என் மலர்
நீங்கள் தேடியது "TN Government"
- மக்களின் பயணத்தை 'சென்னை ஒன்' செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது.
- 'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும்.
சென்னையில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்தை தான் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதன்படி தினமும் அரசு மாநகர பஸ்களில் 35 லட்சம் பேரும், மின்சார ரெயில்களில் 12 லட்சம் பேரும், மெட்ரோ ரெயிலில் 3 லட்சம் பேரும் பயணிக்கின்றனர்.
மக்களின், இந்த பயணத்தை எளிதாக்க அரசு பல்வேறு வழிகளில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. உதாரணமாக அரசின் சிங்கார சென்னை அட்டை மூலம் மாநகர பஸ் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். அதேபோல மின்சார ரெயில் பயணத்தை சீசன் அட்டை, யுடிஎஸ் மற்றும் ரெயில் ஒன் செயலிகள் மூலம் டிக்கெட எடுத்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் வேண்டும்.
ஆனால் இந்த நிலையை மாற்றி, அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே செயலியில் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா தொடங்கி உள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட `சென்னை ஒன்' (chennai one) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இந்த செயலி, பொது போக்குவரத்துக்கு வெறும் டிக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை எளிதாக வகுத்து கொடுத்து இருக்கிறது. இந்த பயணத்தில் ஆட்டோ, கார் தேவை என்றாலும் அதற்கும் அதில் புக் செய்து விடலாம்.
உதாரணமாக நீங்கள் நந்தனத்தில் இருந்து காசிமேடு மீன் மார்க்கெட் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம். `சென்னை ஒன்' செயலில், நீங்கள் நந்தனத்தில் இருந்து மெட்ரோ மூலம் எழும்பூர் வரையும், அங்கிருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மின்சார ரெயிலிலும், அங்கிருந்து ராயபுரம் வரை மாநகர போக்குவரத்து பஸ்சிலும், பின் அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்கும் மொத்தமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அதில் ஆட்டோ மற்றும் கார் கட்டணத்தை மட்டும் டிரைவர்களிடம் செலுத்த வேண்டும். மற்ற மெட்ரோ, ரெயில், பஸ் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தி கியூ ஆர்கோடு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதில் சிறப்பு என்னவென்றால் மெட்ரோ, ரெயில், பஸ் எப்போது எந்த நேரத்தில் வரும், நீங்கள் எதில் செல்ல வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வதுடன் நீங்கள் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் உங்களுக்கான ஆட்டோ, கார் தயாராக இருக்கும்.
அதாவது, மக்களின் பயணத்தை இந்த செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது. அதேபோல ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாக சென்று டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே போல, தனித்தனி செயலிக்கு சென்று டிக்கெட் பதிவு செய்யவேண்டியதும் இல்லை.
இந்த செயலியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே போல் டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.ஐ. செயலிகள் தேவையில்லை. `சென்னை ஒன்' செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தாலும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. நீங்கள் மெட்ரோ, ரெயில் மற்றும் பஸ்சையும் இணைந்து டிக்கெட் எடுத்துவிட்டால், அதில் ஒன்றை நீங்கள் ரத்து செய்ய முடியாது. பதிவு (புக்கிங்) செய்து விட்டால் ரத்து செய்ய முடியாது.

மெட்ரோ ரெயில் சி.எம்.ஆர்.எல். செயலில் மை பாஸ் என்ற வசதி உள்ளது. அதில் நாம் பணம் செலுத்திவிட்டால், நாம் மெட்ரோவில் செல்லும் பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த `சென்னை ஒன்' செயலியிலும் செல்லும் பயணத்துக்கு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இத்திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 1 லட்சம் பேர் `சென்னை ஒன்' செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும். பயண தேவைகளுக்கு ஏற்ப அட்டையை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
செயலி வழியாக மாதாந்திர அட்டைகள் வாங்கும் பயணிகளுக்கு அட்டை ஒன்றுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உடனடி தள்ளுபடியாகவோ அல்லது கேஷ்பேக் முறையிலோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் 'சென்னை ஒன்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மொபைல் எண்ணை பயன்படுத்தி, ஓடிபியை பதிவிட்டு உள்நுழைந்து வேண்டும்.
மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் சென்னை புறநகர் ரெயில்சேவைகளுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி முகப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடத்தை பதிவிட்டு பயண வழித்தடத்தை பார்க்க முடியும். உதாரணத்திற்கு, தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் செல்வதற்கான போக்குவரத்து வழித்தடத்தை பதிவிட்டால் அனைத்துவிட சேவைகளும் காண்பிக்கப்படும்.
இதே வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்துவோர் அதற்கான பயணச்சீட்டை பெறலாம்.
பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பல செயலிகளைப் பயன்படுத்தும் சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதால் பயணிகள் இதனைப் பாராட்டுகின்றனர்.
சென்னை ஒன் செயலி, சென்னையின் பொதுப் போக்குவரத்தை எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும் ஒரு புரட்சிகரமான செயலியாகும். இது 'One City, One App, One Ticket' என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.
- 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
- ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.
1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.
மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.
19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.
அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.
2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.
இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.
1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.
- இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.
- மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது.
மும்மொழிக் கொள்கை என்பது 1968-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்விசார் கொள்கையாகும். இது இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி (முன்னுரிமை இந்தி பேசாத மாநில மொழி) ஆகிய மூன்று மொழிகளைக் கற்பதை வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கை, இந்திய மாநிலங்கள் தங்கள் மொழிக் கல்வி முறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது.
இந்திய மொழிகளுக்கு இடையிலான நல்லுறவை வளர்ப்பதும், மாணவர்களுக்கு பல மொழிகளைக் கற்பிப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதும் மும்மொழிக் கொள்கையின் நோக்கமாகும்.
இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழ்நாடு அரசுடன்) இருக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' என்ற இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்கிறது. மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி அல்லது சமஸ்கிருதம் மறைமுகமாகத் திணிக்கப்படுமோ? என்ற சந்தேகம் தமிழக கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இது செயல்படுத்தப்படவில்லை, மாறாக இருமொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது.
பெரும் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மும்மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருமொழிக்கொள்கையே கற்கிறார்கள். போட்டித் தேர்வுகள் என்று வரும்போது தனியார் பள்ளிகளில் படிப்போர் முதலிடத்தை பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்கியும் விடுகிறார்கள். ஓர் அரசே இதுபோன்ற சமுதாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
- டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட முக்கிய கனிம தொகுதிகளில் ஏலம் விடுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடிதம் எழுதியதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு 2023-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் அவர் கோரியதாக குறிப்பிட்டது.
2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்திற்கு விடப்பட உள்ள 3 முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களை வழங்க கோரி தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. 2024 பிப்ரவரி 8-ந்தேதி அந்த விவரங்களை தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த கனிமத் தொகுதி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.
நவம்பர் 7-ந்தேதி, அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழியும் என்றும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நவம்பர் 29-ந்தேதி இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், பிரதமர் உடனே தலையிட்டு மத்திய அரசு வழங்கி உள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
டிசம்பர் 9-ந்தேதி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர், எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டிற்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது. நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

ஜனவரி 7-ந்தேதி டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
இதற்கிடையே, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது மத்திய இணைய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மக்கள் ஆனந்தமாக கொண்டாடினர். இது அரிட்டாபட்டி மக்களுக்கு மறக்க முடியாத வெற்றியாகும்.
இதுகுறித்து கூறிய அரிட்டாபட்டி மக்கள், "எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்திருக்கிறார்கள். அரிட்டாபட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினர். முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று, "இந்த விழா உங்களுக்கானது, மக்களுக்கான வெற்றி" என்று கூறி, மக்களுக்கு நன்றி தெரிவித்து, திட்டம் ரத்து செய்யப்பட்டது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார், இது மக்களை மகிழ்வித்தது.

அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகையில்,
மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது. டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை. பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை. டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
- உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
- 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
- மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
- கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பேரில் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்றும் கடந்த 3-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர். பின்னர் நேற்று மாலையில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மீண்டும் நேற்று மாலை 7 மணிக்குள் ராம ரவிக்குமார் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும் என்றும் அது தொடர்பான நடவடிக்கையை இன்று காலை 10:30 மணி அளவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை.
பின்னர் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று தீபம் ஏற்ற வலியுறுத்திய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்கள்.
பின்னர் அரசு தரப்பு வக்கீல்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் உள்ளிட்டோர் ஆஜராகி, பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது அதே இடத்தில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற கோருவது ஏற்புடையதல்ல.
இது தொடர்பான வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி முன்பு வாதாடினார்கள்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த காரணத்தால் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கிறேன். இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய படை கமாண்டர் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
திருப்பரங்குன்றம் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஆவணம் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.
- வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
- நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,
* கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
* வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
* நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
* நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.
* கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.
* அனுமதித்த நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
* நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
* திடீரென ஏற்பாடு செய்யக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர் முடிவெடுக்க அதிகாரம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
- மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் பதில் அளித்துள்ளார்.
* தமிழக அரசின் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டது.
* மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை.
* தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரெயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை.
* கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை.
* கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கியதை முதலமைச்சர் மறைத்துவிட்டார்.
* மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல.
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க 3 வார அவகாசம் வழங்கக் கோரி இருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தலைமைச்செயலாளர் வழக்கு தொடர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்தது.
பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
மக்களின் பணத்திற்கு அரசு அறங்காவலர்கள் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.






