search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.
    • தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தாண்டு கோடைகால பருவமழை தற்போது வரை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தற்போது வரை 9.5 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

    இதுவரை 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு கோடை மழை கூட பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், சேலம் உள்பட சுமார் 12 மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டியது. கடந்த 22-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் இந்தியாவிலேயே 3-வது அதிக அளவில் வெயில் பதிவாகியுள்ளது. அன்று ஈரோட்டில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.

    நேற்று ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கரூர், திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், சேலத்தில் 106 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகி வருகிறது.

    சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடிவதில்லை. இரவிலும் காற்று இல்லாததால் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வெளியே வரும் காற்று அனலை கக்குவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாகும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 டிகிரி முதல் 102 டிகிரிவரை பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 முதல் 99 டிகிரியை ஒட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கடுமையான வெப்ப அலை வீசும். அன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அன்று நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
    • குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

     வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

     இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

    இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

    ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

    நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

     

    மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது.
    • 6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    சென்னை:

    அமிலம் கலந்து உணவுப் பொருட்கள் வினியோகம் என்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களை கவர ஐஸ்கிரீம், பிஸ்கெட் ஆகியவற்றின் மீது திரவ நைட்ரஜனை கலப்பது சாப்பிடும் போது புகையை வரவழைக்கும்.

    இதனால் ஆர்வமுடன் அதை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்மோக் பிஸ்கெட், ஸ்மோக் பீடா, ஸ்மோக் ஐஸ்கிரீம் விற்பனைக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உணவு உட்கொள்ளும் தருணத்தில் திரவ நைட்ரஜனை அதன் மீது கலந்தால் வாயில் இருந்து புகை அதிக அளவில் வரும். இதை சுவாசிப்பதால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    இதுதொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பால், தயிர், க்ரீம்கள், விப்பிங் க்ரீம்கள், கொழுப்பு குறைவான க்ரீம்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பழ ரசங்கள், காய்கறிச் சாறுகள், காபி, தேநீர், மூலிகை பானங்கள் உள்ளிட்டவற்றை நுரைக்கச் செய்வதற்கும், கெட்டுப்போகாமல் பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜனை பயன்படுத்தலாம்.

    அதே போல, திராட்சை ஒயினில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுவதற்கும் அதை பயன்படுத்தலாம். மற்றபடி வேறு எந்த வகையிலும் வணிகர்கள் திரவ நைட்ரஜனை உணவில் சேர்க்கக் கூடாது.

    இந்த விதியை மீறினால் ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    அதுமட்டுமின்றி, திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளை உட்கொண்டு பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட வணிகரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது. நுரையீரலுக்குள் புகுந்தால் சுயநினைவும் இழக்க வாய்ப்பு உண்டு என்று எச்சரித்துள்ளார்கள்.

    அதே நேரம் தொழில் துறை நோக்கங்களுக்காக திரவ நைட்ரஜன் பயன்பாட்டை அனுமதித்துள்ளார்கள். உணவுப் பொருட்களை உறைய வைக்க, குளிரூட்ட, பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்த உணவு பொருட்கள் பல மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்குமாம்.

    6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல் சென்னையில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் தடை வந்துள்ளது.

    உணவில் கலந்து பதப்படுத்தி வைத்திருந்தால் அதை சாப்பிடும் போது உடலை பதம் பார்க்காதாம். இதமாக இருக்குமாம். ஆனால் சாப்பிடும் போது அதன் மீது தெளித்து சாப்பிட்டால்தான் ஆபத்தாம்.

    • ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
    • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    வருகிற கல்வி ஆண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேட்டா அறிவியலுடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும், ஏ.ஐ. உடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. சில கல்லூரிகள் பி.பி.ஏ., பி.எஸ்.சி. உளவியல் பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளன.

    மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியலை டேட்டா அறிவியல் பாடத்துடன் தொடங்கவும் சமூக பணி முதுநிலை பாடப் பிரிவை புதிதாக தொடங்கவும் திட்டமிட்டு உள்ளது. வருகிற கல்வியாண்டில் 'பி.காம் கார்ப ரேட் செகரட்டரிஷிப் படிப்பை' தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் வில்லியன் ஜாஸ்பர் தெரிவித்தார்.

    ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

    டேட்டா அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக தேவை உள்ளது என்றும் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்கு பிறகு பாடநெறி கிடைக்கும் என்றும் ஸ்டெல்லா மேரி கல்லூரி யின் முதல்வர் ஸ்டெல்லா மேரி கூறினார்.

    டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் ஏற்கனவே உள்ள படிப்புகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. டேட்டா அறிவியல் படிப்புக்கான இன்டர்ன்ஷிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்து 2 கிரெடிட் படிப்புகளை மாணவர்கள் படிக்க வைப்போம் என்று முதல்வர் சந்தோஷ் பாபு தெரிவித்தார். அடிப்படை அறிவியல் படிப்புகளை ஊக்குவிக்கவும் கல்லூரி திட்டமிட்டுள்ளது.

    கணினி தொடர்பாக படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால் எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் பால் வில்சன் கூறுகையில், "வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

    • ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
    • தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
    • ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. அதற்கு தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. அப்போது அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

    அதுவும் ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம். அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தலாம். பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய கோர்ட்டுக்கு தே.மு.தி.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே தரம் பிரித்து இந்த அரிசியை யார் உண்ண வேண்டும் என உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதி செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.
    • மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    சென்னை

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    யானைப் பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்பிற்கு நிவாரணம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

    2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர்.

    வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் வாரி வழங்குகிறார்கள்.

    மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது.

    தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என்று கூறினார்.

    • அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!
    • தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர்- நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!

    அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!

    தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர்- நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்!"

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    • போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக தி.மு.க.வின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    2000 கோடி ரூபாய் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி தமிழகத்தில் அடிக்கடி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    எனவே, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வரும் தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்- தாம்பரம், சென்னை சென்ட்ரல்- கேரள மாநிலம் கொச்சுவேலி, சென்ட்ரல்-நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை மே 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06012) மே 5-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) மே 6-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    அதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06043) மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை (புதன்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06044) மே 2-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை (வியாழக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (06019) மே 5-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06020) மே 6-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (060231) மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06022) மே 13-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (திங்கட் கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும்.
    • மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் இருந்து மே 3-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) கன்னியாகுமரிக்கு 15 நிமிடம் முன்கூட்டியே மதியம் 2.50 மணிக்கு வந்து சேரும்.

    அதே போல், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும். அதே தேதியில் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×