என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கோவை வரும் சிறப்பு ரெயில் ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.
- காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06182), ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.
* அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (22504), 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக புறப்படும்.
* காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17652), 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன.
- உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன.
சென்னை:
ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச் சிக்கலில் வீழ்வது இயற்கை. இதனை அவர் திவாலாகிவிட்டார் என்றும் சொல்வார்கள். அதுவே நீர்வளத்திற்கு நடந்தால்? சற்று யோசித்து பாருங்கள்.
கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரைவிட, நாம் சுரண்டிய நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 'உலகளாவிய தண்ணீர் திவால்' அறிக்கை, நிலத்தடி நீர் வற்றி வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாகப் பட்டியலிட்டு இருக்கிறது.
இந்த அறிக்கை வெறும் தண்ணீர் தட்டுப்பாடு என்பதைத் தாண்டி, நாம் மீளமுடியாத ஒரு பேராபத்தில் சிக்கியுள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் இதனை வெறும் எச்சரிக்கையாக மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கான அபாய சங்காகவும் ஊதியுள்ளது.
அப்படி என்னதான் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
• உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் நிலத்தடிநீர் மீண்டும் ஊற்று எடுக்க வாய்ப்பே இல்லாத ஆழத்துக்கு சென்றுவிட்டது.
• மழை மற்றும் பனி உருகுவதன் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரின் அளவைவிட, நாம் பயன்படுத்தும் நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நாம் இயற்கையின் 'சேமிப்பான' நிலத்தடி நீரையும், பனிப்பாறைகளையும் வேகமாகச் செலவழித்து வருகிறோம்.
• நன்னீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.
• உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. இயற்கையாக நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றெடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட நாம் அதனை உறிஞ்சு எடுக்கக் கூடிய வேகம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலப்பரப்பு உள்வாங்கும் அபாயம் உள்ளது.
3-ம் உலகப் போர்
• காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு சீரற்றுப் போய் இருக்கிறது. நதிகளின் ஆதாரமான பனிப்பாறைகள் 1970-க்கு பிறகு 30 சதவீதம் உருகிவிட்டன.
• நிலத்தடி நீரை சேமிக்கும் வங்கிகளாக செயல்பட்டு வந்த ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் அழிந்து நீர் சுழற்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.
• நகரமயமாக்கல் மற்றும் மாசுபாடு காரணமாகவும் தண்ணீர் திவால் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதாவது நகரங்களில் நிலப்பரப்பு முழுவதும் கான்கிரீட் பூசப்பட்டு, மழைநீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நீர் நிலைகளில் கலந்து நன்னீரை மாசுப்படுத்துகின்றன.
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற பேச்சுகள் வெறும் யூகமாக சொல்லக்கூடிய வார்த்தையோ, கற்பனைக் கதையோ அல்ல. அது நிதர்சனமான உண்மை என்பதை ஐ.நா.வின் 'தண்ணீர் திவால்' அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது பல கோடி மக்களின் தாகத்தை மட்டுமல்ல, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை
ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில், இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னை நகரம் உலகளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019-ல் சந்தித்தது போன்ற தண்ணீர் இல்லாத நிலை (டே ஜீரோ) மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்து நமக்குதான்.
தீர்வுகள் என்ன?
ஐக்கிய நாடுகள் சபை தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும், அதற்கான அதிரடி தீர்வுகள் என்ன? என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தண்ணீர் நெருக்கடி மேலாண்மையை இனி செய்ய முடியாது. மாறாக திவால் நிலையை மேலாண்மை செய்ய தொடங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
• தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.
•விவசாயத்தில் சொட்டு நீர் பாசனத்தை கட்டாயமாக்க வேண்டும்.
•நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கவேண்டும்.
•எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரை சேமிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
•பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மை காரணியாக மாற்றவேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பான சர்வதேச சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.
- சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும்.
- கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டிலும் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. உலக அளவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்ட ராக்கெட் என்ற பெயரை 'பி.எஸ்.எல்.வி.' ரக ராக்கெட் பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இ.ஓ.எஸ்-09 ராடார் இமேஜிங் செயற்கைக்கோளை சுமந்து சென்ற இந்த ராக்கெட்டின், 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தோல்வியடைந்தது.
அதேபோல், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ்.01 என்ற முதன்மை செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் கடந்தமாதம் விண்ணில் ஏவப்பட்டது.
அப்போது, ராக்கெட்டின் 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடையாமல் திட்டம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வியை தழுவின.
இதுகுறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
இஸ்ரோவின் 2 பி.எஸ்.எல்.வி. தோல்விகளைத் தவிர, கடந்த ஆண்டு இஸ்ரோ ஏவிய வழி செலுத்தல் செயற்கைக்கோள், என்.வி.எஸ்-02, விண்கலத்தின் 'திரஸ்டர் வால்வு' செயலிழப்பு காரணமாக அதுவும் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையத் தவறிவிட்டது. ஒவ்வொரு பயணத்திலும் என்ன தவறு நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்ய தனித்தனி உள் மற்றும் வெளிப்புற தோல்வி மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோல்வி குறித்து குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, எல்லாவற்றையும் சரிசெய்து, நம்மை நாமே சான்றளித்த பிறகு, மிகவும் லட்சிய இலக்காகக் கொண்டு சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும். கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருவேளை நான் தவறாக பாடியதுபோல் தோன்றினால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்
- இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், "மருதமலை மாமணியே முருகையா" என்ற புகழ்பெற்ற முருகன் பக்திப் பாடலை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருந்தார் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இது முருகப் பக்தர்களின் மனதைப் புண்படுத்தியதாக இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பாடல் வரிகளை மாற்றியதற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறி, தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மீதும் இந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் பாடகர் வேல்முருகன். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
"நான் பாடியதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முருகரை தவறாக பாடுவது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம். இதற்கும், அக்கட்சி தலைவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் தவறாக பாடவேண்டும் என்பதற்காக பாடவில்லை. ஒருவேளை நான் தவறாக பாடியதுபோல் தோன்றினால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
- 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது.
- போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆட்சியாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,Total Failure என்பதற்கு இந்த செய்தியே சாட்சி!
அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு! கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி, வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 'மருதமலை மாமணியே முருகையா' பாடலை மாற்றி விஜயை புகழ்வதுபோல் பாடியதற்கு எதிர்ப்பு
- நெல்லை மற்றும் சேலம் காவல் நிலையங்களில் புகார்
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், முருகன் பாடல் ஒன்றில் விஜய்யை உருவகப்படுத்தி பாடியிருந்தார். இந்த பாடலின்போது விஜய்யும் நடனமாடி இருந்தார்.
விஜய்யின் இந்த நடனத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் முருகன் பாடலை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகவும், அதற்கு விஜய் சைகை செய்து முருக கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் விஜய் மீதும், அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் மீதும், பாடகர் வேல்முருகன் மீதும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவரும் நெல்லை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனித பாடல் அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டதாகவும், இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
- பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.
- ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.
மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்கப்பட்டது.
- ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விறபனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து, தற்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14.270-க்கும் சவரனுக்கு 1,920ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையாது. மொத்தத்தில் இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து விற்பனையாகிறது. காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
31-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
30-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800
29-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-02-2026- ஒரு கிராம் ரூ.300
01-02-2026- ஒரு கிராம் ரூ.320
31-01-2026- ஒரு கிராம் ரூ.320
30-01-2026- ஒரு கிராம் ரூ.405
29-01-2026- ஒரு கிராம் ரூ.425
- மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
- கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அவரது மனைவி சுசீலா மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்கு பிறகு கல்வி கட்டணம் செலுத்த வழியின்றி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி பத்திரிகையில் வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்த மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் வாசுகி மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளும்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலெக்டர் அறிவுரையின்பேரில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து வாசுகி ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அவர் நேற்று கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து வாசுகியின் தாயார் சுசீலா கூறியதாவது:-
"எனது மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய பத்திரிகைகள், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. எனது மகள் முழுமையாக படிக்க அனைத்து உதவிகளையும் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்களின் கல்விக்கான உதவி மற்றும் நாங்கள் குடியிருக்க அரசு சார்பில் கோத்தகிரியில் ஒரு வீடும் கட்டி கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
- சுமார் 25 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
- தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.
சென்னை:
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.
தொழிலாளருக்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்க உள்ளன.
12-ந்தேதி அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
- அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்
அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரியை 25%-லிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக டிரம்ப் கூறிவந்தவாறே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
மேலும் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமானங்கள் உட்பட சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும், வர்த்தகத் தடைகளை நீக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
- கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 292 பேர் தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குக் கூட புதுவை அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, முறையான ஆள்சேர்ப்பு விதிகளின்படி ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள். 292 கவுரவ ஆசிரியர்களையும் பணி நிலைப்பு செய்ய புதுவை அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






