search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • நோன்பு பாவங்களில் இருந்து காக்கும் ஒரு கேடயம் ஆகும்.
    • நோன்பு மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம்.

    நோன்பு ஒரு கேடயம்

    நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம், முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது கோபமாக பேசினால், 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி)

    நோன்பு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. அது மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம். நோன்பு கெட்ட வார்த்தைகளை பேசுவதை, பொய்யான பேச்சுக்களை பேசுவதை, பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் கேடயம்.

    முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும், சண்டை சச்சரவுகளில் இருந்து பாது காப்பு அளிக்கும், தகாத பார்வைகளை தடுக்கும்,பேராசைகளை அழிக்கும் கேடயம் நோன்பாகும். விபச்சாரத்தில் இருந்து தடுத்து, கற்பைக் காக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் கேடயம் நோன்பு.

    அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறுவது: "நோன்பு ஒரு கேடயம் ஆகும். அதனை உடைக்காமல் இருக்கும் வரை ... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்" (நூல்: நஸயீ, இப்னு மாஜா)

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையா, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "ரமலானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!' என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவரை அடித்தார்கள்". (நூல்: புகாரி)

    நோன்பு என்பது ஒரு கேடயம். கேடயம் போர் வீரர்களையும், அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் நன்றாக பாதுகாப்பது போன்று, நோன்பும் நோன்பாளிகளை பாவமான காரியங்களில் இருந்தும் பாதுகாக்கிறது. நோன்பாளிகளும் அந்த கேடயத்தை அணிந்து, பாவமான காரியங்களில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கிறார்கள்.

    நோன்பு எனும் கேடயத்தை உடைக்காமல் இருக்கும் வரைக்கும் நோன்பாளிகள் முழுமையான நோன்பாளிகளாகவே இருக்கிறார்கள். ஏதேனும் பாவச்செயல்களில் ஈடுபடும் போது, அந்த கவசத்தை உடைத்து, நோன்பையும் முறித்து விடுகிறார்கள். அதன் நன்மைகளையும் இழந்து விடுகிறார்கள்.

    "ஒரு மனிதர்நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது' என்று கேட்டார்?. 'பொய், புறம் பேசுவதினால்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்". "யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித் திருப்பது மட்டுமல்ல! தகாத காரியங்களில் இருந்து விலகி இருப்பதும் ஆகும். இத்தகைய நோன்பே கேடயமாக இருந்து நோன்பாளிகளை பாதுகாக்கிறது. நாமும் நமது நோன்பை சிறந்ததாக அமைத்துக்கொள்வோம்.

    • இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பு.
    • சீதையுடன் கை கோத்த நிலையில் காட்சி தருகிறார் மூலவர் ராமர்.

    பெருமாளுக்கும், நீர் நிலைகளுக்கும் ஆதிகாலம் தொட்டே தொடர்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டவன் அந்த ஆதிபிரான். இவனே லட்சுமணனுடன் இணைந்து மதுராந்தகம் ஏரி உடையாமல் இரவெல்லாம் காத்து நின்றான் என்கிறது தல புராணம். இறைவன் தன் சக்தியால் ஒரு கண நேரத்தில் ஏரி உடையாமல் காத்துவிட முடியும். ஆனால் ராமர் மனித உரு கொண்டு பிறந்ததால் வில்லேந்தியே மதுராந்தகம் ஏரியைக் காத்ததாகக் கூறப்படுகிறது.

    மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரை தேக்கிவைக்கும் இந்த ஏரியில், அதிகப்படியான நீரின் காரணமாக உடைப்பு ஏற்படுவது வழக்கம்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த லயோனல் பிளேஸ், ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இங்குள்ள இந்த ராமர் கோயிலுக்கு வந்த அவரிடம், அப்போது இருந்த அர்ச்சகர் கோவிலை செப்பனிட்டு, தாயாருக்கு தனி சன்னிதி அமைத்து திருப்பணி செய்துதர கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு மாவட்ட ஆட்சியரும் பெருமாளிடம் ஓர் கோரிக்கை வைத்தார். தெய்வ பலத்தால் வரும் ஆண்டு ஏரி உடைப்பெடுக்காமல் இருந்தால், திருப்பணியை ஏற்று நடத்துவதாக ராமருக்கு கோரிக்கை வைத்தாராம் மாவட்ட ஆட்சியர்.

    பருவ மழை வந்தது. வழக்கம்போல் ஏரி நிரம்பித் தளும்பியது. கவலையுடன் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரின் கண்களுக்கு இரு இளைஞர்கள் தென்பட்டனர். அவர்கள் கைகளில் நாண் பூட்டிய வில்லில் அம்பு பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாம். மின்னல் ஒளியில் இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர், அம்பில் இருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டாராம். அதற்குப் பின்னர் ஏரிக்கரை உடையவில்லை என்பது வரலாறு.

    தான் கூறியபடியே தாயாருக்குத் தனி சன்னிதி கட்டிக்கொடுத்தாராம் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னிதியில் உள்ளது. இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏரி காத்த ராமர் என புகழப்பட்டார் மூலவர் ராமர்.

    இரண்டு தேர் ஒரே பிரம்மோற்சவத்தில் இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது இத்தலத்தின் சிறப்புப் பெருமை. ஆனி பிரம்மோற்சவத்தில், ராமர், புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப் பெருமாள் மற்றோரு தேரிலும் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.

    தரிசனம் தரும் பலன் தம்பதியர் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவது போல ராமரும் சீதையும் கை கோத்து நின்று நற்பலன்களைத் தருவதாக ஐதீகம். கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் வகையில் ராமானுஜர் திருவுருவக் காட்சி. இங்குள்ள கண்ணன் பிள்ளைப் பேறு வழங்கும் வள்ளல் என்பது ஐதீகம்.

    சீதையுடன் கை கோத்த நிலையில் காட்சி தருகிறார் மூலவர் ராமர். விபண்டக மகரிஷிக்குக் காட்சி தரும்போது இந்த அன்புக் கோலத்தைக் காட்டி அருளினாராம் ராமர். இதனையொட்டி விபண்டக மகரிஷி கை கூப்பிய நிலையில் இங்கு காட்சி அளிக்கிறார்.

    தனி சன்னிதியில் ஜனகரின் மகள் ஜனகவல்லித் தாயார் திருக்கோலம் கொண்டுள்ளார். வெண்ணிற உடையில் உடையவர் ராமானுஜருக்குப் பெரும்பாலும் திருத்தலங்களில் காவி உடை அணிவிக்கப் பட்டிருக்கும். ஆனால் அதிசயமாக இத்தலத்தில் வெண்ணிற உடையில் காட்சியளிக்கிறார் உடையவர். குடும்ப வாழ்கையில் இருக்கும்பொழுதுதான் இத்திருத்தலத்தில் தீட்சை பெற்றார் என்பதால் இத்திருக்கோலம்.

    • முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்னவாகனத்தில் திருவீதிஉலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி விடியற்காலை 4.02 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 11.55 மணிவரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணிமுதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் விழா தொடக்கம். ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்னவாகனத்தில் திருவீதிஉலா. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-ஆக்கம்

    மிதுனம்-வரவு

    கடகம்-அமைதி

    சிம்மம்-உதவி

    கன்னி-நன்மை

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- விருத்தி

    மகரம்-சுகம்

    கும்பம்-உதவி

    மீனம்-நன்மை

    • முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர்.
    • எங்கும், எதிலும் இறைவன் அரசாட்சி செய்வதை புரிந்துகொண்டான்.

    முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான போதனைகளையும் வழங்கிய அந்த குருகுலத்தின் குரு, தன்னுடைய சீடர்களிலேயே மிகவும் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா என்பவன் மீது கூடுதல் பாசம் காட்டினார். சைதன்யாவுக்கு 16 வயது நிரம்பி விட்டது. அவன் தன் குருவிடம் அனைத்து கலைகளையும், ஞான போதனைகளையும் கற்றுவிட்டான்.

    அவன் தன் வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த குரு, சைதன்யாவை அழைத்து, "நீ இனி இல்லம் செல்லலாம். உன்னோடு இறைவன் துணை இருப்பார்" என்று ஆசி வழங்கினார்.

    அதைக்கேட்ட சைதன்யா, "குருவே.. எனக்கு எல்லாம் போதித்தீர்கள். ஆனால் நான் கடவுளை காணவில்லையே. கண்ணில் தெரியாத ஒருவர் எனக்கு எப்படி துணையிருப்பார்" என்று வினவினான்.

    உடனே குரு, "சைதன்யா.. உன் கேள்விக்கு பதிலளிக்கிறேன். அதற்கு முன்பாக நீ ஒரு வேலை செய்ய வேண்டும். இந்த வழியாக காட்டிற்குள் புகுந்து சென்றால் அந்த பக்கம் சுனந்தநகர் என்ற ஊர் இருக்கும். அங்கே என்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரை சந்தித்து நலம் விசாரித்து வா" என்று அனுப்பினார். வழியில் உணவுக்காக தன் மனைவியிடம் சொல்லி சில பதார்த்தங்களையும் செய்து கொடுத்து அனுப்பினார்.

    காட்டின் வழியாக சைதன்யா சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் சில செடிகளை தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் அதை முகர்ந்து பார்த்து பறித்து, தான் வைத்திருந்த பையில் சேகரித்தார். அவர் கண் தெரியாதவர் என்பதை உணர்ந்து கொண்ட சைதன்யா, அந்த நபரிடம் சென்று "ஐயா.. இங்கே என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான்.

    அதற்கு அவர், "நான் ஒரு வைத்தியன். பாம்புக் கடிக்கான மூலிகையை தேடி வந்தேன். கண் பார்வை இல்லாததால், முகர்ந்து பார்த்து அதை சேகரிக்கிறேன். நீ காட்டிற்குள் வந்திருக்கிறாய்.. உனக்கு இந்த மூலிகை தேவைப்படலாம். வைத்துக் கொள்" என்று கூறி மூலிகையில் சிறிதளவைக் கொடுத்தார்.

    அதைப் பெற்றுக்கொண்ட சைதன்யா, "ஐயா.. இங்கே. தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்க, அருகில் ஒரு கிணறு இருப்பதாக அவர் சொன்னார். அங்கு சென்று நீர் அருந்தி விட்டு பயணத்தை தொடங்கிய சைதன்யா, ஓரிடத்தில் ஓய்வெடுத்தான்.

    சில பதார்த்தங்களை சாப்பிட்டு விட்டு, மரத்தடியில் தூங்கினான். அப்போது ஏதோ சத்தம் கேட்டு எழுந்தவன், அங்கே ஒரு முயல் வேகமாக ஓடுவதைப் பார்த்தான். அப்போது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழப்போவதையும் சைதன்யா பார்த்தான். உடனே அங்கிருந்து அகன்றான். அவன் தூங்கிய இடத்திலேயே அந்த பெரிய கிளை விழுந்தது.

    பின்னர் பயணத்தை தொடங்கியவன், இரவில் ஊரை அடைந்தான். இரவு என்பதால் ஒரு சத்திரத்தின் வாசலில் தங்கினான். அங்கே பசியோடு இருந்த ஒருவருக்கு தான் மீதம் வைத்திருந்த பதார்த்தங்களை வழங்கினான்.

    பின்னர் சிறிது கண்ணயர்ந்த சைதன்யாவுக்கு ஒரு சத்தம் கேட்டது. விழித்து பார்த்த போது, அருகில் ஒருவர் வாயில் நுரைதள்ள விழுந்து கிடந்தார். அவரை விஷப்பாம்பு தீண்டி இருந்தது. உடனே தன்னிடம் இருந்த மூலிகையை சாறு எடுத்து அந்த நபருக்கு கொடுக்க, சில நிமிடங்களில் அவர் இயல்புக்கு திரும்பினார்.

    அவரைக் காப்பாற்றிவிட்டு, குருவின் சகோதரர் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு, மீண்டும் குருகுலம் திரும்பினான். தான் இங்கிருந்து புறப்பட்டது முதல், வருவது வரை நடைபெற்ற அனைத்து விஷயங்களையும் தன் குருவிடம் சொன்னான். இப்போது குரு, "ஒரு வழியாக கடவுளை பார்த்துவிட்டாய் அல்லவா?" என்று கேட்டார். சைதன்யாவோ, "நான் எப்போது கடவுளைக் கண்டேன் குருவே.." என்றான்.

    "ஒருவரை பிழைக்க வைப்பாய் என்பதை அறியாமல், உனக்கு பாம்புக்கடிக்கான மூலிகைகளைத் தந்தாரே, அவர்தான் கடவுள். உன் தாகம் தீர்க்க, காடாக இருந்தாலும் அங்கே கிணறு வெட்டி வைத்திருந்த முகம் தெரியாதவரும் கடவுள்தான். உன்னைக் காப்பாற்ற சத்தம் எழுப்பிய முயலும் கடவுள்தான். பசியோடு இருந்தவருக்கு உணவளித்தாயே அப்போது நீ அவருக்கு கடவுள். பாம்பு தீண்டி இறக்க இருந்தவரை, காப்பாற்றியபோது அவருக்கும் நீ கடவுள். இவ்வளவு உருவங்களின் இறைவனைப் பார்த்த பிறகுமா, 'கடவுளைக்காணவில்லை' என்கிறாய்" என்று கேட்டார், குரு. சைதன்யாவுக்கு எல்லாம் புரிந்தது. எங்கும், எதிலும் இறைவன் அரசாட்சி செய்வதை புரிந்துகொண்டான்.

    • கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் நமக்கு தெளிவாகின்றன.
    • பிறை நிலவுடன் கூடிய காளையின் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம்.

    'பொழியும் அடியார்கள் கோடிகுறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே' என்கிற அருணகிரிநாதரின் வரிகளை, தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் கூறி இன்புறுவார் கிருபானந்த வாரியார்.

    நாம் ஒருவரிடம் பணம் வேண்டியோ அல்லது பொருள் வேண்டியோ ஒரு முறை செல்லலாம். இரண்டு முறைசெல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைந்து விடுவார். இது இயற்கையான ஒன்று. ஆனால் நமது குறைகளை ஒருவரிடம் கோடி முறை சென்று சொன்னாலும் கோபப்படாமல் நமக்கு வேண்டியதைக் கொடுப்பவர்தான், இறைவன்' என்பது இதன் பொருள். அப்படி ஒரு கோவில் அமைந்த இடம்தான், சோமநாதன் மடம். இன்று இவ்வூர் 12 புத்தூர்' என்று வழங்கப்படுகிறது.

    வடமொழி வல்லுனர்களான திண்டிமக்கவிகள் பலர் வாழ்ந்த முள்ளண்டிரம் என்ற ஊருக்கு அருகில் 12 புத்தூர் இருக்கிறது. இவ்வூரே அருணகிரி நாதரின் பிறப்புத் தலமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊரில் சோமநாத ஜீயர் என்கிற சிறந்த சிவனடியார், மடம் ஒன்றை அமைத்து, வாழ்ந்து வந்தார்.

    அருணாசலேஸ்வரரை தனது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு, நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அடியார்களுக்கு அருந்தொண்டாற்றி வந்த இவர், அரிய தவ ராஜனாக விளங்கினார். இவரது பெருமைகளை, தனது திருப்புகழிலே புகழ்ந்துள்ளார் அருணகிரி நாதர். சோமநாத ஜீயர், அருணகிரிநாதரின் சம காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது மடத்தில் முருகப்பெருமானை விசேஷமான முறையில் பூஜை புரிந்து வந்ததை, தனது திருப்புகழிலே பாடிப்பரவியுள்ளார் அருணகிரியார். இங்கே கிடைத்த கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் நமக்கு தெளிவாகின்றன. கி.பி. 1348-ம் ஆண்டு வீரபொக்கண்ண உடையார் மகன் கம்பண்ண உடையார் என்பவர், வித்யாபதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மடத்தின் பொறுப்பையும், காணி ஆட்சியையும், மனையையும் சோமநாத ஜீயருக்குக் கொடுத்து கவுரவித்துள்ளார்.

    கி.பி. 1355-ம் ஆண்டு ஹரிஹர உடையார் காலத்தில், வித்யாபதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள், நித்திய பூஜை, திருவிழாக்கள் போன்றவை நடத்திட முழு சுதந்திரமும், நிலங்களும், சோமநாத ஜீயருக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கையும், மகேசன் செல்வாக்கையும் ஒருங்கே பெற்ற இந்த சோமநாதஜீயர், இவ்வூர் மக்களால் 'ஐயன்' என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார். இதன் பொருட்டு, பின் னாளில் இவ்வூர் 'ஐயன்புத்தூர்' என்று வழங்கப்பட்டு, தற்போது 12 புத்தூர் என்றாகி இருக்கிறது.

    ஆலய அமைப்பு

    கிழக்குப் பார்த்த திருக்கோவில் இது. ஒரு காலத்தில் தென்முக ராஜகோபுரம் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். பின், சில படிகள் கொண்ட முக மண்டபம். இங்கே பிறை நிலவுடன் கூடிய காளையின் புடைப்பு சிற்பத்தைக் காணலாம். அதைக் கடந்தால் மகாமண்டபம். அதன் வலப்புறம் சோமநாத ஜீயர் மற்றும் அருண கிரிநாதருக்கு சிற்பங்கள் உள்ளன. மகா மண்டபத்தை அடுத்து, அந்தராளம் மற்றும் மூலஸ்தானம். கருவறைக்குள் வித்யாபதீஸ்வரர் அருளாட்சி செய்கிறார்.

    ஆலய பிரகாரத்தில் கணபதி, அடுத்ததாக வள்ளி -தெய்வானையுடன் முருகப்பெருமான் தனித்தனிச் சன்னிதியில் உள்ளனர். கோமுகம் அருகே சண்டி கேஸ்வரர் உள்ளார். தென்முகம் பார்த்த நிலையில் அட்சரவல்லி அம்மன் சன்னிதி உள்ளது. சிறிய வடிவில் நின்ற கோலத்தில் அன்னை அருள்கிறார்.

    இவ்வாலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. சகல கலைகளிலும் சிறப்புற்று விளங்க, இத்தல இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடலாம். எழுத்துத்துறையில் சிறந்து விளங்க, இத்தல அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யலாம். இத்தல முருகனுக்கு, தேனும், தினை மாவும் படைத்து வணங்கினால், சிக்கல்கள் விலகும். பகை மறையும்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் உள்ள தாமரைபாக்கத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 12 புத்தூர் திருத்தலம்.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
    • வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

    கோடை காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    முன்னதாக நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கொடியேற்றத்தைக் காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முதல் நாளான பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் 24-ந்தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றனர். விழாவின் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்ட குருக்கள்கள் செய்து வருகின்றனர்.

    • இஸ்லாமியர்கள் ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும்.
    • எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது.

    தொழுகைக்கான முதல் அழைப்பு

    இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் 'ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும். பருவ வயதை அடைந்ததில் இருந்து மரணமாகும் வரைக்கும் நீங்காத ஒரே கடமை தொழுகை தான். நின்று தொழ முடியாத பட்சத்தில் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாத பட்சத்தில் படுத்துக்கொண்டும் தொழ வேண்டும். இதுவும் முடியாதபட்சத்தில் தொழுகையின் முறைகளை சமிஞ்கை செய்து, எண்ணவடிவங்களை மனக் கண்முன்னே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது. 'உமக்கு மரணம் வரும் வரை உமது இறை வனை வணங்குவீராக!' (திருக்குர்ஆன் 15:99)

    ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால், அந்தந்தத் தொழுகையின் நேரம் வந்தவுடன் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்படும். இதற்கு பாங்கு என்று பார்ஸி மொழியில் சொல்லப்படும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு சில வார்த்தைகள் கூறி தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த சமயம் தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒருநாள் இதுபற்றி அனைவரும் கலந்தாலோசித்தனர். அப்போது உமர் (ரலி) 'தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏற்படுத்தக்கூடாதா?' என்றார்.

    உடனே பிலால் (ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    அப்துல்லாஹ் பின் ஜைத் பின் அப்துரப் (ரலி) கூறுவதாவது: 'நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். கையில் மணியை வைத்துள்ள ஒரு வானவர் என்னைக் கடந்து சென்றார். உடனே நான் அவரிடம் 'மணியை விற்கப் போகிறீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதை வைத்து நீர் என்ன செய்யப் போகிறீர்?' என்று கேட்டார். 'அதை வைத்து நான் மக்களுக்கு தொழுகை அழைப்பு விடுப்பேன்' என்றேன். அதற்கு வானவர், இதை விடச் சிறந்த ஒரு அழைப்பை நான் உமக்கு அறிவித்துத் தரட்டுமா?' எனக் கேட்டதும் நான் ஆம்,என்றேன்.

    'அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்,

    அல்லாஹூ அக்பர்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    ஹய்ய அலஸ்ஸலாத்,

    ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் பலாஹ்,

    ஹய்ய அலல் பலாஹ், அல்லாஹூ அக்பர்.

    அல்லாஹூ அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹ்.

    இவ்வாறு நீர் கூறவேண்டும் என்றார்.

    அதிகாலையில் நான் கண்ட கனவை நபி யிடம் கூறினேன். அதற்கு நபி (ஸல்) 'இது உண்மையான கனவு. நீர் எழுந்து பிலாலிடம் (ரலி) கூறும். அவர் பாங்கு சொல்லட்டும். ஏனெனில் உம்மை விட அவர் குரல் வளமிக்க வர்' என்றார்கள்.

    இதை கேள்விப்பட்டு நபியிடம் வந்த உமர் (ரலி) சத்தியத்தை கொண்டு தங்களை அனுப்பிய இறைவன் மேல் ஆணை! அவர் கண்ட கனவைப்போன்று நானும் கண்டேன்' என்றார். 'எல்லாப்புகழும் இறைவனுக்கே!' என நபி கூறினார்கள்'. (நூல்: அஹ்மது, இப்னுமாஜா, அபூதாவூத்)

    இன்று உலகளாவிய அளவில் இவ்வாறு சொல்லப்படும் பாங்கு முறை, ஹிஜ்ரி முதலா மாண்டு ரமலான் மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டதாகும். பாங்கோசை கேட்டதும் தொழு கைக்கு விரைவோம். நன்மைகள் பெறுவோம்.

    • ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம்:

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • வேதியர்களுக்கு தலைவராகவும், நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.
    • சிவகணங்களின் தலைமைப் பதவியை இறையருளால் கிடைக்கப் பெற்றவர்.

    கணநாத நாயனார் பழம்பெரும் புகழ் பெற்ற தலமான சீர்காழியில் பிறந்த வேதியர். அவர் சீர்காழியில் வாழ்ந்த வேதியர்களுக்குத் தலைவராகவும், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.

    அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கணநாதர். அவர் இறைவன் மற்றும் அடியவர்கள் பால் கொண்டிருந்த பேரன்பின் காரணமாக கையிலாயத்தில் சிவகணங்களின் தலைமைப் பதவியை இறையருளால் கிடைக்கப் பெற்றவர்.

    கணநாதர் தம்முடைய மரபுக்கு ஏற்ப ஒழுக்கத்தில் சிறந்து, சீர்காழியில் உள்ள தோணியப்பர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு பலவகையான தொண்டுகளைச் செய்து வந்தார்.

    திருக்கோவில், நந்தவனம் மற்றும் தெப்பம் முதலியவற்றை பாதுகாத்து அவ்வப்போது செப்பனிட்டு சிறப்பாக வைத்துக் கொள்வதை தம்முடைய வாழ்நாள் பணியாகக் கொண்டு அவற்றைத் திறம்படச்செய்து வந்தார்.

    மேலும் அவர் திருக்கோவிலுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களை, அவரவர்களுக்கு ஏற்றவாறு தொண்டு செய்யும் வழியில் பயிற்சிகள் தந்து, சிறப்பாக அத்தொண்டில் ஜொலிக்கச் செய்தார்.

    நந்தவனப்பணி செய்வர்களுக்கு எவ்வாறு செடி கொடிகளைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதைக் கற்றுத் தந்தார். பூக்களைப் பறிக்கும் முறையையும், அப்பூக்களை மாலையாகத் தொடுக்கும் பணியையும் சிலருக்குக் கற்றுக் கொடுத்தார்.

    திருமஞ்சனப் பணி செய்பவர், இரவும் பகலும் ஆலயத்தில் திருவலகிடுபவர், மெழுகுபவர், திருவிளக்கு எரிப்பவர், திருமுறைகளை எழுதுபவர் மற்றும் அத்திருமுறைகளை ஓதுபவர் ஆகிய பலவகைத் தொண்டர்களுக்கும் முறையான பயிற்சிகளை தந்ததோடு அவர்களை அச்செயலில் சிறந்து விளங்கும்படி ஊக்குவித்தார். இதனால் கணநாதரைச் சுற்றிலும் எப்போதும் தொண்டர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இல்லறத்தில் வழுவாது நின்று, சிவத்தொண்டில் ஆர்வம் கொண்டு, தொண்டு புரிபவர்களுக்கு ஆதரவும் ஆக்கமும் அளித்து, யாவரும் நன்கு மதிக்க வாழ்ந்தார் நாயனார்.

    அவருக்கு சீர்காழியில் தோன்றிய ஞானக் கொழுந்தான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் அளவற்ற பக்தி உண்டாயிற்று. அவர் ஞானசம்பந்தரின் திருவடிகளை போற்றி வணங்கி வந்தார்.

    தொண்டருக்குத் தொண்டராகவும் தொண்டர்களுக்கு நாதராகவும் ஞானசம்பந்தர் பக்தராகவும் வாழ்ந்த இப்பெருமான், சிவனாரின் திருவருளால் திருக்கையிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றுச் சிறப்படைந்தார்.

    முறையான சிவவழிபாடு மற்றும் சிவனடியாரான சம்பந்தரை போற்றி கையிலையில் சிவகணங்களுக்கான தலைமைப் பதவியைப் பெற்ற கணநாத நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் 'கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்' என்று புகழ்கிறார். சரியை மூலம் இறைவனிடம் சேர்ந்த நாயனார் இவர் ஆவார்.

    பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அதாவது இன்று கணநாத நாயனாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

    • சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
    • கணநாத நாயனார் குரு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 5 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி பின்னிரவு 8.33 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 10.38 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திர பிரபையிலும், சுவாமி ரங்க மன்னார் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் புஷ்பக விமானம் இரவு அன்னவாகனத்தில் புறப்பாடு. கணநாத நாயனார் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் ஸ்ரீ அம்பாளுக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்கார வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்-நன்மை

    சிம்மம்-பரிசு

    கன்னி-லாபம்

    துலாம்- செலவு

    விருச்சிகம்-வரவு

    தனுசு- புகழ்

    மகரம்-கலைப்பு

    கும்பம்-ஜெயம்

    மீனம்-அன்பு

    • மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார்.
    • பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

    நாகர்கோவில் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்பு சிலைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

    இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

    • ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
    • ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந் துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    பங்குனி உத்திர நாளன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்க மன்னார் சன்னதியில் வீற்றியிருந்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சனம் பட்டர் கொடியேற்றி கொடிமரத்திற்கு அபிஷேகம் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜைகளை நடத்தி வைத்தார்.

    தொடர்ந்து பூஜையை உடனிருந்து செய்த ரங்கராஜ் என்ற ரமேஷ் பட்டர், சுதர் சன பட்டர், ஐகிரி வாசன் பட்டர், கோபி பட்டர், முத்து பட்டர் சிறப்பாக பூஜைகள் செய்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறுகிறது .

    திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் காலை மற்றும் இரவு வேலைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ×