என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Gas Shortage | கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க தி.மு.க. அரசின் திட்டம் என்ன?- அன்புமணி கேள்வி
- தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது.
- தி.மு.க. அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது.
பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி, வினியோகம் ஆகியவை மத்தியப் பட்டியலில் 53-ம் இடத்தில் இருப்பதால், அதில் மாநில அரசு அதன் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஆனால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது.
அந்த வகையில் நிலைமையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதற்காக தி.மு.க. அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
வணிக சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்படுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிக மோசமாக இருக்கும். எனவே, நாடகங்களை நடத்துவது, விளம்பரப் படங்களில் நடிப்பது போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, டெல்லி சென்று மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தி தமிழ்நாட்டுக்கு வணிக எரிவாயு உருளைகளை பெறுவது, தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயு உருளைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






