search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadhambam"

    • புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.
    • உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

    நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்…

    1.வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு..

    2. நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது..

    நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது..

    ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.

    3. புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!

    4. சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.

    5. சிரிப்புதான் வலிக்கு மருந்து..

    சிரிப்புதான் வலிக்கு நிவாரணம்..

    சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்!.

    6. உன் மனம் வலிக்கும் போது சிரி.. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!

    7. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

    8. போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.

    9. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சனைகள் உட்பட.

    10. கனவுகள் எல்லாம் நனவாகும், நிறைய காயங்களுக்குப் பிறகு..

    11. நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!

    12. கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.!

    13. பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.!

    -அழகு ராஜா

    • நாம் அனைவரும் சமைப்பது எப்படி என்கின்ற நம்முடைய புத்தகத்தை வைத்திருக்கிறோம்.
    • மனம்தான் நமது சமையல் கலை புத்தகம்.

    ஒருநாள் முல்லாவின் நண்பர், அவரிடம் கொஞ்சம் இறைச்சியும், அதோடு அதை சமைப்பது எப்படி என்கின்ற சமையல் கலை புத்தகத்தையும் கொடுத்தார்.

    முல்லா மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ஒரு பெரிய பருந்து ஒன்று முல்லாவின் கையில் இருந்த இறைச்சியைக் கொத்திக்கொண்டு போய்விட்டது.

    முல்லா அந்த பருந்தைப் பார்த்து..

    "நீதான் மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளாதே..

    நீ ஒரு முட்டாள்..

    நீ இந்த இறைச்சியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்..?

    அதைச் சமைப்பது எப்படி என்கிற புத்தகம் என்னிடமல்லவா உள்ளது.

    இந்த சமையல் கலை புத்தகம், நீ பறித்துச் சென்ற இறைச்சியை விட மிகவும் முக்கியமானது.

    எனவே அந்த இறைச்சியை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் முட்டாளே..

    எப்படி சமைப்பது என்கிற புத்தகம் இன்னமும் என்னிடம்தான் உள்ளது." என்று கூறினார்.

    நாம் அனைவரும் சமைப்பது எப்படி என்கின்ற நம்முடைய புத்தகத்தை வைத்திருக்கிறோம்.

    அதுதான் நாம் கற்றறிந்த அறிவு..

    மனம்தான் நமது சமையல் கலை புத்தகம்...

    அது எப்போதும் நம்முடன் இருக்கிறது.

    ஆனால் வாழ்க்கையோ நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

    அந்த சமையல் புத்தகம் மட்டுமே உள்ளது!.

    - ஓஷோ

    • நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நமது வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
    • வாழ்க்கைப் பயணம் என்பது எல்லோரும் ஒன்றாக, கும்பலாகப் பயணிக்கக் கூடிய தேசிய நெடுஞ்சாலை பயணமன்று.

    நமக்கு வாய்த்துள்ள வாழ்க்கை இறைவன் அளித்த கொடையாகும்.

    நீண்ட காலம் வாழ்வதும், நிறைவான வாழ்க்கை வாழ்வதும் கடவுளின் அனுக்கிரகமே ஆகும்.

    நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நமது வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    வாழ்ந்து மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது நமது வாழ்க்கை.

    "எங்கே வாழ்க்கை தொடங்கும்- அது

    எங்கே எவ்விதம் முடியும்

    இதுதான் பாதை இதுதான் பயணம்

    என்பது யாருக்கும் தெரியாது..

    பாதையெலாம் மாறி வரும்

    பயணம் முடிந்து விடும்

    மாறுவதைப் புரிந்து கொண்டால்

    மயக்கம் தெளிந்து விடும்."

    கவியரசர் கண்ணதாசன் பாடியது போல, வாழ்க்கைப் பயணம் என்பது பெரிய ஆசானாய் இருந்து,பல படிப்பினைகளை, அனுபவங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே செல்கிறது.

    " வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்றபடி, நம் வாழ்க்கைப் பயணத்தை இறைவன்தான் நிச்சயிக்கிறான்.

    அடுத்த கணம் என்ன நேரும் என்று எதையும் அறுதியிட்டுச் சொல்லக் கூடிய வல்லமை நம்மில் எவரிடமும் இல்லை.

    அதை இறைவன் தன் கையில் வைத்திருக்கிறான்.

    வாழ்க்கைப் பயணம் என்பது எல்லோரும் ஒன்றாக, கும்பலாகப் பயணிக்கக் கூடிய தேசிய நெடுஞ்சாலை பயணமன்று.

    அவரவர் தனித் தனியாகப் பயணிக்க வேண்டிய முன்பின் எவரும் நடந்தறியாத, மனிதனின் காலடிச் சுவடு பதியாத பாதையற்ற பாதையாகும்.

    அந்தப் பாதையில் நாம் ஒருபோதும் பயணித்தது கிடையாது.

    அவரவருக்கு விதிக்கப்பட்ட அந்த வாழ்க்கையை வாழுவதின் மூலமே கடக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.

    வாழ்க்கை முழுவதும் மறைபொருளாகவே இருக்கிறது.

    இதில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

    அதனால்தான் அது எப்போதும் வியப்பூட்டுவதாகவும், அதிசயமாகவும், அழகாகவும் இருக்கிறது.

    -தென்னம்பட்டு ஏகாம்பரம்

    • இயற்கையின் ஒரு விநோதமான, ஆனால் இயல்பான அம்சமாகும்.
    • இயற்கையின் இந்த அமைப்புக்குப் பின் வலுவான காரணம் உண்டு.

    பெண்கள் கருணையே வடிவானவர்கள் என்று நினைப்பீர்கள். ஒரு வேளை மனிதப் பெண்களில் பெரும்பான்மை அப்படி இருக்கலாம்! மறுக்கும் ஆண்கள் சற்று பொறுமை காக்கவும்!

    ஆனால் பல உயிரினங்களில் பெண்கள் கலவிக்குப் பிறகு தன் இணையை கொன்று தின்றுவிடும்.

    நமக்கு இது கொடுரமான செயலாக தோன்றலாம்! ஆனால் இயற்கையின் இந்த அமைப்புக்குப் பின் வலுவான காரணம் உண்டு.

    சில் உதாரணங்களைப் பார்ப்போம்!

    1. கருந்தலை சிலந்தி (பிளாக் விடோ ஸ்பைடர்): பெண் சிலந்தி, இனப்பெருக்கத்திற்குப் பிறகு ஆண் சிலந்தியை உண்ணுகிறது. இதனால்தான் இந்த இனத்திற்கு "விதவை" என்ற பெயர் வந்தது.

    2. கும்பிடு பூச்சி (ப்ரேயிங் மாண்டிஸ்): பெண் கும்பிடு பூச்சி , இணைவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ ஆண் கும்பிடு பூச்சியின் தலையை கடித்து உண்ணுகிறது.

    3. மின்மினிப்பூச்சி (ஃபயர்ஃப்ளை): சில இனங்களில், பெண் மின்மினிப்பூச்சி ஆணை ஈர்த்து, பின்னர் அதை உண்ணுகிறது.

    4. பச்சை வயல் சிலந்தி (கிரீன் லின்க்ஸ் ஸ்பைடர்): பெண் சிலந்தி பெரும்பாலும் இனப்பெருக்கத்தின் போதோ அல்லது உடனடியாக அதற்குப் பின்னரோ ஆணைச் சாப்பிடுகிறது.

    5. தேள் (ஸ்கார்பியன்): சில இனங்களில், பெண் தேள் இனப்பெருக்கத்திற்குப் பிறகு ஆண் தேளை உண்ணுகிறது.

    கலவி தொடங்கியபின் ஆண் தலையை பறிகொடுத்தாலும் கலவி தொடரும்!

    இந்த நடத்தை பெரும்பாலும் உணவுக்காகவும், அடுத்த தலைமுறைக்கு அதிக ஊட்டச்சத்து கிடைப்பதற்காகவும் நடைபெறுகிறது. இது இயற்கையின் ஒரு விநோதமான, ஆனால் இயல்பான அம்சமாகும்.

    -அருள் குமார்

    • உடலிற்கு பாரத்தை நாம் கொடுக்கிறோம்..
    • மனதிற்கு கவலையை உடல் கொடுக்கிறது.

    மனம் நோகாமல்

    வாழ வேண்டுமென்றால்..

    உடல் நோகாமல்

    பராமரிக்கப்பட வேண்டும்!

    உள்ளுறுப்புகளில்

    எந்தவொன்று பாரமாயினும்..

    அது உணர்ச்சிகளின் வழியாக

    மனதைப் பாதிக்கிறது

    இயற்கையின் இக்கூற்றின்படி..

    கவலையெனும் உணர்ச்சி

    வயிறெனும் உறுப்போடு

    தொடர்பாக்கப்பட்டிருக்கிறது

    என்றால்..

    எப்போதும் நம் மனம்

    கவலையோடிருக்கிறதெனில்..

    எப்போதும் நம் வயிறு

    பாரத்தோடிருப்பதாக பொருள்

    உடலிற்கு பாரத்தை

    நாம் கொடுக்கிறோம்..

    மனதிற்கு கவலையை

    உடல் கொடுக்கிறது..

    தேவைக்கதிகமான

    உணவால் ஏற்பட்டக் கழிவு

    மனதின் கவலையாகி

    வெளிப்படுகிறது..

    கவலையும் கூட

    கழிவு வெளியேற்றமே..

    கவலையே கூடாதென்றால்

    கழிவே கூடாது!

    கவலைப்படாதீர்கள்

    என்பதைக்காட்டிலும்..

    ஆகச்சிறந்த ஆலோசனை

    உங்கள் உடலைக் கவனியுங்கள்

    என்பதுதான்..!

    "உண்டி சுருங்கின்

    உபாயம் பல உள"

    என்றிருக்கிறார்களே..!

    -அன்பு வேல் முருகன்

    • தூக்கணம் குருவியின் கூடு, சுரைக்காயின் வடிவத்தில் தொங்கியபடி இருக்கும்.
    • மழையில் நனையாதபடி பாதுககாப்பாக தூக்கணம் குருவி தனது கூட்டில் இருந்தது.

    குருவி வகைகளுள் ஒன்று தூக்கணாங்குருவி. மரங்களில் தொங்கும் வடிவில் கூடுகளைக் கட்டி வாழ்வதால், இந்தக் குருவி வகைக்கு, "தூக்கணம் குருவி" என்று பெயர் .

    பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பிண்ணும் தொங்கு கூடுகள் பார்வைக்கு அழகாகவும், அதிசயமாகவும் இருக்கும். தூக்கணாம் குருவியின் கூடு, சுரைக்காயின் வடிவத்தில் தொங்கியபடி இருக்கும்.

    கூட்டின் வாயிலானது மழைநீர் உள்ளே புகாதபடி கீழ்ப்புறமாக இருக்கும். தாய்க் குருவியானது, காட்டில் பறக்கும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வந்து, களிமண் சேற்றில் புதைத்து, அதைக் கொண்டு வந்து தனது கூட்டில் வெளிச்சத்திற்குப் பயன்படுத்தும் என்பர் .

    தூக்கணாம் குருவி ஒன்று அழகாகக் கூடு கட்டி வாழும் காலத்தில், நல்ல மழை பொழிந்தது. மழையில் நனையாதபடி பாதுககாப்பாக தூக்கணாம் குருவி தனது கூட்டில் இருந்தது.

    அந்த மரத்தில் பலகாலமாக இருந்து வந்த ஒரு குரங்கு மழையில் நனைவதைப் பார்த்த தூக்கணாம் குருவியின் மனம் பொறுக்கவில்லை.

    குரங்கின் மீது வைத்த இரக்கத்தால் "இந்த மழையில் நனையாது இருக்க நீயும் என்னைப் போல் ஒரு கூடு கட்டிக் கொள்ளலாமே" என்று தனக்குத் தெரிந்த உபாயத்தைத் தூக்கணாம் குருவி கூறியது.

    அதனைக் கேட்ட அறிவில்லாத அந்தக் குரங்கு, "எனக்கு நீ அறிவுரை கூறுகின்றாயா?" என்று கோபம் கொண்டு, தான் இருந்த இடத்தில் இருந்து பாய்ந்து, அந்த குருவியானது அழகாகக் கட்டி வைத்திருந்த கூட்டினைப் பிய்த்து எறிந்தது.

    தனது அறிவுக் கூர்மையால் முயன்று, தனது பாதுகாப்புக்காகக் கட்டி இருந்த கூடு சிதைந்து போனது பற்றி குருவி வருந்தியது.

    தனது வீரத்தைக் காட்டி விட்டதாக எண்ணி குரங்கு மகிழ்ந்தது.

    இந்த கதையால் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், அறிவுள்ளவர்கள், அறிவு இல்லாதவர்களுக்கு அறிவுரை சொன்னால், சொன்னவர்க்கே துன்பம் விளையும் என்பதுதான்.

    "விவேக சிந்தாமணி" என்று ஒரு பழைய நீதிநூல் உண்டு. இந்த நூலில், மேற்குறித்த நீதியானது,பின்வரும் பாடலாகக் காட்டப்பட்டு உள்ளது.

    வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

    தான் ஒரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்;

    ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்

    ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!

    -திருநாவுக்கரசு

    • எப்போது நேரம் கிடைத்தாலும் உடனே சதுரங்கம் விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.
    • சதுரங்கம் விளையாடத் தொடங்கினாலும், நாளடைவில் அது எங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள 'மரோட்டிசால்' கிராமத்தைச், 'சதுரங்க கிராமம்' என்றே அழைக்கிறார்கள்.

    இங்கு ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் சதுரங்க வீரர், வீராங்கனைகள் இருக்கிறார்கள். இந்தியாவிலேயே சதுரங்க விளையாட்டை அறிந்தவர்கள் அதிகம் உள்ள ஊர் என்ற பெருமையை இக்கிராமம் பெற்றிருக்கிறது.

    இங்கு வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்கள், கடை வாசல்கள் என்று எல்லா இடங்களிலும் மக்கள் சதுரங்க விளையாட்டில் மூழ்கியிருப்பதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம்.

    சதுரங்கத்துக்கும் இந்தக் கிராமத்துக்கும் எவ்வாறு இப்படி ஓர் ஆழமான உறவு ஏற்பட்டது?

    அதற்கு இக்கிராம மக்கள் கைகாட்டுவது, 60 வயதான தேநீர்க் கடைக்காரர் உன்னிகிருஷ்ணனை.

    கிராம பொது மைதானம் அருகே உள்ள உன்னிகிருஷ்ணனின் தேநீர்க் கடைதான், இங்கு சதுரங்கம் வேர் விட்ட இடம்.

    தற்போது சதுரங்க விளையாட்டு ஆர்வலர்களால் களைகட்டியிருக்கும் இந்த இடம், ஒரு காலத்தில் குடிகாரர்களின் ராஜாங்கமாகத் திகழ்ந்தது.

    பகலில் குடிகாரர்கள் லூட்டி அடிக்கும் இந்த மைதானம், இரவில் அவர்கள் மோதல்கள், வழிப்பறியில் ஈடுபடும் இடமாகமாறும்.

    இக்கிராமத்தில் கள்ளச்சாராயம் தாராளமாகக் காய்ச்சப்பட்டதால், கலால் வரித் துறையின் சோதனை அடிக்கடி நடக்கும். கிராமத்தினரே கலால் வரித் துறை சோதனையை இயல்பாக எதிர்நோக்கிக் காத்திருப்பது வழக்கம்.

    இப்படி இரவில் கண் விழித்துக் காத்திருந்ததுதான், மரோட்டிசாலில் சதுரங்க விளையாட்டு வளர்வதற்கும் காரணமாக அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம்.

    இதுபற்றிக் கூறும் உன்னிகிருஷ்ணன், "1970-ஆம் ஆண்டுகளில் இரவில் கலால் ஆய்வர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது பொழுதுபோவதற்காக நாங்கள் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் இப்படி ஒருவிதக் கட்டாயத்தில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினாலும், நாளடைவில் அது எங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது." என்கிறார்.

    இக்கிராமத்தினருக்கு பகல், இரவு என்றில்லை, எப்போது நேரம் கிடைத்தாலும் உடனே சதுரங்கம் விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.

    -வீரமணி வீராசாமி

    • எம்.எஸ்.வி ஆர்மோனியப் பெட்டியுடன் கிளம்பி நேரே வந்துவிடுகிறார்.
    • வீட்டு வாசலில் இருவர் உரக்க பேசும் சத்தம் கேட்க, என்னவென்று கேட்கிறார் கவிஞர்!

    பலே பாண்டியா திரைப்படத்தில் 2 ஜோடிகள் பாடும் முதலிரவுப் பாடல் என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யிடம் சிச்சுவேஷன் சொல்லப்படுகிறது! அப்போது மெட்டுக்குப் பாட்டெழுதும் வழக்கம் கிடையாது! கன்னல் தமிழில் கவியரசர் எழுத, அதை படித்த மறு நொடியே எம்.எஸ்.வி அருமையான மெட்டைப் பிடித்துவிடுவார்.

    இந்தப் பாடலின் சவாலான விஷயம், இது முதலிரவுப் பாடல். விரசமாக இருக்கக் கூடாது ஆனால் காதல் பொங்கி வழிய வேண்டும்! மிக மிக மிக லேசாக காமமும் தெரியவேண்டும்! சிச்சுவேஷனைக் கேட்டதும் கவிஞர் 2 நாட்கள் டைம் கொடு என்றாராம்! 3 நாட்கள் கூட தருகிறேன் எழுதுங்க என எம்.எஸ்.வி சொல்லிவிட்டு கிளம்புகிறார்!

    நான்கு நாட்கள் ஆகியும் கவிஞரிடம் இருந்து பதில் வரவில்லை! அவருக்கு போன் செய்த போது இன்னும் இரண்டு நாட்கள் டைம் கேட்கிறார்! எம்.எஸ்.வியும் சரி என்கிறார்! ஒரு வாரம் கடந்து விடுகிறது! மீண்டும் போன் செய்கிறார் எம்.எஸ்.வி. இப்பவும் கவிஞர் இல்ல விசு, இன்னும் நான் பாடல் எழுதலை என்கிறார் தர்ம சங்கடமாக!

    எம்.எஸ்.வி ஆர்மோனியப் பெட்டியுடன் கிளம்பி நேரே வந்துவிடுகிறார்! 'கவிஞரே இன்னிக்கு உங்க கிட்ட பாட்டு வாங்காம கிளம்பறதில்ல' என்கிறார் உறுதியாக!

    இல்ல விசு, முதலிரவு சூழலில் காமமும் காதலும் இல்லாமல் ஓரிரு வரிகள் எழுதலாம். மொத்தப் பாட்டும் எப்படி எழுத? எனக்கு காதல் ரசம் தான் பொங்குது என்கிறார்!

    அதெல்லாம் இல்ல கவிஞரே, உம்மால் முடியும்! நீர் எவ்வளவு பெரிய கவிஞர். இந்தச் சூழலுக்கு எழுதுவதா உங்களுக்கு கஷ்டம்! என்று உசுப்பிவிட, கவிஞரும் சரிப்பா யோசிக்கிறேன் என்கிறார்!

    அவரது சிந்தனையில் காதல் தான் பெருகுகிறது! அப்போது வீட்டு வாசலில் இருவர் உரக்க பேசும் சத்தம் கேட்க, என்னவென்று கேட்கிறார் கவிஞர்!

    போய் பார்த்துவிட்டு வந்த அவரது உதவியாளர், "அய்யா நம்ம வீட்டு சமையற்காரர் தான் வாசலில் பழம் விக்கிறவர் கிட்ட என்னப்பா பழம் கொண்டுவான்னா.. காயா கொண்டுவந்திருக்கே! எல்லாமே தானா பழுத்த காய் மாதிரி இல்லியேன்னு சண்டை போடுறார்" இந்த வார்த்தையைக் கேட்டதும் கவிஞரது உள்ளம் துள்ளி குதிக்கிறது!

    ஆஹா காய் - பழம் இதை எப்படி மறந்தேன்! தமிழ் இலக்கணத்தில் கூட தேமாங்காய், புளிமாங்காய் இருக்கிறதே! அதை எண்ணாத 'மாங்காய்' மடையன் போல இருந்துவிட்டேனே என்று சரசரவென பாடல் வரிகளில் காய்களாக கொண்டுவந்து குவிக்கிறார்! அப்படி எழுதிய பாடலே இந்த அத்திக்காய் பாடல் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்…

    "அத்திக்காய் காய்காய்

    ஆலங்காய் வெண்ணிலவே

    இத்திக்காய் காயாதே

    என்னுயிரும் நீயல்லவோ

    கன்னிக்காய் ஆசைக்காய்

    காதல்கொண்ட பாவைக்காய்

    அங்கேகாய் அவரைக்காய்

    மங்கை எந்தன் கோவைக்காய்

    மாதுளங்காய் ஆனாலும்

    என்னுளங்காய் ஆகுமோ

    என்னை நீ காயாதே

    என்னுயிரும் நீயல்லவோ.."

    -வெங்கடேஷ் ஆறுமுகம்

    • நாம் டிசைன் செய்த ஒரு பொருள் இந்த ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பாக தேர்ந்தெடுக்கபட்டு விருது வாங்கியிருக்கிறது.
    • முக்கியமான எல்லா செய்திகளையும் சொல்லவேண்டும்.

    பில் கேட்ஸுக்கு ஒருமுறை அவரது கம்பனியில் இருந்த மேலதிகாரி ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.."நாம் டிசைன் செய்த ஒரு பொருள் இந்த ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பாக தேர்ந்தெடுக்கபட்டு விருது வாங்கியிருக்கிறது" என..

    பில்கேட்ஸிடமிருந்து பாராட்டு வரும் என அவர் எதிர்பார்க்க, "எத்தனை ஆண்டுகளாக அந்த விருது வழங்கப்படுகிறது? இத்தனை ஆண்டுகளில் நம் கம்பனியின் எத்தனை தயாரிப்புகள் அந்த விருதை வாங்கியுள்ளன? மற்ற ஆண்டுகளில் எந்தெந்த கம்பனிகளின் தயாரிப்புகள் அந்த விருதை வாங்கின?" என கேட்டு பதில் மடல் அனுப்பினார் பில்கேட்ஸ்.

    அதன்பின்னர் பார்த்தால் அந்த ஒரு ஆண்டு மட்டுமே மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் அந்த விருதை வாங்கி இருந்தன. மற்ற ஆண்டுகளில் பிற கம்பனிகள் விருது வாங்கி இருந்தன.

    "முதலாளி பாரட்டுவார் என நினைத்து அவர்கள் அந்த தகவலை என்னிடம் அனுப்பினார்கள். ஆனால் வெறுமனே நல்ல செய்திகளை மட்டும் நிர்வாகிகளிடம் சொல்லி பாராட்டு பெற்றுவிடலாம் என்ற எண்ணம் தொழிலாளிகளிடம் வரக்கூடாது. முக்கியமான எல்லா செய்திகளையும் சொல்லவேண்டும்.

    அதனால் என்னிடம் நல்லவிசயத்தை யாராவது சொன்னால் பதிலுக்கு வேறு என்ன தவறாக நடக்கிறது என கேட்பது என் வழக்கம். அதனால் வெறுமனே நல்லவிசயத்தை மட்டும் தூக்கிக்கொண்டு என்னிடம் யாரும் வரமாட்டார்கள்" என்கிறார் பில்கேட்ஸ்

    இப்படி எல்லாம் வித்தியாசமாக சிந்தித்தால் தான் பிசினஸ் பிஸ்தாக்கள் ஆகமுடியும்.

    -நியாண்டர் செல்வன்

    • உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை.
    • பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு ஒரு வாக்கியம் இருக்கே, அது எவ்வளவு உண்மை?

    பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகி விட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது.

    உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது.

    ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும்.

    ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள்.

    புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்தது. அது எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில் தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியை விட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

    உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப் பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது.

    புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும். அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான்.

    தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான். அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை.

    ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால் தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து,உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண் தான். ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்பு தான் என்ன?

    ஓர் ஆண், பெண்ணை மரியாதையுடன் உரிய மதிப்புடன் கையாளத் தெரியாவிட்டால், அவளால் அழிந்து போகக் கூடும்.

    - சாந்தசீலன்.

    • ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
    • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

    ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

    * ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

    * கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * இஞ்சி, தேனுடன் சிறிதளவு பேரீச்சம்பழம் சேர்த்து தினசரி சாப்பிட்டுவர இதைத் தடுக்கலாம்.

    * உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்துச் சாறாகக் குடிக்கலாம். இது உடல் வலுப்பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

    * தினசரி இரண்டு நெல்லிக்காய் மற்றும் 100 கிராம் அளவு கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    * தினசரி ஒரு வகையான பழம் என்னும் வீதம் பழமாகவோ பழச் சாறாகவோ குடிக்கலாம்.

    - டாக்டர். கர்ணன் மாரியப்பன்.

    • நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா.
    • முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.

    'கன்பூசியஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?'

    'இன்னா சொல்லிக்கிறார்?'

    'வேலைக்காரன் மீது சந்தேகப்படாதே. சந்தேகத்துக்குரிய நபரை வேலைக்காரனாக வைத்துக் கொள்ளாதே' அப்படின்னு சொல்லியிருக்கிறார். என்ன அருமையா சொல்லி இருக்கிறார் பாருங்க'

    'அட. இதை நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா. 'தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்'

    'சரி. இயேசு கிறிஸ்து பைபிள்ல என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?'

    'என்ன சொல்லியிருக்கிறார்?'

    'ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு… செய்தாயிற்று'

    'அட. இதேமாதிரி திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்பா. 'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்'

    'நெப்போலியன் போனபார்ட் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? (இன்னும் முடியலையா?)

    ''என்ன சொல்லியிருக்கிறார்?'

    'முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. அப்போதுதான் கட்டளையிடுவது எப்படி என்பதை நீ கற்றுக்கொள்ள முடியும்னு சொல்லியிருக்கிறார்'

    'அடேங்கப்பா. இதையும் நம்ம திருவள்ளுவர் ஏற்கெனவே சொல்லிட்டார். 'நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது'

    அதாவது நுணுக்கமாக அடுத்தவர் பேசுவதைக் கேட்டு யார் ஒருத்தர் உள்வாங்குகிறாரோ நாளைக்கு அவர் பேசுறதைப் பார்த்து அடுத்தவங்க வணங்குற அளவுக்கு அவரோட பேச்சு இருக்கும் அப்படின்னு இதற்கு அர்த்தம்.

    -மோகன ரூபன்

    ×