search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    • அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது.
    • ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

    "இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும் கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம்.

    அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனைக் காத்து வருவது கருணை.

    ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்றது அன்பு.

    முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட் கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட் கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கின்றது. இது போன்றது கருணை.

    ஒரு மாமரத்தில் பிஞ்சுவிடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்துவிடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயன நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது அது தான் கருணை.

    உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக்கொண்டோ அல்லது அது பிரிந்து போய் விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெரும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள் இதுதான் கருணை."

    - வேதாத்திரி மகரிஷி.

    • பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.
    • ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று.

    தம்பி எம்.எஸ்.விஸ்வநாதன் கடுமையான உழைப்பாளி. தூங்குகிற நேரம் மிகவும் குறைவு. நாள் முழுதும் உழைப்பு. இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.

    "ஊமைத்துரையில் "துரை" என்று வருகிறதே அண்ணே, அவன் வெள்ளைக்காரனா ? என்று ஒருமுறை கேட்டான்.

    காபூல் நகரில் தங்கி இருந்தபோது , "இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான் " என்றேன்

    "யாரண்ணே கஜினி முகம்மது ? என்றான்.

    பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.

    தொழிலில் தளர்ச்சி இல்லாமல் தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடியாது.

    எல்லோருமே விதைபோட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள். இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போன இசை அமைப்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

    ஜூப்பிடரில் நடிகனாகி, ஆபீஸ் பையனாகி, ஆர்மோனிஸ்ட்டாகி, சுப்பராமன் இறந்த பிறகு இசை அமைப்பாளனாகி, எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயில் பல்லவி பாடியவன் தம்பி.

    இசைக்குப் பாட்டா ? பாட்டுக்கு இசையா?

    இரண்டும் பாதிப் பாதி.

    'ஆகாயப் பந்தலிலே'இசைக்கு எழுதப்பட்ட பாட்டு. 'சோதனைமேல் சோதனை'பாட்டுக்குப் போடப்பட்ட இசை.

    "இது நன்றாக இல்லை"என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர், விஸ்வநாதன்.

    'மாலையிட்ட மங்கை'படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று. காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை.

    நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, "நெஞ்சில் ஓர் ஆலையத்தில்" வரும் "முத்தான முத்தல்லவோ " நான்கு மாதங்கள் உயிரை விட்ட பாட்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாட்டு.

    - கவியரசரின் 'சந்தித்தேன், சிந்தித்தேன்' நூலிலிருந்து..

    • 22 நாடுகளின் மக்கள் தொகை 130.95 கோடி.
    • ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை 6 கோடி.

    உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!

    அமெரிக்கா : 32.1 கோடி

    ரஷ்யா : 14.6 கோடி

    ஜெர்மனி : 8.5 கோடி

    துருக்கி : 8.4 கோடி

    யூ.கே : 6.8 கோடி

    பிரான்ஸ் : 6.5 கோடி

    இத்தாலி : 6.1 கோடி

    ஸ்பெயின் : 4.7 கோடி

    போலந்து : 3.8 கோடி

    ருமேனியா : 1.9 கோடி

    நெதர்லாந்து : 1.7 கோடி

    கிரீஸ் : 1.7 கோடி

    பெல்ஜியம் : 1.2 கோடி

    செக் குடியரசு : 1.1 கோடி

    போர்ச்சுகல் : 1.1 கோடி

    சுவீடன் : 1 கோடி

    ஹங்கேரி : 1 கோடி

    சுவிட்சர்லாந்து: 0.9 கோடி

    பல்கேரியா : 0.7 கோடி

    டென்மார்க் : 0.6 கோடி

    பிரேசில் : 21.2 கோடி

    அர்ஜென்டினா : 4.45 கோடி

    மொத்தம் 22 நாடுகளின் மக்கள் தொகை : 130.95 கோடி

    ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை : 6 கோடி.

    130.95 + 6. = 136.95 கோடி!

    மொத்தம் 66 நாட்டு மக்கள் தொகை 137 கோடி.

    இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி.

    -வேங்கடசாமி

    • ஆற்று நீர் இந்த வண்டல்களோடு, கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.
    • கடலுக்கு நடுவாப்புலே... அப்படி ‘அரங்கம்’ மாதிரி உருவாகி நின்னுச்சி’னா ... இலங்கை’னும் சொல்லுவாங்க.

    ஓடிவரும் ஆறு... கல், மண், மரம், செடி, கொடி, இறந்த உயிரினங்கள் யாவற்றையும் உருட்டிப் புரட்டி இழுத்துவரும்.

    வரும் பாதையில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் ... ஆறு இழுத்துவரும் பொருட்கள்... அந்த தடங்கலில் சிக்குண்டு தங்கி ஆற்று நீர் திசைமாறி வளைந்தோடும்.

    இப்படித் தொடர்ந்து தங்கும் பொருட்கள் யாவும் ஒன்றாகச் சேர்ந்து உருவாவதே வண்டல் மண்ணாகும்.

    ஆற்று நீர் இந்த வண்டல்களோடு, கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும். கனிமங்கள் ஒன்று சேர்ந்து கனிமப் படிவங்களை உண்டாக்கும்.

    இவ்வாறு உண்டான வண்டல் படிவங்கள் காலப்போக்கில் படிவப் பாறைகளாக மாறும்.

    இப்படி அழகாக உருவாகி, ரம்மியமாக இருந்ததுதான் இலங்கைத் தீவு, அது ஆஆஆஆ.....ரம்பத்திலே உருவானக் கதை இதுதான்.

    ஒழுங்கா ஓடிக்கிட்டு இருக்கற ஆறு...

    நடுவிலே ... பெரிய மலையோ, மண்திட்டோ... இருக்கற இடத்தை கடந்து ஓடறப்போ...

    மத்தியிலே... அந்த தடுப்புலே மோதி ... ரெண்டா பிரிஞ்சி ஓடும்.

    அந்த ரெண்டா பிரிஞ்சி ஓடுன ஆத்துக்கு நடுவுலே... நிலம் அல்லது திட்டு அல்லது தீவு உருவாகி... அதுல மரம் செடி கொடி வளரும். அது பேரு... ஆற்றிடைக் குறை !

    இப்புடி உருவாகற நிலம் மனுஷன் வாழறதுக்கு தோதாகவும், வளமாகவும் இருக்கும்.

    அதுக்கு தமிழிலே... அரங்கம்'னு, சொல்லுவாங்க.

    அதுவே கடலுக்கு நடுவாப்புலே... அப்படி 'அரங்கம்' மாதிரி உருவாகி நின்னுச்சி'னா ... இலங்கை'னும் சொல்லுவாங்க.

    காவிரிக்கு நடுவுல இருக்கற குறையை திருவரங்கம்'னும், கடலுக்கு நடுவாப்புல இருக்கற குறையை இலங்கை'னும் ... தமிழர்கள் அழைத்தார்கள்.

    -மானெக்ஷா

    • வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு.
    • பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும்.

    "வான்குருவியின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்

    தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

    வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்

    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது."

    -ஔவையார்

    வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப்படும் வலிமையான இயற்கைப் பசை, தேன்அடை, சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய புலனங்களே! ஆனால் இந்த அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?

    ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக்குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !

    அதாவது இந்த உலகத்தில் ஆறறிவுப் படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும் இருக்கவே செய்கின்றன என்பதை இடித்துக் காட்டி, வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !

    -வை.வேதரெத்தினம்.

    • மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
    • பொதுவாக, சாக்ரடீசிடம் யாராவது கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.

    கிரேக்க நாட்டில் தோன்றிய சிந்தனையாளர்களில், சாக்ரடீஸ் தலை சிறந்தவர். தத்துவ ஞானி என்றால், அழுக்குப்பிடித்த ஆடைகளை உடுத்திக் கொண்டு, வேலைக்கு போகாமல், தத்துவம் பேசியவர் அல்ல..

    ராணுவத்தில் பணியாற்றினார்.. குடும்பத்தை பராமரித்தார்.. மனிதர்கள் சமூகத்தில் எவ்வாறு வியாபாரம் செய்வது, கல்வி கற்பது, வழக்குகளில் வாதிடுவது என்று, எளியவர்களுக்கும் புரியும்படி உணர்த்தினார்.

    ஆனால், இவ்வளவு நல்லது செய்த சாக்ரடீசை, அந்நகர ஆட்சியாளர்கள், விஷம் கொடுத்து மரண தண்டனை அளித்தார்கள். அது ஏன்?

    காரணம், பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரத்தை சாக்ரடீஸ் செலவிட்டார். அனைவரையும் சிந்திக்க வைத்தார். அதுதான், ஆட்சியாளர்களுக்கும், மத குருக்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

    மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இதனால், சாக்ரடீசின் மீது பொய் குற்றம்சாட்டி, அவருக்கு மரண தண்டனை கொடுத்தனர்.

    அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தும், நாட்டின் சட்டங்களை மதிப்பதாக கூறி, சாக்ரடீஸ் மரணத்தை வீரத்துடன் எதிர்கொண்டார்.

    பொதுவாக, சாக்ரடீசிடம் யாராவது கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.

    சாக்ரடீஸ், அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்பார். அதில் கிடைக்கும் பதில்களை வைத்து, உண்மையை உணர்த்துவார்.

    இதை சாக்ரடீசிய முறை என்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்க, மிகச்சிறந்த உத்திகளில் ஒன்றாக ஆசிரியர்கள், சாக்ரடீசிய முறையை பரிந்துரைக்கின்றனர்.

    • பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க.
    • அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப்படுகிறது.

    மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ்.

    "ஏண்ணே, இப்போ எல்லா பசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும் தலைவர் யோசித்தார்.

    "சரி, இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுடறேன். வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.

    இலவச சீருடை அணிந்து பள்ளிக்குச்சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம்.! நேற்று வரை தங்க ஜரிகை சட்டை போட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப் போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப்படுகிறது.

    -வேலாயுதம் விக்னேஷ்

    • நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
    • துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.

    துபாயை இன்றைய நிலைக்கு கொண்டு வந்த ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமிடம் துபாயின் எதிர்காலம் குறித்து கேட்டபோது அவர் கூறிய வார்த்தைகள்...

    "எனது அப்பாவும், அப்பாவின் அப்பாவும் ஒட்டகங்களில் பயணம் செய்தவர்கள்.

    இன்று நான் பென்ஸிலும், எனது மகன்கள் மற்றும் பேரன்கள் லேண்ட் ரோவரிலும் பயணம் செய்கிறோம்.

    ஆனால் என் பேரன்களின் குழந்தைகள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

    ஏன் என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு பதிலளித்தார்...

    நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.. அந்த அறிவே என்னை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது...

    ஆனால் என் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் அந்த கஷ்டங்களை பார்த்ததில்லை..

    துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.. அது எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறனை அவனுக்கு ஏற்படுத்துகிறது.

    ஆனால் என் பேரக்குழந்தைகள் போன்ற இன்பத்தை மட்டும் அனுபவிப்பவர்கள் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது கடினம். அவர்கள் விரைவில் சோர்வடைவார்கள்.

    துன்பம் வரும்போது இன்ப உலகில் வாழ்ந்தவன் பலவீனமடைகிறான். என் பேரப்பிள்ளைகளுக்கும் அப்படித்தான் இருக்கும். பின்னர் அவர்கள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்…"

    என்ன அழகான பதில்...

    • மலச்சிக்கல் சரியாவது மட்டுமல்ல உடல் குளிர்ச்சியடையும்.
    • கோடையில் மட்டுமல்ல எப்போதுமே உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

    நீராகாரம், பழைய சோறு பற்றி நிறைய தகவல் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மலச்சிக்கலை நீக்கும் தன்மை நீராகாரத்துக்கு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரவில் சோற்றில் நீர் ஊற்றும்போதே பச்சை மிளகாயையும், சின்ன வெங்காயத்தையும் வெட்டிப்போட்டு விட வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் ஆகாரமாக என்று சொல்வதைவிட நீர் அருந்துவதற்குப்பதில் நீராகாரத்தை அருந்திப் பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

    இந்த தகவல் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், வழக்கமாக நாம் காலை உணவாக பழைய சோறு சாப்பிடும்போது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்வோம். ஆனால், முந்தினநாள் இரவே வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து காலையில் எழுந்ததும் குடித்தால் அதன் பிரதிபலிப்பே வேறு.

    `கடுக்காய் சாப்பிடுறேன், திரிபலா சாப்பிடுறேன், பழம் சாப்பிடுறேன், நிறைய தண்ணி குடிக்கிறேன்... ஆனாலும் சரியா மலம் போகல...'ன்னு சொன்ன ஒருவரிடம் இந்த வழிமுறையை பின்பற்றச் சொன்னேன். இதை முயற்சித்த முதல்நாளே பலன் கிடைத்ததாக சொன்னார். எத்தனையோ பேர் மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித பக்கவிளைவும் இல்லாத இந்த வழிமுறையை பின்பற்றலாமே? மலச்சிக்கல் சரியாவது மட்டுமல்ல உடல் குளிர்ச்சியடையும். கோடை தொடங்கிவிட்டதால் தாராளமாக முயற்சிக்கலாம்.

    கோடை தொடங்கிவிட்டதால் சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, போண்டா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூடவே காரம் அதிகமான உணவுகளையும், சிக்கன், நண்டு போன்ற சூட்டினை கிளப்பும் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டவருக்கு மூலம் வெளிப்பட்டதாகச் சொல்லி ஆதங்கப்பட்டது தனிக்கதை. கோடையில் மட்டுமல்ல எப்போதுமே உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

    - எம்.மரிய பெல்சின்

    • நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார்.
    • நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார்.

    'சோ' சொல்கிறார்...

    ஒரு படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும் நானும் பங்கேற்ற காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அந்த ஷாட்டில் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சம் நீளமான வசனம். எனக்கு ஒரே ஒரு வார்த்தை - 'சரி' என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.

    ஷாட் முடிந்தது. டைரக்டர் நீலகண்டன் 'இன்னொரு டேக்' என்று சொல்லிவிட்டு என்னிடம் "நீங்க உங்க வசனத்தை எப்படி சொன்னீங்க?" என்று கேட்டார்.

    நான், "சரி என்று சொன்னேன் சார்" என்றேன்.

    "அப்படிச் சொல்லாதீங்க. அந்த 'சரி' கரெக்டா வரணும். அதுக்காகத்தான் இன்னொரு டேக், 'ச...ரி' என்று கொஞ்சம் இழுத்துச் சொல்லுங்க" என்றார் நீலகண்டன்.

    இன்னொரு டேக் முடிந்தது. டைரக்டருக்குத் திருப்தி இல்லை. மூன்றாவது டேக்கிற்கு உத்திரவிட்ட டைரக்டர், "சோ! அந்த டயலாக்கை நீங்க இன்னும் சரியாச் சொல்லணும்" என்றார்.

    "சரியை இதுக்கு மேலே எப்படி ஸார் சரியாச் சொல்றது? என்று கேட்ட நான், எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொன்னேன்,

    " ஸார்! என் டயலாக் 'சரி'.அதை இதுக்கு மலே சரியா சொல்லமுடியாது. டைரக்டர் அதுக்காக ரீடேக் எடுக்கலை. உங்க டயலாக்கை நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார். அதை உங்ககிட்ட சொல்ல மனமில்லாம, என்னை தப்பு சொல்றார். இந்த ரீடேக்கெல்லாம் உங்களுக்காகத்தான். எனக்காக இல்லை!

    உங்க டயலாக்கை நீங்க சரியா சொல்ற வரைக்கும் என் 'சரி' டயலாக் சரியில்லைன்னு சொல்லி, டேக் மேலே டேக் போகப்போகுது" என்றேன்.

    எம்.ஜி.ஆர் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். நீலகண்டன் நெளிய, எம்.ஜி.ஆரின் வசனம் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டு ஷாட் ஒழுங்காக முடிந்தது.

    பிறகு நீலகண்டன் என்னிடம், "எதையுமே இப்படிப் போட்டு உடைச்சுடறதா? சிலதைக் கண்டுக்காம விடறது நல்லதில்லையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாரே தவிர, கோபப்படவில்லை. எம்.ஜி.ஆரும் அந்த நிலைமையை மிகவும் ரசித்தாரே தவிர, தவறாக நினைக்கவேயில்லை!

    -பரதன் வெங்கட்

    • மாடுகளை சிங்கங்கள் தொடர்ந்து தாக்கி வந்தன.
    • சிங்கம் நேருக்கு நேர் மாடுகளை வேட்டை ஆடுவதில்லை என கண்டுபிடித்தார்.

    போட்ஸ்வானா.. சிங்கங்கள் மிகுதியாக உள்ள நாடு. 3000 சிங்கங்கள் உள்ளன. மாடுகள் வளர்ப்பும் மிகுதியாக உள்ள நாடு.

    அரிய மிருகமான சிங்கத்தை கொல்ல சட்டபூர்வமான தடை உள்ளது.

    ஆனால் மாடுகளை சிங்கங்கள் தொடர்ந்து தாக்கி வந்தன. வேலி போட்டு எல்லாம் கட்டுபடி ஆகாத ஏழைகள் ஏராளமாக உள்ள நாடு.

    மாடுகளை புல்வெளிகளில் தான் மேய்த்தாக வேண்டும்...என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.

    அதன்பின் அங்கே ஒரு மாடு மேய்ப்பவர் ஒரு எளிய விசயத்தை கண்டுபிடித்தார்.

    ஒரு சிங்கம் அவரை தாக்க வந்தபோது சும்மா அதை நேருக்கு நேர் பார்க்கையில் அது பார்வையை தாழ்த்திக்கொண்டு ஓடிவிட்டது.

    சிங்கம் கொன்ற மாடுகள் எல்லாமே பின்னால் பதுங்கி இருந்து தாக்கபட்டவையே

    சிங்கம் நேருக்கு நேர் மாடுகளை வேட்டை ஆடுவதில்லை என கண்டுபிடித்தார்.

    அதன்பின் மாடுகளின் முதுகில் இருபுறமும் இரு கண்களை பெயிண்டால் வரைந்தார்கள்.

    நிஜ கண் மாதிரியே இருந்தன அக்கண்கள்.

    அதன்பின் சிங்கங்கள் மாடுகளை தாக்குவது சுத்தமாக நின்றுவிட்டது.

    இப்ப போட்ஸ்வானாவில் எல்லா மாடுகளுக்கும் முதுகில் கண்கள் வரையபட்டுள்ளன.

    - நியாண்டர் செல்வன்

    • நவகிரகங்களும் வண்ணஒளிக்கதிர்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
    • ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இரத்தினக்கல் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.

    வண்ண மருத்துவம் என்பது வண்ண நீர் பருகுதல், ஜெம்கற்கள், சூரியஒளி மூலமாகவும் மற்றும் மின்சார பல்புகள், வண்ண பில்டர் பேபர்கள் மூலமாகவும் உடம்பில் வண்ண ஒளிக்கற்றைகளை பரவச் செய்யும் பல வழி முறைகளைக் கொண்டது. மேலும் வண்ண உடைகள், வீடுகளில் செய்யும் வண்ண அலங்கார பூச்சுக்களின் மூலமாகவும் நமக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    நவரத்தினங்கள் ஒவ்வொன்றும் வண்ணங்களின் சுரங்கமாக விளங்குகிறது. இதன் ஒளிக்கதிர் வீச்சுக்கள் எப்போதும் வண்ணக் கதிர்களை வெளியேற்றிக் கொண்டுடிருக்கின்றன.

    மாணிக்கம்– சிவப்பு வண்ணம்

    முத்து- ஆரஞ்சு வண்ணம்

    மரகதம்- பச்சை வண்ணம்

    பவளம்- மஞ்சள் வண்ணம்

    கனகபுஷ்பராகம்- நீல வண்ணம்

    வைரம்- இண்டிகோ வண்ணம்

    நீலம்- வயலட் வண்ணம்

    கோமேதகம்- அல்ட்ரா வயலட் வண்ணம்

    வைடூரியம்- இன் ப்ராரெட் வண்ணம்

    அதைப் போல நவகிரகங்களும் வண்ணஒளிக்கதிர்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன.

    ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இரத்தினக்கல் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.

    சூரியன்- சிவப்பு- மாணிக்கம்

    சந்தரன்- ஆரஞ்சு- முத்து

    செவ்வாய்- மஞ்சள்- பவளம்

    புதன்- பச்சை-  மரகதம்

    குரு- நீலம்- புஷ்பராகம்

    சுக்கிரன்- இண்டிகோ- வைரம்

    சனி- வயலட்- நீலம்

    ராகு- அல்ட்ரா வயலட் - கோமேதகம்

    கேது- இன்ப்ரா ரெட்- வைடூரியம்

    உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும், சூட்சும வண்ணங்கள், அதன் கதிர் வீச்சுக்கள் அவைகளுக்கு ஏற்ற உருவத்துடன் இருக்கின்றன.

    ஒவ்வொருவருக்கும் உற்பத்தி ஆகும் எண்ணமும் அதற்குரிய தொனி- வண்ணம் உருவம் இணைந்து தான் செயல்படுகிறது. இது தான் இயற்கையின் நியதி.

    மனிதனது நல்லது- கெட்டது போன்ற எண்ணங்களினால் அவனது சூட்சும சரீரத்தில் வண்ணங்களின் தன்மைகள் மாறுபட்டு விடுகின்றன. ஆகவே எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் சரீரத்தில் தொடர்பு இருக்கின்றது.

    உடல் நிலை கோளாறுகளுக்கு சூட்சும நிற பரிகாரங்கள். உடல் கோளாறுகளுக்கு ஏற்ப உடைகள் மற்றும் போர்வையை பயன் படுத்தவும்.

    சிகப்பு: இருமல், ஜலதோஷம், மஞ்சள்காமாலை, தோலில் வெண் புள்ளி.

    ஆரஞ்சு: கல்லீரல், கிட்னி, மூட்டு வலி, தன்னம்பிக்கை இல்லாமை..

    மஞ்சள்: மலம் சார்ந்த பிரச்னை, மற்றும்வயிறு சார்ந்த பிரச்சனைகள்..

    பச்சை: நெஞ்சு (மார்பு), கண். இரத்தநோய்கள், மற்றும் புற்று நோய்கள்..

    நீலம்: ஆஸ்துமா, மூச்சு சம்பந்த நோய்கள், பல், மூக்கு, காது, மற்றும் நுரையீரல் நோய்கள்.

    வெளிர் நீலம்: வாய், தொண்டை, மற்றும் உயர்இரத்த அழுத்தம், அதிக வியர்வைக்கு.

    ஊதா: இள நரை, முடி உதிர்தல் போன்றவற்றுக்கு

    -சிவசங்கர்

    ×