என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
    • உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் சாரல் மழை பரவலாக பெய்தது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை சில நாட்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அணைகள் நீர் பிடிப்பு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. நாங்குநேரி, களக்காடு, அம்பை, ராதாபுரம் சுற்று வட்டாரங்களில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஓடியது.

    அதேநேரம் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்கள் இருக்கும் நிலையில், திடீர் மழையால் அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மாநகரில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பூமி குளிர்ச்சி அடைந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக 12 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக வாட்டி வரும் கடுமையான வெயிலுக்கு நடுவே இன்று காலை 6 மணிக்கு திடீரென வானில் கருமேக கூட்டங்கள் கூடின. தொடர்ந்து சில நிமிடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் திடீர் மழை பெய்தது.

    தூத்துக்குடி முத்தையாபுரம், விமான நிலையம் பகுதி மற்றும் புதுக்கோட் டையில் கனமழை கொட்டியது. இன்று காலை 8 மணி வரையிலும் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் ஏராளமான உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்தது.

    இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் மிக அதிகமாக தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் 88 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் 67 மில்லி மீட்டர் மழையும், புதுக்கோட்டையில் 47 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம், முடிவைத்தானேந்தல், விட்டிலாபுரம், வல்லநாடு, ஓட்டப்பிடாரம், பன்னம்பாறை என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி, நாளை அதிகாலை நேரம் வரையிலும், குறிப்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார்.
    • கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ந் தேதி இரவில் 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    காவல்துறையில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்துவிட்டது. அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அஜித்குமாரும், ஆகாசும் இதனால்தான் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. நாங்குநேரி சம்பவம் அரசின் தோல்வியை காட்டுகிறது. முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை முன் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
    • அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக இன்று மாலை காரில் நெல்லைக்கு வந்தடையும் உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை சங்கர் நகரில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் திரண்டு தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

    அப்போது ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    பின்னர் கே.டி.சி.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலான பெட்ரோல் பங்க், கூட்டுறவு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மேயர் ராம கிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாநகர தி.மு.க. பொறுப்பாளர்கள் (மேற்கு) சுப்பிரமணியன், (கிழக்கு) தினேஷ், கிறிஸ்தவ தேவாயலங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யா னந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

    அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் கட்சியின் 28 சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட திரளான அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    தொடர்ந்து இரவு தென்காசி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். இரவில் குற்றாலத்தில் தங்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை(வெள்ளிக்கிழமை) காலை அங்கு நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அங்கிருந்து மாலையில் புறப்பட்டு வள்ளியூர் வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார்.

    அவரது வருகையையொட்டி நெல்லை மாநகர பகுதி முழுவதும் சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி நெல்லை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நெல்லை மாநகரில் டிரோன் பறக்க தடை விதித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நிகழ்ச்சிகளில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் வேலன்குளம் கண்ணன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மனோஜ்குமார், வக்கீல் மாயா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அனுராதா ரவிமுருகன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    • கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த சந்தேகப்படும்படியான 6 பேர் பிடிபட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்குள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் வந்து, திடீரென பெட்ரோல் குண்டை வீசியது. பின்னர் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

    மேலும் மர்மகும்பல் அருகில் உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திலும் புகுந்து அங்கிருந்த சிலரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடிவிட்டு தப்பிச் சென்றது.

    இந்த திடீர் தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜான் மார்க்(வயது 45) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா(50) என்ற செங்கல் சூளை தொழிலாளி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இச்சம்பவத்தில் பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த நெல்சன்(45), பிரபாகரன், ராமசாமி, வீராங்குளத்தை சேர்ந்த கணேசன் (58), புளியங்குளத்தை சேர்ந்த சசிகுமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட 2 பேர் உடலையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த நெல்சன், கணேசன் ஆகிய 2 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் மற்றும் போலீசார் இரவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் கஞ்சா, மது போதையில் வெறியாட்டம் ஆடினார்களா? அல்லது திட்டமிட்டு இச்சம்பவத்தை நிகழ்த்தினார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே தென் மணண்டல போலீஸ் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேற்று இரவோடு இரவாக நெல்லை வந்தார். அவர் நள்ளிரவில் பெரும்பத்து பகுதிக்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே, தப்பிச் சென்ற மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த பயங்கர சம்பவத்தால் நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பெரும்பத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் நேற்று இரவு முதலே நாங்குநேரியில் இருந்து மஞ்சங்குளம், பெரும்பத்து வழியாக ஏர்வாடி பகுதிக்கு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 2-வது நாளாக அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

    அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவை மூலமாக போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த சந்தேகப்படும்படியான 6 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தையடுத்து சாலையில் திரண்ட பெரும்பத்து கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இன்று மதியத்திற்குள் குற்றவாளிகள் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

    • சரமாரியாக வெட்டிய அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
    • பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருநெல்வேலியில் டீக்கடையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 3 இரு சக்கர வானங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாங்கள் எடுத்து வந்த அரிவாள் மற்றும் பிற ஆயுதங்களால் திடீரென தாக்குதல் நடத்தினர்.

    அங்கிருத்தவர்களை சரமாரியாக வெட்டிய அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

    இந்த சம்பவத்தில் 9 பேருக்கு வெட்டு விழுந்தது. 2 பேர் இறந்த நிலையில், 2 பேர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஏர்வாடி - நாங்குநேரி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட எஸ்.பி பிரசன்னா குமார் மற்றும் நெல்லை சரக டிஐஜி சரவணன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.   

    • மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது.
    • பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச தொடங்கிய நிலையில், மாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் 4 சென்டி மீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் நாங்குநேரி,

    ராதாபுரம், சேரன்மகா தேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையங்கோட்டையில் 18½ மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. டவுன், பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அணைகளை பொறுத்தவரை 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 91½ அடியாக உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக குண்டாறில் 28 மில்லி மீட்டரும், அடவி நயினாரில் 17 மில்லி மீட்டரும், கருப்பா நதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சில மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை அடித்தது. குற்றாலம் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி சுற்று வட்டாரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டாரத்தில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில கிராமங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கயத்தாறில் 9 சென்டிமீட்டரும், கடம்பூரில் 7 சென்டிமீட்டரும் மழை பெய்தது. எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் வேடநத்தம் பகுதிக ளிலும் பரவலாக மழை பெய்தது.

    • நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).

    இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அருணாச்சலமும், பழனியும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், வெள்ளையம்மாள், தனது மருமகள் வசந்தா (60) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் வசந்தாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது வாக்குமூலமாக கூறுகையில், எனது மாமியார் வயது முதிர்வால் நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னை சம்பந்தமே இல்லாமல் திட்டிக்கொண்டே இருப்பார்.

    வயல் வேலைக்கு அல்லது வேறு எங்காவது வேலை நிமித்தமாக சென்று வரவோ அல்லது சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு வீட்டுக்கு வர கொஞ்சம் நேரமாகிவிட்டால், சந்தேகப்பட்டு பேசுவார். இதனால் எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

    இந்நிலையில் நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என்றார்.

    இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் கிளைச்சிறையில் அடைத்தனர். 

    • வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
    • இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).

    இவர்களுக்கு பழனி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பழனி இறந்து விட்டார். மேலும் அருணாச்சலமும் இறந்துவிட்டார். இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    தகவல் அறிந்து நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    முதல் கட்ட விசாரணையில் வெள்ளையம்மாளை அவரது மருமகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 20-ந்தேதி காலை இவர் கல்லூரி பஸ்சை மதுபோதையில் ஓட்டிச்சென்றபோது நெல்லை-கடையம் சாலையில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகத்தில் மோதினார்.

    இதில் ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த டிரைவரான சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரை சேர்ந்த மனக்காவலம் பெருமாள் (49)மற்றும் சுத்தமல்லி அருகே பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சுத்தமல்லியை சேர்ந்த யஸ்வனி (15), பழவூர் கிராமத்தை சேர்ந்த செல்வபாலா (15) மற்றும் 10-ம் வகுப்பு மாணவன் முத்து அருள்(15) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தொடர்ந்து 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி செல்வபாலாவின் உடல்நிலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில் மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    சுமார் 4 நாட்களாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மாணவியின் உயிரை காப்பாற்ற போராடிய நிலையில் செல்வபாலா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி கொலையாகாத மரணம் விளைவிக்க முயற்சி என வழக்குப்பதிவு செய்து டிரைவர் இசக்கியப்பனை கைது செய்திருந்த நிலையில், தற்போது மாணவி இறந்துவிட்டதால் கொலையாகாத மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கை மாற்றம் செய்துள்ளனர். 

    • சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
    • தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

    நெல்லை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தை மலை மீது ஏற்ற முடியவில்லை. இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியும் வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொகுதி பங்கீடு மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க. கூட்டணியின் பேச்சுவார்த்தை சினிமா படத்தில் சொன்னது போல வாமா மின்னல் என வந்த வேகத்தில் போய்விடும்.

    தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துகள் மறைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமரை கொலை செய்வேன் என சொன்னவர் இதுவரை கைது செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. தி.மு.க. பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது. பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.

    பாரதிய ஜனதாவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவேன் என டி.டி.வி தினகரன் சொல்லி வந்ததாக கேட்கிறீர்கள். பா.ஜ.க., அ.தி.மு.க 2 கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.

    எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்கள். பலமுனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது. தி.மு.க.விற்கு எதிராக பலமான போட்டி இல்லை என முதலமைச்சர் சொல்லி வருகிறார். அதனை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.

    • அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
    • டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.

    பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.

    எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.

    திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.

    வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.

    நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.

    வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.

    அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார். 

    • மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
    • அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கௌசால்யபுரம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பி.சி.வி சர்வதேச பள்ளியில் (Holy Angels BCV International School) 2026-ம் ஆண்டு விழா ''சிற்பிகா 26'' என்ற பெயரில் நேற்று நடைபெற்றது.

    இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலந்து கொண்டு பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவிக்கு பொன்னாடை அணிவித்து விருதினை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    அப்போது விஜய் வசந்த் எம்.பி. பேசியதாவது:-

    தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவ- மாணவிகள் இருக்க வேண்டும். அதை போல் மொபைல் போனை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை போல் நாமும் இந்த சமுகத்திற்கு தனது பங்களிப்பை செலுத்த வேண்டும். நமது தாய், தந்தைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என பேசினார்.

    படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டு, நடனம் மற்றும் உங்களது திறமைகளை அறிந்து அதை வெளி கொணர வேண்டும். தாய், தந்தையர்களும் உங்களது குழந்தைகளின் திறமைகளை அறிந்து வெளி கொண்டு வர உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. பேசினார்.

    நிகழ்ச்சியில் குழந்தைகளின் கண்கவர் நடனம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ×