என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு அரசு"
- போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
- திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருக்கும் இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
"திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருகின்றது. திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியதாகும்.
முதலிபாளையம், காளாம்பாளையம், சிறுபூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் ஆகிய பகுதியில் கைவிடப்பட்ட கல் குவாரியில் கொட்டிய குப்பையை அகற்றாமல் தற்போது இடுவாயில் புதிய குப்பைக் கிடங்கு அமைத்து மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிரிக்கப்படாதக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது துளியும் பொறுப்பின்றி செயல்படும் ஆட்சிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குப்பையைத் தொடக்கத்திலேயே பிரிக்காமல், அறிவியல் அடிப்படையில் அகற்றாமல் கிராமங்களைக் குப்பைத் தொட்டியாக மாற்றும் பணியைத் திமுக அரசு செய்து வருகிறது .
அரசின் இந்த செயலால் திருப்பூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகளான அனுப்புர்பாளையம் சாலை, காந்தி நகர், வேலம்பாளையம், அங்கேரிபாளையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு மிகவும் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் திருப்பூர் நகரின் முதன்மைப் பகுதியான நொய்யல் ஆற்றங்கரையோரம் அனைத்துக் குப்பைகளையும் கொட்டி, அதனைத் தீயிட்டுக் கொளுத்திக் காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாட்டினை அரசே ஏற்படுத்தி வருகின்றது.
இடுவாய் கிராமத்தில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் மற்றும் சுற்றியுள்ள 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இடுவாய் சின்ன காளிபாளையத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல் துறை தனது அடக்குமுறையால் பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கைது செய்து அடைத்துவைத்து குப்பையை மக்களுக்கு தெரியாமல் கொட்டும் செயலை செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காலையில் கைது செய்து பின்னர் இரவு நேரங்களில் விடுவித்து, பிறகு மீண்டும் கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் பின்பற்றாமல், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறியாமல் அவர்களின் உடல் நலன் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாகத் தனது தவறுகளை சரி செய்து கழிவு மேலாண்மை விதிகளை முழுவதுமாக செயல்படுத்திட வேண்டும். இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை
- உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு?
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகள் கிளம்பி, தற்போது அவர்மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையும் தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதனையும் அவரே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் டிசம்பர் 17-ந் தேதி ( இன்று) தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் காணொலி மூலம் மதுரை ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் வந்தது. அப்போது தலைமை செயலாளர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.
தலைமை செயலாளர் கூறுகையில், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் படிதான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்றவற்றை கருத்தில்கொண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. தீபமேற்ற உத்தரவிட்டபிறகு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும். உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு? உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன் எனக்கூறினார்.
மேலும், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி
- கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.
கேரம் விளையாட்டில் உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற காசிமேடு பகுதியை சேர்ந்த கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா, 2025ஆம் ஆண்டிற்கான 7ஆவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் மகளிர் ஒற்றையர். இரட்டையர். அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று உலக சாம்பியனாகி, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வடசென்னையை வாழ்விடமாகக் கொண்டுள்ள லோகநாதன் - இந்திராணி ஆகியோரின் மகள் கீர்த்தனா. குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு, இளம்வயதிலேயே பணிக்குப் போகும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டவர். 2019 ஆம் ஆண்டு லோகநாதன் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி.
இந்தப் பின்னணியில் இருந்து வந்த கீர்த்தனா, ஆறு வயதிலிருந்தே கேரம் விளையாட்டில் ஆர்வத்தோடும், அபாரத் திறமையோடும் விளங்கியதை அறிந்த அப்பகுதி மக்கள், அவரை மீண்டும் விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தியதின் விளைவாக, விளையாட்டில் முழு கவனம் செலுத்தி 2025ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் வென்றிருக்கிறார்.
அதன் பலனாய் உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். 21 வயது நிரம்பிய கீர்த்தனா, சிறு வயதில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து, அதன்பின் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு இன்று உலக சாம்பியனாகத் தன் பகுதி மக்களுக்குப் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கிறார்.
கீர்த்தனாவின் இந்தச் சாதனையைப் பாராட்டுவதும், அவரது திறமையையும் வாழ்நிலையையும் மேம்படுத்துவதும் அரசினுடைய கடமை. இது கீர்த்தனாவைப் போன்ற இன்னும் பல இளம் திறமையாளர்கள் வெளிவர உத்வேகமாகவும் அமையும் என்கிற காரணத்தினால், நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசிடம் முன்வைக்கிறது.
உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.
இதை ஊக்கப்படுத்த வேண்டியது இச்சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இம்மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படிநீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.
- மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- பத்து நாட்களுக்கும் மேலான தொடர்விடுப்பால், ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை கவனிப்பார்
- கூடுதலாகத்தான் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் சங்கர் ஜிவால். இவர் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்கட்ராமனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த உடல்நிலை குறைவு காரணமாக அவர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் இருப்பதால் அபய்குமார் சிங்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கும் மேலான தொடர்விடுப்பால், ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை கவனிப்பார் என அரசு தெரிவித்துள்ளது.
அபய்குமார் சிங்கிற்கு கூடுதலாகத்தான் இந்த டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் தடுப்பு பிரிவையும் அவர் கவனித்துக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்ராமன் விடுமுறை முடிந்து திரும்பும்போது பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது.
மும்மொழிக் கொள்கை என்பது 1968-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்விசார் கொள்கையாகும். இது இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி (முன்னுரிமை இந்தி பேசாத மாநில மொழி) ஆகிய மூன்று மொழிகளைக் கற்பதை வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கை, இந்திய மாநிலங்கள் தங்கள் மொழிக் கல்வி முறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது.
இந்திய மொழிகளுக்கு இடையிலான நல்லுறவை வளர்ப்பதும், மாணவர்களுக்கு பல மொழிகளைக் கற்பிப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதும் மும்மொழிக் கொள்கையின் நோக்கமாகும்.
இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழ்நாடு அரசுடன்) இருக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' என்ற இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்கிறது. மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி அல்லது சமஸ்கிருதம் மறைமுகமாகத் திணிக்கப்படுமோ? என்ற சந்தேகம் தமிழக கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இது செயல்படுத்தப்படவில்லை, மாறாக இருமொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது.
பெரும் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மும்மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருமொழிக்கொள்கையே கற்கிறார்கள். போட்டித் தேர்வுகள் என்று வரும்போது தனியார் பள்ளிகளில் படிப்போர் முதலிடத்தை பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்கியும் விடுகிறார்கள். ஓர் அரசே இதுபோன்ற சமுதாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
- தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார்.
சென்னையில் JioHotstar South Unbound நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"எப்போதும் சொல்வதுதான். உள்ளடக்கம்தான் இப்போது ராஜா. உள்ளடக்கம் நன்றாக இருந்தால் அது எப்போதும் மக்களால் கொண்டாடப்படும். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம், அவசியம். எதை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி கற்றுக்கொள்ள வேண்டும், அதை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கு கமல் சார் ஒரு சிறந்த உதாரணம், நம் எல்லோருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இப்போதும் கமல் சார் கற்றுக்கொள்கிறார்.
தற்போதும் திரைத்துரையில் வரும் புதிய அம்சங்களை பரிசோதித்து பார்ப்பதில், கற்றுக்கொள்வதில் முதல் ஆளாக இருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார். ஓடிடி சினிமாவுக்கு மாற்றாகாது." என தெரிவித்தார்.
- உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
- 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
- மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
- கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பேரில் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்றும் கடந்த 3-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர். பின்னர் நேற்று மாலையில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மீண்டும் நேற்று மாலை 7 மணிக்குள் ராம ரவிக்குமார் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும் என்றும் அது தொடர்பான நடவடிக்கையை இன்று காலை 10:30 மணி அளவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை.
பின்னர் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று தீபம் ஏற்ற வலியுறுத்திய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்கள்.
பின்னர் அரசு தரப்பு வக்கீல்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் உள்ளிட்டோர் ஆஜராகி, பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது அதே இடத்தில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற கோருவது ஏற்புடையதல்ல.
இது தொடர்பான வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி முன்பு வாதாடினார்கள்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த காரணத்தால் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கிறேன். இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய படை கமாண்டர் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
திருப்பரங்குன்றம் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஆவணம் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.
- தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு.
- நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் தெருநாய்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ், "நாய் கடித்தால் அதை பெரிய விசயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல. நாய்களை காப்பகங்களில் அடிப்பதை விட தடுப்பூசி போடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. " என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






