search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
    • தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம், நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலின வாக்காளர்கள் 152 பேர் அடங்குவர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளது. தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

    100 வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் உள்ளனர். தொகுதியில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 13 வாக்குச்சாவடிகள் கவனிக்கத்தக்கதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.

    இந்த பாராளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரியான தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 203 பேரும் உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் 1,517 வாக்குச்சாவடிகள் உள்ளன. பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 126 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டயறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 8,873 பேரும், முதல் தலைமுறை வாக்காளர்கள் 22 ஆயிரத்து 492 பேரும் உள்ளனர்.

    • சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
    • குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராணி என்ற இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அக்குழந்தை பிறக்கும் போதே அதன் இரு சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.

    மேலும், சுவாச கோளாறுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமான நிலையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் இருந்த அந்த குழந்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.

    உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் அறிவுறுத்தலின் பேரில் அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட துறை டாக்டர்கள் மேற்பார்வையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அந்த சி.டி ஸ்கேனில் குழந்தையின் வலது கையின் ரத்தக்குழாய் 1.8 மில்லி மீட்டர் அளவிற்கு தடைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 5 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.

    அடுத்தடுத்த சிகிச்சைக்கு பின்னர் வென்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தை ஆக்சிஜன் உதவியில்லாமல் இயற்கை சுவாச நிலையை அடைந்து உள்ளது. மேலும், அக்குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    தென் தமிழகத்தில் சிறந்த சிகிச்சை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதுபோன்ற பல அரிய அறுவை சிகிச்சைகள் செய்து தென் மாவட்ட மக்களின் நலம் பேணுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு சாதனையாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

    இதே போல கோவில்பட்டியை சேர்ந்த மோகன செல்வி என்ற 9 வயது சிறுமி கடந்த 10-ந்தேதி அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த இரும்பிலான வேல் அவரது தொடையில் குத்தியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

    • கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.

    அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    • மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பேராச்சி செல்வி (வயது 35) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்குள்ள மறுகால்தலை பரும்பு பகுதியில் அனுமதியின்றி சிலர் சரள் மண் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    உடனே அவர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அங்கு சென்றார். அப்போது மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    ஒரு கட்டத்தில் மண் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ.வை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பேராச்சி செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேஷ் (30), அவினாப்பேரியை சேர்ந்த உலகநாதன் மகன் செல்லத்துரை (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேராச்சி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    • நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
    • பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜனதாவும் 3-வது அணியாக தங்களது தலைமையில் கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முன்னேற்ற கழகம் உள்பட கட்சிகள் பா.ஜனதாவுக்கு தாவி வருகிறது.

    தற்போது டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ். அணி ஆகியவையும் பா.ஜனதாவுடன் கைகோர்த்துள்ளது. இதனால் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி வலு பெற்று வருகிறது.


    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், பா.ஜனதாவுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவுடன் இணைப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பை கட்சியினரே எதிர்பாராத வகையில் சரத்குமார் அறிவித்தார். 2 கட்சிகளின் கொள்கையும் ஒத்துப்போவதால் கட்சியை இணைத்து விட்டதாகவும் அவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தெரிவித்தார்.

    இதனால் பா.ஜனதாவின் கூட்டணிக்கு தற்போது மேலும் வலு சேர்ந்துள்ளது என்றே கூறலாம்.

    தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், குமரி ஆகியவற்றில் நாடார் சமுதாயத்தினர் அதிக அளவில் இருக்கும் நிலையில் சரத்குமாரின் இந்த இணைப்பு மூலமாக தென் மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு வலு சேர்த்துள்ளதாகவே அக்கட்சியினர் கருதுகின்றனர்.

    இதற்கிடையே பா.ஜனதா சார்பில் நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

    ஏற்கனவே சரத்குமார் சமீபத்தில் நெல்லையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது நெல்லை தொகுதியில் நிச்சயமாக போட்டியிடு வேன் என்று தெரிவித்திருந்தார்.


    அவர் இதற்கு முன்பு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும் அதில் கணிசமாக ஓட்டுக்களை பெற்றிருந்தார். இதனால் அவர் ஏதாவது ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

    இதற்கிடையே கட்சியை அவர் பா.ஜனதாவுடன் இணைத்துள்ள நிலையில் எப்படியாவது நெல்லை தொகுதியில் போட்டியிடுங்கள் என்று கட்சியினர் அவரை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், வருகிற 15-ந்தேதி குமரியில் நடைபெறும் பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சரத்குமார் பங்கேற்க உள்ளார்.

    அப்போது சரத்குமார் நெல்லை தொகுதி வேட்பாளராக நிச்சயம் அறிவிக்கப்படுவார் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேநேரத்தில் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை என்பது போலவே நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளின் குரல் ஒலிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே நெல்லை தொகுதியில் போட்டியிடுவதற்காக பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் காய் நகர்த்தி வருகிறார்.

    அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் மத்திய மந்திரி வி.கே.சிங்கை அழைத்து வந்து வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து பாராளுமன்ற அலுவலகத்தை நெல்லை சந்திப்பில் திறந்தார்.

    ஏற்கனவே மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்ட நிகழ்வு கட்சி தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது நடை பயணத்தால் நெல்லை மாவட்டத்திலும் பா.ஜனதாவின் மீது மக்கள் பார்வை பதிய தொடங்கியதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர். இதற்கு முழு மூச்சில் நயினார் நாகேந்திரன் செயல்பட்டு உள்ளார்.

    அவர் தனக்கு தான் நெல்லை பாராளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஓட்டுக்களை பெற ஜான்பாண்டியன், யாதவ சமுதாய ஓட்டுக்களை பெற தேவநாதன் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தங்கள் பக்கம் பா.ஜனதா இழுத்துள்ள நிலையில், தற்போது சரத்குமார் இணைந்துள்ளதால் நாடார் ஓட்டுக்களை கணிசமாக கிடைக்கும் என்று பா.ஜனதாவினர் கணக்கு போட்டுள்ளனர்.

    இதனால் நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் சீட்டை வாங்குவதற்கு பா.ஜனதா தேசிய தலைமையிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
    • மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணி துறையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக மதுரையை தலைமையிடமாக கொண்ட தென்மண்டலத்தினை 2 ஆக பிரித்து நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பாளை என்.ஜி.ஓ.பி. காலனி பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தீயணைப்பு மீட்புப்பணி துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயக்குமார், நெல்லை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மண்டலமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 34 தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையங்களையும் உள்ளடக்கியது.

    பேரிடர் மற்றும் அவசர காலங்களில் இம்மண்டல துணை இயக்குநர் உடனுக்குடன் விரைந்து சென்று பணிகளை மேற்பார்வையிடுவதற்கும், மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல அலுவலக்திற்கு சென்று வருவதற்கான பயண நேரம் குறையும். இந்த மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகின்றனர்.
    • தென் மாவட்டங்களில் தனி தொகுதியாக இருப்பது தென்காசி தொகுதி மட்டுமே.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய கட்சியான பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளது என அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் உறுதிப்படுத்திய நிலையில் அவருடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளோம். மக்களவை மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றில் தலா ஒரு சீட் கேட்டு உள்ளோம். மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விருப்பத்தொகுதி என 3 தொகுதிகளை கொடுத்துள்ளோம்.

    அதில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொகுதியும் அடங்கும். பெரும்பாலும் தென் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எங்களது கோரிக்கைகளை தெரிவித்து விட்டோம். விரைவில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.


    தென் மாவட்டங்களில் தனி தொகுதியாக இருப்பது தென்காசி தொகுதி மட்டுமே. எனவே அந்த தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டபோது, தனி தொகுதியில் தான் நிற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எந்த தொகுதியிலும் நிற்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

    தென்காசி தொகுதியில் தற்போது தி.மு.க.வை சேர்ந்தவர் எம்.பி. ஆக இருந்து வருகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

    இதேபோல் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வென்றுள்ளன. இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதால் அக்கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு விஸ்வை ஆனந்தன், பொன் பால கணபதி, வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளிட்ட பலரும் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் ஜான்பாண்டியனும் தென்காசி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

    இதனால் அவருக்கு அந்த தொகுதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு இல்லை எனில் நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படலாம் என்று அக்கட்சியினரின் மத்தியில் பேசப்படுகிறது.

    • சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    இந்த பாராளுமன்ற தொகுதியில் நாடார் சமுதாயத்தினரின் வாக்கு சதவீதம் அதிகம் என்பதால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்படும்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கூட்டணி பலத்தை அதிகரிக்க ஒவ்வொரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்களது கட்சிகளை முன்னிறுத்தி கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

    அந்த வகையில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

    அவர் பா.ஜனதா கூட்டணியில் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி என 2 தொகுதிகள் கேட்டதாகவும், இது தவிர ஒரு ராஜ்ய சபா பதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை தொகுதியை சரத்குமார் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த தொகுதியில் நாடார் சமுதாய ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதாலும், ஏற்கனவே இங்கு கடந்த தேர்தல்களில் அவர் களம் கண்டுள்ளார் என்பதாலும் அவருக்கு நெல்லை தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை மனதில் வைத்தே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் நெல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளையும் தேர்தலுக்கு தயாராகுமாறு முடுக்கி விட்டுள்ளார்.

    இன்னும் ஓரிரு நாட்களில் சரத்குமார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிந்துவிடும். ஆனாலும் அவர் நெல்லை தொகுதியை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

    ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார். மேலும் காமராஜரின் சொந்த மாவட்டமான விருதுநகர் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அங்கு தனது மனைவியான ராதிகா சரத்குமாரை நிறுத்தலாமா? என்று அவர் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

    ஏற்கனவே சரத்குமார் விருதுநகரில் சுமார் 12 ஏக்கர் இடத்தில் தனது சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளார்.

    மேலும் அங்கு வருங்காலத்தில் பள்ளிக்கூடம் கட்டி இலவச கல்வி வழங்க எதிர்கால திட்டத்தையும் வைத்துள்ளார்.

    இதன் காரணமாக பா.ஜனதா கூட்டணி சார்பில் ஒரு தொகுதி மட்டும் வழங்கப்பட்டால், விருதுநகரை கேட்டு பெற்று அங்கு ராதிகாவை போட்டியிட வைப்பதோடு, ராஜ்ய சபா எம்.பி. பதவியை சரத்குமார் கேட்டு பெற முனைப்புடன் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இது ஒருபுறம் இருக்க, சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    நெல்லை தொகுதி தனக்கு தான் என்று முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பா.ஜனதாவின் நெல்லை பாராளுமன்ற அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.

    சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை அவர் முன்னின்று நடத்தி தனக்கு தான் நெல்லை சீட் என்று மேலும் பிடிவாதத்தை அதிகப்படுத்தி உள்ளார்.

    ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் சூழ்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட பல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர் விட்டு கொடுக்க வேண்டியது தானே என்று சொந்த கட்சியினரே ஆதங்கப்படுகின்றனர்.

    இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் வேட்பாளர்கள் குறித்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

    இதில் சுமார் 170 நிர்வாகிகள் கலந்து கொண்டு விருப்ப வேட்பாளர்களை எழுதி கொடுத்தனர்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் எழுதி கொடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு அதிகமாக இல்லை என்றாலும் அவர் எம்.பி. சீட்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையே தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிர்வாகிகளை இன்று சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னரே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எத்தனை? வேட்பாளர் சரத்குமாரா? அல்லது ராதிகா சரத்குமாரா என்பது தெரியவரும் என நிர்வாகிகள் கூறினர்.

    • முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.

    நெல்லை:

    தேர்தல் பத்திரம் மூலம் மத்திய அரசு மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதனை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாமல் பாரத ஸ்டேட் வங்கி காலதாமதம் செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை பாளை பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பொதுச்செயலாளர் மகேந்திரன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், வட்டார துணை தலைவர் பாண்டிய ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.

    அப்போது அங்கே பாதுகாப்பு பணிக்கு நின்ற பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பழைய சித்த மருத்துவ விதிகளின்படி குறைந்த பட்சம் இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் இடம் வேண்டும்.
    • கல்லூரி வளர்ச்சிக்கான நிதி வீணடிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக கடந்த 2016-ம் ஆண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இடப் பற்றாக்குறையால் வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பதிலாக அப்போது இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த ஆண்டிலேயே கல்லூரிக்கு கூடுதல் இடத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என்றும், கல்லூரி வளர்ச்சிக்கான நிதி வீணடிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி, அரசு சித்த மருத்துவக்கல்லூரியின் எதிர்கால நலனுக்காக தகுதி வாய்ந்த புதிய இடத்தை தேர்வு செய்து விதிகளின்படி புதிய கல்லூரியை உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் சுமார் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது அரசு சார்பில் கல்லூரியின் பாழடைந்த வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களை கட்ட ரூ.40 கோடி அறிவிக்கப்பட்டு ஓராண்டாகியும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்பன உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று 3-வது நாளாக மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    பழைய சித்த மருத்துவ விதிகளின்படி குறைந்த பட்சம் இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் இடம் வேண்டும். ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கும் போது இடப்பற்றாக்குறையால் ஏற்கனவே கட்டிய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முடிகிறது.

    எனவே கூடுதலாக சித்த மருத்துவ கல்லூரிக்கு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
    • சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    'அனைவரும் சமம்' என கூறிய அய்யா வைகுண்டர் சனாதனவாதியா? என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "1833-ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார். அந்த காலகட்டத்தில் அவரது சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக் கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.

    அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார். சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்டு வந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டியவர். அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இதுபோல் கால்டுவெல் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டு காலம் படித்தார். 18 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள்.

    அதனை மாற்றி திராவிடத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, திராவிட மொழி தனி மொழி, உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தார். சொல்வதை கேட்க வேண்டும், இல்லை என்றால் சொந்தமாக தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்" என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×