search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதில் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர்.

    அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    வள்ளியூர்:

    திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது23). இவர் சென்னையில் வெல்டராக பணிபுரிந்து வருகின்றார்.

    இவரும் நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.

    இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் தனது காதலன் ஞானவேலை வள்ளியூரில் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஞானவேல் தனது நண்பர்கள் 2 பேருடன் வள்ளியூருக்கு வந்து அந்த பெண்ணை சந்தித்ததோடு அவருடன் சாமி கும்பிட்டு விட்டு அருகில் உள்ள கல்மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அங்கு வந்த 3 பேர் காதலர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஞானவேல் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டியதாக வள்ளியூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் கலையரசன், அதே பகுதியை சேர்ந்த குட்டி மற்றும் கால் கரையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.
    • இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு வந்த சிலரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மேலும் அவர் மீதும் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உட்பட 14 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான விசாரணை நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.

    அதனைத் தொடர்ந்து இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று 8-வது முறையாக குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங் மற்றும் போலீசார் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-1 நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் முதல் நிலை காவலர் ஒருவர் ஆகிய 4 பேர் தவிர மீதம் உள்ள 10 போலீசாரும் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நீதிபதி திரிவேணி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.
    • இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை-பாளை ஆகியவை இரட்டை நகரங்களாக விளங்கி வருகிறது. இதில் பாளை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளன.

    இதில் பாளையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒவ்வொரு புதிய கல்வியாண்டின்போதும் இங்கு மாணவர் சேர்க்கையின்போது கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு இன்று எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை அறிந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மாலை முதலே பள்ளி முன்பு வரத்தொடங்கினர். தங்களின் குழந்தைகளுக்கு எப்படியாவது ஒரு இடம் இந்த பள்ளியில் கிடைத்து விட வேண்டும் என்ற பரிதவிப்பில் அவர்கள் இரவு முழுவதும் பள்ளியின் நுழைவு வாயில் முன்பே காத்திருந்ததை காண முடிந்தது.

    நேரம் செல்ல செல்ல ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அவர்கள் தாங்களாகவே ஒரு நோட்டினை தயார் செய்து முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து, அதனை தொடர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு பெற்றோரின் பெயர்களையும் வரிசை எண்கள் இட்டு எழுதி வைத்தனர். இந்த முன்னுரிமைக்காக நோட்டு இருந்தாலும், பெண் குழந்தைகளின் பெற்றோர்களோ, உறவினர்களோ யாராவது ஒருவர் வரிசையில் நிற்க வேண்டும் என அவர்களுக்குள் விதிமுறைகள் வைத்துக்கொண்டு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.

    ஒரு கட்டத்திற்கு பிறகு இரவில் சில பெற்றோர்கள் போர்வை, தலையணையுடன் பள்ளியின் வாசலில் விரித்து தூங்கினர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர். சுமார் 125-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இரவில் பள்ளி முன்பு காத்திருந்தனர். அந்த பள்ளியை காண்பதற்கு ஒரு சில பெற்றோர்களுடன் பெண் குழந்தைகளும் வந்ததை காண முடிந்தது. எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் விடிய, விடிய பள்ளி வாசலில் காத்திருந்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து இன்று காலை அந்த சாலை முழுவதும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பெற்றோர்கள் வரிசையாக நின்றனர். பள்ளி திறந்தவுடன் அவர்கள் விண்ணப்பத்தை வரிசையாக நின்று வாங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டி ஈ.பி. காலனியை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 45).

    இவர் நெல்லை சந்திப்பு பாபுஜி நகர் காட்டுப்பகுதியில் நேற்று மாலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் வெங்கடேசன் உள்ளிட்டவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த இடத்தில் காளிராஜிக்கு சொந்தமான கார் நின்றது. அந்த காரை திறந்து பார்த்தபோது சில நில பத்திரங்கள், ஆதார் அட்டையின் நகல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இருந்தது. அதன் மூலம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி வளர்மதியின் தொடர்பு எண் கிடைத்தது.

    அதன் மூலமாக அவரிடம் செல்போனில் நடத்திய விசாரணையில், காளிராஜ் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும், சம்பவத்தன்று நிலம் வாங்கி விற்பனை செய்வதற்காக நெல்லையில் ஒருவர் அழைத்ததாகவும் அதன் பேரில் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? நிலம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் கொலை கும்பல் உருவங்கள் தெளிவாக தெரியவில்லை.

    இதனால் உதவி போலீஸ் கமிஷனர்கள் செந்தில் குமார், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட காளிராஜ் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன.
    • பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

    இதில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர் அருகே உள்ள அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன. ஆனால் காலை 10.30 மணி வரையிலும் அங்கு 12 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    மானூர் அருகே பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து அம்மன்கோவில் தெரு மக்கள், கிருஷ்ணன் கோவில் தெரு மக்கள், தெற்கு தெரு மக்கள் மற்றும் அயல்நாடு வாழ் வாக்காளர்கள் இங்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அலவந்தான்குளம் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று கூறி நெல்லை திருத்து மற்றும் பல்லிக்கோட்டை கிராம மக்கள் அங்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். பூத் வெறிச்சோடி காணப்பட்டது.

    • ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.
    • மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். எனினும் ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கீரைக்காரன்தட்டு டி.டி.றி.ஏ. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திர கோளாறால் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் எந்திர கோளாறு காரணமாக பெட்டைக்குளம் காதர் மீராசாகிப் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்15 நிமிடமும், நவ்வலடி பள்ளியில் 10 நிமிடமும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    களக்காட்டில் உள்ள கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பேட்டரியில் சார்ஜ் இல்லாததால் வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. இதனால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமானது. பின்னர் மாற்று பேட்டரிகள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    நெல்லை மாநகரில் தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின. உடனடியாக அந்த பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பொன்னம்பாறை, அரசூர், புதுக்குளம், தச்சன்விளை ஆகிய 5 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தாமதமானது.

    • நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி மாவட்டம்தோறும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நேற்றே செய்து முடிக்கப்பட்டன.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 1,810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதற்காக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து நேற்று மதியத்திற்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிகளுக்கு அரசியல் கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மாதிரி ஓட்டு போட்டு காண்பித்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

    கிராமங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஒருசில பூத்களில் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.

    நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான கார்த்திகேயன் பாளை தூய யோவான் பள்ளியில் ஓட்டு போட்டார். தொடர்ந்து அவர் வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் நாற்காலியில் அழைத்துச்செல்லப்பட்டு ஓட்டுப்போட்டு சென்றனர். ஒரு சில மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக காத்திருப்பு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும் முதல் முறையாக ஓட்டுப்போட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியுடன் வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வந்தபின்னர் மை வைத்த விரலை நீட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,743 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்துவிட்டு சென்றனர். தென்காசி(தனி) தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே பெரும்பாலானோர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

    இதனையொட்டி தென்காசி பாராளுமன்ற தொகுதி முழுவதும் பதற்றமான 106 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 14 வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளை கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக கலெக்டர் கமல் கிஷோர் தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது. எனினும் உடனடியாக எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    அதேநேரத்தில் காலையில் இருந்து வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து நீண்ட வரிசையில் ஓட்டுப்போட காத்திருந்த வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல், ஓலை பந்தல் உள்ளிட்டவைகளும் போடப்பட்டிருந்தது. இதேபோல் வாக்குச்சாவடிகள் முன்பு குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டதோடு, துணை ராணுவத்தினரும் பணியில் இருந்தனர்.

    இன்று காலை 6 மணிக்கு பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதைத்தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்து சென்றனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சியினர் மேசைகள் போட்டு அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். முன்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில் பகுதிகளிலும் சுத்தப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.

    • பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
    • வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழியர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இங்குள்ள 6 தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும், 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும், பாளையில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 306 வாக்குச் சாவடிகளும், ராதாபுரத்தில் 307 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளத்தில் 319 வாக்குச் சாவடிகளும், அம்பையில் 294 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,810 வாக்குச் சாவடிகள் உள்ளன.

    இதில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் வீதம் மொத்தம் 4,354 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2177 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் வி.வி.பேட் எந்திரங்களும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவை அனைத்தும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை 249 வாகனங்களில் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 1,810 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 388 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்கள், 216 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

    இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை முழுவதுமாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8,026 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இன்று அவை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    இதற்காக துணை தாசில்தார் தலைமையில் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 136 வாகனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

    தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 203 பேர் என மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதில் 106 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 14 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் சி.சி.டி.வி. கேமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழி யர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நாளை வாக்குப்பதிவையொட்டி இன்று தாலுகா அலுவலகங்களில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீசாரின் பாதுகாப்புடன் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது.

    • உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
    • உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக உளவுத்துறையினர் அ.தி.மு.க தலைவர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை செல்போனில் பேசுவதை ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்காக ரூ. 40 கோடி மதிப்பில் உளவு சாதனம் ஒன்றை இறக்குமதி செய்து நாங்கள் பேசுவதை கண்காணித்து ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, உள்துறை செயலாளரோ, தமிழக முதலமைச்சரோ யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எனது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தேர்தல் சமயத்தில் எங்களது வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்துவோம். அதனை உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாலைக்குள் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.

    இன்று மாலைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நேற்று நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராதாபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.

    அதே நேரத்தில் நாங்குநேரி போலீசில் பிடிபட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூ. 28 லட்சம் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. அந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முறையான விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கெடு விதிக்கிறேன். நான் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை.
    • தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை உள்ளது.

    இந்த அணையை சுற்றி அகஸ்தியர் குடியிருப்பு, சேர்வலாறு, பெரிய மைலார், சின்ன மைலார், இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் 'இஞ்சிக்குழி' என்ற கிராமம் காரையாறு அணைக்கு மேல் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தென்பொதிகை மலையில் நடுகாட்டில் அமைந்துள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது வெறும் 7 குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். இந்த மக்கள் இங்கு வாழை, மிளகு, கிழங்கு போன்ற விவசாயம் செய்தும், தேன் எடுத்தும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    இஞ்சிக்குழி பகுதிக்கு செல்ல எந்த ஒரு வாகன வசதியும் கிடையாது. சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காரையாறு அணையை கடந்துதான் இஞ்சிக்குழிக்கு செல்ல வேண்டும்.

    அணையை கடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது படகில் ஆட்களை ஏற்ற மறுப்பதால் காணி பழங்குடி மக்கள் மூங்கில் மற்றும் மோட்டார் சைக்கிள் டயரால் 'சங்கடம்' கட்டி அணையை கடக்கின்றனர்.

    இஞ்சிக்குழி மக்கள் அரிசி, பருப்பு உள்பட தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வாரம் ஒருமுறை காரையாறு பகுதிக்கு வந்து செல்கிறார்கள்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இஞ்சுக்குழி மக்களுக்கு தேர்தல் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் சென்றடையவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை. அரசு சார்பிலும் ஓட்டுப்போட வரும்படி எந்த அழைப்பும் விடுப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

    இருப்பினும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களிப்பதற்காக இஞ்சிக்குழி மக்கள் கீழே இறங்கி வரத் தொடங்கி உள்ளனர். காரையாறு அணை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது.

    இங்குதான் இஞ்சிக்குழி மக்கள் உள்பட அனைத்து காணி பழங்குடி மக்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக 2 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, சுமார் 25 கிலோ மீட்டர் சவாலான காட்டு பயணம் மேற்கொண்டு கீழே இறங்கி வருகின்றனர். அவர்கள் காரையாறு அருகே சின்ன மைலாரில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு நாளை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இது குறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த காணி பழங்குடி மக்கள் கூறுகையில், 'நாங்கள் நடுக்காட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு ஏற்கனவே எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வனத்துறையினர் படகு தர மறுப்பதால் மிக சிரமத்தோடு அணையை கடந்து எங்கள் ஊருக்கு சென்று வருகிறோம். வேட்பாளர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. யாரும் பிரசாரத்துக்கும் வருவதில்லை.

    நாங்கள் இதுவரை ஓட்டு போட்டும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எங்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதில்லை.

    ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது அரசு சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரப்போகும் நெல்லை தொகுதி புதிய எம்.பி. எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×