என் மலர்tooltip icon

    சென்னை

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
    • Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்..

    தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்...

    நான் ரெடி! நீங்க ரெடியா! " என குறிப்பிட்டுள்ளார்.

    • மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    விழாவில், தீரர்கள் கோட்டம் திமுக, திராவிட அரசியல் திராவிட அரசு இயல், முறைசெய்து காப்பாற்றும் முதல்மைச்சர் நூல்கள் வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.

    மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு அடையாளமாக இருப்பதால் ஆதிக்கவாதிகளுக்கு திராவிட இயக்கம் எரிகிறது கசக்கிறது.

    நாம் திராவிட மாடல் என்று சொல்ல சொல்ல எரிகிறது, அவர்களுக்கு எரிய வேண்டும் என்று நாம் திரும்ப திரும்ப சொல்கிறோம்.

    திமுக நிச்சயம் நூற்றாண்டு விழா காலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழகத்தை வெற்றிக்கு அழைத்து செல்லும்.

    கட்டுக்கோப்பாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை தீரர்கள் கூட்டம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.

    அரசியலில் பலரும் சொகுசான வாழ்க்கையை எதிர்பார்த்து வருகிறார்கள். அரசியலில் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து உள்ளது.

    சமூக நீதி கருத்தியலைக் காப்பது, கல்வி நிலையங்களை உருவாக்குவது திமுகவின் சாதனை.திராவிட மாடல் அரசு அனைவருக்குமானது என்பதையே இந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
    • வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் மூலம் அதிக அளவிலான பயணிகள் தற்போது பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    அதிலும் குறிப்பாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வரும் புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு முடிவு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அதிக அளவிலான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவார்கள்.

    இதன் எதிரொலியாக தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,765 நிர்ணயிக் கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறையை முன்னிட்டு ரூ.9,046 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோன்று பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,573 இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.8,655 ஆகவும், ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.5,321 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.15,529 ஆகவும்,

    மும்பையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.6,119 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.13,306 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்ல விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நாளை (23-ந் தேதி)யுடன் முடிகிறது. அதைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் மீண்டும் ஜனவரி 5-ந்தேதி திறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் நாளை முதல் விடுமுறை அளித்துள்ளது.

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வெளியூர் பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார்கள். விடுமுறை நாட்களை கணக்கிட்டு ரெயில்களில் முன்பதிவு செய்து உள்ள தால் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரெயில்கள், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் வழக்கம் போல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

    இந்த நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 325 பஸ்களும் 24-ந் தேதி 525 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23, 24-ந் தேதியில் மொத்தம் 91 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2025 பஸ்களுடன் கூடுதலாக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    அரசு பஸ்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.
    • மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.

    * தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான். தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான்.

    * வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.

    * உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும்.

    * மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * ஒரு இளைஞருக்கு எதிராக உடன் இருந்தவர்களே கிணற்றில் தள்ளிவிட்ட பின்னரும் மீண்டும் வந்து அரசனாகும் கதை பைபிளில் உள்ளது.

    * தன்னை கிணற்றில் தள்ளிவிட்ட உடன் பிறந்த சகோதரர்களை, அந்த நாட்டு மக்களை அரசன் எப்படி காப்பாற்றினான் என படியுங்கள்.

    * எப்படிப்பட்ட எதிரிகளையும் நாம் ஜெயிக்கலாம் என்பதை இதுபோன்ற கதைகள் நமக்கு கற்றுத்தருகிறது.

    * நானும் த.வெ.க.வும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது.

    * ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    * நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
    • அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊழியம், சமவேலை சம ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா' என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார்.
    • அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.

    தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

    தேர்தல் பணிகளில் தி.மு.க.வை பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உடன்பிறப்பே வா' என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார். மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.

    • தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
    • மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்.

    தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார். விழாவில் பங்கேற்றுள்ள விஜய் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

    • பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் இன்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டப்பட்டனர். அங்கேயும் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியேறிய செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் இன்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

    வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040

    18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    17-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-12-2025- ஒரு கிராம் ரூ.226

    20-12-2025- ஒரு கிராம் ரூ.226

    19-12-2025- ஒரு கிராம் ரூ.221

    18-12-2025- ஒரு கிராம் ரூ.224

    17-12-2025- ஒரு கிராம் ரூ.222

    • தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
    • அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க.விற்கு 65 ஆயிரத்து 210, அ.தி.மு.க.விற்கு 63 ஆயிரத்து 703, பா.ஜ.க.விற்கு 54 ஆயிரத்து 258, காங்கிரசிற்கு 27 ஆயிரத்து 158 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    அந்த வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

    • ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் மதியம் நாகர்கோவில் சென்றடையும்.
    • வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை செகந்திராபாத் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு, ஈரோடு-நாகர்கோவில், செந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு ஜங்சன் செல்லும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.

    இதேபோல, ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24,31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

    மேலும், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×