search icon
என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • புனித ஸ்தலமாகவும், சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது.
    • தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபும் மாவட்டம் ராமேசுவரம் இந்திய அளவில் புனித ஸ்தலமாகவும், சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 2.50 கோடி வரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் அனைவரும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சந்திரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பல கோடி மதிப்பிட்டில் 2017 ஆண்டு முகுந்தராயர் சந்தரம் பகுதியில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இந்த பணி தொடங்கும் நிலையில் மீனவர்கள் இந்த பகுதியில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் கட்டுமான தொடங்கி முடிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தொடந்து கடல் சீற்றத்தின் காரணமாக டி வடிவில் அமைக்கப்பட்ட பாலம் ஒரு பகுதி உடைந்து கடலுக்குள் விழுந்து விட்டது. மற்றொரு பகுதி உடைந்து கடலுக்குள் விழும் நிலையில் உள்ளது.

    பாலத்தின் சேதமடைந்த பகுதியில் அலைகள் சீற்றத்துடன் மோதி 15 அடி உயரம் வரை மேல் எழும்புகின்றனர். சூறாவளி காற்று வீசம் நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆட்களை இழுத்து செல்லும் அளவிற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்புகின்றன.

    இதன் ஆபத்தை உணராமல் முகுந்தராயர் சத்திரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் பாலத்தில் நடந்து சென்று பார்ப்பதுடன் பெண்கள், குழந்தைகளுடன் சென்று செல்பி எடுத்துக்கொள்ளுகின்றனர்.

    பாலம் உறுதி தன்மை இல்லாத நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்லுவதால் பாலம் சேதமடைந்து கடலில் விழுந்தால் யாரையும் காப்பற்ற முடியாது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் எச்சரித்தாலும் அதனை சுற்றுலாப் பயணிகள் பொருட்படுத்துவதில்லை. எனவே சேதமடைந்து பாலத்திற்கு யாரும் செல்ல முடியாத நிலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.
    • ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15-ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மீனவர்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதற்கிடையே கடலில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று முன்தினமும், நேற்று காலை ராமேசுவரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 497 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலையில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையை ஒட்டிய கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

    இதைப்பார்த்து அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் மீது அவர்களின் படகுக்குள் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

    இந்த கொடூரதாக்குதலின் உச்சக்கட்டமாக ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் என்பவரது விசைப்படகு மீது தங்களது பலம் வாய்ந்த ரோந்து கப்பலை வைத்து மோதி படகை உடைத்து சேதப்படுத்தினர். இதில் படகில் இருந்த 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக அவர்களின் பிடியில் இருந்து உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

    மேலும் ஈசாக் ராபீன், செல்வக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் அதில் இருந்த சகாய ராபர்ட் (வயது 49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோப்பு (24), ஹரி கிருஷ்ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ் (26), ராம்குமார் (24), லிபின்ராஜ் உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இரண்டு படகுகள் மற்றும் அதில் பிடித்து வைத்திருந்து மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் 9 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யும் பணியில் இலங்கையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களில் 8 மீனவர்கள் குறித்த விபரம் மட்டுமே உள்ளது. ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், மீனவ சங்கத்தலைவர் சாகயம் கூறியதாவது:-

    ராமேசுவரத்தில் மீன்பிடி தடைகாலம் நிலைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேருடன் மூன்று படகுகள் பறிமுதல், இதன் பின்னர் பாம்பன், நம்பு தாளை மீனவர்கள் 25 பேருடன் நான்கு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று 9 மீனவர்களுடன் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார். படகுகளையும், மீனவர்களையும் மீட்கவில்லையென்றால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடங்கி விடும் எனவும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

    • பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.
    • விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    இளைஞர் ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.

    செல்போன் திடீரென வெடித்து சிதறியதில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி, கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதைதொடர்ந்து, விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • காற்றின் வேகம் குறைந்ததால் மீன்பிடி தடையை மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலில் வீசிய சூறை காற்று காரணமாக கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டது.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடி தடையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.

    இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறை முகங்களில் இருந்து விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றுள்ளனர்.

    • தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
    • சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் ராமேசுவரத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தததால் தான் எனக்கு மக்கள் அதிக வாக்களித்தனர். எனவே பிரதமருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 52 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் வெற்றி பெற்று ஆட்சி செய்துள்ளது. ஆனால் தற்போது அனைவரும் பிரிந்து இருப்பதால் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.


    தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலா தொடங்கிய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரிந்து கிடக்கும் சக்திகளை இணைப்பதற்காக சசிகலாவை விரைவில் சந்திப்பேன்.

    தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது. எனவே அரசு கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

    மேலும் ஆழ்கடலில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். கடலோர பகுதியில் சூறை காற்று வீசுவதால் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு உள்ள படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர். வானிலை மையம் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தொடர்ந்து 4 நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்களின் இயல்பான பணி முடங்கியது. புயல் சின்னம் நீங்கி கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? என ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். 

    • 2-வது நாளாக இன்றும் அதே நிலை நீடிப்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
    • 8 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் வங்ககடலில் உருவாகி உள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக கடற்கரை மாவட்டங்களில் 60 கி.மீ.வரை சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக்நீரிணை கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் அதே நிலை நீடிப்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தும்பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை என 2 கடல் பகுதிகளை கொண்டுள்ளது. இதில், மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றன.

    இதே போன்று பாக் நீரினை கடல் பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடற்கரை மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

    குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    இதனைத்தொடர்ந்து மீனவர்களின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது.

    மேலும் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்குதளத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.
    • பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 1-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதிகாலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்க தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதே போல் பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம், தனுஷ்கோடி கடற்கரை, கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
    • மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கனவாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள், மற்றும் கோழித்தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கனவாய் ரூ.400, நன்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 விலை இருந்து வந்தது.

    இந்த நிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற பின்னர் இறால் ரூ. 350-400, நன்டு ரூ. 250, கனவாய் ரூ. 180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றினைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை குறைந்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.

    இதனால் படகுகளை இயக்க முடியாத நிலையில் கடந்த 8-ந்தேதி முதல் காலவரையற் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்கள் ஆன நிலையில் பெரும்பால மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லும் தங்களுக்கு இலங்கை கடற்படை அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்கவும். பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • கடல் வழியாக கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
    • போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்த கடல் வழியாக தங்கம், கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களாகன கடல் குதிரை, திமிங்கல எச்சம் போன்றவையும் கடத்தப்படுகிறது. இந்த நிலையில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடல் அட்டைகள் கொண்டு வருவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்த போது அதில் 5 மூடைகளில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது. இதுதொடர்பாக மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் சுல்தான் மகன் சாகுல் ஹமீது (37) போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்திருந்த தாக தெரிய வந்தது, இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×