என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மற்றவை
- என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது.
- என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது.
ஜி.டி.நாயுடு ஒருதரம் சிட்டிசன் வாட்ச் கம்பெனிக்குப் போயிருந்தாராம்.
உள்ளே போகிறவர்களை எல்லாம் யாரு, என்ன படிப்புத் தகுதி என்றெல்லாம் கேட்டு சிற்சில இடங்களைப் பார்க்க அனுமதி மறுத்து விடுவது அந்தக் கம்பெனியின் வழக்கமாக இருந்தது.
நாயுடுவுக்கு எந்தத் தடையும் சொல்லாமல் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லி விட்டார்களாம்.
ஏன் என்று கேட்டதற்கு எங்கள் தொழிற் நுட்பம் காப்பி அடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை கட்டுப்பாடுகள்.
உங்கள் படிப்புத் தகுதிக்கு நீங்கள் அப்படி எதுவும் செய்து விட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றார்களாம்.
நாயுடு எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டார்.
இந்தியா வந்த பிறகு, சில நாட்களில் அசல் சிட்டிசன் வாட்ச் போலவே இருக்கும் ஒரு வாட்சை தயாரித்து சிட்டிசன் கம்பெனி நிர்வாகத்துக்கு அனுப்பினாராம்.
அத்துடன் அவர் அனுப்பியிருந்தகடிதத்தில்,"என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்."
என்று குறிப்பிட்டு இருந்தாராம்.
-சிவபிரகாஷ்
- குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
- குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
நம் அன்றாடும் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளுக்கு மூலகாரணம் பேராசையும், அது நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றமும், துயரமும் தான் காரணம்..
இதில் சிக்காமல் இருப்பதற்கு ஒரே வழி நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தி அடைவதே சாலச் சிறந்தது..
குருவிடம் வந்தான் ஒருவன்.
''குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு'' என்றான் வந்தவன்.
''அப்படியா?''
''ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆனந்தமாக இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.''
குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
''இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று சொல்'' என்றார்.
குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.
''குருவே, அவன் நிம்மதியே போச்சு.''
''அப்படியா, ஏன்? அவனுக்குத் தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...''
''அதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகி விட்டான்.
ஆனால், ஒன்பது காசுகள் தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான்.
வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.''
''இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா?'' என்றார் குரு.
இருப்பதை வைத்து திருப்தி கொள்வதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனம் உடையவர்களே உண்மையில் பணக்காரர்கள்.
ஆம்., 'கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும்.."
-மனோகர் ராஜா
- இரவு உணவாக இரண்டு வாழைப் பழம் தேன் கலந்து உண்டு, காய்ச்சிய பசும்பால் குடிக்கலாம்.
- காலை உணவில் இஞ்சி, பூண்டு, மல்லித்தழைசேர்த்தரைத்த துவையல் உண்ணலாம் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாயின் போது பெண்களுக்கு கொஞ்சம் வயிற்று வலி இருக்கும், சிலருக்கு வலி கொஞ்சம் அதிகமா இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவங்க அடிக்கடி உணவில் புதினா சட்னி சேத்துக்கறது நல்லது.புதினா ஜுஸ் கூட குடிக்கலாம்.
சிலர் சூதக வலியால் ரொம்ப கஷ்ட படுவாங்க, அவங்க இளநீரில் சிறிது தேன் கலந்து குடித்து வரலாம்.
சிலருக்கு உரிய காலத்தில் மாதவிடாய் ஆகாது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று ஆவதால் ரொம்ப கஷ்டப்படுவாங்க, இதற்கு மாதவிடாய் ஆகவேண்டிய ஆறு நாட்கள் காலை வெறும் வயிற்றில் வல்லாரை கீரை, வேலிப்பருத்தியிலை சம அளவு எடுத்து அரைத்து ஒரு கோலிக்கா அளவு உண்பது நலம்,இதை ஒழுங்குக்கு உட்பட்டு வரும் வரை தொடரலாம்.
மாத விலக்கின் போது அந்த மூன்று நாட்களுக்கு பெரும் துன்பமா இருக்கும், இவங்க அந்த மூன்று நாட்களுக்கு முன்னரே மூன்று நாட்கள் இரவு உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது,
இரவு உணவாக இரண்டு வாழைப் பழம் தேன் கலந்து உண்டு, காய்ச்சிய பசும்பால் குடிக்கலாம்.
காலை உணவில் இஞ்சி, பூண்டு, மல்லித்தழைசேர்த்தரைத்த துவையல் உண்ணலாம் நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும், பின்னர் திடீரென மருமாதம் மாதவிடாய் வெளியாகாமல் நின்றும் விடும், இப்படி ஆகும் போது வலி ரொம்ப அதிகமாகி கஷ்டம் கொடுக்கும், சில சமயங்களில் அதிக அளவில் வெளியாகியும் கஷ்டம் கொடுக்கும், சாதாரணமாக வெளியேராமல் கட்டி, கட்டியா வெளியேறியும், துன்பம் கொடுக்கும்,
இவங்களுக்கு துளசி ஒரு நல்ல மருந்து, 1/4கிளாஸ் துளசி சாறுடன் 1ஸ்பூன் தேன் கலந்து, ஒரு மண்டலம் குடிக்க வேண்டும், நிவர்த்தியாகும். இதனால் இரத்த சுத்தி ஏற்பட்டு வயிறு, இருதயம், வலிமையாகும்.
சிலருக்கு சரியான நாட்களில் மாத விலக்கு ஆனாலும் கூட அது சரிவர வெளியாவதில்லை, சிலருக்கு அதிக அளவில் வெளியாகி அடி வயிற்றில் வலியை உண்டாக்கி களைப்பாக்கி விடும்,
இதற்கு தினம் காலை,மாலை, பிரண்டை உப்பை, வெண்ணையுடன் உண்டுவர நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாகவே மாதவிடாய் பிரச்சினைகளுக்கு, விதையுள்ள கருப்பு திராட்சைப் பழம் மாமருந்து. மாதவிலக்கு ஆகவேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே திராட்சைப் பழங்களை கொஞ்சம் கூடுதலாக உண்டு வரவேண்டும்,
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக மாதவிடாய் கோளாறு களைப் போக்கிட திராட்சைப் பழங் களை உட்கொள்வது நலம்.
-கவி மரபு வைத்தியம்
- ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.
- எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.
நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும்..
அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.
அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.
அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.
அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.
அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.
ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.
உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.
எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.
எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.
ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.
கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.
கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.
கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
-தேவி பி.கண்ணன்
- அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது.
- ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது.
"இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும் கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம்.
அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனைக் காத்து வருவது கருணை.
ஒரு முட்டையைப் பாருங்கள். அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைத்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்றது அன்பு.
முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட் கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட் கருவுக்கு அதனைச் சுற்றியுள்ள வெள்ளைக்கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கின்றது. இது போன்றது கருணை.
ஒரு மாமரத்தில் பிஞ்சுவிடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்துவிடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயன நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது அது தான் கருணை.
உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக்கொண்டோ அல்லது அது பிரிந்து போய் விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெரும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிறாள் இதுதான் கருணை."
- வேதாத்திரி மகரிஷி.
- பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.
- ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று.
தம்பி எம்.எஸ்.விஸ்வநாதன் கடுமையான உழைப்பாளி. தூங்குகிற நேரம் மிகவும் குறைவு. நாள் முழுதும் உழைப்பு. இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.
"ஊமைத்துரையில் "துரை" என்று வருகிறதே அண்ணே, அவன் வெள்ளைக்காரனா ? என்று ஒருமுறை கேட்டான்.
காபூல் நகரில் தங்கி இருந்தபோது , "இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான் " என்றேன்
"யாரண்ணே கஜினி முகம்மது ? என்றான்.
பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.
தொழிலில் தளர்ச்சி இல்லாமல் தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடியாது.
எல்லோருமே விதைபோட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள். இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போன இசை அமைப்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
ஜூப்பிடரில் நடிகனாகி, ஆபீஸ் பையனாகி, ஆர்மோனிஸ்ட்டாகி, சுப்பராமன் இறந்த பிறகு இசை அமைப்பாளனாகி, எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயில் பல்லவி பாடியவன் தம்பி.
இசைக்குப் பாட்டா ? பாட்டுக்கு இசையா?
இரண்டும் பாதிப் பாதி.
'ஆகாயப் பந்தலிலே'இசைக்கு எழுதப்பட்ட பாட்டு. 'சோதனைமேல் சோதனை'பாட்டுக்குப் போடப்பட்ட இசை.
"இது நன்றாக இல்லை"என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர், விஸ்வநாதன்.
'மாலையிட்ட மங்கை'படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று. காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை.
நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, "நெஞ்சில் ஓர் ஆலையத்தில்" வரும் "முத்தான முத்தல்லவோ " நான்கு மாதங்கள் உயிரை விட்ட பாட்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாட்டு.
- கவியரசரின் 'சந்தித்தேன், சிந்தித்தேன்' நூலிலிருந்து..
- 22 நாடுகளின் மக்கள் தொகை 130.95 கோடி.
- ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை 6 கோடி.
உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!
அமெரிக்கா : 32.1 கோடி
ரஷ்யா : 14.6 கோடி
ஜெர்மனி : 8.5 கோடி
துருக்கி : 8.4 கோடி
யூ.கே : 6.8 கோடி
பிரான்ஸ் : 6.5 கோடி
இத்தாலி : 6.1 கோடி
ஸ்பெயின் : 4.7 கோடி
போலந்து : 3.8 கோடி
ருமேனியா : 1.9 கோடி
நெதர்லாந்து : 1.7 கோடி
கிரீஸ் : 1.7 கோடி
பெல்ஜியம் : 1.2 கோடி
செக் குடியரசு : 1.1 கோடி
போர்ச்சுகல் : 1.1 கோடி
சுவீடன் : 1 கோடி
ஹங்கேரி : 1 கோடி
சுவிட்சர்லாந்து: 0.9 கோடி
பல்கேரியா : 0.7 கோடி
டென்மார்க் : 0.6 கோடி
பிரேசில் : 21.2 கோடி
அர்ஜென்டினா : 4.45 கோடி
மொத்தம் 22 நாடுகளின் மக்கள் தொகை : 130.95 கோடி
ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை : 6 கோடி.
130.95 + 6. = 136.95 கோடி!
மொத்தம் 66 நாட்டு மக்கள் தொகை 137 கோடி.
இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி.
-வேங்கடசாமி
- ஆற்று நீர் இந்த வண்டல்களோடு, கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.
- கடலுக்கு நடுவாப்புலே... அப்படி ‘அரங்கம்’ மாதிரி உருவாகி நின்னுச்சி’னா ... இலங்கை’னும் சொல்லுவாங்க.
ஓடிவரும் ஆறு... கல், மண், மரம், செடி, கொடி, இறந்த உயிரினங்கள் யாவற்றையும் உருட்டிப் புரட்டி இழுத்துவரும்.
வரும் பாதையில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் ... ஆறு இழுத்துவரும் பொருட்கள்... அந்த தடங்கலில் சிக்குண்டு தங்கி ஆற்று நீர் திசைமாறி வளைந்தோடும்.
இப்படித் தொடர்ந்து தங்கும் பொருட்கள் யாவும் ஒன்றாகச் சேர்ந்து உருவாவதே வண்டல் மண்ணாகும்.
ஆற்று நீர் இந்த வண்டல்களோடு, கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும். கனிமங்கள் ஒன்று சேர்ந்து கனிமப் படிவங்களை உண்டாக்கும்.
இவ்வாறு உண்டான வண்டல் படிவங்கள் காலப்போக்கில் படிவப் பாறைகளாக மாறும்.
இப்படி அழகாக உருவாகி, ரம்மியமாக இருந்ததுதான் இலங்கைத் தீவு, அது ஆஆஆஆ.....ரம்பத்திலே உருவானக் கதை இதுதான்.
ஒழுங்கா ஓடிக்கிட்டு இருக்கற ஆறு...
நடுவிலே ... பெரிய மலையோ, மண்திட்டோ... இருக்கற இடத்தை கடந்து ஓடறப்போ...
மத்தியிலே... அந்த தடுப்புலே மோதி ... ரெண்டா பிரிஞ்சி ஓடும்.
அந்த ரெண்டா பிரிஞ்சி ஓடுன ஆத்துக்கு நடுவுலே... நிலம் அல்லது திட்டு அல்லது தீவு உருவாகி... அதுல மரம் செடி கொடி வளரும். அது பேரு... ஆற்றிடைக் குறை !
இப்புடி உருவாகற நிலம் மனுஷன் வாழறதுக்கு தோதாகவும், வளமாகவும் இருக்கும்.
அதுக்கு தமிழிலே... அரங்கம்'னு, சொல்லுவாங்க.
அதுவே கடலுக்கு நடுவாப்புலே... அப்படி 'அரங்கம்' மாதிரி உருவாகி நின்னுச்சி'னா ... இலங்கை'னும் சொல்லுவாங்க.
காவிரிக்கு நடுவுல இருக்கற குறையை திருவரங்கம்'னும், கடலுக்கு நடுவாப்புல இருக்கற குறையை இலங்கை'னும் ... தமிழர்கள் அழைத்தார்கள்.
-மானெக்ஷா
- வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு.
- பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும்.
"வான்குருவியின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது."
-ஔவையார்
வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப்படும் வலிமையான இயற்கைப் பசை, தேன்அடை, சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய புலனங்களே! ஆனால் இந்த அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?
ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக்குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !
அதாவது இந்த உலகத்தில் ஆறறிவுப் படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும் இருக்கவே செய்கின்றன என்பதை இடித்துக் காட்டி, வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !
-வை.வேதரெத்தினம்.
- மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
- பொதுவாக, சாக்ரடீசிடம் யாராவது கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.
கிரேக்க நாட்டில் தோன்றிய சிந்தனையாளர்களில், சாக்ரடீஸ் தலை சிறந்தவர். தத்துவ ஞானி என்றால், அழுக்குப்பிடித்த ஆடைகளை உடுத்திக் கொண்டு, வேலைக்கு போகாமல், தத்துவம் பேசியவர் அல்ல..
ராணுவத்தில் பணியாற்றினார்.. குடும்பத்தை பராமரித்தார்.. மனிதர்கள் சமூகத்தில் எவ்வாறு வியாபாரம் செய்வது, கல்வி கற்பது, வழக்குகளில் வாதிடுவது என்று, எளியவர்களுக்கும் புரியும்படி உணர்த்தினார்.
ஆனால், இவ்வளவு நல்லது செய்த சாக்ரடீசை, அந்நகர ஆட்சியாளர்கள், விஷம் கொடுத்து மரண தண்டனை அளித்தார்கள். அது ஏன்?
காரணம், பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரத்தை சாக்ரடீஸ் செலவிட்டார். அனைவரையும் சிந்திக்க வைத்தார். அதுதான், ஆட்சியாளர்களுக்கும், மத குருக்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இதனால், சாக்ரடீசின் மீது பொய் குற்றம்சாட்டி, அவருக்கு மரண தண்டனை கொடுத்தனர்.
அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தும், நாட்டின் சட்டங்களை மதிப்பதாக கூறி, சாக்ரடீஸ் மரணத்தை வீரத்துடன் எதிர்கொண்டார்.
பொதுவாக, சாக்ரடீசிடம் யாராவது கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.
சாக்ரடீஸ், அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்பார். அதில் கிடைக்கும் பதில்களை வைத்து, உண்மையை உணர்த்துவார்.
இதை சாக்ரடீசிய முறை என்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்க, மிகச்சிறந்த உத்திகளில் ஒன்றாக ஆசிரியர்கள், சாக்ரடீசிய முறையை பரிந்துரைக்கின்றனர்.
- பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க.
- அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப்படுகிறது.
மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ்.
"ஏண்ணே, இப்போ எல்லா பசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும் தலைவர் யோசித்தார்.
"சரி, இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுடறேன். வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.
இலவச சீருடை அணிந்து பள்ளிக்குச்சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம்.! நேற்று வரை தங்க ஜரிகை சட்டை போட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப் போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப்படுகிறது.
-வேலாயுதம் விக்னேஷ்
- நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
- துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.
துபாயை இன்றைய நிலைக்கு கொண்டு வந்த ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமிடம் துபாயின் எதிர்காலம் குறித்து கேட்டபோது அவர் கூறிய வார்த்தைகள்...
"எனது அப்பாவும், அப்பாவின் அப்பாவும் ஒட்டகங்களில் பயணம் செய்தவர்கள்.
இன்று நான் பென்ஸிலும், எனது மகன்கள் மற்றும் பேரன்கள் லேண்ட் ரோவரிலும் பயணம் செய்கிறோம்.
ஆனால் என் பேரன்களின் குழந்தைகள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
ஏன் என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு பதிலளித்தார்...
நான் என் அப்பா, அப்பாவின் அப்பா படும் துன்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.. அந்த அறிவே என்னை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது...
ஆனால் என் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் அந்த கஷ்டங்களை பார்த்ததில்லை..
துன்பம் ஒரு மனிதனை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.. அது எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறனை அவனுக்கு ஏற்படுத்துகிறது.
ஆனால் என் பேரக்குழந்தைகள் போன்ற இன்பத்தை மட்டும் அனுபவிப்பவர்கள் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது கடினம். அவர்கள் விரைவில் சோர்வடைவார்கள்.
துன்பம் வரும்போது இன்ப உலகில் வாழ்ந்தவன் பலவீனமடைகிறான். என் பேரப்பிள்ளைகளுக்கும் அப்படித்தான் இருக்கும். பின்னர் அவர்கள் மீண்டும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்…"
என்ன அழகான பதில்...
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்