ந்து உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ், ஜோடியாக், வி.மார்ட் உள்ளிட்ட பிராண்டடு நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன.

    இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், "உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த 4 மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி பிராண்டடு நிறுவனங்கள் நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன என்றார்.

    • விஜய் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
    • நடிகர் விஜய் மதியம் 12 மணிக்கே வருவதாக இருந்ததால் காலையிலேயே புறப்பட்டு சென்றுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 33). இவரது மனைவி நிவேதிதா. இவர்களுக்கு சஷ்டிகா(6), துகிலன்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக உள்ளார். கட்சி ஆரம்பித்தது முதல் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

    இந்தநிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவியிடம் வருங்கால முதல்வர் வருகிறார். அவரை பார்த்து விட்டு வருகிறேன் என தெரிவித்து விட்டு கரூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    நடிகர் விஜய் மதியம் 12 மணிக்கே வருவதாக இருந்ததால் காலையிலேயே புறப்பட்டு சென்றுள்ளார். விஜய் பிரசாரத்தில் பங்கேற்ற மணிகண்டன் கூட்டநெரிசலில் சிக்கியதால் அவருக்கு மூச்சு த்திணறல் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.இவரது மனைவி கோகுல பிரியா (29). இவர்களுக்கு திருமணமாகி கவுசவி என்ற குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் விசைத்தறி நடத்தி வந்தனர்.

    கோகுலபிரியா சிறுவயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகர். இதனால் நேற்று கரூருக்கு பிரச்சாரம் செய்ய வந்த விஜயை பார்ப்பதற்காக கோகுலபிரியா அவரது கணவர் ஜெயபிரகாஷ், குழந்தையுடன் கரூருக்கு சென்றுள்ளார். பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் அதிகரிக்கவே, குழந்தையுடன் அவர்களால் நிற்க முடியவில்லை. இதையடுத்து ஜெயபிரகாஷ் குழந்தையுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    கோகுல பிரியாவும் கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் முடிய வில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே மனைவி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ் , கோகுலபிரியாவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போனை எடுக்க வில்லை. இந்தநிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஜெயபிரகாஷ் அங்கு குழந்தையுடன் சென்றார். அப்போது கோகுலபிரியா உயிரிழந்ததை பார்த்து கதறி துடித்தார். இந்த சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

    கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளகோவிலை சேர்ந்த 2பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மணிகண்டன், கோகுலபிரியா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடல்கள் வெள்ள கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 2பேரின் உடல்களுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    • ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.
    • திருப்பூரில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில் திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என டெல்லி வரையில் இயங்கும் முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன. ஆண்டு முழுவதும் வெளிமாநில வர்த்தகர்கள் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.

    பின்னல் துணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இருப்பினும் திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.

    வருகிற 20-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று நவராத்திரி விழாவும் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. இதற்காக ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்தே மொத்தமாக நடக்கிறது.

    திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம். அதேபோல், குளிர்காலங்களில் பயன்படுத்த செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. குறைந்த ஆர்டராக இருந்தாலும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம். பின்னலாடை தயாரானதும் அவற்றுடன் சேர்த்து கன்டெய்னர் லாரி மற்றும் ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

    பெரியவர்களுக்கு டி-சர்ட், டிரக் பேன்ட்' பெண்களுக்கான இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான அனைத்து வகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். டி-சர்ட் ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது. செயற்கை நூலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு டி-சர்ட் மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் - ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதன் மூலம் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழல் உள்ளது. 50 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில், அமெரிக்க இறக்குமதியாளர்கள் இப்போதைக்கு ஆடைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறியதால் தற்போது திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. நிலைமை சரியானதும் அனுப்புமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூறியுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில பனியன் நிறுவனங்களில் ஆடைகள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த பிரதான் குமார் கூறியதாவது:- அமெரிக்க வரி தாக்கத்தால் ஏற்படும் நிதி மந்தநிலையால் அச்சத்தில் உள்ளோம்.30 ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த எனது நிறுவனம் இப்போது அமைதியாகி விட்டது.

    கடந்த 3 வாரங்களாக வேலை ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்ததால்,தொழிலாளர்கள் சிலரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளேன். மற்றவர்களை பணிநீக்கம் செய்துள்ளேன். வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மதியம் வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.இதனை நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பேரழிவு.

    நான் 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தேன். பனியன் நிறுவனங்களில் சிறிய வேலைகளை செய்தேன். ஆடை உற்பத்தியில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் பெரிய நிறுவனங்களில் துணி வாங்குதல், வெட்டுதல் மற்றும் பின்னல் போன்ற முழு அளவிலான வேலைகளையும் அவுட்சோர்ஸ் செய்து , பின்னர் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டேன்.

    முன்னேற்ற நிலையில் இருந்த திருப்பூர் இப்போது அமெரிக்க வரி விதிப்பால் ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளதை பார்க்கிறேன்.பள்ளியில் படிக்கும் எனது 3 குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இ.எம்.ஐ. செலுத்த முடியாமல் தவிக்கிறேன் என்றார்.

    இவரைப்போலவே, வட இந்திய மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து தொழில் செய்யும் பலர் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து திருப்பூர் வந்த சனோஜ் குமார் கூறுகையில், நான் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பு காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது தங்கியிருப்பவர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கொரோனாவின் போது இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. வேலை இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பூரை விட்டு வெளியேறினர். அமெரிக்க வரி விதிப்பால் தற்போது, நாங்கள் 40 சதவீத வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு கூட வேலை இல்லாததால், எனது சொந்த ஊரில் உள்ளவர்கள் திருப்பூருக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளேன். எனது நிறுவனத்தில் பணியாற்றிய சிலர் கட்டுமானப் பணிகளுக்கு மாறியுள்ளனர் என்றார்.

    அமெரிக்க வரி பாதிப்பு திருப்பூர் பனியன் தொழிலை மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இது குறித்து செல்போன் கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் திருப்பூர் வந்த போது வெறுங்கையுடன் வந்தேன். அணிந்திருந்த ஆடைகள் மட்டுமே இருந்தன. நான் முதலில் ஒரு உதவியாளராக பணியை தொடங்கினேன், தேநீர் வாங்குவது, கார்களை சுத்தம் செய்வது மற்றும் நிறுவனங்களில் பிற வேலைகளை செய்தேன். பல ஆண்டுகளாக வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இப்போது திருப்பூரில் 3 செல்போன் உதிரிபாகங்கள் கடைகளை நடத்தி வருகிறேன்.அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.இதனால் வர்த்தகமும் பாதிக்கும் நிலை உள்ளது என்றார்.

    திருப்பூரில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு வாரத்திற்கு பணம் அனுப்புவார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
    • அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இன்று திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பூர் மண்ணிலே பிறந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நாட்டின் உயரிய பதவி கிடைத்திருப்பது தமிழக மக்களுக்கு பெருமை.

    திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதத்தில் ஒரு புதிய திட்டம் கூட திருப்பூருக்கு கொண்டுவரப்படவில்லை.

    தொழிலாளர்கள், ஏழைகள் நிறைந்த பகுதியான திருப்பூரில் அரசு மருத்துவமனையை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது.

    திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    கஞ்சா விற்பனைக்கு திமுக ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது.

    தமிழ்நாட்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ஓ போட்டவர் முன்னாள் டிஜிபி.

    கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதிகளை குறிவைத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை 3ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன்,

    ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர்காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2-வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமிகவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லைநகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம்,

    ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், ஆர்.என்., புரம் ஒரு பகுதி, கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.
    • தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தபால் துறை சார்பில், தமிழக அஞ்சல் வட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள், உபகோட்டங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னையில் கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற்றது.

    இதில் திருப்பூர் அஞ்சல் கோட்டம் கடந்த நிதியாண்டில் இந்திய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூ.3 கோடியோ 9 லட்சம் பிரீமியம் ஈட்டி 2-ம் இடமும், கிராமிய அஞ்சல் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 கோடியோ 81 லட்சம் பிரீமியம் ஈட்டி 3-ம் இடமும், பார்சல் பதிவு வருவாய் வளர்ச்சி வீதத்தில் அதிக வளர்ச்சி பெற்ற பிரிவில் ரூ.54 லட்சம் வருவாய் ஈட்டி தமிழக அளவில் 2-ம் இடமும் என 3 முக்கிய பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.

    பார்சல் பிரிவில் பதிவு செய்த வருவாய் வளர்ச்சி கடந்த 2023-24 நிதியாண்டை காட்டிலும் 96 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஐ.பி.பி.பி. பிரீமியம் கணக்கு சேர்க்கை மற்றும் ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.

    தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிதியாண்டில் கோட்ட வாரியாகவும், உட்கோட்ட வாரியாகவும், தனிப்பட்ட சிறப்பு செயல்பாடு உள்பட மொத்தம் 9 விருதுகளை திருப்பூர் அஞ்சல் கோட்டம் பெற்றுள்ளது.

    • அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
    • திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ச்சுன்ராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், பாதிப்புகளை சரிகட்ட மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மோடி பாதி ட்ரம்ப் பாதி இருக்கும் முகமூடி அணிந்து கட்சியினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ×