என் மலர்
சென்னை
- படுகாயம் அடைந்த ஒருவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அருகம்பேடு, ஜோதிநகர் ஆகிய இரு கிராமங்களில் உள்ள மக்கள் 55 பேர், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து மூலம் இரவு 11 மணி அளவில் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமாலை முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அரூர் வழியாக இன்று விடியற்காலை சேலம் நோக்கி செல்லும்போது நான்கு வழி சாலையில் டோல்கேட் அமைக்கும் பணிக்காக இருவழி சாலையை ஒரு வழி சாலையாக தேசிய நெடுஞ்சாலைதுறையினர் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் ஒருவழி சாலையில் சென்று கொண்டு இருந்தபோது சுற்றுலா பேருந்தும், அந்த வழியாக வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஒருவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்கு சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் கல்வித்துறை யோசித்திருக்கலாம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர்.
- கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரூர் பகுதியில் உள்ள கியாஸ் முகவர் ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலத்தை வாங்கி, பெரிய அளவில் கட்டிடம் கட்டியுள்ளார். அப்பொழுது கிராம மக்கள் எதற்காக கட்டிடம் என கேட்டுள்ளனர். தனது மகன் மருத்துவம் முடித்துள்ளதால், மருத்துவமனை கட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பணி முடிந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு என கட்டிடத்தில் எழுதப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குடியிருப்புகளை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டரை சேமித்து வைத்தால், ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் பேரிழப்பு ஏற்படும். எனவே இங்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது குறித்து கியாஸ் முகவர் ராஜேந்திரன் கண்டு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகளிடம் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அப்புறப்படுத்த வேண்டும் என மனு அளித்துள்ளனர். ஆனால் அதனை அப்புறப்படுத்துவதற்கு அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிலிண்டர்களை சேமிப்பு கிடங்கில் இறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் சிலிண்டர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரூர்-தருமபுரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த அரூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை அடுத்து லாரியிலிருந்து இறக்கப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் ஏற்றப்பட்டது. ஆனால் பாதி சிலிண்டர்கள் சேமிப்பு கிடங்கில் இருந்ததால், கிராம மக்கள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உள்ளே இருக்கின்ற சிலிண்டர்களை லாரியில் எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் ஒருவர் சேமிப்பு கிடங்கின் பூட்டை கல்லால் உடைக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு அரூர் வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர சமாதான பேச்சு வார்த்தைக்கு பிறகு வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று முறையிடலாம். நமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், அரசு ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடலாம் என கூறி, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் தருமபுரி பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 590 ஆக உள்ளது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 800 ஆக உள்ளது.
சென்னை:
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை யில் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44 ஆயிரத்து 720-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 590 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.79.80-க்கு விற்கிறது.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
- விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.
சேலம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்லும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இன்று மாலை 6 மணி அளவில் சேலம் மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி பேசுகிறார். இதில் சேலம் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இன்று இரவு சேலம் அஸ்தம்பட்டி மாளிகையில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 9 மணிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
அதன்பிறகு கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழாவில் ரூ.33.60 கோடியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம் ரூ.10.58 கோடியில் மறு சீரமைக்கப்பட்ட போஸ் மைதானம், ரூ.12.34 கோடியில் ஆனந்தா பாலம் வாகன நிறுத்துமிடம், ரூ.14.97 கோடியில் வ.உ.சி மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.13.04 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், ரூ.12 கோடியில் தொங்கும் பூங்காவில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேலும் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். அதே போல புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் அவர் வழங்குகிறார்.
நாளை மதியம் 4 மணிக்கு மேல் மேட்டூருக்கு புறப்பட்டு செல்லும் அவர், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார்.
12-ந் தேதி காலை 10 மணிக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். 3 நாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், சேலத்தில் இருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.
- ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நீண்ட நாட்களாக பஸ் நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அங்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-
ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்து உள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் மதன்மோகன், பணிகள் நிலைக்குழு தலைவர் சிற்றரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா வியூகம் வகுத்து உள்ளார்.
- கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நள்ளிரவு 2 மணி வரை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
சென்னை:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு அனைத்து மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதே நேரத்தில் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
இதன்படி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா வியூகம் வகுத்து உள்ளார்.
இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முன்பு போட்டியிட்ட இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் களம் இறங்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் வகையிலேயே அமித்ஷாவின் சென்னை பயணம் அமைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமானத்தில் இன்று இரவு 9 மணி அளவில் அமித்ஷா சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் அவர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குகிறார்.
அங்கு வைத்தே அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். எந்த மாநிலத்துக்கு சென்றாலும் நள்ளிரவு வரை பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது அமித்ஷாவின் வழக்கம்.
அந்த வகையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நள்ளிரவு 2 மணி வரை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
இதன் பின்னர் நாளை 2 கூட்டங்களில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதில் ஒன்று பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம். இன்னொன்று பொதுக்கூட்டமாகும். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மகால் மண்டபத்தில் வைத்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
அங்கு சுமார் ஒரு மணி நேரம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் அமித்ஷா பின்னர் கிண்டி ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.
மாலையில் வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்காக நாளை பிற்பகலில் அமித்ஷா ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார்.
பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ள வேலூர் கூட்டத்தில் பேசும் போது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டம் போட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
மாநில அளவில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களுக்கு தேவையான, செல்வாக்கு மிக்க தொகுதிகளை கேட்டுப்பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே அமித்ஷாவின் இலக்காக உள்ளது.
குறிப்பாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களில் தென் சென்னை போன்ற பாராளுமன்ற தொகுதிகளை கேட்டு பெற்றால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்பதும் அமித்ஷாவின் கணக்காக உள்ளது.
தென்சென்னை தொகுதியில் இதற்கு முன்பு பாரதிய ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் தனித்து போட்டியிட்டு 1 லட்சம் ஓட்டுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று வேலூரிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். இதன் காரணமாகவே சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை வேலூரில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் முடிவு செய்து கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தற்போது சேலத்தில் உள்ள தனது வீட்டில் கால் வலிக்காக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார். அவர் இன்று மாலை அல்லது நாளை காலையில் அமித்ஷாவை சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்தித்து பேசுவாரா? என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பணிக்காக அமித்ஷா முன் கூட்டியே ஆலோசனை கூட்டங்களை தமிழகத்தில் மேற்கொள்வது அரசியல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேகத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
- கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும்.
- மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கூடங்களை திறக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். கோடை விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாடங்களை விரைந்து முடிக்க இனி சனிக்கிழமையிலும் வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான தகவல் வரவில்லை. 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கத்திரி வெயில் முடிந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
- சென்னை, மதுரை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 சதவீதத்திற்கும் மேல் வெயில் அடித்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக கத்திரி வெயில் என கூறப்படும் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்து இருந்தது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் தீ பிளம்பை கக்கியது போல கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
வீடுகளுக்குள் மின்விசிறி, ஏ.சி. போன்றவை இல்லாமல் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நீர் ஆதாரங்களான ஜூஸ் வகைகள், மோர், தயிர், இளநீர், தர்பூசணி மற்றும் பழவகைளை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.
கத்திரி வெயில் முடிந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சென்னை, மதுரை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 சதவீதத்திற்கும் மேல் வெயில் அடித்து வருகிறது.
நேற்றும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. நேற்று பல இடங்களில் பதிவான வெயிலின் உச்சபட்ச அளவு (பாரன்ஹட்):-
சென்னை நுங்கம்பாக்கம்-105.98, சென்னை மீனம்பாக்கம்-105.62, திருத்தணி-104.9, வேலூர்-104.54, மதுரை நகரம்-103.64, மதுரை விமான நிலையம்-103.64, நாமக்கல்-103.64, கடலூர்-103.28, தூத்துக்குடி-103.1, திருச்சி-102.74, தஞ்சாவூர்-102.2, பரமத்திவேலூர்-102.2, நாகை-101.84, திருப்பத்தூர்-101.84, பரங்கிபேட்டை-101.84, புதுச்சேரி-101.12, தருமபுரி-100.4, பாளையங்கோட்டை-100.76, சேலம்-102.22, காரைக்கால்-100.2 என பதிவாகி இருந்தது.
இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் நேற்று முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் பிப்பர்ஜர் நேற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கி.மீ தொலைவிலும், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கி.மீ தொலைவிலும், போர்பந்தரில்(குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே 830 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன்பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பணிமனைக்கு செல்லும் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.
- பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தது.
பின்னர் இந்த ரெயில் பயணிகளை இறக்கிவிட்டு 12 மணி அளவில் சென்டிரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது, பணிமனை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ரெயில் தடம் புரண்டது. ரெயிலின் ஒரு பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டாவளத்தை விட்டு விலகி கீழே இறங்கின.
இதையடுத்து, டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 2 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு 2 சக்கரங்களும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால், பணிமனைக்கு செல்லும் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.
சென்டிரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு ரெயில் குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்ட போதிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும், பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில், ஒடிசா ரெயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், ரெயில் நிலையங்கள், தண்டவாளங்கள், சிக்னல் உள்ளிட்டவைகளை சரிவர ஆய்வு செய்ய வேண்டும் எனவும், வரும் 14-ந் தேதிக்குள் இதுகுறித்த அறிக்கையை மண்டல மேலாளர்கள் ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவில் தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.