என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

TN Assembly Election | சட்டமன்ற தேர்தலில் வாகை சூடுவது யார்?- யாரும் எதிர்பாராத கருத்துக்கணிப்பு முடிவுகள்
- மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
சென்னை:
தி.மு.க. கூட்டணிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் 41.5 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று ஐதராபாத் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமாகிய 'கே.கே. சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்' நிறுவனத்தின் ஒரு அங்கமான - பாராவீல், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான விரிவான அறிவியல் பூர்வ கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளது.
இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, தி.மு.க. 41.5 சதவீதம், அ.தி.மு.க. 36.2 சதவீதம், த.வெ.க. 13.6 சதவீதம் மற்றும் நாம் தமிழர் கட்சி 7.9 சதவீதம் வாக்கு விகிதங்களைப் பெறும் என பாராவீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. 3-வது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
இந்நிறுவனம், ஏற்கனவே 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரில், பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான பலத்தைக் கொண்டுள்ளன. தி.மு.க.விற்கு அடுத்தபடியாக 2-வது வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தாலும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் த.வெ.க. குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருப்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
இதுகுறித்து, பாராவீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் கொண்டெட்டி கூறியதாவது:-
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை மாற்றியமைக்கும் தொகுதிகளின் பங்கு குறித்து எங்களது ஆய்வு ஆராய்கிறது. குறிப்பாக, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் காரணி குறித்து ஒரு சிறப்புப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவது, இளைஞர்களைத் திரட்டுவது மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., போன்று முக்கியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன என்றார்.






