என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்எஸ்எல்சி"

    • கடந்த 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
    • அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அரசு தேர்வுத் துறை தயாரிக்க இருக்கிறது. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு ('எமிஸ்') தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்கவும், அதில் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதிக்குள் விவரங்களை சரிபார்க்கவும், திருத்தங்கள் இருந்தால் அதனை மேற்கொள்ளவும், விவரங்களை பின்னர் பதிவேற்றம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்டவணையை வெளியிடுவார்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    அந்தவகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் வெளியாகலாம் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பொதுத்தேர்வை நடத்த இருக்கும் அரசு தேர்வுத்துறை, பொதுத்தேர்வு தொடர்பான அட்டணைகளை தயாரித்து, அதுதொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி முடித்திருப்பதாக சொல்லப்படுகின்றன. அதன்படி, தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு 2026-ல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தேர்தல் அனேகமாக ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என சொல்லப்படும் சூழலில், அதற்கேற்ப பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த அட்டவணை உறுதிசெய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை வசம் வந்துசேரும் எனவும், அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்டவணையை வெளியிடுவார் எனவும், அதன்படி, நவம்பர் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படலாம் எனவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.
    • வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

    சென்னை:

    மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக்கூடிய சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    * சி.பி.எஸ்.இ. தேர்வு துணை சட்ட விதி 13 மற்றும் 14-ன்படி, மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் ஆகும். மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.

    * வருகைப் பதிவு 75 சதவீதம் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.

    * சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் என்பதாக கருதப்படும். அத்தகைய மாணவர்களை சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்காது. மேலும் வருகைப் பதிவுகளை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

    * வருகைப்பதிவு தினமும் புதுப்பிக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளியின் தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு, சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கிடைக்க செய்யவேண்டும்.

    * மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதையும், வருகைப்பதிவு விவரத்தையும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு பதிவு செய்யப்பட்ட விரைவு தபால், மின்னஞ்சல் மூலமாக பள்ளிகள் தெரிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.
    • 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

    சென்னை அடுத்த கவுல் பஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற பீகாரை சேர்ந்த ஜியா குமாரி, 10-ம் வகுப்பில் மொத்த மதிப்பெண் 467-ம், தமிழில் 93 மதிபெண் எடுத்து அசத்தி உள்ளார்.

    இது தொடர்பாக மாணவி ஜியா குமாரி கூறுகையில், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

    * பள்ளியில் கோச்சிங் சிறப்பாக இருந்தது. தினமும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது.

    * 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.

    * சொந்த ஊர் பீகார். படிப்பிற்காக இங்கு வந்தோம். என்னுடைய ஆசிரியர்கள் தமிழில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவினார்கள்.

    அதனால் தான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்தது.

    * வீட்டில் அனைவரும் இந்தி தான் பேசுவோம். அப்பாவிற்கு தமிழ் தெரியாது. அம்மாவிற்கு தமிழ் தெரியும்.

    * 17 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்தோம். ஆரம்பத்தில் தமிழ் படிக்க கடினமாக இருந்தது. போக போக தமிழ் பழகி விட்டது.

    * அதிக மார்க் எடுக்க ஆசிரியர்களும் உதவி செய்தார்கள்.

    * பள்ளியில் வழங்கிய புத்தகம், ஷூ, நான் முதல்வன் திட்டம், சிஜி வகுப்பு உதவியாக இருந்தது.

    * 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

    * அப்பா வெல்டிங் வேலை செய்கிறார்கள்.

    * தமிழ்நாட்டில் இருந்துதான் நாம் ஏதாவது ஆக வேண்டும் என்றும், graduate, doctor ஆன பிறகு தான் ஊருக்கு போகணும் என்றும் அப்பா சொல்லி இருக்கிறார்கள். அம்மா மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.

    * பீகாரில் education குறைவாக இருந்ததால் இங்கே வந்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி ஜியா குமாரியின் பேட்டி வெளியான நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை! என்று தெரிவித்துள்ளார்.

    • எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.

    கோவை:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

    கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன்-பாரதி செல்வி தம்பதியர். இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள்.

    இவர்கள் 2 பேரும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதில் கவிதா தமிழில்-95, ஆங்கிலத்தில்-98, கணிதத்தில்-94, அறிவியலில்-89, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    கனிகா தமிழில்-96, ஆங்கிலத்தில்-97, கணிதத்தில்-94, அறிவியலில்-92, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்கள் கணித பாடத்திலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கவிதா, கனிகா ஆகியோர் கூறியதாவது:-

    எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் நாங்கள் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆசிரியர்கள் எங்களுக்கு நன்கு உதவினார்கள்.

    நிறைய சிறப்பு வகுப்புகள் நடத்தினார்கள். கல்விக் கட்டணத்துக்கு கூட உதவி செய்தார்கள். ஒரே மாதிரியான மதிப்பெண் எடுப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    மருத்துவராகி சேவை செய்வதே எங்களின் கனவு. இதனால் பிளஸ்-1 வகுப்பில் 2 பேருமே உயிரியல் கணிதம் பாடப்பிரிவை எடுக்க உள்ளோம். மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.
    • 5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மதுரையை சேர்ந்த இரட்டையர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் வைரவன் இவர் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி. இவரது மகன்கள் ராமநாதன், லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள்.

    இவர்கள் இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    • இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • ஆங்கிலம் பாடத்தில் தலா 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனைகள் படைத்துள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்துள்ளளன.

    அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாயஸ்ரீ மற்றும் மகாஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றபோதிலும், இருவரும் ஒட்டுமொத்த மதிப்பெண்ணாக 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மாயஸ்ரீ தமிழ்- 96, ஆங்கிலம்- 96, கணக்கு- 95, அறிவியல்- 95, சமூக அறிவியல்-93

    மகாஸ்ரீ தமிழ்- 98, ஆங்கிலம்- 96, கணக்கு- 92, அறிவியல்- 94, சமூக அறிவியல்-95

    • சிவானிஸ்ரீ தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த பிரபு-தேன்மொழி தம்பதியினர். தற்போது கேரளாவில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களின் மகள் சிவானிஸ்ரீ. இவர் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்நிலையில் இன்று காலை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சிவானிஸ்ரீ 500-க்கு 201 மதிப்பெண் எடுத்தால் மனஉளைச்சலில் இருந்த வந்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பார்த்தபோது சுயநினைவு இழந்து இறந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவானிஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    நடந்து முடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

    இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இவரது தந்தை சந்திரசேகர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் ராணி கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
    • தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்!

    பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!

    இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி கவிதா (40). இவர் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகள் கீர்த்திவாசனி (15). பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

    தேர்வு இன்று வெளியாக உள்ள நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைக்கும் எனவும், தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மாணவி கீர்த்தி வாசனி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அங்கன்வாடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது தாய் கவிதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது மகள் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தி வாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தமிழ் - 70, ஆங்கிலம் - 83, கணிதம் - 81, அறிவியல் - 70, சமூக அறிவியல் - 44 என மொத்தம் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    • புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன.
    • காரைக்காலில் 476 மாணவர்கள், 540 மாணவிகள் என மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்வு எழுதினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.

    புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன. இதனால் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படி 10-ம் வகுப்பு தேர்வை நடத்தினர்.

    இந்த தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 4 ஆயிரத்து 290 மாணவர்கள், 3 ஆயிரத்து 977 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 267 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    இதில் தனியார் பள்ளிகளில் படித்த 4 ஆயிரத்து 109 மாணவர்கள், 3 ஆயிரத்து 902 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 11 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் தேர்ச்சி சதவீதம் 96.90 சதவீதமாகும்.

    புதுச்சேரியில் மட்டும் 3 ஆயிரத்து 814 மாணவர்கள், 3 ஆயிரத்து 437 மாணவிகள் என 7ஆயிரத்து 251 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 674 மாணவர்கள், 3 ஆயிரத்து 386 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 97.37 ஆகும்.

    காரைக்கால் மாவட்டத்தில் 476 மாணவர்கள், 540 மாணவிகள் என மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்வு எழுதினர். இதில் 435 மாணவர்கள், 516 மாணவிகள் என 951 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.60 ஆகும்.

    ×