என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது
- இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணியத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், "நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்திருந்தார். அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இவர் வாரணாசி தொகுதி பாஜக வேட்பாளர். தேர்தல் பிரசாரத்தின் போது பொதுப்பணித் துறை வளாகத்தை அவர் பயன்படுத்தியிருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கோவையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 மாணவர்கள், சில ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர். தேர்தல் பிரசாரங்களில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.
விதிமீறலில் ஈடுபட்டுள்ள வேட்பாளரை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் 23-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 மற்றும் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது.
- விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார்.
அதேபோல் ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு ஒரு கோட்டையாக அண்ணா காலத்தில் இருந்தே திகழ்ந்து வந்த திருச்சியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கி தந்துள்ளார்.
பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார். மோடியின் கனவு பலிக்காது.
இந்த தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கொடி நாட்டியது இந்தியா கூட்டணி என்ற செய்தியை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது. அது எல்லா கட்சி களுக்கும் பொதுவானது. இதை யாரும் மீறக்கூடாது.
ஆனால் நாட்டின் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுகிற வகையில் தொடர்ந்து அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ என்கிற பெயரில் பெரிய ஆர்ப்பாட்டத்தோடு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி வரவேற்பு கொடுத்ததை போல் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான விதி மீறல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்.
தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
- போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.
கடந்த 9-ந் தேதி அன்று ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முதலில் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் 3 நாட்கள் மீண்டும் காவலில் எடுத்தனர். இந்த காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கோடி கோடியாக கொட்டிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர பரபரப்பான மேலும் பல புதிய தகவல்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலையில் விமானத்தில் அழைத்து வந்தனர்.
பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்திய பணத்தை வைத்து 3 தமிழ்ப்படங்களை தயாரித்து வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தவிர ஓட்டல் மற்றும் கட்டுமான தொழிலிலும் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு ஜாபர் சாதிக் வாரி வழங்கி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெல்லியில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாக தனது சினிமா மற்றும் அரசியல் நண்பர்களிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பியே சினிமா பிரபலங்கள் பலர் அவருடன் நெருக்கம் காட்டி இருக்கிறார்கள். இருப்பினும் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் யார்-யாரிடமெல்லாம் பங்கு போட்டுள்ளார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையின்போது போதைப்பொருள் கடத்தலில் அவர் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதற்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 4-வதாக ஜாபர் சாதிக் பிடிபட்டார். அதை தொடர்ந்து அவரது நெருங்கிய கூட்டாளியான சதா சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்களை சென்னையில் இருந்து பார்சல் செய்து அனுப்புவதில் சதா முக்கிய பங்காற்றி உள்ளார். இதன் மூலம் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் தம்பிகள் 2 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
- கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
- பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க.வுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் நாளைக்குள் தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் (21-ந்தேதி) வெளியாக உள்ளது. அன்றைய தினம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவேளை தேர்தல் அறிக்கை அன்று வெளியாகாவிட்டால் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார தொடக்க விழா மேடையில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.
தே.மு.தி.க. தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
- கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
- வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
முதலில் இந்த பட்டியல் போலியானது என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த வேட்பாளர் பட்டியல் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
1 தென்சென்னை-தமிழிசை சவுந்தரராஜன், 2 கோவை-ஏ.பி.முருகானந்தம், 3 கரூர்- அண்ணாமலை குப்புசாமி, 4 திருச்சி-ஆசீர்வாதம் ஆசாரி, 5 கோவை-தடா பெரியசாமி, 6 சிவகங்கை-எம்.சத்தியானந்தன், 7 ராமநாதபுரம்-எம்.முருகானந்தம், 8 தூத்துக்குடி-ராதிகா சரத்குமார், 9 தென்காசி-ஆனந்தன் அய்யாசாமி, 10 திருநெல்வேலி-நைனார் பாலாஜி, 11 கன்னியாகுமரி-விஜயதாரணி.
- சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு திரவுபதி அம்மன் கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது
- பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை அறநிலையத்துறை நியமிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தலித் மக்களை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனையடுத்து, மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை அறநிலையத்துறை நியமிக்க வேண்டும் என் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார். கோயில் திறக்கப்படும் போது எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க காவல்துறை போதுமான பாதுகாப்பது ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் கோயில் மூடப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து, இவ்வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.
- இந்தியா கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
- இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
சென்னை:
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் 'இந்தியா' கூட்டணியை 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 பாராளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019 பாராளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில், "நாற்பதும் நமதே! நாடும் நமதே!" என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
- கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
- இந்த தேர்தல் களம் ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாகும்
- தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், "இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.
நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும்.
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று நடத்திய ஆலோசனைக்கு பிறகு 176 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே மொத்த வாக்குச்சாவடிகள் 68,320-ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்கள் விலை வித்தியாசப்படுவதால் தேர்தல் செலவினத்துக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலை பட்டியலை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 52,938 தனியார் கட்டிடங்கள் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 டி வழங்கப்படும்.
அதில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். சிவிஜில் செயலி மூலம் மொத்தம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்.
பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும். இந்த தேர்தலில் அதிகளவில் ஆசிரியர்களே பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்